தோசைக்கு ஒரு தினம்!!!!!!!!!!

சாப்பாட்டு விசயம் தான்.
எல்லாத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல தோசைக்கு ஒரு தினம் இருந்தால் எப்படி இருக்கும்??

என்ன ஒரு வித்தியாசமான கற்பனை !!!!!!!!
தோசைச்சட்டி எல்லாம் அடுப்புக்கு போயிருக்கும்….




இன்று  Pan cake தினம்…
கிறிஸ்தவர்களின் தவக்கால விரத காலத்துக்கு  முன்னதான நாளில் அமையும் தினம் தான் இது. 
அது உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) நாளிலிருந்து 47 நாள்கள் முன்னதான நாளில் வருவது. பொதுவாக பெப்பிரவரி 3ம் திகதியிலிருந்து மார்ச் 9ம் திகதிவரைக்குமான காலத்தில் ஏதோவொரு நாள் தினம் Pan Cake Day வரும். ஏனெனில் சந்திரனின் சுழற்சியை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு (( Easter Sunday))வருவதனாலென்று கூறப்படுகிறது.
விதம் விதமான Pan Cakes கள் உண்டு மகிழும் அதே வேளை அதை ஒரு நிகழ்வாக கூட பல அமைப்புகள் ஒழுங்கு செய்கின்றன.
எல்லாத்தினங்களையும் வணிக நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போல இந்த தினத்திலும் வகை வகையான  
Pan Cakes களையும் அதற்கான மா வகைகளையும்  விற்பனையில் காட்சிப்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.


சரி இதே போல ஒரு தினம் தோசைக்கு வந்தால் எப்படி இருக்கும்…

தோசை என்றவுடன் பல நினைவுகள் பலருக்கு வந்து போகும்..

ஊரிலை வல்லிபுரக்கோயிலுக்கு போகும் போதெல்லாம் மேற்கு வாசலில் இருக்கும் தோசைக்கடை. அதில் சாபிடுவதற்கென்றே கோயில் போவர் சிலர்.கோயிலுக்கு போகின்றவர் எல்லாம் அந்த பக்கம் எட்டி பார்த்து சம்பலும் தொசையை சுவைத்தால் தான் ஏதோ ஞாயிற்றுக்கிழமை நிம்மதி போல இருப்பார்கள்.. சம்பலும் முறுகிய தோசையும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அதைவிட நெல்லியடி சந்தி தாண்டி கொடிகாம் வீதி முடக்கில் தோசை விற்ற ஒருவருவரிடம் முந்தியடிக்கும் இளைஞர் கூட்டம்.அதில் தோசைக்கு அவர் கொடுக்கும் ஆட்டுஇறைச்சிக்கறிக்கு அல்லது கோழி இறைச்சிக்கறிக்கு  ஒரு சபாஷ் தான். அதன் மணத்தாலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். அப்படி ஒரு தனி சுவையும் மணமும்.
ஆனால் இப்பொழுது அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நான் பதினெண் வயதிலிருக்கும் காலத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்று ஒருதோசை என்றாலும் சாப்பிட்டு சுவைத்த இனிய நினைவு. நிச்சயம் அவர் அதன் வருமானத்தால் இன்னோரு நிலைக்கு போயிருக்கவேண்டும்.ஏனெனில் அவ்வளவு கூட்டம் அவருக்கு.

எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.பாக்கியக்கா என்று ஊரில எல்லாருக்கும் தெரியும்.ஊரிலே உள்ளவர்கள் எல்லாரும் வாரத்திலே ஒரு நாள் காலை வேளை என்றாலும் அவ சுடும் தோசையை சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
அவ சுடும் தோசையும் தனி சுவை.தோசை இருக்கும் முறுக்கென்ற பிடிப்பு ஒரு ருசி. தோசையோடு தரும் சம்பல் தோசைக்கு இன்னுமொரு மெடுகூட்டும். காலை வேளையில் அடிக்கடி வாங்கி சாப்பிடும் அந்த தோசையில் நாங்கள் 10 கேட்டால் எங்களுக்கு என்று 12 தருவா பாக்கியக்கா.அது சம்பலை உள்ளே வைத்து மடிச்சு கொஞ்சம் முறுகியது போல ஒரு தோசை. நானும் என் தங்கையும் அடிபட்டு சண்டை பிடித்து சாப்பிடுவம். தோசை சாப்பிடுவதில் பெரிய பிடிப்பு என்பதை விட  எங்கள் பாக்கியக்காவின் தோசைக்கு ஒரு மதிப்பினால் தான் அந்த சண்டை.ஆனால் கடைசியில் அப்பாவின் உதவியோடு தங்கையே வென்றுவிடுவாள் என்பது பெரிய இரகசியம்.ஆனால் பாக்கியக்காவின் தோசைக்கு அவ்வளவு ஒரு மதிப்பு இருந்தது என்பது மட்டும் உண்மை. 
 
எல்லாவற்றையும் விட வீட்டில் அம்மா அம்மாமா மற்றும் என் அன்ரி (அம்மாவின் தங்கை) மற்றும் என் பெரியம்மம்மா ,சின்னம்மம்மா  சுடும் தோசைக்கும் நாங்கள் சப்பாணி கட்டி அடுப்பங்கரை பக்கம் அமர்ந்து விடுவோம்.தாளித்த சம்பலுடன் எண்ணெய் தோசை, முட்டை தோசை,சும்மா தோசை, என்று ஒவ்வொன்றாக ருசித்த பின் தான் அவ்விடத்தை விட்டு எழும்புவது.
தோசை சாப்பிட பின் முழுவதுமாக வாயை திறந்து மொள மொள என்று தண்ணீர் குடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் தோசையின் ருசிம் அது சாப்பிட்ட களைப்பும்.

இப்படி தோசை என்பது இனிய நினைவுகளை அடுக்கலாம்.அது உங்களுக்கு பல மாதிரி வந்து ருசித்து ரசித்திரிப்பீர்கள்.
தாயகத்தில் எல்லாவீடுகளிலும் தனியான ருசியாக அமைந்துவிடும் உணவு.ஐரோப்பிய நாடுகளிலும் எல்லாவீடுகளில் நிச்சயம் இருக்கும்.சைவக்கடைகளுக்கு போனால் பல வகைப்படுத்தி தோசையை விற்கின்றார்கள்.

சரி இப்ப நினைச்சு பாருங்க தோசைக்கு ஒரு தினம் வந்தால் எப்படி இருக்கும்1!!!
நகைக்கடைகாரருக்கு அட்சய தினம் போல சாப்பாட்டுக்கடை ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஒரு தோசை தினமாக மாறும் என்பது ஒரு புறம்.
விற்பனைக்கடையெல்லாம் தோசை மாவை சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் வைத்து வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்க வைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் முடிவு எடுத்துவிடுவார்கள்.
மக்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் போக அந்த தினம் ஒரு மிகப்பெரும் கொண்டாட்டம் என்று தாமாகவே தோசை மாவை தேடி வாங்க ஆயத்தமாகிவிடுவார்கள். இது தான் உலகம்.

அதைவிட கற்பனையை இன்னும் நீட்டி வளர்த்தால் தோசை தினம் என்றால் வல்லிபுரக்கோயிலில் தோசைக்கு நீண்ட வரிசை வந்துவிடும் அந்த நாளில். தோசைக்கடைகள், முன்னோடியான பிரபல்யமான உணவகங்கள்  எல்லாம் வல்லிபுரக்கொயிலுக்கு படையெடுக்கும்.
கொட்டிலில் விற்ற பெண்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று அமெரிக்கா சீனாக்காரர் போல திட்டம் தீட்டப்பட்டாகிவிடும்.சிலவேளை கொட்டிலில் விற்றவருக்கான மெளசு கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்றாலும்  தோசை தினம் என்றால் நாம் உண்டு ருசித்து களித்த உணவை இன்னும் சந்தோஷமாக உண்டு மகிழலாம் என்பதும் உண்மைதான்.

மொத்தத்தில் தோசை என்பது எம்மோடு பின்னிபிணைந்துவிட்ட உணவு. அதன் தனி ருசியை கூடிகளித்து உண்டவர்களுகளுக்கு நிச்சயம் அந்த நாள்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வந்தேயாகும். அந்த நாள்கள் உண்மையில் அருமையானவை.

பகிர்ந்தது 
 யோகா தினேஷ்


  

No comments: