அதிர்ந்தது மத்திய லண்டன்,

விடைபெற்றிருக்கிறது 2011.கிழக்கு பசுபிக் பிராந்திய நாடுகள்,மற்றும் ஆசிய நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய மக்களும் 2011ம் ஆண்டுக்கு விடை கொடுத்து
 2012ஆம் ஆண்டை வரவேற்றிருக்கின்றார்கள்.
தொடர்ந்து மேற்கு பசுபிக் பிராந்திய நாடுகள் வரவேற்க 
தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
பல்வேறு மகிழ்ச்சிகள்,தாக்கங்கள், நல்ல அனுபவங்கள்,என்று யாவருக்கும் தந்திருக்கிறது 2011.
எனக்கும் இணையம்,வானொலி,பதிவுலகம் என்று பல நட்புகளை தந்தது, பிரபல்யங்களை அறிமுகம் செய்தது,பல நட்புகளை உறவுகளை அவர்களின் அன்பின் திறத்தை,ஆழத்தை உணரமுடிந்தது,எதிர்பாராத நட்புகள் உறவுகள் தேடி இணைந்தது,புலம்பெயர்ந்த லண்டன் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து தேடி வந்து சந்தித்த உறவுகள்,பிறந்த நாள் சிறப்பான நாளில் அமைந்து (11.11.11)அந்த வாழ்த்துக்களை பல ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்த உறவுகள், இன்னும் மறக்கமுடியாத பல நாள்கள் மற்றும்,தகைமை முன்னேற்றங்கள்,புதிய தேடல்கள்,பல களங்கள்,என்று சிறப்பான அனுபவங்களோடு விடைபெறுகிறது

சிறப்பான அனுபவங்களை தந்த 2011 ஆம் ஆண்டை மகிழ்வோடு விடைகொடுத்து 2012 ஆம் ஆண்டை மனம் மகிழ்ச்சிகொண்டு வரவேற்போம்.
லண்டனில் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் மத்திய லண்டனின் மணிக்கூட்டுகோபுரத்தின் கடிகாரம் ஒலி எழுப்பத்தொடங்கியதும் அதிர்ந்தது லண்டன்,ஒருபுறம் பல்லொளி தரவல்ல பட்டாசுகள் ஒலி எழுப்ப மறுபுறம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் ஒலி,வானைப்பிளக்குமளவிற்கு Happy New Year 2012 என்ற உற்சாகமான சத்தத்தோடு(புதுவருட வாழ்த்துக்கள் 2012 என்று தமிழில் சொல்ல இவர்களுக்கு வராதே-இவர்கள் ஆங்கிலேயர்கள்) பல்லொளியோடு நள்ளிரவில் வானம் மகிழ்வுற்று வழமைபோல வரவேற்றிருக்கிறது லண்டன் மாநகரம்,
அந்த அழகை இந்த வருடம் எனக்கும் காணக்கிடைத்தது.
அந்த புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து இன்முகத்தோடு வரவேற்கும் 2012 எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்
யாவருக்கும் மேலான நட்போடும் அன்போடும் வாழ்த்துக்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறேன்.





இணையத்திலிருந்து சுட்ட புகைப்படம்

பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் 2012 யாவருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்று அன்போடு தனது வாழ்த்தை பதிவு செய்கிறது கரவைக்குரல்.

மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!

அந்த மாலை நேர பொழுதுகளில் கூடும் மாலை நேர வாசிகசாலை  குழுவின்ஓரமாகத்தான் யோகன் அண்ணாவும் உட்கார்ந்தபடியே முணுமுணுத்தபடி இருக்கிறார்.
ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான் 
அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்


பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்
அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,
ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.
சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,
தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.
அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்
அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால், தான் படித்த 
கல்வியைபற்றியும் அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.
ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள் அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.
கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள் அறிந்த ஒரு விடயம்.
ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.
அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.
அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,
என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..
ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும்

‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?
 பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி
”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.

”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.
”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,

”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.
ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.

”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்
”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?”  என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.
அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல் 

தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது, 
தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.
மனங்குமுறியபடி

”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.
ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொடர்ந்தார் யோகண்ணா
”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”
”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?
என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”

”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”
”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”
ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”

 நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ
என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.






 தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.
குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை. 
”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?
என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,
”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்
சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே  அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர 
அவரின் வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை
புரிந்துகொள்ளவில்லை.
உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,
மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!! 

பூவரசம் பூவே நலமா

பூவரசம்பூவே நலமா
பூவாக அழகான இதழ் விரித்து
பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து
பூவரசனான கதை மொழியாயோ


தூரத்திலிருந்து ஒரு குரல்
பூவரசம்பூவே நலமா

சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்
மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து
மருதனிலங்களின் காலை நிலவான
தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா

கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை
காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை
பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை
பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை
பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ
பூவரசம்பூவே நலமா


சொந்தமுகவரிகள் விட்டு
புலத்தில் பலமுகவரிகள் எழுதி
பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்
சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்
தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்
தாராளமாய் உன் நிழல்கள்
சுமைகளை இறக்கிவைக்கும்
சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........

தட்டைவடைக்கு உன் இலைகள்
தூக்கித்தரும் அந்தமாதிரி
நாவுக்கு இசைவான ருசியாக...

வாத்தியார் வகுப்பறையில்
மேசைமேலே காத்திருக்கும்,
மாணவனாய் வளரும் காலம்-உன்
சுள்ளித்தடி சுணாய்க்கும்!
நீள்தடி முதுகுக்கு அடையாளம்

பூவரசம் பூவே நலமா

உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்
வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்
வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்
வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே
மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......
அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக
நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............
பூவரசம் பூவே நலமா

பூவுக்குள் அரசாளும் பூவரசு
உன் அரசுரிமை உனக்கிருக்கிறது
பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!
தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது
தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்
புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்
அழகுறு மலர்களை எங்கெங்கும்
கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்
முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்
அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்

பூவரசம் பூவே நலம் தானே,


படங்கள்- இணையம்