தோசைக்கு ஒரு தினம்!!!!!!!!!!

சாப்பாட்டு விசயம் தான்.
எல்லாத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல தோசைக்கு ஒரு தினம் இருந்தால் எப்படி இருக்கும்??

என்ன ஒரு வித்தியாசமான கற்பனை !!!!!!!!
தோசைச்சட்டி எல்லாம் அடுப்புக்கு போயிருக்கும்….




இன்று  Pan cake தினம்…
கிறிஸ்தவர்களின் தவக்கால விரத காலத்துக்கு  முன்னதான நாளில் அமையும் தினம் தான் இது. 
அது உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) நாளிலிருந்து 47 நாள்கள் முன்னதான நாளில் வருவது. பொதுவாக பெப்பிரவரி 3ம் திகதியிலிருந்து மார்ச் 9ம் திகதிவரைக்குமான காலத்தில் ஏதோவொரு நாள் தினம் Pan Cake Day வரும். ஏனெனில் சந்திரனின் சுழற்சியை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு (( Easter Sunday))வருவதனாலென்று கூறப்படுகிறது.
விதம் விதமான Pan Cakes கள் உண்டு மகிழும் அதே வேளை அதை ஒரு நிகழ்வாக கூட பல அமைப்புகள் ஒழுங்கு செய்கின்றன.
எல்லாத்தினங்களையும் வணிக நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போல இந்த தினத்திலும் வகை வகையான  
Pan Cakes களையும் அதற்கான மா வகைகளையும்  விற்பனையில் காட்சிப்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.


சரி இதே போல ஒரு தினம் தோசைக்கு வந்தால் எப்படி இருக்கும்…

தோசை என்றவுடன் பல நினைவுகள் பலருக்கு வந்து போகும்..

ஊரிலை வல்லிபுரக்கோயிலுக்கு போகும் போதெல்லாம் மேற்கு வாசலில் இருக்கும் தோசைக்கடை. அதில் சாபிடுவதற்கென்றே கோயில் போவர் சிலர்.கோயிலுக்கு போகின்றவர் எல்லாம் அந்த பக்கம் எட்டி பார்த்து சம்பலும் தொசையை சுவைத்தால் தான் ஏதோ ஞாயிற்றுக்கிழமை நிம்மதி போல இருப்பார்கள்.. சம்பலும் முறுகிய தோசையும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அதைவிட நெல்லியடி சந்தி தாண்டி கொடிகாம் வீதி முடக்கில் தோசை விற்ற ஒருவருவரிடம் முந்தியடிக்கும் இளைஞர் கூட்டம்.அதில் தோசைக்கு அவர் கொடுக்கும் ஆட்டுஇறைச்சிக்கறிக்கு அல்லது கோழி இறைச்சிக்கறிக்கு  ஒரு சபாஷ் தான். அதன் மணத்தாலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். அப்படி ஒரு தனி சுவையும் மணமும்.
ஆனால் இப்பொழுது அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நான் பதினெண் வயதிலிருக்கும் காலத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்று ஒருதோசை என்றாலும் சாப்பிட்டு சுவைத்த இனிய நினைவு. நிச்சயம் அவர் அதன் வருமானத்தால் இன்னோரு நிலைக்கு போயிருக்கவேண்டும்.ஏனெனில் அவ்வளவு கூட்டம் அவருக்கு.

எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.பாக்கியக்கா என்று ஊரில எல்லாருக்கும் தெரியும்.ஊரிலே உள்ளவர்கள் எல்லாரும் வாரத்திலே ஒரு நாள் காலை வேளை என்றாலும் அவ சுடும் தோசையை சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
அவ சுடும் தோசையும் தனி சுவை.தோசை இருக்கும் முறுக்கென்ற பிடிப்பு ஒரு ருசி. தோசையோடு தரும் சம்பல் தோசைக்கு இன்னுமொரு மெடுகூட்டும். காலை வேளையில் அடிக்கடி வாங்கி சாப்பிடும் அந்த தோசையில் நாங்கள் 10 கேட்டால் எங்களுக்கு என்று 12 தருவா பாக்கியக்கா.அது சம்பலை உள்ளே வைத்து மடிச்சு கொஞ்சம் முறுகியது போல ஒரு தோசை. நானும் என் தங்கையும் அடிபட்டு சண்டை பிடித்து சாப்பிடுவம். தோசை சாப்பிடுவதில் பெரிய பிடிப்பு என்பதை விட  எங்கள் பாக்கியக்காவின் தோசைக்கு ஒரு மதிப்பினால் தான் அந்த சண்டை.ஆனால் கடைசியில் அப்பாவின் உதவியோடு தங்கையே வென்றுவிடுவாள் என்பது பெரிய இரகசியம்.ஆனால் பாக்கியக்காவின் தோசைக்கு அவ்வளவு ஒரு மதிப்பு இருந்தது என்பது மட்டும் உண்மை. 
 
எல்லாவற்றையும் விட வீட்டில் அம்மா அம்மாமா மற்றும் என் அன்ரி (அம்மாவின் தங்கை) மற்றும் என் பெரியம்மம்மா ,சின்னம்மம்மா  சுடும் தோசைக்கும் நாங்கள் சப்பாணி கட்டி அடுப்பங்கரை பக்கம் அமர்ந்து விடுவோம்.தாளித்த சம்பலுடன் எண்ணெய் தோசை, முட்டை தோசை,சும்மா தோசை, என்று ஒவ்வொன்றாக ருசித்த பின் தான் அவ்விடத்தை விட்டு எழும்புவது.
தோசை சாப்பிட பின் முழுவதுமாக வாயை திறந்து மொள மொள என்று தண்ணீர் குடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் தோசையின் ருசிம் அது சாப்பிட்ட களைப்பும்.

இப்படி தோசை என்பது இனிய நினைவுகளை அடுக்கலாம்.அது உங்களுக்கு பல மாதிரி வந்து ருசித்து ரசித்திரிப்பீர்கள்.
தாயகத்தில் எல்லாவீடுகளிலும் தனியான ருசியாக அமைந்துவிடும் உணவு.ஐரோப்பிய நாடுகளிலும் எல்லாவீடுகளில் நிச்சயம் இருக்கும்.சைவக்கடைகளுக்கு போனால் பல வகைப்படுத்தி தோசையை விற்கின்றார்கள்.

சரி இப்ப நினைச்சு பாருங்க தோசைக்கு ஒரு தினம் வந்தால் எப்படி இருக்கும்1!!!
நகைக்கடைகாரருக்கு அட்சய தினம் போல சாப்பாட்டுக்கடை ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஒரு தோசை தினமாக மாறும் என்பது ஒரு புறம்.
விற்பனைக்கடையெல்லாம் தோசை மாவை சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் வைத்து வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்க வைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் முடிவு எடுத்துவிடுவார்கள்.
மக்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் போக அந்த தினம் ஒரு மிகப்பெரும் கொண்டாட்டம் என்று தாமாகவே தோசை மாவை தேடி வாங்க ஆயத்தமாகிவிடுவார்கள். இது தான் உலகம்.

அதைவிட கற்பனையை இன்னும் நீட்டி வளர்த்தால் தோசை தினம் என்றால் வல்லிபுரக்கோயிலில் தோசைக்கு நீண்ட வரிசை வந்துவிடும் அந்த நாளில். தோசைக்கடைகள், முன்னோடியான பிரபல்யமான உணவகங்கள்  எல்லாம் வல்லிபுரக்கொயிலுக்கு படையெடுக்கும்.
கொட்டிலில் விற்ற பெண்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று அமெரிக்கா சீனாக்காரர் போல திட்டம் தீட்டப்பட்டாகிவிடும்.சிலவேளை கொட்டிலில் விற்றவருக்கான மெளசு கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்றாலும்  தோசை தினம் என்றால் நாம் உண்டு ருசித்து களித்த உணவை இன்னும் சந்தோஷமாக உண்டு மகிழலாம் என்பதும் உண்மைதான்.

மொத்தத்தில் தோசை என்பது எம்மோடு பின்னிபிணைந்துவிட்ட உணவு. அதன் தனி ருசியை கூடிகளித்து உண்டவர்களுகளுக்கு நிச்சயம் அந்த நாள்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வந்தேயாகும். அந்த நாள்கள் உண்மையில் அருமையானவை.

பகிர்ந்தது 
 யோகா தினேஷ்


  

உலகம் கொண்டாடும் காதல்!!!

காதலர் தினம்



உலகம் கொண்டாடும் காதல்….
இலக்கியமெங்கும் நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும் காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில் நிலைக்கும்….

காதலில் கலக்ககுவது எப்படி??????
கலைத்து கலைத்து காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத சுகமாகும்……

நேரகாலம் தெரியாது போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள் மறந்து போகும்….
குளிக்கும் நேரம் மாறும்..
அப்படி குளித்தாலும் அது மணிக்கணக்காகிவிடும்….

பகலில் நடை நித்திரையாக்குவதும் காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….

இரவில் காதல் கதையை காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும் காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும் 
உற்சாகம் மெருகேறும்….......


வீட்டிலிருந்து சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான பாதை அது என்பர்…..

காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின் வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும் என்றும் சுகமே……

காதல் சில கனவாகும் …..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம் பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும் வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்


காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில் காத்திருக்கும் சுகம் காணுவோர்....
 நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும் காதல் தான்………

கொண்டாடும்  காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை சொல்ல அது……
பாசத்தின் வலிமையை சொல்ல அது……
காதலை காதலித்து காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல் நிலைக்கட்டும்…

காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
                                                காதலில் உங்களில் ஒருவன்
                                                               யோகா தினேஷ்





The Mystro இன் வாலிபம்

இசையின் இளைய சாரீரம்


 The Mystro இன் வாலிபம் இசை இறுவெட்டு (CD) வெளியாகியிருக்கிறது.
GJ ARTS கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  இறுவெட்டு சிடி வெளியீட்டு நிகழ்வு Hays Beck Theatre கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Dayan shan, Cismoda, மற்றும் Banu ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்தளிக்க அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு.
ஆரம்பத்தில் நக்‌ஷத்திரா நாட்டியாலய நடனம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் பங்குபற்றிய நடனப்பெண்கள் மேடையை சரியாகப்பயன்படுத்தி தங்கள் நிகழ்வை வழங்கியிருந்தனர்,அதனைத்தொடர்ந்து ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வோர் சிறப்புடனும் வேவ்வேறு வகையுடனும் நிகழ்வை காண வந்த ரசிகர்களை வேறு பக்கம் திருப்பாது மேடை நோக்கியே வைத்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இடையில் வந்த கரகோஷங்கள் அதற்கு சான்று.
தாண்டவம் நடனப்பெண்கள் தங்கள் நடனத்தோடு கொடுத்த செய்தி பாராட்டவேண்டியதொன்று.வாகனம் செலுத்தும்போது வரும் கவனக்கலைப்பான்களால் வரும் பேராபத்தையும் அதை தவிர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் கொடுத்த செய்தி.

இளம் நடனக்குழுவினராகிய தாண்டவம்  அதற்கு பெரு முயற்சியெடுத்து வழங்கியிருந்தமை அரங்க நிகழ்ச்சியை பார்க்கும் போது புரிந்தது.

Crawly pakkam,அடையாளம்,phoenix போன்ற பல்வேறு நடனக்குழுக்கள்
அரங்க நிகழ்ச்சியை ஓயவிடாது தந்த நடனங்கள் அரங்கையே ஆடவைத்தது. தனி நடனம் கொடுத்த Krisshna (Trin3gy) பாடல்களுக்கு தன்னையே வளைத்துப்போட்டு ஆட்டியது எங்களுக்கு கிடைத்த மைக்கல் ஜாக்‌ஷன் போல இருந்தது.அதேபோல பல இளம் (Rap) சொல்லிசை பாடகர்கள் மற்றும் மெல்லிசை  பாடகர்கள் மேடையை சோரவிடவில்லை. அத்தனை நடுவிலும் நிகழ்ச்சியை தொத்தளித்த  விட்ட நகைச்சுவைகளும் கலைச்சு கலைச்சு கடித்தவைகளும் அவ்வப்போது சிரிக்கவைத்துக்கொண்டேயிருந்தது.




புல்லாங்குழல் இசைத்த குருஜி (Kuruji) ஆற்றல் அவரை இன்னோர் காலத்தில் சிறப்புக்கலைஞனான புலம்பெயர் நாட்டில் காணாலாம் என்ற படி அவரின் புல்லாங்குழல் இசைத்த தன்மை. அவரோடு இணைந்து பாடியவர்களும் வயலில் இசைத்தவர்களும்,கீபோர்ட் இசைத்த கலைஞர்கள், கெளதம் (Gowtham) அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
எல்லாவற்றையும் தாண்டி The Mystro இன் இறுவெட்டை வெளியீடு செய்தபோது வந்த உணர்வு, உறவு கண்ணீர் மறக்கமுடியாதவையாக ஒட்டிக்கொண்டன. The Mystro இன் அம்மா அப்பா எல்லோரும் உணர்ச்சிமேலீட்டால் பேசிய ஆனந்த கண்ணீருடனான வார்த்தைகள் கலைஞனை பெற்ற பெற்றோரின் மகிழ்ச்சியை உணர்த்தியது.
அதில் The Mystro இன் தழுதழுத்த குரல், ஆனந்த கண்ணீர் வார்த்தைகள் எல்லாம் கலைஞனின் சவால் மிகுந்த பயணத்தையும் அதில் கண்ட உற்சாக இன்பத்தையும் பதிவு செய்தது.


மேடை அமைப்பும் மேடை ஒளி ஒலி அமைப்பும் நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றிய கெளசிகன் சிவலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்து அதில் தனது முக்கிய பங்கை கொடுத்திருந்தார்.
மொத்தத்தில் The Mystro இன் இசை வெளியீடு நிகழ்வானது மேடையையும் 
அரங்கையும் சோரவிடாது அமைந்திருந்தமையை பாராட்டியே ஆகவேண்டும். 
இருப்பினும் நிகழ்ச்சிக்கு இளைய வட்டமே அதிகம் வந்திருந்தமை கவலை தரக்கூடிய விடயமே. பங்குபற்றிய கலைஞர்களின் உறவுகளைத்தவிர முதலாந்தலைமுறையினரின் வருகை மிகக்குறைவாக இருக்கின்றமை இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பாதையாக முடியாது என்பது எம் எண்ணம்.இது இளைய தலைமுறையினருக்கும் முதலாந்தலைமுறையினருக்குமான இடைவெளி சமூகத்தில் அதிரிக்கும் போக்கை காட்டுகிறது.இது நல்லதல்ல.
இதை இளந்தலைமுறையினரும் உணர்ந்து நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அதேவேளை முதலாந்தலைமுறையினரும் வெறுமனே தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முண்டியடிக்காமல் இப்படியான நிகழ்வுகளிலும் பங்குபற்ற தயாராகவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
அத்தோடு நிகழ்வின் இறுதியில் தாயக மக்களை நோக்கிய  சிந்தனையில் கலைக்குழு வழங்கிய நடனம் பாராட்டத்தக்கது.என்றாலும் அந்த நிகழ்ச்சினின் நிறைவில் சொல்லப்பட்ட செய்தியை திரையில் எழுதிக்காட்டிய போது வந்த எழுத்துபிழைகளை நிச்சயம் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து.இதிலும் முதலாந்தலைமுறையினர் , அல்லது அறிந்தவர்கள் இளந்தலைமுறையினரை வழிப்படுத்தினால் அப்படியான சிறு தவறுகள் கூட இடம்பெறமாட்டாது என்பதை பதிவு செய்யலாம்.

இருப்பினும் தாயகம் நோக்கிய சிந்தனையிலும் நிகழ்ச்சியில் ஏதோவொரு நிகழ்வை இணைக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு நிச்சயம் பாராட்டியே வேண்டும்.

 
மொத்ததில் The Mystro இன் வாலிபம் நிகழ்வும் இறுவெட்டும் புலம்பெயர் கலைஞனின் ஓர் அடையாளமாக பதிவாகியிருக்கிறது. The Mystro என்ற கலைஞனின் புதிய முதல் படைப்பை அனைவரும் வாங்கி அந்த கலைஞனை தொடர்ச்சினான கலைப்படைப்புகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் உலக மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.அது கலைஞனையும் வாழவைக்கும், அவன் படைப்புகளும் வாழ்ந்துகொள்ளும்.இனியும் அவன் படைப்புகள் வரும்.

The Mystro இன் வாலிபத்திற்கு எம் அன்பான வாழ்த்துக்கள்..



வாழும்போதே வாழ்த்துவோம்

                                                                                              நிகழ்வு நோக்கு- யோகா தினேஷ்


உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்

அப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்

ஞாயிறு தினக்குரலில் எனது அப்பாவுடனான நட்பு,கலைஈடுபாடுகளில் போன்றனவற்றில் சிறுவயது முதல் இணைந்திருந்த அப்பாவின் நண்பர் திரு தில்லை நடராஜா அவர்கள் கடந்த வார ஞாயிறு தினகுரலில் எழுதிய பதிவு இது..மிகவும் அன்போடு தில்லை மாமா என்று நானும் அழைத்துக்கொள்வேன்.அன்போடு அப்பாவை பற்றிய பல விடயங்களையும் திரு தில்லை நடராஜா அவர்கள் பகிர்ந்துகொண்டமைக்கும் அதை பிரசுரித்த ஞாயிறு தினகுரலுக்கும் ஆசிரியர் திரு பாரதி ராஜநாயகம்அவர்களுக்கும் மிக நன்றிகளை பகிர்ந்துகொண்டு அந்த பதிவை
இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

 

ஊருக்குப் பெருமை சேர்த்த உண்மைக் கலைஞன்

எங்கள் கிராமம் உடுப்பிட்டி சிறிதாக இருந்தாலும் சிறந்த கல்விக்கூடங்களாலும் அவை உருவாக்கிய பல்துறைப்புத்திஜீவிகளாலும் ஊருக்குப்பெருமை தேடிக்கொண்டது. புலவர் வரிசையில் உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், இலங்கைக்கு புகழ் சேர்த்த  அணுவிஞ்ஞானி கந்தையா, பேராசிரியர்.அழகையா துரைராசா என ஒவ்வொரு துறையிலும் பலர் நினைவுக்கு வருவர்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் 160 ஆண்டுகள்
நிறைவையொட்டி சில தினங்களுக்கு முன் கொழும்பில் நட்சத்திர
ஹோட்டலில் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளை ஒன்று கூடலை நடாத்திய போது நண்பர்களால் நினைவு கூரப்பட்ட கலைஞன் 'உடுப்பிட்டியூர் யோகன்' என அழைக்கப்படும் அமரர். வி.யோகராஜா. 70கள்-80கள்-90கள் என மூன்று தசாப்தஙங்களாக வில்லிசை மன்னனாக விளங்கியவர் வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவர்-யோகராஜா.
உடுப்பிட்டிக்கிராமத்தின் ஒரு பகுதியாகவுள்ள இலக்கணாவத்தையில் வியாகேசு-மங்கையர்க்கரசி தம்பதிகளின் மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி பிறந்தார். கொழும்பில் நடைபெற்ற ஒன்று கூடல் நடைபெற்ற திகதியும் ஜனவரி 19ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. என்னை விட வயதில் குறைந்தவனாக யோகராஜா இருந்தாலும் அபாரமான திறமைகள் மிக்க அற்புதமான கலைஞன். அவனது தாயாரும் எனது தாயாரும் ஓரே வகுப்பில் கல்வி கற்றதால்- எங்கள் வீட்டாருக்கும் அவன் செல்லப்பிள்ளை. சிறு வயதிலேயே நன்றாகப்பாடுவான்-நடிப்பான்-விளையாடுவான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.,சுட்டித்தனங்கள் செய்வதிலும் மன்னன்.
நினைவுப்பாதையில் திரும்பிப்பார்க்கும்போது- 1957ம் ஆண்டு கல்லூரி பெற்றோர் தினவிழாவில் ஆசிரியர் அருள் எம்பெருமான் சிறுவர்கள் பங்கேற்கும் 'புலி வேட்டை' நாடகத்தை தயாரித்திருந்தார். கதை இது தான்- ஒர் ஊரின் அருகிலுள்ள காட்டில் வாழ்ந்த புலி ஊரிலுள்ள கால்நடைகளைத்தின்றதுடன் மக்களையும் அச்சுறுத்தியது. ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி புலியைப்பிடித்து தருபவருக்கு பரிசு என அறிவித்தார்கள். இருவர் புலிவேட்டைக்கு புறப்பட்ட போது-காட்டிலிருந்து ஒருவன் ஒரு கூடையைச் சுமந்த படி 'புலி புலி' எனக் கத்திய வண்ணம் ஊருக்குள் வந்தான். புலிவேட்டைக்குப்புறப்பட்ட இருவரும் அவனிடமிருந்த கூடையைப் பறித்து அவனைக் காட்டுக்குள் துரத்திவிட்டு கூடையுடன் ஊர்ப்பெரியவர்கள் முன் சென்று தாங்கள் புலியைப்பிடித்துக் கொண்டு வந்துள்ளதாகத்தெரிவிக்க-எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடையைத்திறந்து பார்க்கும் போது உள்ளே இருந்தது-பழப்புளி உருண்டைகள்.
சிறுவர்கள் பலர் நடித்தாலும் சிறப்பாக நடித்த யோகராஜா-'புலி வேட்டைப்பெடியன்' என அழைக்கபடும் படலம் ஆரம்பமாகியது. அன்று என்னை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்ல வந்திருந்த தாயாரின் தந்தையாருக்கு (தாத்தாவுக்கு) அந்த நாடகம் நன்றாகப்பிடித்துக்கொண்டது. 'லகர' 'ளகர' 'ழகர' உச்சரிப்புக்கு வேறுபாடிருக்க வேண்டியதன் அவசியத்தைச்சுட்டிக்காட்டிய நாடகம் ஆசிரியருக்கு வெற்றி நாடகமாக அமைந்தது.
எனது தாத்தா சாதாரணமாக இரவுத்திருவிழாக்களுக்கு போகமாட்டார்-படிப்பு குழம்பி விடுவதால் எனக்கும் அனுமதியில்லை. ஒரு நாள் அதிகாலையில் அம்மாவிடம் வந்து சொன்னார்-'பிள்ளை—ராத்திரி இலக்கணாவத்தையிலை வேலை முடியப்பிந்தியிடுத்து- கோவிலடியாலை வாறன்-சின்ன மேளம் பார்க்க சரியான சனம். சின்ன மேளம் ஆக்களோடை சேர்ந்து புலிவேட்டைப்பெடியனும் பாடினவன்-வலு திறம்-இண்டைக்கும் இராத்திருவிழாவிலை புலிவேட்டைப்பபெடியன் பாடுறானாம். நான் இவனைக்கூட்டிக்கொண்டு போறன்.
பெற்றோரின் அனுமதியுடன் ஐந்தாம் வகுப்பு மாணவனான என்னை தாத்தா இரவுத்திருவிழா பார்க்க கூட்டிச்சென்றார். தவில் நாதஸ்வரக்கச்சேரியை அடுத்து அக்காலத்தில் 'சதுர்க்கச்சேரி' என அழைக்கப்பட்ட சின்ன மேள ஆட்டம் ஆரம்பமாகு முன்-அவர்களுடன் வந்த பக்கவாத்தியக்கலைஞர்கள் பாடுகின்றார்கள்-இரண்டு பாடலகள் முடிய சிலர் 'தாத்தாவின் 'புலிவேட்டைப்பெடியனாக யோகராஜாவை தூக்கிக்கொண்டுவந்து ஒலி வாங்கிக்கு முன் பக்கவாத்தியக்காரர் நடுவே இருத்திவிட யோகராஜா பாடுகிறான்- 'நீல வண்ணக்கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா' அடுத்து 'நான் பெற்ற செல்வம்-நலமான செல்வம்' கைதட்டல்களுக்கிடையே நடனமாட வந்த பெண்களும் பாடலை ரசித்து யோகராஜனை தூக்கி முத்தமிட்டனர்-
சில மாதங்களுக்கு முன் 'சுப்பர் சிங்கர்' செல்லக்குரலைத் தேடும் போட்டிகளில் முதலிடம் பெற்ற ஆஜித் மற்றும் ஸ்ரீ காந்த் சிறுவர்களை பிரபல பாடகர்கள் திரைப்படக்கலைஞர்கள் அரவணைத்துப் பாராட்டி முத்தமிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் மனத்திரையில் யோகராஜாவின் பாடல் காட்சிகள் ஓடி மறைந்தது. காரணம் யோகராஜாவும் சிறு வயதில் ஆஜித் போன்ற தோற்றமும் குறும்புகளும் எதுவித முன்னேற்பாடுமின்றி எந்தப்பாடலையும் பாடும் வல்லமையும் அவனுக்கிருந்தது. ஆசிரியர் அருள் எம்பெருமான் வீட்டு மேசையை மிருதங்கமாக்கி தவம் அல்லது ஐயாத்துரை தாளம் போட ஹிந்திப் பாடல் மெட்டுகளில் தமிழ் பாடல் தயாராகும்- யோகராஜா குரல் கொடுப்பான்-
மதுமதி படத்தின் ஹிந்திப்பாடல்கள்; தமிழ் வடிவத்தில் 'வா என்னாசை ராணி வந்து வாழ்வில் கூடுவாய் மாறாத கீதம் பாடுவாய்' என மாற்றம் பெற்றது.
'ஆஜாரே' ஹிந்திப்பாடல்---'மாறாதே என் மனக்கோவிலே' மாற்றம் பெற்றது-
ஒவ்வொரு வருடமும் பெற்றோர் தினம் எப்போவரும்? எம்பெருமான் மாஸ்டரின் நாடகம் எப்படி இருக்கும்  அதில் யோகராஜாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு
'உலகம் போற போக்கைப்பாரு'- 'றிக்ஷோக்காரன் கனவு' இப்படி ஒவ்வொரு நாடகமும் ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நினைவை விட்டகலாத நாடகங்கள்
நாடகங்கள் பார்க்கப் -பார்க்க சில பாத்திரங்களில் நடிக்க என் மனதில் எழுந்த ஆசை -'ஏன் நாடகங்கள் எழுதித்தயாரிக்கக்கூடாது?'- யோகராஜனின் திறமையையும் ஒத்துழைப்பையும் நம்பி 'சிங்கப்பூர் சிங்காரம' -; 'கண்திறந்தது' நாடகங்களை பிரதியாக்கம் நெறியாள்கை செய்தேன். எதிர்ப்புகளுக்கிடையிலும் ஏகோபித்த பாராட்டு.
ஒரு நாள் பெற்றோர் தினத்துக்கு முந்திய தினம் கல்லூரி அதிபருக்கு யாரோ ஏதோ சொல்ல எனது நாடக மேடையேற்றத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார். மாணவனான கந்தையா நீலகண்டன்  அதிபருடன் வாதித்தான். வாதம் நள்ளிரவு வரை நீடித்து அதிபர் தான் நாடகத்தை பார்த்தபின் இறுதி முடிவு எடுப்பதாக சொன்னார். அந்த நாட்களில் கந்தையா நீலகண்டன் சட்டத்தரணியாக வருவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. யோகராஜாவின் பண்பட்ட நடிப்பு அதிபரின் கைகளை நாஷனல் பொக்கற்றில் நுழைத்து கை லேஞ்சியை எடுத்து கண்களைத்துடைக்க வைத்தது. அதிபரின் கண்களில் நீர் வடிந்ததை அன்று தான் பலர் பார்த்திருக்கிறார்கள்
யோகராஜா கால் பந்தாட்ட அணித்தலைவனாகவும் பாராட்டுப்பெற்றவன்- அணிவீரர்களையும் மைதானத்தையும் சூழலையும் பொறுத்து வெற்றி தோல்விகள் வந்தாலும் எல்லோரின் மனங்களையும் வென்றுவிடக்கூடிய ஆற்றல் நண்பனுக்கிருந்தது. ஆட்ட முடிவில் இடம் பெறும் தேநீர் விருந்தில் யோகராஜாவின் பாடல் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். எத்தனை தரம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல ஆவலைத்தூண்டும் அவனது பாடல்கள்:-
'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே'
'டிங்கிரி டிங்கிரிலே மீனாட்சி தங்கமே தில்லாலே'
'உனக்காக எல்லாம் உனக்காக-இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக'

1963ல் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நாடகப்போட்டியில் பிரதியாக்கம் நெறியாள்கை நான் செய்தாலும் யோகராஜாவின் நடிப்பால் முதலிடத்தைப்பெற்றுக்கொண்டோம்- காலப்போக்கில் நான் உடுவை எஸ்.தில்லைநடராசாவாக அவன் உடுப்பிட்டியூர் யோகனாக மாறினான்.
பாடும் திறனால்-இயல்பாகவே நகைச்சுவையும் கை வரப்பெற்றதால் வில்லிசை செய்ய ஆயத்தமானான். அப்போது யாழ் 'ஈழநாடு;' பத்திரிகை பாமா ராஜகோபால் கலைஞர்களுக்கெல்லாம் கை கொடுப்பவர்.
யோகனின் வில்லிசை யாழ்ப்பாணத்தில் மேடையேற களமமைத்தார்- வவுனியா பொலிஸ் அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஞ்சலட்டை மூலம் அழைப்பு விடுத்தான் யோகன்- அந்த அஞ்சலட்டையை அவன் நினைவாக இன்னும் வைத்திருப்பதற்கு காரணம் தான் செய்வதெல்லாத்தையும் நியாயப்படுத்தி மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் திறமையும் அவனுக்கிருந்தது.
Police Office  என முகவரியிடாமல்  Police Station  என முகவரியிட்டதற்கு காரணம் சொன்னான்- பொலிஸ் அலுவலகம் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பூட்டியிருக்கும். பொலிஸ் நிலையம் எப்போதும் திறந்திருக்கும். வழமையாக கடிதத்தில் 'நலமறிய அவா' என எழுதுவது வழக்கம்- நலமறிய வா என்று வரும் படி அழைத்ததாக எழுதியதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது.  கடிதமாக எழுதி உறையில் இட்டால் படிப்பது நானாக இருக்கும்- திறந்த அஞ்சலட்டை என்றால் பலரும் சிரமமின்றி வாசித்து எனக்கு தகவலைத் தெரிவிப்பர் என்பது வென் எதிர்பார்ப்பு. அது சரியாகவே இருந்தது.பாமா ராஜகோபால் என எழுதாமல் பாமா என எழுதினால் பெண் என எண்ணி தகவல் வேகமாக பரவும் என்பதும் யோகனின் எண்ணம்.





குறுகிய காலத்துக்குள் வில்லிசை வல்லாளர்கள் திருப்பூங்குடி ஆறுமுகம்-கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை வரிசையில் இடம்பெறுமளவுக்கு உடுப்பிட்டியூர் யோகனும் வளர்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

வில்லிசையை ஆரம்பிப்பதற்கு முன் சில பக்திப்பாடல்களை யோகன் பாடுவான். பக்திப்பாடல்கள் கேட்பதற்கென்றே வந்தவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் செவிகளில் எதிரோலிக்கும் பாடல்கள்:-
'நீ அல்லால் தெய்வமில்லை'
'நான் நினைத்தபோது நீ வர வேண்டும்'
'கற்பனை யென்றாலும் கற்சிலையென்றாலும்.


.'
1975ம் ஆண்டு உடுப்பிட்டியில் தேன் கிண்ணம் எனனும் தலைப்பில் கதம்ப நிகழ்சியை ஒழுங்கு செய்த போது வித்தியாசமான விளம்பர உத்திகளை கையாள ஆலோசனை நல்கியதும் யோகன்
தாளலய மெட்டில்-'எடி எடியே எழும்பி இஞ்சை வாடி கொஞ்சம்
ஓமோம் எங்கடை பொடியளின்ர கூத்தும் கும்மாளமும் பார்க்க வாங்கோ'
என தாளத்தோடு பாடி விளம்பரம் செய்து ரசிகர்களைத்; திரட்டியதும் யோகனே!
வழமையாக ஒலிபெருக்கி பூட்டிய காரில் அறிவிப்பு செய்வதை மாற்றி அறிவிப்பவர் காரை விட்டிறங்கி அக்கம் பக்கத்தில் உள்ளவருடன் நகைச்சுவையாகப்பேசி நிகழ்வுக்கு ஆட்களைத்திரட்டியதும் யோகனே!.
அன்று  கே.எஸ் பாலச்சந்திரனின் தனிநடிப்பு 'அண்ணை ரைற்'; ஆக மாறியது.பாலச்சந்திரன் பஸ் கொண்டக்டராக புளுகர் பொன்னையா கணேசபிள்ளை சாரதியாக மாறியதும் உடுப்பிட்டியில் தான்
எனக்கு நிரந்தர உத்தியோகம் குடும்பம் முதலில் அமைந்தாலும் அவை அவனுக்கு தாமதமாகின.
இருப்பினும் இசையாற்றல் மிக்க ஆசிரியையும் அவனும் ஒருவரையொருவர் விரும்பி இல்லறத்தில் இணைந்தது இறைவன் கொடுத்த வரம்- இசையோடு பாடும் பிள்ளைகள் கிடைத்ததும் அவன் செய்த பாக்கியம்- ஊடகத்துறையில் செல்வாக்கு மிக்க ஒருவரை மகளுக்கு மாப்பிளையாகப் பெற்றது அவர்களுக்குக் கிடைத்த வெற்றி.
என்து பெற்றோர் காலமானபோது நான் தொலைவிலிருந்து செல்லத்தாமதமானாலும் பொறுப்புணர்ந்து செயற்பட்டவன்.  எனக்காக பனையளவு செய்த வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவன் உடுப்பிடடியூர் யோகனின் மகன் வானொலி பயிற்சி பெற வழிகாட்டி சிறு தினையளவு செய்ய முடிந்ததும் ஒரு வகைத்திருப்தியே.
1948 ல் மலர்ந்து 1998ல் உதிர்ந்ததை நினைக்கும் போது நெஞ்சம் வருந்த விழிகள் நீரைச்சொரிகிறது.
சிறுவயதில் புகழோடு வாழ்ந்து-இளவயதில் இறைவனடி இணைந்த இளம் கலைஞன்யோகன்!
இன்றிருந்தால் உலகெல்லாம் நடைபெறும் பல நிகழ்வுகளில் வானம்பாடியாக வில்லிசைப்பான் !!

-உடுவை எஸ்.தில்லைநடராசா
நன்றி- ஞாயிறு தினக்குரல்

வில்லிசை-எங்கள் கதை



மிக நீண்ட நாள்களுக்கு பின் வில்லிசைக்காக சில நாள்கள்.
நீண்ட நாள்கள் என்பது 5 வருடங்கள் தான்.கொழும்பிலே இருந்த காலங்களில் கொழும்பு மருத்துவபீட மாணவர்களாகிய  என் நண்பர்கள் சிலருடைய வேண்டுகோளில் அவர்கள் பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வாணிவிழாவில் வில்லிசைத்த பின் லண்டனில் சில பெரியவர்களின் வேண்டுகோளால் வில்லிசை கதையை மீண்டும் எழுதி அவர்கள் மேடையேற பயிற்றுவித்து அந்த கலையோடு மீண்டும் பயணிக்க முடிந்தது.பல கலைகளையும் எனக்கு பயிற்றுவித்த தந்தையின் கலைகளில் வில்லிசை மிக முக்கியமானது.அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனியானது.
என் தந்தையால் எழுதப்பட்ட பல வில்லிசைகள் என்னிடம் இப்போதும் கொழும்பிலும் ஊரிலும் இருக்கிறது.அவற்றை பதிவு செய்யவேண்டிய ஆர்வமும் அதனோடு இணைந்து அவை பேணப்படவேண்டும் என்ற தேவையும் எனக்கு இருக்கிறது.என்றாலும் சில எழுதிய கடதாசிகளும் கிழியும் நிலைகளில் இருப்பதை அண்மையில் கொழும்பிற்கு சென்று வந்தபோது பார்த்துவிட்டே வரமுடிந்தது. கொழும்பிலிருந்து வரும் உடனடிப்பயணம்,கொண்டுவரக்கூடிய நிறை எல்லாம் கொண்டு வருவதற்கு அந்த வேளையில் இருந்த தடங்கல்கள்.இருப்பினும் என் அப்பாவினுடைய பல நண்பர்களின் வேண்டுகோள்களுக்கமைய அவற்றை பதிவுசெய்யவேண்டும் என்ற ஆர்வம் தொடர்ச்சியாக இருக்கிறது.காலங்கள் எல்லாவற்றிக்கும் கைகொடுக்கட்டும்.



இங்கு கடந்த வருடம் லண்டனில் வில்லிசை நிகழ்ச்சியை மேடையேற ஆர்வம் கொண்ட பெரியவர்கள் சிலர் என்னிடம் கேட்டபோது என்னாலும் வேலைபழுக்களுக்கு மத்தியில் மறுக்கமுடியாமல் எழுதப்பட்ட வில்லிசை ஒன்றை பதிவு செய்யலாம் என்ற எண்ணம்.அவர்களின் மேடைக்கும் அவர்களின் கலை ஈடுபாட்டுக்கும் அமைவாக இந்த வில்லிசையை மற்றும் வில்லிசைக்கான கதையை எழுத முடிந்தது.எங்கள் கதை என்ற தலைப்பில் அவர்கள் இந்த நாட்டில் தங்களின் நிலைமைகள் இப்படியே இருகிறது என்று குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாக கதையின் கருவை அமைத்து எழுதியிருகிறேன்.சிறப்போடு மேடையேறி வில்லிசைத்துமிருந்தார்கள் அந்த பெரியவர்கள்.
இந்த வில்லிசை கதையை கனடாவிலிருந்து சுவிஸிலிருந்து சில கலை உள்ளங்கள் தங்கள் மேடைகளிலும் அதை மெடையேற்ற  விண்ணப்பித்து கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கும் அனுப்பி வைக்கும் இந்த வேளையில் வில்லிசை இசைக்க யாருக்கும் பயனுடையதாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த வில்லிசைக்கான எழுத்துரிமையோடு இங்கே பதிவு செய்கின்றேன்.
வில்லிசைக்கான பாடல்களுக்கான இசையுதவிக்காக மற்றும் அது மேடையேற இங்கே பின்னூட்டத்தில்(Post Comment)
குறிப்பிட்டுகொள்ளுங்கள்.அது மகிழ்ச்சியைக்கொடுக்கும்.
நகைச்சுவைகள் கூட காலத்துக்கு அந்த அந்த இடங்களுக்கு பொருத்தமாய் இணைத்துக்கொள்ளலாம்.

எங்கள் கதை

பாடல்
தொந்தனத்தொம் என்று சொல்லியே-வில்லினிற்பாட
வந்தருள்வாய் கணபதியே
தொந்தி வைத்த கணபதியே – நீயும்
முந்தி வந்து அருள் தருவாய்
மூத்தவர்கள் நாமும் இங்கே- இங்கே
வில்லில் இசை பாட வந்தோம்
நல்லதொரு கதை புனைந்தோம்—அதை
வில்லிசைத்து பாட வந்தோம்

கதை
அருமையான மாலைபொழுதிலே, எல்லோருக்கும் பொதுவான இறைவனை பணிந்து இங்கு கூடியிருக்கும் அனைவருக்கு அன்பான வணக்கங்கள்/
உதவி- இங்கை வந்திருக்கிற எல்லாரும் எங்கடை ஆக்கள் தான்.
உதவி 2-ம்ம்.எங்கடை பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பக்கத்து வீட்டுக்காரர் எல்லாரும் வந்திருகினம்
உதவி 3- ஏதாவது தங்களைப்பற்றி சொல்லிபோடுமோ என்று கேட்க வந்திருப்பினமோ

கதை
சரி, வந்தது எங்கள் உறவுகள் என்றாலும் வணக்கம் சொல்வது மூத்தோர் மரபு.அதை எல்லோருக்கும் சொல்லி ஆரப்பிப்பது மிக நல்ல விடயம் தானே..அதுவும் மூத்தவர்கள் நாங்கள் அதை நடைமுறையில் காட்டுவது சிறப்பு...
இன்றைய நாள் நிகழ்ச்சியில் ஒரு அருமையான கதையொன்றை வில்லிசையிலே சொல்வதற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
ஆனால் அதற்கு முதலில் வந்திருக்கும் எல்லோரையும் நாங்கள் அறிந்திருந்தாலும் எங்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் வில்லிசையை ஆரம்பிக்க போகின்றோம்.
உதவி1—அது சரி சிறீலங்காவிலை பிரிட்டிஷ் எம்பசியில் சொல்லி, கட்டுநாயக்கா எயார்போட்டிலை சொல்லி, ஹீத்த்ரோ எயார்போட்டிலை சொல்லி வீட்டில பேரப்பொடியளுக்கு விளங்கபடுத்தி இப்ப மேடையிலையும் சொல்ல போறீங்களோ.......
கதை
வில்லிசையின் மரபின் படி எங்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் தானே

பாடல்
சபைதனிலே வந்திருக்கும் பெரியோரே குழந்தைகளே- எங்கள் பிள்ளைகளே அன்பர்களே
சொந்தங்களே பந்தங்களே
ஏட்டிலே எழுத்தறியோம் எழுதும்வகை நாமறியோம்
[பாட்டிலே பொருளறியோம் பாடும் வகை நாமறியோம்
கற்க  உண்டு ஏராளம்
தேடிக்கற்போம் படித்து சுவைப்போம்

ஆகவே நாங்கள் விடும் சின்ன சின்ன பிழைகள் எல்லாவற்றையும் நீங்கள் மன்னித்துகொள்வீர்கள் என்று அன்பாக கேட்டுகொண்டு கதைக்கு வருகின்றோம்

உதவி1 என்ன கதை?
உதவி 2_ எங்களுக்கு ஒண்டுமே விளங்காத மாதிரி இந்தக்கால சினிமா கதையோ அல்லது கதை ஒண்டுமே இல்லாமல் வெறும் காட்சி கவர்ச்சி மட்டுமோ
கதை
எங்கள் கதை தான் இன்று நாங்கள் சொல்ல வந்திருக்கும் கதை

பாடல்
(பாண்டி)
பண்டமெல்லாம் கிடைக்குமிடம்
லண்டன் மாநகரம்-அது  லண்டன் மாநகரம்
கண்டம் தாண்டி பணமும் அனுப்ப
பென்னம்பெரிய லட்சம்---ஓகோ-அது பென்னம்பெரிய லட்சம்
முதன்முதலாக ஊர்க்கிழங்கு
மரகறிகள் எல்லாம்---ம்ம்ம் மரக்கறிகள் எல்லாம்
முந்திக்கொண்டு வந்த இடம் தான்
லண்டன் மாநகரம்----ஓமோம் லண்டன் மா நகரம்

கதை
தாயகத்திலை இருப்பது போல் எல்லாமே இங்கு இருக்கு.அதோட பணமும் லண்டனிலிருந்து அனுப்பினால் அதுக்கு ஒரு கணக்கே இல்லை.என்று லண்டன் என்பது ஒரு நாடு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்
உதவி
அது சரி வந்தாபிறகு தானே விளங்குது லண்டன்
கதை
தாயகத்தில் அழகு பெறும் ஒரு கிராமத்தில் அழகான சின்ன குடும்பம். கணவனை இழந்த பரமேஸ்வரி தனது ஒரேயொரு மகனில் கொள்ளைப்பாசம்.சிறுபராயம் முதற்கொண்டு துடிதுடிப்பாக வளர்ந்த பரமேஸ்வரி கணவனை இழந்தும் தனது மகனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர்.தாயகத்தின் யுத்த கொடிய சூழ் நிலையில் இருந்து தனது மகனை காப்பாற்றவேண்டும் என்றும் அதுவும் லண்டனுக்கு போய்விட்டால் மகனும் ஏதாவது உழைச்சு பிழைச்சு தப்பி விடுவான் என்றும் நினைத்து ஒருமாதிரி மகனை லண்டனுக்கு அனுப்பிவிடுகின்றாள் தாய்.
உதவி
பக்கத்துவீடு,மச்சான் மருமகன் என்று எல்லாரும் லண்டனுக்கு போய் உழைச்சு அனுப்ப தன்ரை பிள்ளையும் போய் ஏதாவது தப்பி பிழைக்கட்டும் எண்டு தான் எல்லாரும் அனுப்பினது......
கதை
மகனும் வந்து அந்தக்கடன் இந்தக்கடன் என்று அடைக்கவே ஆறு ஏழு வருசம்.சரி கடன் எல்லாம் முடிந்த பிறகு கல்யாணம் கட்டத்தானே வேணுமெடா தம்பி எண்டு கல்யாண வேலைஒழுங்குகள்.
அதுக்கு மகன் தன்னுடைய அம்மாக்கு ஒரு நாலு பக்கத்திலை கடிதம்.
உதவி
என்ன பொம்பிளை வேண்டாமெண்டோ.அல்லது இங்கையாரையும் பார்த்துப்போட்டன் எண்டோ?????
ஓ இவங்களை நம்பவும் ஏலாது...இளவயசிலை எல்லாரும் வந்தவங்கள்...
கதை
இல்லை இல்லை...சொல்கிறேன் கேளுங்கோ
ஊரிலை இருந்து தான் பொம்பிளைவேணும்.ஆனால் அந்த பொம்பிளை எப்படி அழகாயிருக்கவேனும், எப்படி நடக்கவேணும்,எப்படி உடுக்கவேணும்,என்று தான் அந்த கடிதம்.
உதவி
ஓ ஓ அதுக்கு நாலு பக்கம் வரும்......

ம்ம்ம் தனக்கு மருமகளாக வரவிருப்பவள் எப்படியெல்லாம் வரவேணுமென்று கனவு கண்டாளோ...தனது மகனுக்கான துணைவி எப்படி அமையவேண்டும் என்று கனவு கண்டாளோ அப்படியே அவள் தெரிவு செய்கிறாள்
பாடல்
(அழகே)
மான் போல அழகு அவள்- அன்ன நடை நடந்திடுவாள்.
 முத்தான முத்தல்லவோ -கன்னகுழி சிரிப்புமல்லோ
ஊரிலுள்ள பந்தமெல்லாம் அவளளகை வியந்துடுவர்
பாரிலழகோவியமாய் சித்திர பாவையவள்

தந்தையைபோல் வளர்ந்துவிட்ட -ராஜ நடை மகன் எனக்கு
சிந்தையிலே நினைத்ததுபோல்-சொந்தமானாள் மருமகளாய்
கதை
சரி அதையும் ஒரு மாதிரி நல்ல திருப்தியோட முடிச்சு மருமகளையும் அனுப்பியாச்சு. நல்ல வாழ்க்கை.குடும்பம் குழந்தைகள் என்று மகனுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைச்சுகொடுத்த பெருமை

என்னுடைய மகனும் மருமகளும் லண்டனில் நல்லதொரு வாழ்க்கை, எந்த கோவில் குளம் ஏறும்போது தன் மகனையும் மருமகளையும் நினைத்தே வழிபடுவாள்.பேரக்குழந்தைகளும் கிடைக்க அதை விட அவளுக்கு வேறு என்ன சந்தோசம்? மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
என்றாலும் தன்னை மகனும் மருமகளும் லண்டனுக்கு கூப்பிட்டால் என்ன என்பது பரமெஸ்வரியின் உள்ளத்தில் இருக்கும் ஒரு எண்ணம்.
ஊரிலுள்ளவர்களெல்லாம் லண்டன்,பிரான்ஸ், நோர்வே என்று போய்வர நானும் போய் வரலாமே என்று மகனிடம் ஒரு நாள் வாய்விட்டு கேட்டுவிட்டா பரமேஸ்வரி அக்கா.
பாடல்
(ஆனந்த பைரவி)
ஊரிலே வாழுகின்ற என்னோட்ட மனுசரெல்லாம்
லண்டனுக்கு சுற்றுலாவாம் கேளடா என் மகனே
எனக்கென்று ஒரு மகனாய் லண்டனில் நீ இருந்தாலும்
கூப்பிடும் ஐடியா தான் உனக்கும் இல்லையோடா

ஒரேயொரு பெரிய வீடு நான்மட்டும் தனியேவாழ்ந்து
என் மகனை கண்டு தழுவ  ஆசையும் இருக்குதெடா...
சொத்து பலம் இருந்தாலும் என் பிள்ளையுடன் கூடி வாழ்ந்த
நிலைபெற்ற மகிழ்ச்சியது எந்த தாய்க்கு உரித்தல்லவோ

கதை
தாயின் நிலையான பாசத்தை உணர்ந்த மகனும் தன் அம்மாவை கூபிடுவம் என்று அதற்குரிய ஒழுங்குகள்

உதவி
மருமகள் விட்டவவோ!!!!! என்னத்து இங்க? இங்க வந்து சாமாளிப்பவோ!! என்றெல்லாம் கேட்டிருப்பாவே??
கதை
ம்ம்ம் என்றாலும் மகன் கூப்பிட எல்லா ஒழுங்கும்  முடித்து பரமேஸ்வரியக்கா லண்டன் வருகின்றார்.
பாடல் ( வேல்)
கொழும்பில் வந்து லொட்ஜில் வாழ்ந்து
லண்டன் விசா எடுக்க இரண்டு மாசம்-
,, ,,              ,, ,,           ,,,,,,,,,
கண்ணாடியால் கட்டுப்பட்ட கட்டு நாயக்கா ஏயர்போடில்
முதன்முதலாக நுழைந்து வாறா –அக்கா
முதன்முதலாக நுழைந்து வாறா
ஓடுது ஓடுது பிளைட்டும் ஓடுது
பிரேக்கே போடாமல் பிளைட்டும் ஓடுது
லண்டன் போக எடுத்த அழகிய சாறியும்
லண்டன் குளிருக்கு 4 கிலோ ஜக்கட்டும்
கையோடு கையாக எடுத்து வாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
பேரபிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்து சாப்பாட்டோடும்
மருமகளுக்கு பிரெஞ்கோணர் உடுப்பெல்லாம்
கையோடு கையாக எடுத்துவாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
கதை
ம்ம்ம் நல்ல பாச உணவோடு 10 மணித்தியாலம் காலும் நீட்ட முடியாமல் கையும் நீட்ட முடியாமல் பயணம் முடிச்சுக்கொண்டு பரமேஸ்வரி அக்கா லண்டனுக்கு வந்திட்டா.லண்டன் வந்தால் எட எங்கட பரமேஸ்வரியக்காவுக்குஅப்படி ஒரு வரவேற்பு. ஹீத்ரோ எயார் போட்டிலை மகன் மருமகள் பேரப்பிளைகள் முத்தம் கொடுத்து வரவேற்றது முதல் வீட்டிலை சொந்தம் பந்தம் எல்லாம் கூடி நிண்டு
உதவி
கூடுதலாக வேலை இல்லாதவர்கள் தான் நின்றிருப்பார்கள்( அதைப்பற்றி பேசுதல்)
பாடல்
சொந்தமும் பந்தமும் உற்றாரும் சுற்றமும்
சந்தோஷமாய் கூடின-ஆஹா சந்தொஷமாய் கூடின
ஊரா வீட்டு கதைகளெல்லாம் கேட்டு மகிழ்வடைந்தனர்
பெற்றோர் சுற்றோர் கிலோக்கணக்கில்
கொடுத்து விட்ட பார்சல்கள்- ஓகே கொடுத்து விட்ட பார்சல்கள்
எடுத்துக்கொண்டே கிளம்பின அதுக்குபிறகு நேரம் இல்லை.

ம்யார் தான் என்ன தான் வந்திருந்தாலும் தன்னுடைய மகனை நீண்ட நாள்களுக்க் பிறகும் தானே பார்த்து வைச்சு அனுப்பி வைத்த மருமகளும் தன்னுடைய பேரக்குழந்தைகளையும் பார்த்து பூரித்த மகிழ்ச்சியிருக்கே அதையாராலும் அளவிட முடியாது.அளவிடமுடியாத சந்தோஷத்தில் அவளின் பூரிப்பான முகம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதியபுதிய அனுபவங்களோடு நாள்கள் நகருகின்றது.பேரப்பிளைகளின் அழகிய மழலைத்தமிழும் எபப்டி தன் மகனை நல்ல ஆங்கிலம் பேசும்படியாக படித்தறிந்தவனாக வளர்க்கவேண்மென்று ஆசைபட்டானோ அதே போல் பேரப்பிளைகள் படிக்கின்றார்கள் என்ற மகிழ்சிவேறு.ஏனெனில் அப்படி இங்கிலிஷில் பேசும் குழந்தைகள்.
உதவி
பதினாறு வயசிலும் மழலைத்தமிழ் தானே பேசுதுகள்.சரி அதை என்றாலும் பேசுதுகளே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியதுதான்.

பாடல்
தித்திக்க பேசும் மழலைகள் போல்
பத்து வயசிலும்  பேசுமெம் பரம்பரைகள்
சொத்தான தமிழ் மொழி பேசாதோ என்று
கத்தி கத்தி படிப்பிக்கும் பரமேஸ் அக்கா

கதை
அப்பம்மா Bad.. அம்மா எனக்கு ஹோம் வேக் னிறைய இருக்கு...இண்டைக்கு தமிழ் வேண்டாம். பிளீஸ் அம்மா..
மாமி வீட்டிலை பிள்ளைகளுக்கு அரியண்டம் கொடுக்க வேண்டாம்.
இது எங்கடை நாடு போல இல்லை.அது சரி தான் என்றாலும் பரமேஸ் அக்காவுக்கு ஒரே கவலை.
பாடல்
என் அன்பான முத்துகள் பேரகுழந்தைகள்
எமை விட்டு சற்றே தள்ளிபோவதுபோல்
நமக்கென்று உரித்தான பரம்பரைகள்
நற்பாதை காட்ட வழிசெய்வோம்.

கதை
இவ்வாறாக பரமேஸ்வரியக்கா சிந்தித்தாலும் அது எடுபடுவதாக இல்லை.
மருமகளும் அம்மா இங்க தேவையில்லாத வேலைகள் எல்லாம் பார்க்கிறா என்று மகனிடம் வேலை விடு வரும்போதெல்லாம் சொல்லிகொண்டேயிருப்பது.
பரமேஸ் அக்காவுக்கு காதிலே கேட்டுவிடும்...ஒரே கவலை. தனக்கு உரித்தான பேரப்பிள்ளைகளே தங்களுடைய அப்பம்மா என்று மரியாதை இருந்தாலும் ஊரிலே அருகோடு இருந்து அவர்களை அழகோடு வளர்த்துப்பார்க்கும் சந்தோசம் கிடைக்கவில்லையே என்பது மிகப்பெரிய கவலையாக இருந்தது,ஏதோ தனக்கு உரித்தானவர்கள் எட்ட எட்ட போகின்றார்களோ என்ற ஒரு எண்ணம்.
கிட்டவாக வந்துவிட்டாலும் தனியாகவே வாழ்கின்றேன் என்ற உணர்வு தான். பெரிய ஒரு வீட்டில் பகலில் யாரும் இல்லை.இரவில் சாப்பாடும் நித்திரையும்.

பாடல் ( இரண்டு மனம்)
லண்டனில் ஒரு பொக்ஸ் ரூம்
பொக்ஸ் ரூமும் ஒரு கூடு
கூடி வாழும் வாழ்க்கை-ஒரு
நாளும் தரா லண்டன்.......

இரவும் பகலும் இரண்டானால்
உழைப்பும் படுக்கையும் இரண்டாகும்
வேலை முடிந்து வந்துவிட்டால் -மகன்
பெட்டில் நித்திரை செத்த பிணம்
உறவும் பந்தமும் காசு வழி
காசின் வருகை உழைப்பின் வழி
உழைத்து முறிவது லண்டன் வழி
வேலையை தக்கவைக்க செத்த வலி

கதை
இப்படியாக தனக்கோ தனிமை என்ற உணர்வு வாட்டுகின்றதே என்று பரமேஸ்வரியக்காவுக்கு மிகப்பெரிய மனக்கவலை.வீட்டிலை இருந்தால் மருமகளும் இது என்ன இந்த மனுசி வீட்ட்லையே இருக்குது...வேற வேலைகளையும் பார்க்கலாமே என்று முகத்தை சுழிக்கிறாளோ என்று பரமேஸ் அக்காவுக்கு ஒரே சிந்தனை.
என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா.

என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா பரமேஸ் அக்கா.
தன்னைப்போலவே பக்கத்துவீட்டிலும் இருக்கும் கனகேஸ்வரி அக்கா இருக்கும் சந்தோஷமான வாழ்க்கையை பார்க்கிறா.
ஒரு நாள் கனகேஸ்வரியக்காவும் பரமேஸ்வரியக்காவும் நண்பர்களாகி
தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொள்கிறார்கள்.
தனக்கும் இந்த நாட்டிற்கு வந்த காலத்தில் ஏதோ பல சுகங்களை இழந்துவிட்டேனோ என்று யோசிச்சனான் தான்.ஆனால் அப்படி இல்லை பரமேஷ்வரி அக்கா. என்று கனகேஸ்வரி அக்கா சொன்னதும் பரமேஷ்வரி அக்காவுக்கு அளவற்ற சந்தோஷம்.
உதவி:: கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி இருந்திருக்குமே….
உதவி2: இந்த நாட்டிலை வயது முதிர்ந்தவர்கள் என்று ஒரு வர்க்கத்தை ஏற்படுத்தவே தேவை இல்லை கேளுங்கோ
.. ஏனெண்டால் எல்லோரும் இளையவர்கள்தான் (ஆங்கிலத்திலும் சொல்லலாம்)
உதவி 3: அது சரி

கதை
அதில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பது பரமேஸ் அக்காவுக்கு போக போக தெரியுது.தன்னை போலவே பல ஒரே வயதுடையவர்கள் இருக்கும் சந்தோஷமான வாழ்க்கை தெரிகிறது.எவ்வளவு வசதிகள்,வாய்ப்புகள், கூடிக்களிக்கும் சந்தோஷமான இடங்கள் என்று எல்லாமே எமக்கு கிடைக்கும் வாழ்க்கையின் உன்னதமான கொடைகள்.
உதவி: அப்ப ஒரு ஒளிவட்டம் தெரிகிறது பரமேஷ் அக்காவுக்கு…..தெரிய வேணும்… அது உண்மை தானே…….
( என்ன என்ன வெளி நாடுகளில் வயதானோருக்கு வசதிகள் இருக்கு என்பதை எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லுதல்)



பாட்டு
தேம்ஸ் நதியோரம் சந்தோஷம் கொண்டாடுவோம்-அங்கு
தெவிட்டாத வாழ்வு  தெம்போடு வாழ்ந்துடுவோம்
ஆனந்தம் ஆனந்தம் எம்வாழ்வின் ஆனந்தம்
பாடுவோம் ஆடுவோம் இன்பமாய் என்றென்றும்
கூட ஒருடமிருக்கு… எங்கும் வாழ தனி சுகமெல்லாம்
(தேம்ஸ் நதியோரம்)

உற்றாரும் சுற்றாரும் அக்கம் பக்கம் எல்லோரும்
பற்றேதுமில்லால் சற்றேனும் நோக்காவிடில்
பல்கோடி இன்பமிருக்கு,=எமக்கு  தனியான சுகமிருக்கு
(தேம்ஸ் நதியோரம்)

லண்டனென்ன பாரீசென்ன ஒஸ்லோவென்ன சூரிச்சென்ன
சுற்றிவரும் உல்லாச வாழ்க்கை தன்னை வாழ்ந்து காட்டி
முற்றான இன்பம் இருக்கு.. இங்கு ஒன்றாக மகிழ்ந்துடுவோம்
(தேம்ஸ் நதியோரம்)


எங்கும் சுகமிருக்கு, எந்த ஒரு சூழலையும் தனக்கெற்றபடி மாற்றி வாழும் வாழ்வு பரமேஷ் அக்காவுக்கு நன்கு புரியும்.அது வாழ்க்கையை இனிதாக்கி வாழ்க்கையை லண்டனில் கொண்டு செல்கிறா பரமேஸ்வரிஅக்கா.
இந்தக்கதை தான் எங்கள் கதை.எல்லோருக்கும் பொது வான கதை. இந்த எங்கள் கதை இதோடு நின்றுவிடாது… இன்னும் தொடரும் பாருங்கோ.
என்றாலும் எங்கள் கதை இத்தோடு நிறைவுக்குகொண்டு வருகிறோம்…

பாட்டு
பொதுவாக லண்டன் என்றால் சொர்க்கம்-அது
எங்கள் போல வந்துவிட்டால் இன்பம்
உள்ளதை சொன்னோம் வெற்றியை கண்டோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த சந்தோஷம் கொண்டாடுவோம்…..

இவ்வளவு நேரமும் எங்கள் வில்லிசையை கேட்ட அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றுக்கொள்கின்றேன்.

பாட்டு
வாழியவே வாழியவே வந்திருந்த அனைவருக்கும் வாழியவே
வாழியவே வாழியவே எங்கள் கதை கேட்டவர்க்கு வாழியவே
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்……