கரவெட்டி ---குறிப்புக்கள் சில

கரவெட்டி ;



வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம் தான் இது.

இந்த கரவெட்டியில் நெல்லியடி,சம்மந்தர் கடையடி,கிளவிதோட்டம்,
யார்க்கரை,அத்துளு,கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு
கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள்.

கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கொவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது

இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது.
ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது,அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம்.அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது.


அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை ஆயம் என்றும் ஆயக்கடவை என்றும் ஆயச்சந்தி என்றும் சொல்லுவது வழமை. கரவெட்டியின் பெயர் வரக்காரணம் இந்த ஆயக்கடவை என்றும் சொல்லப்படுகிறது.அதாவது நாட்டின் உள்ளூர் வழிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி கூடிய கவனம் செலுத்திய ஒல்லாந்தர்கள் இந்த இடத்தில் கிரவெட்(Gravet) நிறுவியிருந்தார்கள். இந்த கிரவெட்(Gravet) தான் பின்னர் திரிவடைந்து கரவெட்டியானது என்றும் ஒரு சான்று கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை சரியான ஒரு காரணம் அறியப்பட்டதாக தெரியவில்லை.

எதுஎப்படியாகயிருப்பினும் இந்த கரவெட்டியின் தெற்கு வாயிலாக இருந்த ஆயக்கடவை அன்றும் இன்றும் ஒரு முக்கியமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இதனூடாக பஸ் ஓட்டங்கள் கொஞ்சம் இப்ப கொஞ்சம் குறைந்துவிட்டது.

கரவெட்டியில் கோவில்களுக்கும் குறைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும், வெல்லனிற்பிள்ளையார் கோவில்,கிளவிதோட்டம் விநாயகர் கோவில்,தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் கோவில்,யார்க்கரை விநாயகர் கோவில்,அத்துளு அம்மன் கோவில்,நுணுவில் பிள்ளையார் கோவில்,சாமியன் அரசடி வைரவர் கோவில் என்று கோவில்களின் பெயர் படலம் சென்றுகொண்டே இருக்கிறது.
விநாயகர் வழிபாடு, மற்றும் அம்மன் வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குவதோடு கிராமிய தெய்வங்கள் வழிபாடும் இங்கு காணப்படுகிறது.

கரவெட்டியில் அறிவுசார் விருத்திக்காக பாடசாலைகளுக்கும் குறைவில்லை.கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,கட்டைவேலி யார்க்கரை விநாயகர் வித்தியாலயம்,திரு இருதயக்கல்லூரி என்று பாடசாலைகளும் விளங்கி இருக்கிறது. இந்த பாடசாலைகள் கரவெட்டியில் பல்வேறு அறிவாளிகளை உருவாக்கி கரவெட்டியின் திறமைசார் பொக்கிசங்களாக இருப்பது இங்கு நினைவுகூரவேண்டிய ஒன்று.

இப்படியாக கரவெட்டி பற்றி நான் அறிந்த விடயங்களை எனது முதல் தொகுப்பாக தருகின்றேன்.இன்னும் விடயங்கள் அறியும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவேன்.அது மட்டும் இல்லாமல் இன்னும் பல வேறு விடயங்களுடன் அவ்வப்போது நான் உங்களை சந்தித்துகொண்டே இருப்பேன்

வாழ்த்துக்களும் வணக்கங்களும்

அன்பு நெஞ்சங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் கரவையின் புதிதான நகைச்சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்களை நான் கரவையின் குரலாக சந்திக்கின்றேன்