சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்

தற்பொழுது கிடைத்த செய்தி


இங்கிலாந்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் சந்திக்கும் பிரமாண்டமான பதிவர் சந்திப்பு வெகுவிரைவில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்டது.அதற்கான நாளும் கைகூடிவிட்டதாம்,
எப்போ எப்போ என்ற எதிர்பார்ப்போடு இருந்த பதிவர்களுக்காக 15-12-2010ம் திகதி புதன்கிழமை சந்திப்பு இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டுகுழுத்தலைவர் தற்சமயம் அறிவித்திருக்கிறார்,
ஆனால் எங்கு இடம்பெறும் என்பது குறித்து பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அறியத்தரப்படவில்லை,
பிரதம மந்திரியாக பிரித்தானிய ராணி அவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எழுத்தாளர்களாக திகழும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் மத்தியில் நேரடியாக சந்திப்பதில் வெட்கம் என்று மறுத்துவிட்டார்,அந்த இடத்தை நிரப்ப மூத்த வலைப்பதிவர் மாண்புமிகு வந்தியார் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது,வந்தியார் பிந்தி வந்தால் சற்றும் சிந்திக்காமல் பங்குச்சந்தை கோப்பரேஷன் தலைவர் அவர்கட்கு பிரதம மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.

ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அன்றைய நாள் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கு அன்னதானம் வழங்குவார் என்பது இன்னமும் ரகசியமான செய்தியாகவே பேணப்பட்டு வருகிறது.ஏனென்றால் பதிவர்களின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்பது ஏற்பாட்டுகுழுத்தலைவரின் எதிர்பார்ப்பு,
இப்படியான ஒரு அன்னதானம் என்ற விடயம் இல்லையென்றே அறிவிக்கலாம் என்றுகூட அவர் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியாதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
அன்னதானம் இல்லை என்றால் நீண்ட நேரம் இடம்பெறும் சந்திப்பில் பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அங்கு வருவோர் எண்ணிக்கை குறைவடையும் என்று அவர் நம்புகிறார்,
ஆனால் முதற்தடவையாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெறும் பதிவர் சந்திப்பு ஆகையால் மிகக்கூடுதலான பதிவர்கள் வருவார்கள் என்று பதிவு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்,சில பதிவர்கள் வந்த இடத்தில் பாதை தவறிவிட்டதால் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக கவலை கொண்டுள்ளார்களாம்,
ஆனால் ”இனியும் வரலாம் என்ற எண்ணத்தில் லண்டன் Bridge இல் அவர்களுக்கான ஒரு விடுதி எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அறிவித்திருக்கிறார்,
உங்கள் வருகையையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார் ஏற்பாட்டு அண்ணை,இதை வாசித்தபின்னராவது இங்கு விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

பிரதம மந்திரி வந்தியார் அவர்கள் சந்திப்புக்கு முதல் அவருக்கு அருகாமையில் இருக்கும் சிவன் கோவில் வாசலில் 1111 தேங்காய்கள் அடிக்க உத்தரவிட்டிருக்கிறாராம்,அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளுக்கான பரிசாக இதை ஏற்றுக்கொள்வதாகவும் சந்திப்பின் முடிவில் சகலவிதமான உணவுகள் மற்றும் குடிபானங்கள் அடங்கிய நிரல் அட்டவணை மட்டை(Menu card) ஒன்று வழங்குவதாகவும் அதில் பிடித்தவற்றை உண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறாராம்,
எப்படி உங்களுக்கு கஷ்டம் இல்லையா?? என்று நண்பர்கள் மந்திரியாரை கேட்டபோது ”காசென்ன காசு மனசெல்லோ முக்கியம் என்று புன்னகையோடு சொன்னாராம்”
ஆனால் அது அவரின் பிறந்த நாள் விருந்து என்றும் ஒரு தகவல்,ஆனால் செய்தி வழங்கும் வரை அது உறுதிசெய்ய முடியவில்லை
இன்னும் செய்திகள் கிடைக்கும் போது அவ்வப்போது இங்கு உண்மைச்செய்திகள் வெளிவரும்,


இந்த செய்திகள் எல்லாம் பதிவர்களின் வருகையை அதிகரிக்கபோகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, நாளை இங்கிலாந்து மண்ணில் சந்திப்பு நடப்பதும் உறுதியாகிவிட்டது,
பதிவர்கள் எல்லோரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்,

எது எப்படியோ 15-12-2010ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது, பதிவர்களாக நீங்களுமிருந்தால் உங்கள் வருகையை தெரிவித்துக்கொள்ளுங்கள்,

வல்லிபுரத்தின் கடல் தீர்த்தம் மீட்கும் நினைவுகள்

வல்லிபுரக்கோயில் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்,வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் யாழ்ப்பணம் வடமராட்ச்சியில் இருக்கிறது.தாயகத்தில் இருந்த காலப்பகுதியில் இந்த ஆலயத்தின் திருவிழாக்களில் ஒவ்வொருவருடமும் கலந்துகொள்ள தவறுவதில்லை, சிறு பராயம் முதலே அந்த ஆலயத்துக்கு நடைபயணமாக கூட செல்வது வழமை, அவையெல்லாம் இன்றைய நாள் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இந்த பதிவு,


கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம்.............


இப்போதெல்லாம் வலைப்பதிவின் பக்கமே வரவில்லையே என்று சின்னக்கவலைதான்.
வலைபதிவில் இருந்து விடைபெற்று விட்டீர்களா என்ற பலரதும் கேள்வி கொஞ்சம் அந்த கவலையை கூட்டிவிடத்தான் செய்கிறது.
என்றாலும் "எங்கே உங்களை காணவில்லையே" என்ற கேள்வியால் கொஞ்சம் மகிழ்ச்சியும் கூட.ஏனென்றால் என்னையும் தேடுவோர் பட்டியலில் ஒதுக்கிக்கொண்டதாலும் அதேபோல என்னை தேடுகின்றார்களே என்பதாலும் தான் அந்த மகிழ்ச்சி.


உண்மையில் வந்தியத்தேவன் மற்றவர்களை புரிஞ்ச மனசு. எனக்குள்ள வேலைபளுவால் பதிவு எழுத முடியாத நிலையில் உள்ள நேரச்சிக்கலை தன் பதிவில் புலத்தில் இருந்தபடியே அதற்காக நேரம் ஒதுக்கி பதிவு எழுதிய அவருக்கு புரிஞ்ச மனசு தானே.
அதனால் தான் கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம் என்ற எண்ணத்தில் பல நாள்களில் ஒரு பதிவாக எழுத முயற்சித்துள்ளேன்.


நேரம் இல்லை என்பது புலத்தில் பொதுவாக அனைவராலும் பேசும் விடயம்.ஏன் எமக்கும் அதே விடயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் ஏன் எதற்கு இப்படியான நேரமில்லாமை பிரச்சனை ஏற்பட வேண்டும் என்பதும் என்மனதில் அடிக்கடி எழும் கேள்வி,
எமக்குள்ளே ஏதேதோ ஏற்படும் பல்வேறு வேலைப்பளுக்கள் அதிகமாகவே அந்த பிரச்சனை.
வேலைப்பளுக்கள் கூடக்கூட சரியாக வேலைகளை மற்றும் செயற்பாடுகளை திட்டமிடாமை தான் காரணம் என்கின்றனர் அனுபவசாலிகள்,


ஆனால் இந்த நேரமில்லை என்ற பிரச்சனை பல்வேறுவிதமாக கூட சிலரால் கையாளப்படுவதுமுண்டு.அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி சார்பானதாக்கி நேரமில்லை என்ற பிரச்சனையை கையாள்வோர் ஒரு ரகமும் கூட, இந்த நேரமில்லாமை என்பது எப்படி எல்லாம் கையாளப்படுகிறது என்பதை எனக்கும் நேரமிருந்தால் இன்னுமோர் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் ஏதாவது கிறுக்கலாம் என்ற எண்ணம் மட்டும் இப்போ வந்துவிட்டது

சரி வல்லிபுரக்கோயில் பக்கம் செல்லலாம்,
வல்லிபுரக்கோயிலில் பதினைந்து நாள்கள் கோலாகலாமாக திருவிழா, அந்த பதினைந்து நாள்களிலும் கடல் தீர்த்தத்திற்கு ஒரு தனித்துவமே இருக்கிறது,ஆலயத்திலிருந்து சில மைல் தூரம் அமைந்திருக்கும் கடலை நோக்கி வல்லிபுரத்து மாயவன் தீர்த்தமாட செல்வான்.அந்த பாக்கு நீரிணை சமுத்திரத்தை நோக்கி மக்களும் படையெடுப்பர், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி, பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,என்று எங்கும் ஆனந்தமான பொழுதுகளாகத்தான் இருக்கும்,

ஆரம்ப காலங்களில் மக்கள் மாட்டு வண்டில்களில் தான் பயணம் செய்து வருவார்களாம், ஆனால் இன்றைய காலங்களிலெல்லாம் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிறு சிறு வான்கள் என்று மக்கள் படையெடுப்பினால் பருத்தித்துறை வீதியும் களைகட்டும்.இப்படியாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருந்து வரும் மக்களும் சமுத்திரத்தை நோக்கி நடை நடக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்.அதுமட்டுமல்ல அந்த சமுத்திரம் வருடத்தில் ஒரே ஒருநாள்தான் இப்படியான ஜன வெள்ளத்தை காணும்.எப்போதும் பெரிய பெரிய அலைகளை எழுப்பும் சமுத்திரம் அன்று மட்டும் தன் அலைக்கரங்களை அமைதியாகவே வைத்திருக்கும்,
தொடர்ந்து ”கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா” வான் அதிர மக்கள் வல்லிபுரத்து சக்கரத்தாழ்வாரை ஓடியபடியே தங்கள் தோள்களில் காவிவர சமுத்திரம் தன் அலைகளை மீண்டும் எழுப்பிய படி வரவேற்கும்.

மக்கள் சமுத்திரம் நோக்கி நடக்கும் போது ஆலயத்தில் வாசல் பகுதியில் இருந்து பார்த்தால் பெரிய அழகான பாம்பின் வடிவத்தை போன்று தோன்றும்..அதுவும் பெண்களின் வண்ண வண்ண ஆடைகள் அந்த பாம்புக்கு அழகை மெருகூட்டும்

நடக்கும் போதும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் சிறுவர்களின் மகிழ்ச்சிக்குஅளவேயிருக்காது.மண் விளையாடும் சிறுவர்கள் ஒரு புறம்,அந்த மண்ணையே தோண்டியபடி அதில் கிணறு கிண்டி அதில் தண்ணீரைக்கண்டு அவர்கள் மகிழ்ச்சியுறுவர்,கடலுக்கு அருகில் மண் கிண்டும்போது தண்ணீரை இலகுவில் அடைந்துவிட முடிவதால் இந்த முயற்சி சிறுவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருக்கும்.பறக்கும் இராவணன் மீசையை ஓடிப்பிடித்து அவற்றை மீண்டும் பறக்க விட்டு அதில் ஒரு வகையான மகிழ்ச்சிகாண்பர் சின்னஞ்சிறுவர்கள்.

வயதானவர்களின் மொழியில் குறிப்பிட்டால் ”மள்ளாக்கொட்டை” என்பது எல்லோர் வாயிலும் கொறிப்பதை காணலாம்,அதனை கச்சான் என்பர் இளையவர்கள். சிறுவர்கள் வாய்களில் பல நிற இனிப்புகள் சுவைப்பதும் அதனால் அவர்கள்களின் வாய்கள் பல நிறங்களை கொண்டு காணப்படுவதும் உண்டு.

நடக்கும் போது பெண்கள் தங்கள் சேலைகளையும் சுரிதாரின் மேற்துணிகளையும் வெயிலுக்காக தலையிலே மூடியபடி செல்லும்போது அது பறந்தபடியே காணப்படுவது இன்னுமோர் விதமான அழகைக்கொடுக்கும்.

வல்லிபுரத்தில் பதினைந்து நாள்களும் எப்படியாக ஆலயத்தின் நாற்புறமும் கடைகளும் சுவையகங்களும் இருக்கின்றதோ அதேபோல கடற்தீர்த்தம் என்றால் கடலை நோக்கி எல்லாமே பயணித்துவிடும்,
மிகத்தூர நடை நடந்து கடலை வந்து அண்மிக்கின்றவர்களுக்கு தீர்த்தப்பந்தல்கள் வரவேற்கும், அங்கு தரும் தீர்த்தத்தின் சுவைக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம்.தாகம் தீர்க்கும் தீர்த்தம் ஆகையால் அதன் தனித்துவம் தனியானது,

சமுத்திரத்தில் இளைஞர்களின் நீச்சல்கள் ஒரு தனி ரகம்,அதில் கடலருகில் இருப்பவர்கள் எல்லாம் தங்களைத்தான் பார்க்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு நீச்சலில் பல்வேறு தந்திரோபாயங்களை புகுத்தி நீந்துவர் பலர்.சிலர் கடலில் பல தூரம் கூட சென்று திரும்பிவருவர்,கடல் அலைகளுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தலைகள் கடலில் பந்துகள் மிதக்கின்றதா என்ற எண்ணத்தை தரும்,

இப்படியாக கடலுக்கருகில் பல்வேறு இனிமையான நினைவுகளுடன் மீண்டும் கடலுக்கு விட கொடுத்து ஆலயத்தை திரும்பும்போது அதில் கிடைக்கும் ஆனந்தம் தனியானது, கடலுக்கருகில் கண்ட இனிமையான நினைவுகள் மீட்டபடியே நடை நடந்து ஆலயத்தை அடைந்துகொள்வர் மக்கள்,
இளைஞர்களின் குறும்புகள்,இளம்பெண்களின் கலகலப்பான சிரிப்பொலிகள்,சிறுவர்களின் விளையாட்டுக்கள்,முதியோர்களின் பக்திப்பரவசங்கள் என்று எங்கும் ஆனந்தம் தான்.

இப்படியாக வல்லிபுரத்து கடற்தீர்த்தம் என்றால் யாழ்ப்பணமே களைகட்டும் என்று கூட சொல்லலாம்.பிரபலமான ஒளி ஒலி ஊடகங்கள் எல்லாம் படையெடுக்குமளவுக்கு சிறப்புக்கள் பொருந்தியதாக வல்லிபுரம் காணப்படும்.இவையெல்லாம் மீட்கும் நினைவுகளாக என்றும் மகிழ்ச்சியே,தாயகத்தின் நிகழ்வுகளை மீட்கும் போது என்னதான் எங்கு சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தாலும் தாயகத்தை போல இனிமையான வாழ்வு கிட்டுமா என்று தான் எண்ணத்தோன்றும்



இன்னும்பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் அவை இன்னுமோர் பதிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் சந்திக்கலாம்,உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்

பட்ட பாடு பெரும்பாடு

நல்ல அனுபவம் கேளுங்கோ.
நடுராத்திரியிலை வரும் எண்டு யார் தான் நினைச்சது.
கனவில்லை பாருங்கோ,
நீங்கள் நடுராத்திரி எண்டாபோல கனவெண்டு நினைச்சிடுவீங்கள்.
இங்கை பொடியளுக்கு கூடுதலாக நடுராத்திரியிலைதானே வேலை முடியிறது ,
வேலை முடிஞ்சாலும் பஸ்க்கும் ரெயினுக்கும் இந்த குளிருக்குள்ள காத்து நிக்க வேண்டிய நேரம்,
குளிரெண்டால் அது குத்துறகுளிர்,
அதென்ன குத்துற குளிர்? சில்லென்ற குளிர்? கடுங்குளிர்?
அது சொல்லி விளங்காது,அனுபவிச்சுத்தான் பார்க்க வேணும்,

நடந்த ஒரு விசயம்தான் சொல்ல போறன்.
அதுக்காக எனக்குத்தான் நடந்தது எண்டு மட்டும் நினைச்சுப்போடாதீங்கப்பா,
ஏனெண்டால் இங்கிலாந்து வந்தவுடன் அது வரவேற்ற திறம் பதிவிலை சொல்ல ஆயிரம் தொல்லைபேசி அழைப்பு,
அதால முற்கூட்டியே ஒரு சொல்லிவைக்கிறது நல்லதுதானே என்ன?

அனுபவிச்சபொடியன் சொல்ல சொல்ல
நான் விழுந்து விழுந்து சிரிக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அதைத்தான் சொல்ல போறன்.

பஸ்க்கு காத்து நிக்கேக்க இரண்டு அப்பாவி பொடியள் தரவளி ஆடி ஆடி வருகுதுகள், நல்ல குளிருக்கு நல்ல சுடுபானம் அடிச்சு நடைபாதை தெரியாமல் நடந்து வருகினமாம்,
அங்கை ஒருகால் இங்கை ஒருகால் எண்டு சுடுபான விளையாட்டுக்களையும் ஆட்டங்களையும் ரசிச்சாராம் e.
இவர் ரசிச்சதை அந்த பொடியள் கண்டுவிட்டாங்களோ என்னவோ? இவரை வடிவேலாக்க பாத்துட்டாங்கள் எண்டுதான் விளங்குது.ஏனெண்டால் இப்படியான விசயங்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக பார்ப்பதுண்டு.
அப்ப பாருங்கோவன்…………………………………

கிட்ட வந்தாங்களாம் அந்த சுடுபான குடிச்ச பொடியள்.
( இந்த உரையாடல் எல்லாம் முழுதும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள் என்றாலும் இங்கு எம் மொழியில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது- இடையிடையே சம்பாஷணை சுவைக்காக ஆங்கிலக்கலப்பு வருகிறது)

”Give me a சிகரெட்” இது தான் முதல் கேள்வி இந்த பொடியனிடம்
”என்னட்டை இல்லை சிகரெட்” எண்டாராம் நம்மவர்

“ இல்லை இல்லை Give me a சிகரெட்”
“ அட என்னடா வில்லங்கமா போச்சு”
நடுராத்திரியிலை வந்து உயிரை வாங்குறாங்கள், இவ்வளவுகாலமும் சிகரெட் தொட்டதேயில்லை, இங்க வந்த பிறகு இந்த ஓஃவ் லைசன்ஸ் தான் தொட வைச்சது, இவங்கள் என்ன எண்டால் சும்மா இருக்கிறன் என்னை சுண்டி இழுக்கிறாங்கள் எண்டு மனதுக்குள் நினைச்சவராக,
‘Please don`t disturb me” நம்மவர் கொஞ்சம் மிடுக்காக சொல்லி பார்க்கிறார்.

அவங்கள் எங்கை கேட்டால் தானே
”Nooooooooooooooo உன்னட்டை கட்டாயம் சிகரெட் இருக்க வேணும் பெரிய bag எல்லாம் நீ வைச்சிருக்கிறாய் give ,me a சிகரெட் ”
அட அங்க பார் அதிலை ஒரு ஓஃப் லைசன்சன்ஸ் கடை ஒண்டு இருக்கு அதிலை போய் வாங்குங்கோ எண்டு புத்திமதி பண்ணுறார் நம்மவர்

என்ன இது அடிக்கடி ஓஃவ் லைசன்ஸ் என்று சொல்ல்கிறேனே அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் மனதினுள் நினைக்கலாம் அல்லவா?
இங்கிலாந்திலை பொதுவாக பெரிய பெரிய பல்பொருள்வாணிபக்கடைகள் தவிர்ந்த மற்றைய கடைகள் எல்லாம் ஓஃப் லைசன்ஸ் எண்டு அழகாக சொல்லுறது பாருங்கோ, கூடுதலாக நம்மவர்கள் தான் இதற்கு முதலாளிகள்.

அப்ப நம்மவரின் புத்திமதிக்கு பிறகு
”ம்ம்ம் இப்படியான கதை சொல்லி என்னை கோவக்காரனாக மாத்தவேண்டாம்,சரியோ give me a சிகரெட்” எண்டு சொன்னானாங்களாம் அவங்கள்.

”அட இதென்ன வில்லங்கமடா
சும்மா நிண்ட என்னை சிகரட் கேட்டுப்போட்டு கோவக்காரன் ஆக்க வேண்டாம் எண்டு என்னை வில்லங்கத்துக்கு இழுக்கிறான்” எண்டு மனதுக்குள் சிந்தித்த நம்மவர்
பேசாமலே இருந்தாராம், இன்னும் கதைச்சால் நான் தான் கடைசியிலை வடிவேலாக வேணும் எண்டு நினைச்சுக்கொண்டு.
அதுக்கு பிறகு பஸ்சும் வர அவங்களும் பஸ்சிலை ஏறுறாங்கள், இரண்டு தட்டு பஸ் எண்டதாலை அவங்கள் மேலுக்கு ஏற இவர் கீழுக்கு பின்னுக்கு போய் இருக்கிறார்.


ஐயோ அவங்கள் மேலுக்கு போறாங்கள் இனி நிம்மதியாக பயணிக்கலாமே என்று மனதினுள் எண்ணியவார சென்ற நம்மவருக்கு தொடர்ந்து என்ன நடந்தது? ”பட்ட பெரும்பாடு போதுமென்று” இருந்தவருக்கு மீண்டும் நடந்தது என்ன?
அடுத்த பதிவு வரை கொஞ்சம் பொறுத்திருப்போமா?

புலத்தில் நம்மவர்கள் வாழும் வாழ்க்கை புண்ணியம் செய்து அமைந்திருக்கும் வாழ்க்கையோ? இப்படித்தான் நம்மவர்கள் வாழ்க்கை ஓடுது. இன்னும் வரும் இந்த நம்மவரும் பெரும்பாடு

வாங்கப்போனது என்ன? கிடைத்தது என்ன?



"இண்டைக்கு விடியக்காத்தாலை எழும்பி முழிவியளத்திற்கு யாரிலை முழிச்சனோதெரியாது"எண்டு,மண்டையை போட்டுடைத்துக்கொண்டிருந்தாராம் நம்மவர்.
”எங்கையோ போய் கொண்டிருந்த என்னை கலைச்சுக்கொண்டு வந்தானே, என்ன கஷ்டகாலம் என்னைக்கலைச்சுக்கொண்டு வந்ததோ” என்று அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார் நம்மவர்.

"என்னடா என்ன நடந்தது" எண்டு நண்பன் கேட்டால் சொல்லுறாரேயில்லை.

"டேய் உனக்குள்ள யோசிக்காமல் என்ன நடந்தது எண்டு சொல்லு,அப்பத்தான்.. உனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கும்" எண்டு இன்னுமோர் நம்மவரான அவரின் நண்பர் கேட்க

”டேய் நான் நடந்ததை நினைச்சு சிரிக்கவோ அல்லது எந்நிலையை யோசிச்சு அழவோ"என்று மண்டையப்போட்டு உடைத்தபடியே இருந்தார்.
" அப்பவும் முந்த நாள் அம்மா சாஸ்திரம் பாத்துப்போட்டு சொன்னவா,இப்ப ஏழரை சனியன் கூடிக்கிடக்குது எண்டு ,ஆனால் இப்படி சனியன் விடுதேடிவந்து குந்தியிருக்கும் எண்டு யாருக்கு தெரியும்?நல்லூர்முருகா............."என்று வேண்டித்திட்டாத தெய்வங்களுமில்லை


"இவன் என்னடா ஒண்டுமே சொல்லுறான் இல்லையே" என்று நினைத்த நண்பரான நம்மவர் தன் புலனாய்வினை முடுக்கிவிட்டபோது கிடைத்த கதைதான் இது


விடியற்காலையில் வழமை போலவே பல்கலைக்கழகத்துக்கு புகையிரதம் மற்றும் பஸ்சில் பயணம் செய்வதுபோல் அன்றும், ஆனால் சற்று தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டதால் கொஞ்சம் அவசரமாக பஸ்சில் ஏறுவதும், புகையிரதத்தை ஓடிபிடிப்பதுமாக, பாதைகளை கடப்பதுமாக பல்கலை நோக்கி ஓடுகிறார் நம்மவர்.
ஒருவேளை பாதையொன்றினை குறிக்கிடுவதற்காக இரண்டுபக்கமும் பார்க்கும்போது காரினுள் இருக்கும் இரு இளைஞர்களின் அழைப்பு,
தன்னத்தான் அழைக்கிறார்களோ தெரியாது என்ற பெரிய சந்தேகம் இருப்பதால் அவர்களை என்னவென்று கேட்பதா என்றவாறான ஒரு சின்ன எண்ணம்.
என்றாலும் ”இந்த நாட்டிலை ஆயிரம் பேர் இருப்பாங்கள் என்னத்துக்கு சும்மா கதைச்சு வீண்வம்பு” என்று நினைத்த நம்மவர் சற்று விலகிச்சென்றாராம்.

ஆனாலும் நம்மவரை நோக்கி அவர்களின் கார் நகர்கிறது.
”இதென்ன ஆக்கினையெடாப்பா” என்றவாறு நின்று என்ன என்று பார்த்தராம் நம்மவர்.

ஏனென்றால் நம்மவர் ”அச்சம் என்பது மடமையெடா அஞ்சாமை திராவிடர் உரிமையெடா” பரம்பரையிலிருந்து வந்தவரல்லவா. நின்று பார்த்தாராம் ஒரு பார்வை.
ஆனாலும் வந்த அந்த இளைஞர்கள் மிகவும் சிரித்த முகத்தோடு இருக்க ஒரு இளைஞர் ஒரு பெட்டியுடன் எழுந்து வந்து அந்த பெட்டியை திறந்து காட்டினால் அதற்குள் ஒரு அழகிய மடிக்கணனி(லப் டொப்).
”இதை நான் விற்கப்போகிறேன் உங்களுக்கு வேணுமா? கடையிலை வாங்கினால் 400 பவுணுக்கு கிட்ட வரும், எனக்கு 200 பவுண் தந்தால் போதும்” என்று சொல்ல
நம்மவருக்கு ”இதை வாங்கினால் என்ன” என்று என்ற சின்ன எண்ணம்.
என்றாலும் "சிலவேளைகளில் ஏமாற்றக்கூடியவர்களுக்கும் இந்த லண்டனில் குறைவில்லை சும்மா ஏமாத்துவார்கள் என்ற பயம்"
"இருந்தாலும் வாங்கலாமா என்று பரிசோதித்துபார்ப்போம்" என்று பரிசோதிக்க ஆரம்பித்தார் நம்மவ்ர்.

பரிசோதிக்கும்போது நம்மவருக்கு அது பிடித்துவிட்டது.இதை எப்படியாவது விலையைக்குறைத்தேனும் வாங்கியேயாக வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவராய்
"இப்ப என்னிடம் நீங்கள் கேட்கும் பணம் இல்லை, இன்னும் விலையைக்குறைத்தால் வாங்கலாம்" என்று நம்மவர் சொல்ல விலை நிர்ணயிப்பிற்கான பேச்சுக்கள் ஆரம்பமகியதாம்.
இறுயிதில் இதற்கான முடிவு எட்டப்பட்டு அந்த ,மடிக்கணணி நூற்றியைம்பது பவுண்களுக்கு தருவதாக அந்த இளைஞ்ன் சம்மதிக்க "பணம் எடுப்பதற்கு வங்கிக்கு நம்மவர் செல்ல வேணும்" என்று சொல்ல நம்மவரை அவர்கள் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்றார்களாம்.
நம்மவருக்கு எப்படி அந்த காரில் ஏறும் அளவுக்கு அந்த துணிச்சல் வந்தது என்றால் அந்த மடிக்கணணியில் இருக்கும் ஆர்வத்தை தவிர வேறொன்றுமில்லை.

பல்கலை செல்வதற்கு புறப்பட்ட நம்மவர் அதற்கு செல்லாமல் மடிக்கணனி வாங்கும் கனவு நனவாகிறதே என்ற ஆர்வத்தோடு வங்கியில் பணம் எடுத்தவராய் மீளவும் மடிக்கணணியை பரிசோதிக்கிறார்.கணனிகள் பற்றிய அறிவு சற்று நிறைந்த இந்த நம்மவர் தாறுமாறான கேள்விகளால் பரிசோதித்தாராம்.
நிறைவான பதில்கள், தரமான மடிக்கணணி என்ற நிறைந்த மனதோடு மடிக்கணணியை பெட்டியோடு வாங்கியபடி வீட்டுக்குவந்தார்.
வீட்டுக்குவந்து நண்பர்களுடன் வெறும் நூற்றியைம்பது பவுண்களுக்கு வாங்கிவிட்ட மடிக்கணணியை பற்றிய கதையோடு மடிக்கணணியை ஆரம்பிக்க ஆர்வத்தோடு திறக்கிறாராம். ஆர்வத்துடன் திறந்தவருக்கு ஆச்சரியம் தான் காத்திருந்தது!!!!!!!!!????????

என்னடா ஆச்சரியம் என்றால்
சிலவேளைகளில் எதிர்பார்க்காத திறன்கள் மடிக்கணணியில் காணப்பட்டிருக்கும்
.மடிக்கணணி திறக்கும் பொது "டமார்" என்று வெடித்திருக்கும்.
மடிக்கணனியின் உள்ளே சில வேளைகளில் மின்கலம் (பற்றரி) இல்லாது இருந்திருக்கும்.(என் றாலும் பரிசோதிக்கும்போது இருந்திருக்குமே)
ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லையாம்
அப்ப ஏன் தான் நம்மவர் மண்டையைபோட்டுடைக்கிறார்.

உண்மையில் பெட்டியை திறந்தவருக்கு ஆச்சரியம் இல்லை ஏமாற்றம் தான் காத்துக்கிடந்தது. பெரியளவு பணங்கொடுத்து பெரியளவு எதிர்பார்போடு திறந்த அவருக்கு பெட்டியினுள் வெங்காயம் தான் கிடந்தது.


வெங்காயம் மிகச்சிறப்பாக பொதியடைக்கப்பட்டு மடிக்கணணி வரும் பெட்டிக்குள்ளேயே சிறப்பாக பொதிசெய்யப்பட்டிருந்தது.உண்மையில் அந்த வெங்காயத்தின் விலை பத்து பவுன்களும் பெறமாட்டாது.

"இறுதிவரை மடிக்கணணியை பரிசோதித்த நம்மவருக்கு பெட்டிக்குள் வெங்காயம் வந்தது எவ்வாறு?"
"வெங்காயம் வாங்குவதற்காக பல்கலையும் போகாமல் நேரத்தையும் செலவழித்து இறுதியில் பணத்தையும் இழந்துவிட்டேனே"
என்றவாறு நம்மவர் ஏமாறிய முகத்தோடு குழம்பியபடி மண்டையைப்போட்டுடைத்தார்.
"போனது போகட்டும் இனி ஆகவேண்டியதைப்பார்க்க வேண்டும்" என்று மனதை திடம்படுத்தி
இப்போ அடிக்கடி சொல்லும் இந்த நம்மவர் அந்த ஏமாற்றும் இளைஞர்களை தேடித்திரிகிறார்.

இந்த சம்பவம் உண்மைச்சம்பவமே.இவ்வாறான சம்பவங்கள் லண்டனில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றன.பிரபலமான வானொலியொன்றில் ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு நேயர்
"ஏமாற்றம்" பற்றிய சுவாரஷ்யமான கருத்துப்பகிர்வின் போது இதேவிடயம் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இன்னுமொருவர் இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் ஏமாற்றப்படகூடாது என்ற நோக்கத்துடனும் இது படிப்பினையாக இருக்கும் என்ற எண்ணத்துடனும் பதிவிடப்படுகிறது.

தம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல



"மோதர மோதர மட்டக்குழிய"
"மோதர மோதர மட்டக்குழிய"
மோகனக்குரலால் கூவியழைக்கிறார்
கொண்டக்டர்

வேகமாக ஓடும் பஸ்ஸையும்
பம்பலப்பிட்டி சந்தியிலை
லாவகமாய் மறிச்சு வைத்து
பக்குவமாய் அழைக்கிறார்
கொண்டக்டர்

விழுந்தடிச்சு ஓடிவந்து
ஏறிய இளைஞர் அணி
வந்த சனம் போதுமெண்டு
"அண்ணை ரைட்" சொன்னார்
கொண்டக்கடர்

''முன்னுக்குப்போ முன்னுக்குப்போ''
சத்தம் போட்டு கத்தினாலும்
"லங்காவே" சனமெல்லோ
காதுக்கு கேட்டால்தானே
சலித்தபடியே கொண்டக்டர்???????

சலித்தாலும் காசு வாங்க மறக்கமாட்டார்

மெல்ல மெல்ல தேரூர்வதுபோல்-கொழும்பு
பல்கலையும் ஓடிக்கடந்து
மருதானை வழி நோக்கி ஓடினாலும்
மறிச்சு வைத்து சனம் ஏத்த நல்லமனம்
கொண்டக்டர்....

சனம் கொஞ்சம் குறைந்துவிட
ஏறிய இளைஞர் படை
இருக்கை எல்லாம் ஆக்கிரமி்ப்பு

மருதானை வந்தவுடன்
மெல்ல மெல்ல நடை நடந்து
புன்னைகை அவள் முகத்தில் பரவ
மெதுவாக பஸ் ஏறும் இளநங்கை

நல்ல ஒரு வளத்தியவள்
நின்ற படி பஸ்ஸின் கைப்பிடி
எட்டுதில்லை நங்கைக்கு
பஸ் ஆடும் பக்கமெல்லாம்
கால் வைத்து ஆடியபடி
நிலை தடுமாறும் இளநங்கை

“என்ன பழக்கமிது இந்த பொடியள்
எங்கதான் படிச்சுதுகளோ” என்று
”பொம்பிளைபிள்ளையது படும்பாடு தெரியவில்லையோ” என்று
கூடி நிக்கும் சனமெல்லாம் ஒரு பார்வை பார்க்க

நம்மவர் மெல்ல எழும்பி
”இருக்கோ அக்கா “ என்று சொல்லியபடி
நொண்டி நொண்டி அசைகிறாராம்
”ஐயையோ ஐயையோ் ,இங்க வாங்கோ”
’’மெல்லவாக இருங்கோ தம்பி’’
””உங்களுக்கு இல்லாத சீட் என்ன தேவை எனக்கு””
கலக்கத்துடன் சங்கடத்தில் இளநங்கை

”அந்த ஏலாத பொடியனுக்குள்ள புத்தி கூட
இந்த பொடியளுக்கில்லையோ” என்று
வந்து நின்ற சனமெல்லாம் புறுபுறுக்க

“ஏலாத கட்டமிது- என்
நண்பன் நடித்துவிட்டான்
கெட்டிக்காரன் ”
என்று நினைத்தபடியே
கூடவந்த இன்ன்ரொருவர்
எழுந்துகொள்ளும் நிர்ப்பந்தம்

எழும்பினார் மற்றவர்!!!!!!!!!!!!!!!!

நங்கையவள் சிம்பிளாக நன்றிதனை சொல்லியபடி
உட்கார்ந்தாள் இருக்கைதனில்
முன்னாடி இடம்விட்ட
நொண்டிய நம்மவருடன்
அன்புபேசி நன்றி பகிர்ந்து
பஸ்சிலே பயணம்

இருக்கைக்காக நொண்டியதன்
சிரிப்பு ஒருபக்க மனதில்
அன்பு மொழி பேசிய இள
நங்கையவள் பேச்சும் மறு பக்க மனதில்

”மோதர மோதர மட்டக்குழிய
மோதர மோதர மட்டக்குழிய”
பஸ் உம் ஓடுது இங்கு
மனதும் கற்பனையில் ஓடுது





குறிப்பு: அண்மையில் சிறிலங்கா கொழும்பில் மட்டக்குழி-கல்கிஸ்ஸ பாதையில் ஊர்ந்துகொண்டிருக்கும் 155 பஸ்சில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி வதன நூலில் நண்பி ஒருவர் "எவன் மனிதன்" என்ற கருவின் கீழ் நடந்த ஒரு விடயத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.அந்த அம்சத்தோடு கொஞ்சம் என் கற்பனைக்கும் இடங்கொடுத்து அமைந்த பதிவுதான் இது.

வெண்பனிதேசத்தில் சிறப்பாக நிகழ்ந்த “தமிழர் விழா 2010”

நீண்டகாலத்திற்குப்பிறகு கரவைக்குரல் தன் பதிவுகளோடு சந்திக்க தயாராகிறது என்ற மகிழ்வுடன் கடந்த சில நாள்களாக சில தொழினுட்ப தடங்கல்களினால் பதிவுகளில் சில தாமதங்கள் காணப்பட்டதையும் இன்றும் அந்த தடங்கலுக்கு மத்தியில் உங்களை சந்திக்க தயாராகிறது என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது.இந்த விடயம் முதலிலேயே சொல்லப்பட்டதில் காரணமும் இருக்கிறது. கூடிய காலம் காணவில்லையே என்று பலதரப்பாலும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டேயிருந்தமைதான். அதைவிட இன்னுமொருசாரார் நகைச்சுவையாகக்கூட ”யூகே போனவுடன் பிசி ஆகிவிட்டீர்களோ,” என்று பகிர்ந்துகொண்டமையும் இங்கு சொல்லத்தான் வேணும். கரவைக்குரலின் வரவு காணாது அன்புகூட்டி வரவேற்போடு கேட்டுக்கொண்டிருந்த அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் கரவைக்குரல் நன்றி பாராட்டுகிறது.

சரி
அண்மையில் வெண்பனிதேசத்தின் இங்கிலாந்து மண்ணில் குரொய்டன்(CROYDEN) என்று தமிழ் மக்கள் நிறைந்து வாழும் ஒரு இடத்தில் தமிழர் விழா கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதைப்பற்றிய ஒரு சின்ன பார்வை, அங்கு வந்திருந்தவர்களின் கருத்துக்களின் தொகுப்பாகவும் ஆக்கபூர்வமான அமைந்துவிட்ட நிகழ்வின் சில சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம்.

குறொய்டன்(CROYEDEN Tamil) வாழ் தமிழ் மக்களின் சிந்தனையில் எம் அடையாளங்களான கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிக்காக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவும் அல்லலுறும் எம் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஏதாவது பல உதவிகள் செய்யவேண்டும் என்ற நல்ல சிந்தனையிலும் உருவாகின்ற அமைப்பான குறொய்டன் தமிழர் சமூக அமைப்பு (CROYDEN TAMIL COMMUNITY ORGANIZATION) தமிழர் விழாவோடு ஆரம்பிக்கிறது. முற்கூட்டியே இப்படியான ஒரு அமைப்பு தங்களுக்குள்ளேயே இயங்கி வந்ததாக குறிப்பிட்ட நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் ”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கு அமைவாக குளிர்ச்சியுடன்,மகிழ்ச்சி பொங்கும் இந்த தை மாதத்தில்,பொங்கல் விழாக்காலத்தில் இந்த தமிழர் விழா ஆரம்பத்தோடு இதன் செயற்பாடுகளை முடுக்கிவிட ஆரப்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.காலத்தின் தேவைகருதியும் எம் பண்பாட்டுக்கோலங்கள் எங்கும் அழிவுறாது இருக்க வேண்டும் என்ற உந்துதலே இதற்கு முக்கிய காரணம் என்று மேலும் குறிப்பிட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மாலை வேளையில் இருநூற்றுக்கும் அதிகமான அவ்விடத்தில் வாழும் எம்மவர்களின் சபைதனில் நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வுகளை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நிகழ்வு ஆரம்பித்து இடையில் கலந்து நிகழ்வுகளை ரசிக்கக்கூடியதாக சந்தர்ப்பம் கிடைத்தது.
பல்லியம் என்று சொல்லப்படும் பல் வாத்திய இசை சிறுவர்களினால் இசைக்கப்பட்டது. ”மருதமலை மாமணியே முருகையா ’ என்ற பாடலை வயலின் இசைக்கருவிகளால் இசைத்துக்கொண்டிருந்தார்கள்.சிறுவர்களால் மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்டது.இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் யாதெனில் இங்கு பிறந்த வளர்ந்த எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் பிடிப்போடு எதிர்காலத்தில் சிறந்த ஒரு கலைஞனாக வரக்கூடிய செல்வங்களாக அதை இசைத்தமையாகும்.சிறுவர்கள் என்பதால் வரும் சில ராகங்களின் ஸ்வரங்களின் ஸ்தானத்தை சரியாக அடையமுடியவில்லை எனினும் சபை மிகவும் ரசிக்கும்படியாக தங்கள் இசைக்கச்சேரியை சிறப்பாக செய்து முடித்தனர்.பல்லிய நிகழ்வுகள், பரத நாட்டியங்கள், மற்றும் வேகநடனங்கள் என்று நிகழ்வு பதினொரு மணி தாண்டும் வரை நடந்துகொண்டேயிருந்தது,
குறிப்பாக குமரிகளின் கும்மி நடனம்,ஆடவர்களின் நடன நிகழ்வு இறுதியில் தில்லானா என்று சொல்லப்படும் கலை நிகழ்வுகளின் இறுதியில் வரும் ஒரு அங்கம், இவையெல்லாம் நிகழ்வைச்சிறப்பாக்கியது. இவற்றையெல்லாம் நெறியாள்கை செய்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றாலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக சிலவற்றை எதிர்கால நிகழ்வுகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக இறுதியில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சிந்திக்கிறேன்.
அதைவிட நிகழ்வின் இடையில் தாயகத்தின் அல்லலுற்ற மக்களுக்களின் உணர்வுகளைப்பிரதிபலிக்கும் இசைக்குறுந்தட்டு வெளியிடப்பட்டது. கவிஞர்கள் வேணுகோபால்,ஈழக்கதிரவன்,
ராஜமனோகரன்,சிவா, மற்றும் சரவணன் ஆகியோரின் கவிவரிகளால் ”எழுந்து வா தமிழா” என்பதை கருப்பொருளாக தாங்கி வந்த பாடல்கள் இசை இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டது.வரவேற்கக்கூடியது.
எல்லாவற்றிக்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” என்று ஒரு அம்சமாக தாயகத்தின் அல்லலுறும் மக்களுக்கு அமைப்பு எந்த வகையில் தன் உதவிகளை செய்யப்போகிறது என்ற அடிப்படையில் ஒரு விவரணத்தையும் நிகழ்வின் இடையில் மேற்கொள்ளப்பட்டது. எந்த வகையில் உதவிகள் செய்யப்படலாம் என்ற அடிப்படையிலும் அல்லுறும் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு சிறக்கும் படியாக செய்யக்கூடிய நற்பணிகள் பற்றியும் அதில் உணர்த்தப்பட்டது. நிகழ்வை அறிவிப்பாளர் ஜெகன் மற்றும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் ( என்று தான் நான் நினைகிறேன்) தாயாபரன் அவர்களும் விவரித்தார்கள். முக்கியமான காலகட்டத்தில் இப்படியான இந்த விவரணம் அமைந்திருந்தமை எல்லோர் உணர்வுகளையும் தட்டியது.
தொடர்ந்தும் நிகழ்வில் இந்த நிகழ்வின் சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில் படைப்பாளி தீனா மற்றும் கவிஞர் ராஜமனோகரன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவங்கள் நிச்சயமாக உற்சாகங்களை கொடுக்கும் என்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அப்படியான நிகழ்வுகளின் வரவுகளை அதிகரிக்கும் என்றால் ஐயமில்லை.அவற்றின் மூலம் எங்கள் கலாச்சார நிகழ்வுகள் நின்று நிலைக்கும் என்றால் மறுப்பதற்குமில்லை.

நிகழ்வைப்பற்றி அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன்
அவர்கள் குறிப்பிடுகையில் “ இந்த அமைப்பை நாம் உருவாகியதன் நோக்கம் புலம்பெயர்ந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் எம் தமிழர்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியானதும் தெளிவானதுமான ஒரு சமூக அமைப்பாக மாறுவதுடன் அதன் மூலம் எங்கள் தாயக உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் பலத்தையும் வழங்கி அவர்களையும் ஓர் உறுதியான நிலைக்கு கொண்டுவருவதற்கேயாகும்’ என்றார்.
அதோடு மட்டுமல்லாமல் “ மிகக்குறுகியதான காலப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் தாயக மக்கள் மத்தியிலும் செயல்பட்டு வருகிறோம்.இதற்குத்தரும் எல்லையில்லாப்
பேராதரவு மேலும் வலுவடையச்செய்வதோடு பெரு நம்பிக்கையையும் ஊட்டும்” என்று பெருமை கொண்டார் அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன் அவர்கள்.

நிகழ்வு பதினொரு மணியையும் தாண்டி நடந்து கொண்டேயிருந்தது. பல்வேறு சின்னஞ்சிறார்களும் நடுத்தர வயத்து சிறார்களும் நிகழ்வை வெகு உற்சாகமாக நடாத்திக்கொண்டேயிருந்தனர்.குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சில தவிர்க்கக்கூடிய விடயங்களை இங்கு சொல்லத்தான் வேண்டும். மேடை நிகழ்வுகளில் இயல்,இசை,நாடகம் என்ற வரிசையில் முத்தமிழ் நிகழ்வுகளாக அமைதல் நிகழ்விற்கு சிறைப்பைத்தரும் என்ற அடிப்படையில் பாடல்களும் நடனங்களும் அமைந்திருந்தன.என்றாலும் எந்த வேளையிலும் சபை நிகழ்வினால் சலிப்படையாமல் நிகழ்வை விறு விறுப்பாக்கும்படியாக நிகழ்வை கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு விழா ஒழுங்கமைப்பாளர்களையே சாரும்.பல்லிய நிகழ்வுகளால் ஒருபோதும் சபை சோர்ந்துவிடாது, ஆனால் தொடர்ந்தும் பல்லிய நிகழ்வாகவே அமையுமாக இருந்தால் நிச்சயமாக ஒருவிதமான சலிப்பை சபைக்குத்தரும் என்றால் அது உண்மைதான்.அதேபோல நிகழ்வில் இசைக்கப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு பாடல் பல்வேறு தடவைகள் கேட்ககூடியதாக இருந்தமை இன்னொரு விதமான சலிப்பைத்தந்தது. தொடர்ந்து நடன நிகழ்வுகள் மட்டும்தான் தமிழர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளா என்ற கேள்விகூட சபையிலே கேட்கக்கூடியதாக இருந்தது.பரத நாட்டியங்களை அடிப்படையாக வைத்தே நாட்டிய நாடகங்கள் இருக்கின்றன. பல்வேறு நடனக்கலைஞர்களைக்கொண்டதாக அமைந்திருந்த நிகழ்வில் அவற்றைப்படைத்திருக்கலாம்,நடனக்கலைகளை முறைப்படி கற்கும் சிறுவர்கள் பலர் நிகழ்ச்சிகளைப்படைத்தமையை உணர முடிந்தது. என்றாலும் திரும்பத்திரும்ப ஒரே கலைஞர்களே மேடைக்கு வந்து கொண்டிருந்தமையும் ஒரேவகையான பாடல்களுக்கே நடனம் ஆடிக்கொண்டிருந்தமையும் சலிப்பைத்தந்தது,அதைவிடுத்து தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளாக சகல கலைஞர்களையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்ட நிகழ்வுகளைப்
படைத்திருக்கலாமே என்பது தான் எல்லோருடைய எண்ணமுமாக இருந்தது.
மேலும் எம்மவர்களின் தமிழர் விழாவில் திரும்பத்திரும்ப வேக நடனம் மேடைக்கு அவசியமா? என்ற கேள்வியும் இருக்கிறது.சினிமாக்களின் இடையில் சில குத்துப்பாடல்களுக்கு ஆடுவதைப்போல ஒருபாடலுக்கு மட்டுமல்ல பல தடவைகள் எம் நடுத்தர வயது கலைஞர்கள் பாடல்வரிகளின் அர்த்தங்களுக்கே நளினம் கொடுத்து ஆடுவதெல்லாம் தேவைதானா? அதுவும் பொங்கலோடு வரும் தமிழர்விழாவில் எம்கலை வளர்ச்சிக்காக நடாத்தும் நிகழ்வில் இவற்றின் அவசியம் என்ன? இதில் சொல்லப்படும் எம் பண்பாட்டு விழுமியம் என்ன? இப்படியான பல கேள்விகள் எல்லாம் அங்கு மனதில் கேட்டவை, வாய் நுனியின் உச்சரிப்பில் வந்து சென்றவை. அதுமட்டுமல்லாமல் நிகழ்வைத்தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஜெகன் அவர்கள் பல காலங்கள் எம் கலாச்சார நிகழ்வுகளோடு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்திருக்கிறேன்.நிச்சயமாக நிகழ்விற்காக கலந்துகொண்ட ஒத்திகையில் கூட நிகழ்வுகளின் நெறிப்படுத்தல், நிரல் ஒழுங்கமைத்தல் மற்றும் கூடிய நேரம் மேடையை கைப்பற்றும் நிகழ்வுகள் மற்றும் ஒரே நிகழ்வுகளினால் சபையில் வரும் சலிப்புத்தன்மை போன்றவற்றை உணராமல் விட்டுவிட்டாரா? எல்லாவற்றிற்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” மற்றும் ”எழுந்து வா தமிழா” என்று பல்வேறு சேதிகளை சொல்லும் இந்த தமிழர் விழாவில் இப்படியான நிகழ்வுகளை தவிர்க்க காரணங்கள் பல இருக்கின்றன என்று எல்லாம் சிறிய சிறிய (இதெல்லாம் சிறிய விடயமா என்று சிரித்திருப்பீர்கள் இல்லையா) தவிர்க்கக்கூடிய விடயங்கள் குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்.
மேலும் நடனங்கள் பாடல்கள் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால் நடனங்களில் பலவகைகள் இருக்கின்றன, நாடகங்களில் பலவகை இருக்கின்றன இவையெல்லாம் சபையோரை மனங்கோணவைக்காத நிகழ்வுகள்,வில்லிசைகள் பட்டி மன்றங்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்வுகள் நடனங்களில் காவடி,கும்மி,கோலாட்டம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.வளர்ந்துவரும் சிறார்களின் திறமைகளை இனங்கண்டு வெளிப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பை பொறுப்பெடுத்து அவற்றை சரியாக இனங்கண்டு கலைஞர்களை மேடைக்கு கொண்டு வந்தமையும் வழி நடாத்தியமையும் இந்த அமைப்புக்கு சிறப்பான பாராட்டை கொடுக்க வேண்டும்.
அதேபோல எம் தமிழர்களின் விழாவில் இப்படியாகத்தான் நிகழ்வை ஒழுங்கமைக்கவேண்டும் என்றும் இந்த நிகழ்வின் நோக்கத்தை இலக்காக கொண்ட நிகழ்ச்சிகளின் படைப்புக்கள் அமைய வேண்டும் என்றும் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் எண்ணவேண்டும்.. உண்மையில் அந்த அடிக்கடி வந்த வேகநடனங்களைக்கூடத் தவிர்த்து நிகழ்வில் சபையின் ரசனைகளுக்காக ஒரு நிகழ்வோடு நிறுத்தியிருக்கலாம்.அதோடு எம்பண்பாட்டு கலை நிகழ்வுகளை அந்த கலைஞர்களால் படைத்திருக்கலாம்.
இப்படியான சில தவிர்க்கவேண்டியவற்றைத்தவிர முற்றிலும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.படைத்த கலைஞர்கள், நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் என்று எல்லோரின் சிறப்பான முயற்சி எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
சிறுவர்களின் இந்த கலை ஈடுபாடுகள் மற்றும் மேடை நிகழ்வுகளில் சிறப்பாக வெளிக்கொணருதல் என்பன எம்மினத்தின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்தில் ஆணித்தரமாக என்றென்றும் கால் பதித்தேயிருக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமென்றால் எந்தவிதமான மறுபேச்சிற்கும் இடமேயில்லை.அந்த கருத்தை மனதிலெடுத்து அதற்காக நிகழ்வுகள் கூட்டி விழாவெடுக்கும் எம்மவர்கள் தமிழர்களின் உணர்வுகள் மற்றும் கலைவிரும்விகளின் நன்றிக்குரியவர்கள்.
என்றும் எங்கும் எங்கலைகள் ஓங்கட்டும் என்றும் பிந்தியாதாகவந்தாலும் மகிழ்ச்சிபொங்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்

இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களைக்கூட கீழேயிருக்கும் ”உங்கள் கருத்துக்கள்” என்ற பகுதியை அழுத்துவதினூடாக பகிர்ந்து கொள்ளலாம்.