சொந்தங்கள் பலரகம்


சொந்தம்

சொந்தங்கள் கூடி வாழ்ந்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சிதான், உறவுமுறை சொந்தமாக இருந்தாலென்ன அல்லது வேறெந்த முறையில் வந்த உறவாக இருந்தாலும் அது சுகதுக்கங்களை பரிமாறிகொள்வதினூடாக வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் உறவுமுறை சொந்தங்கள் என்றால் சிலர் நம்பி கூடியளவு உறவாடுவதும் அவர்களை நம்பி வாழ்வதும் சாதரணமானதே,சிலருக்கு உறவுமுறை சொந்தங்களைவிட உறவல்லாதோரின் நட்புகளும் சொந்தமாக மாறிவிடுவதுமுண்டு,எது எப்படியாகவிருப்பினும் சொந்தங்கள் கூட்டி பந்தங்கள் பெருக்கி வாழ்தல் மகிழ்ச்சியைக்கூட்டும் என்பதில் ஐயமில்லை.

இவன் இருபத்தியிரண்டு வயதில் ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் தகமையடைந்தவன். முகாமைத்துவ உதவியாளர் தேர்வில் சித்தியடைந்ததால் இந்த வாய்ப்பு.அதுவும் அவன் விண்ணப்பித்து கிடைத்ததுவுமல்ல.அவனுடைய அம்மா தானாகவே விண்ணப்பித்ததால் தன் உயர்கல்வியைத்தொடர்ந்து கொண்டிருந்தபோதும் அந்த தேர்வில் பங்குபற்றியிருந்தவன்.
"கோழி மேய்ச்சாலும் கோர்ணமேந்தில மேய்க்கவேணும்" என்று விடாபிடியாக நிற்கும் சமுதாயமகையால் கிடைத்த வேலையை விடக்கூடாது என்று எல்லோர் தரப்பிலும் இறுக்கமான வேண்டுகோள் இவனுக்கு.""யாராவது அரசாங்க வேலையை விடுவாங்களோ" உனக்கென்ன ஒரு விசயமும் விளங்காதோ"" என்று எல்லோரும் அப்படியும் இப்படியும் சொல்ல ஒருவாறாக முடிவெடுத்து நேர்முகத்தேர்வுக்கும் சென்று ஒரு முகாமைத்துவ உதவியளனாக தெரிவு செய்யப்பட்டான் இவன்.தெரிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் கல்வியை தொடந்தவனாய் அலுவலகப்பணிகளை பொறுப்பேற்றான்.இருந்தாலும் உயர்கல்வி முடிந்த பின் இந்த வேலையை கைவிடுவதான எண்ணத்துடனும் பெரியோர்களின் ஆமோதித்தலுடன் தான் பொறுப்பேற்றான்.

இவனின் முதல் அலுவலகம் கொஞ்சம் பிரபல்யமான திணைக்களமும் அதேபோல, எல்லோருக்கும் முக்கியமான திணைக்களமும் கூட,இதனால் எப்போதும் அது ஜனத்திரள் கூட்டித்தான் இருக்கும்,அப்படியான எப்போதும் ஓய்வில்லாத திணைக்களத்தில் வேலை ஆரம்பம். இருந்தாலும் இவன் உயர்கல்வியின் விரிவுரைகளுக்கும் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியது, இப்படியாக கல்வியும் ஓடுகிறது,வேலையும் ஓடுகிறது.

பிரபல்யமான திணைக்களம், முக்கியமான திணைக்களம் என்றால் அங்கு எல்லோரினதும் கவனிப்புக்களுக்கும் குறைவில்லை.எல்லோரினதும் பார்வைகளும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.இங்கு பார்வை என்ற சொல்லுக்குள் ரொம்ப அர்த்தம் இருக்கிறது. மக்களிடம் சுரண்டல்களும் ஏமாற்று வித்தைகளும் கூடியதாக கணிக்கப்பட்டு அந்த சம்பவங்களை தவிர்க்கவென சிறப்புக்குழுவே அங்கு இயங்கியிருந்தது.அப்படியான திணைக்களத்தில் உட்கார்ந்தான்.

இவர் பெரியவர்

இவர் ஒரு பெரியவர்.இவர் அந்தக்காலமே கொழும்புக்கு வந்து தொழில் பார்த்து இளைப்பாறும்போது ஒரு உதவி அத்தியட்சகர் என்று தான் அவனுக்கு தெரியும்,ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணி புரிந்தவர்.அவரில் அவன் மட்டுமல்ல பொதுவாக எல்லோரும் ஒரு நல்ல மதிப்பு.கொஞ்சம் வயதிலும் கூடியவர்,கொழும்பிலே நீண்ட காலம் இருப்பவராதலால் உதவி ஒத்தாசை ஏதும் செய்வார் என்று ஊரில இருந்து வரும் ஆக்கள் எல்லாம் அவருடன் மிக அவதானமாகத்தான் பழகுவார்கள்.இல்லாவிட்டால் நீண்டகால கொழும்பு இருப்பால் ஏதும் பண்ணிவிடுவாரோ என்று மிக அவதானம்,இதெல்லாம் இவனுக்கு பின்னர் தான் விளங்கியது.

ஊரில் தெரியாத சொந்தங்கள்
ஒரு நாள் ஒரு தொலைபேசியழைப்பு இவனுக்கு.அது வேறு யாருமில்லை.அந்த அத்தியட்சகர் தான். யார் யார் என்று தன்னையெல்லாம் அடையாளம் காட்டியவராய் "தம்பி ஒருக்கா எங்க வீட்டு பக்கம் வரலாமே, எனக்கு தெரியாது நீங்க எல்லாம் இங்க கொழும்பிலை எண்டு" என்று அன்பான அழைப்பை கொடுத்தார் இவனுக்கு.
பெரியவர் ஒருவரின் அழைப்பு அதுவும் என் தொலைபேசி இலக்கம் தேடி எடுத்து அழைப்பெடுத்திருக்கிறாரே என்று சிந்தித்தவனாய் வரும் நாளும் சொல்லி அந்த நாளும் அவரின் வீட்டுக்கு போனான் இவன்.

அன்பு உபசாரம்

"வாங்கோ தம்பி வாங்கோ" இவ்வளவு ஒரு பெரியவனாய் வளர்ந்திட்டீங்க என்ன" என்று அன்பு வார்த்தைகள் பலகூறி பெரிய வரவேற்ப்பு.பெரியவருக்கு மரியாதையுடன் ஊர்க்கதைகள் எல்லாம் பேசிய இடையில் "தம்பி நீங்க அந்த திணைக்களத்திலை தானே வேர்க்(வேலை) பண்ணுறீங்க" நல்லதாக போச்சு" நானும் எனக்கு அப்பிளிக்கேசன் போட்டிருக்கிறன்" என்று சொல்ல ஏன் நீங்க என்னிடமே கொடுத்திருந்தால் நான் வேகமாக எடுத்து கொடுத்திருப்பனே என்று இவனும் அன்பாக சொன்னான். "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்களுக்கு தெரியாம போச்சு, பிறகுதான் எங்க ரமேஷ் சொன்னான் நீங்க அங்கை வேர்க் பண்ணுறீங்க" என்று, "அவன் தான் உங்க நம்பர்(இலக்கம்) தந்தான்" என்றார் அந்த சொந்தக்கார பெரியவர். "அப்படியா சரி பிரச்சினை இல்லை, உங்களுக்கு இல்லாததா" என்று அன்புடன் வார்த்தைகள் பரிமாறி அதற்குரிய எல்லா தரவுகளையும் எடுத்துகொண்டு தந்த தேநீரையும் குடித்துவிட்டு கிளம்பினான் இவன்.

அடுத்த நாளே அவன் அலுவலகம் சென்று அந்த விண்ணப்பித்த படிவத்தை தனியே எடுத்து அதை வேகமாக பெற்றுகொடுக்க தன்னாலான பணிகள் எல்லாம் முடித்து விட்டு அது வரும் வரை காத்திருந்தான்,வேகமாக பெற்றுக்கொடுப்பது என்பது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பு இருக்கும் என்பது மட்டுமல்ல யார் யாருக்கு எல்லாம் எடுத்துக்கொடுக்கிறார் என்று எல்லாம் சிறப்புக்குழு அவதானித்துக்கொண்டே இருக்கும், இருந்தாலும் இந்த பெரியவர் சொந்தக்காரர் என்பதால் எந்தவித சிக்கலும் வராது என்பது இவன் எண்ணம்.

மீண்டும் ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு, இது அலுவலகத்தில் இருக்கும் போது வந்தது,அலுவலகத்தினுள் பொதுவாக கைத்தொலைபேசி பாவிக்க கூடாது.இது ஆணையாளரின் உத்தரவு,ஆகவே அந்த அழைப்பு வந்த நேரம் உதவி ஆணையாளரின் அழைப்பு இவனுக்கு தன் அறைக்கு வரும்படி.அப்போது அவன் தொலைபேசி அழைப்பை துண்டித்தவனாய் உள் சென்றான், அவருடன் சில வேலைகள் இருந்ததால் கைத்தொலைபேசியை நிறுத்திவிட்டு தொடர்ந்தும் அவரின் வேலைகளை முடித்துவிட்டு தொலைபேசியை மீண்டும் அழுத்தினான்.
அந்த வேளையில் மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு. இந்த தடவை அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற நோக்குடன் அழுத்தினான்.

இவன் மனுசன் இல்லை

"அடெய் நீயும் ஒரு மனுசனா என்னடா நினைக்கிறாய்? எப்படா நீ எல்லாம் கொழும்புக்கு வந்தனீங்கள் ஏனடா நான் போன் பண்ண கட் பண்ணினாய் அஹ் அஹ் " என்றவாறாக தொடர்ந்து ஏச்சு நீண்டு கொண்டே போனது. "இல்லை அங்கிள் அது நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............ உங்கடை நம்பர் எண்டு தெரியாது" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் என்னைப்பற்றி உனக்கு தெரியாதுடா வேலையே இல்லாமல் பண்ணுவன், நீங்க எல்லாம் எப்படா கொழும்பு பார்த்தனீங்க அந்தக்காலமே கொழும்புக்கு வந்தனாங்கள் நாங்கள்" என்று தொடர்ந்தார் பெரியவர்.இவர் தப்பாக உணர்ந்துவிட்டார் என்று சிந்தித்தவனானாலும் இவரின் கடுமையான வரிகள் இவனை சுட்டது."அங்கிள் எனக்கு இப்ப அறுபது வயதாக இருந்தால் நீங்க சொல்வது சரி" என்று சொல்லிவிட்டு துண்டித்தான் அழைப்பை.

கொழும்பு பெரிசு

உன்மையில் சிலருக்கு கொழும்பிலே இருக்கின்றோம் நடக்கின்றோம்,சிரிக்கின்றோம்,படிக்கின்றோம்,படிப்பிக்கிறோம்,சாப்பிடுகின்றோம் என்று பெரும் கர்வம் கூடிய சில தாழ்வான சிந்தனைகள்,என்ன செய்வது அறியாமையின் உச்சகட்டங்கள்,
இருந்தாலும் தேவையில்லாத ஏச்சை கேட்கத்தேவையில்லை என்றவாறே அழைப்பை துண்டித்த இவனுக்கு அதிர்ச்சி வைத்தியங்கள் காத்திருந்தது,திடீரென்று உதவி ஆணையாளரிடம் இருந்து அழைப்புவந்தது,
அவர்கள் எல்லாம் சகோதர மொழிகள் பேசுபவர்கள், நேரடியாக சென்றான் இவன்," என்ன உங்களை பற்றி தவறான விடயங்கள் வந்திருப்பதாக அவர் சொன்னபோது இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,என்ன என்று இவன் கேட்க "நீங்க யாரிடமோ காசு லஞ்சமாக வாங்கினீர்களா அவருக்கு அந்த சேவையை செய்து கொடுக்க" என்று கேட்டார் சின்ன சிரிப்போடு,ஏனென்றால் அவரின் நம்பிக்கைக்குரியவனாக இவன் வேலை செய்து வந்ததால், "இருந்தாலும் "உங்களை பற்றி இப்படி ஒருவிடயம் வந்திருக்கிறதே" என்று கேட்க யார் அப்படியான தகவல் தந்ததாக இவன் கேட்டான்.அப்போது அந்த அன்பு மொழிபேசிய வீட்டுக்கு கூப்பிட்டு தேநீர் தந்த அன்பரின் நாமம் தான் சொல்லப்பட்டது, அப்போது இதுதான் நடந்தது என்றவாறே சொல்லி முடிப்பதற்குள் அந்த அன்பர் மீண்டும் தொலைபேசி அழைபெடுக்கிறார் இவனின் அதிகாரிக்கு.இவனுக்கு முன்னிலயில் அந்த அதிகாரி கொடுத்தார் ஏச்சு, "நீங்க ஒரு பெரிய அத்தியட்சகர் என்று சொல்கின்றீகள் பிறகு ஏன் காசு கொடுத்தீர்கள் என்று சொல்கின்றீர்கள் உங்களுக்கே வெட்கம் இல்லையா?"
என்று ஏச இவனின் சொந்தக்கார பெரியவர் அழைப்பைத்துண்டிக்க "நீங்க போய் இருங்க" என்று சொல்லி விட்டார் இவனின் அதிகாரி.

ஆணையாளர் முன்னிலயில்




"என்னப்பா இது சொந்தக்காரர் என்று உறவுகொண்டாடி இறுதியில் இப்படி செய்கிறாரே" என்று மனதில் சிந்தித்தவனாய் தன் இருக்கையில் உட்கார்ந்தான்,
மீண்டும் ஒரு அழைப்பு அவனுக்கு, இப்போது ஆணையாளரிடமிருந்து,
"என்ன வேலை இந்த மனுசன் செய்யுது இவரைத்தான் நம்ம சொந்தங்கள் எல்லாம் நல்லவரென்று சொல்கிறார்களோ" என்று சிந்தித்தவனாய் சென்றபோது முதலில் யாருக்கு அவர் அழைப்பெடுத்தாரோ அந்த அதிகாரியும் ஆணையாளரும் இதைப்பற்றி கதைத்தவர்களாய் இருந்தார்கள்.இவனுக்கு நேரடியாக இருந்த இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் இவனின் மீதுள்ள நம்பிக்கையால் எந்தவித விசாரணையும் இன்றி தப்பித்துக்கொண்டான் இவன்.
என்றாலும் "இவர் ஏன் இப்படிச்செய்தார்" என்பதற்க்கு மட்டும் விளக்கம் கேட்டார் ஆணையாளர் இவனிடம், இவனும் "அவரின் அழைப்பு வரும் போது துண்டித்தே அவருக்கு கோவம் போல" என்று விபரமாக விளக்கியவனாய் விடைபெற்றான் ஆணையாரிடமிருந்து.

சொந்தம் என்று பார்த்து அவரின் தொலைபேசியழைப்புக்கு மதிப்புகொடுத்து,வீடு சென்று சொந்தம் மதித்து,அவரின் விண்ணப்பம் தனியே பிரித்தெடுத்து,வேகமாக்கிய பின்
கிடைத்த நல்ல பரிசு, இந்த சொந்தமும் தேவைதானா? பலரகமான சொந்தங்களில் அவதானமாக இருக்க வேண்டிய சொந்தம் இது என்று இப்போதும் நினைப்பான் இவன்.

சுவாரஷ்யவிருது கரவைக்குரலுக்கும்

வலைப்பதிவுகளில் தற்காலங்களில் உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" இப்போது கரவைக்குரலின் கைகளில் கிட்டியிருக்கிறது. "விருது பெற்றுக்கொள்ள நான் தகுதியானவானா?" என்பது என் மனதில் கேட்கும் கேள்விகளில் ஒன்று. மனதில் பட்ட விடயங்கள் மற்றும் உள்ளத்து உணர்வுகள் எல்லாம் சொல்லிவந்த எனக்கு மனதில்பட்டு குமுறிக்கொண்டு வந்த பல விடயங்கள் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இன்றும் வாட்டுகிறது, அது என்றும் வாட்டும் என்பதும் நான் அறிவேன், ஆனால் சொல்ல முடியாத நிலை அறிவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.

அது மட்டுமல்ல "விருது" என்ற சொல் ஒரு பெரிதான சொல் என்பதும் என் பார்வை. அதனாலே இந்த அன பதிவுகளுக்கு கிடைத்த பரிசாகவும் அதே போல தொடர்ந்தும் பதிவிட தந்த அனுமதியுடன் கிடைத்த அங்கீகாரமாகவே கருதி கடலேறியின் அன்பை,மதிப்பை ஏற்றுமகிழ்கின்றேன்.மண் வாசனை வீசும் பதிவுகளின் சொந்தக்காரன் என்று என்னை அறிமுகம் செய்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் உங்கள் பரிசு என்னை பதிவுலகத்தில் ஊக்கி என்பதோடு அதை தந்த உங்கள் கரத்துக்கு என்றும் நான் நன்றியுடையவன்.

இதை விட என்னை சங்கடத்துக்குள் மாட்டிவிட்டதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.அறிந்த அறியாத எத்தனையோ வலைப்பதிவாளர்களின் வாசகன் நான்.கோசலன்,ஆரவார தாசன்,கீத் குமாரசாமி, என்று நான் அறிந்த
வலைப்பதிவர்கள் என்னைக்கவர்ந்தவர்கள் போல் உங்களையும் கவர்ந்திருப்பார்கள்,ஆனால் அவர்களுடன் நட்பு என்ற விருது மேலிடுகிறது.மற்றும் சில பதிவர்கள் என் மனதில் வந்தாலும் அவர்கள் ஏலவே பெற்றுவிட்டதால் அவர்களை நான் தொடர்ந்தும் பிரேரிக்கவில்லை.அறு சுவை என்று எல்லாம் அறுவர்களின் பதிவுகள் தெரிவுசெய்யப்பட்டுவந்தாலும் சற்றுவித்தியாசமாக மூன்று முத்தான பதிவுகளை சுவாரஷ்யமாக அறிவிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

மண் வாசனை என்றும் இன்னும் என்னவோ எல்லாம் கரவைக்குரலைப்புகழ்பாடி தந்த விருது இந்த மூன்று முத்துக்களுக்கு

இவரும் தன் பதிவுகளில் மண்வாசனையை அடிக்கடி தொட்டுச்செல்பவர்.கசப்பான சம்பவங்களையே சுவாரஷ்யமாக சொல்லிக்கொண்டிருப்பவர், விடிவெள்ளிக்கு சொந்தக்காரன்.தன்னையே வெட்டி என்று சொல்லி பெருமைப்படும் பதிவர்
www.vidivu-carthi.blogspot.com

இவர் தன் பதிவுகளில் வித்தியாசமான பல சிந்தனைகளையும் அவ்வப்போதுவரும் அனுபவங்களும் சுவாரஷ்யமாக சொல்வதில் சிறப்பானவர்.நகைச்சுவைக்கும் இவர் பதிவுகளில் குறைவில்லை.
அற்புதமான பதிவர் தொடுவானத்துக்கு சொந்தக்காரர்.
www.skylinelk.blogspot.com

இவர் ஒரு கவிஞர்,என்றாலும் சுவாரஷ்யமான கட்டுரைகளும் இவர் பதிவினை அலங்கரிக்க காணமுடியும்.
இவர் கவிகளில் உணர்வுகளினூடு கலந்த உண்மை பொதிந்திருக்கும். நிலவில் ஒரு தேசம் அமைக்க வரும் புதுக்கவிஞர்.
www.nilavil-oru-thesam.blogspot.com


இவர்களோடு பதிவுலகில் உலாவரும் சகல அன்பான பதிவர்கள் அனைவரையும் வாழ்த்தி விருதளித்த அன்பன் கடலேறிக்கு சொந்தக்காரன் ஆதிரைக்கு என் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

"வணக்கம்" சொன்னால் என்ன வெட்கமா?



எந்த ஒரு மனிதனும் தன் சார்ந்த சமுதாயத்தின் அடையாளங்களை தழுவிச்செல்வதில் என்ன தப்பு இருக்கிறது.
சாதரணமாக தமிழைத் தாய்மொழியாக கொள்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வணக்கம் கூறி வரவேற்பது வழமை.வணக்கம் சொல்வதினூடாக தங்கள் அன்பை கூட பரிமாறிக்கொள்வார்கள் என்பதும் மறுக்கமுடியாது.

ஆனால் ஏன் எம்மவர்களில் சிலர் மட்டும் இதைக் தங்களின் வழமையாக்கிக்கொள்ள தயங்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
சிலர் வணக்கம் கூறுவதினூடாக தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திவிடுவார்களோ என்று சிந்திப்பதும் அதேபோல சில இடங்களில் இதை நாம் சொல்லிவிட்டால் தங்களுக்கு நாகரிகம் இல்லை என்று சிந்திப்பதும் தான் இதற்கு காரணம் போலும்,
அதற்கு நாம் வந்த வழிகள் எங்களை ஒரு பயந்த சூழலில் கொண்டுவந்து விட்டது என்றாலும் அதை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது?

உண்மையில் எனக்கு இந்த பதிவை போடுவதற்கு காரணம் சில தமிழ் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொடங்கும்போது வணக்கம் சொல்வதற்க்கு பதிலாக “ஹைய்(HI)” ”ஹெலோ(HELLO)” என்று எல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துவது தான்.
உண்மையில் நடைமுறையில் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ,எப்படி தங்களுக்குள்ளே எப்படி தங்கள் வரவேற்பை பகிர்ந்து கொள்கிறார்களோ அவ்வாறே அறிவிப்பாளனும் தொடரவேண்டும் என்று அறிவிப்பாளர்கள் நியாயம் கற்பித்தாலும் அது எம் அடையாளங்களை இல்லாது பண்ணுவது மட்டுமல்லாமல் அதற்கு வெகுஜன இலத்திரனியல் ஊடகங்களும் உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்விதான்.முக்கியமாக சில பிரபலமான தொலைக்காட்சிகள் கூட நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் வணக்கம் என்று சொல்வதையே தவிர்த்துவருகிறது.சற்று சிரிப்போடு ஏதாவது சொல்லிவிட்டு தொடர்ந்தும் நிகழ்ச்சியை செய்துவிட்டு கடைசியில் இரண்டு கையும் அசைத்தவர்களாய் ”ஹா கூ” என்று கத்தியவாறே பைய்(BYE) சொல்வார்கள், நிகழ்ச்சி முடிந்துவிடும்.இதைவிட செய்திகள் வாசிக்க ஆரம்பத்திலாவது இருகரம் கூப்பி வணக்கம் சொல்வதில் என்ன வெட்கத்தை உணர்கிறார்களோ தெரியவில்லை.இவையெல்லாம் வெகுஜன இலத்திரனியல் ஊடகங்கள் தங்கள் தனித்துவத்தை இழப்பதோடு தமிழின்,தமிழனின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துவருகிறது என்றல்லாவா எண்ணத்தோன்றுகிறது.
சிலவேளைகளில் இது போன்ற விடயங்கள் சிறுவிடயமாக இந்நிறுவனங்களால் கருதப்பட்டு கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படாது விடக்கூடும்.ஆனால் காலத்தின் ஓட்டத்தில் இவைபோன்ற விடயங்கள் மக்களால் கவனத்தில் எடுக்கப்படும் என்பது உண்மை மட்டுமல்ல அது அனைவரது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
ஆகவே எம்மினத்தின் அடையாளங்களை அவ்வப்போது தவறாமல் வெளிப்படுத்தி அவரவர்கள் தத்தமக்குரிய பங்களிப்பை உணர்ந்து அவற்றை என்றும் அழியாது பாதுகாப்போமாக.

திருகுதாள பொடியனிடம் வாங்கிக்கட்டிய ஆசிரியர்

நல்ல ஒரு ராஜா அவர் காந்தர்வ ராஜா
நல்ல ஒரு வளத்தி அவர் நடையோ தனி


இவர் ஒரு ஆசிரியர் அதனாலே இவர் பெயர் சொல்ல கூடாது , ஏனென்றால் கடைசிமட்டும் வாசியுங்கோ அப்ப தெரியும் பெயர் சொல்லுறது நல்லதோ இல்லையோ என்று.

ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவைகள் ஏராளம்.அதில் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மைகள் இருக்கிறது என்று எனக்கு தெரியாது.ஆனால் இது நடந்த கதைதான்.

பாடங்கள்,பாடமாக்குதல்,பரீட்சைகள்,முடிவுகள்,கூட,குறைய,இப்படியே குறிச்சொற்களுடன் மாணவக்காலங்கள்.வருசக்கணக்காக படித்ததை மூன்று மணிகளில் மூளையைகலக்கிக்கொட்டி அதையே முடிவாக்கி அதை வாழ்க்கையின் முடிவாக்கிவிடுவதால் அதற்க்கு அவ்வளவு முக்கியத்துவம்.இதனால் தான் பரீட்சையை சோதனை என்றார்களோ என்னவோ "சோதனைகள் இல்லாத வாழ்க்கையுமில்லை,சோதனையை காணாமல் மனிதனுக்கு வெற்றியும் இல்லை" என்று யார் சொன்னார்களோ எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு இப்படி மனசில வருகிறது.

இப்படித்தான் ஒருதடவை சோதனை, எல்லோரும் இறுதி நிமிடம் வரை இருகின்ற குறிப்புக்கள் எல்லாம் பார்த்தபடியே இருக்க ஆசிரியர் வந்தார். "சரி தொடங்குவமே" என்றார் அந்த ராஜா ஆசிரியர்.ஆசிரியர் என்னைபோல நல்ல வளத்தி என்றாலும் என்னை விட கொஞ்சம் கட்டை தான். அதை விட ஆசிரியர் கதைக்கும் போதெல்லாம் தன் காதையோ அல்லது நாடியையோ தடவித்தடவித்தான் பேசுவார்.

அப்ப ஆசிரியர் வந்ததும் எல்லாரும் குறிப்பு புத்தகங்களையெல்லாம் வெளியிலே வைத்துவிட்டு மூளையை கொஞ்சமும் ஆட்டாமல் வந்து தங்கள் தங்கள் இருப்பிடங்களில் உட்கார்ந்த்தார்கள்.ஏன் மூளையை ஆட்டினால் மூளை கலங்கினால் கிடக்கிறதெல்லாம் போனால் பிறகு எதை சோதனைக்கு எழுதிறது என்பதற்காகத்தான் மூளையை ஆட்ட பயம்.

சோதனை ஆரம்பம்

பொதுவாக ஆசிரியர்மாருக்கு சந்தேகமோ அல்லது மாணவர்கள் மீது அக்கறையோ தெரியாது பரீட்சை நேரத்தில் அங்கும் இங்கும் நடந்தபடியேதான் இருப்பார்கள்.ஏனென்றால் பார்த்தெழுதுதல் மற்றும் பிரதி செய்தல் தமிழில் அதை கொப்பி அடித்தல் என்பர்,அவற்றையெல்லாம் மாணவர்கள் தவிர்க்கவேண்டும் என்பதற்காக.அது பொதுவானது தான்.அப்படி ஆசிரியர்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாலும் மாணவர்கள் அவர்களை விட கெட்டிக்காரர்களாக இயங்கிக்கொண்டேயிருப்பார்கள்.இது இந்த காந்தர்வ ராஜா ஆசிரியருக்கு ரொம்பவே தெரியுமோ என்னவோ அவர் அங்கும் இங்கும் நடப்பது மட்டுமல்ல கொஞ்சம் வித்தியாசமான முறையில் அவதானிப்பார்.
இவ்வளவு தூரம் இவர் அவதானிப்பாரென்று மாணவர்களுக்கும் தெரியாமலில்லை. ஆனால் இவருக்கும் திருகுதாளம் போட வேணும் என்பது மாணவர்களின் எண்ணம்.

அப்போது பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது

சயா கொஞ்சம் கெட்டிக்காரன்.கணித ஆசிரியர்களில் பிரபல்யமான ஒரு ஆசிரியர் நல்லையா அவர்களால் அவன் நகைச்சுவைகளுக்கு பாராட்டுபெற்ற ஒரு மாணவன்.
அப்படியான அவன் பரீட்சை நேரத்தில் திடீரென்று மெல்ல ஏதும் சொல்லுவதும் ஆசிரியர் திரும்பும்போது ஏதுமே அறியாதவனாக இருப்பவனுமாக பரீட்சை எழுதியபடியே இருந்தான்.ஒரு கட்டத்தில் அவன் மெல்ல சொன்னான் "டேய் இவர் ஏனடா அடிக்கடி தன் நாடியையும் காதையும் தடவிக்கொண்டே நடந்து திரியுறார்" என்று. இந்த பெரிய வசனம் சொல்லும்போது ஆசிரியருக்கு இவன் மேல் கண்பட்டது.ஆனால் அவருக்கு சரியாக மதிப்பிடமுடியவில்லை இவன்தானென்று.ஏனென்றால் சயாவும் திருகுதாளத்தில் புலி.
ஆசிரியருக்கு இந்த பரீட்சை முடிவடைய முதல் யாரென்று உறுதிசெய்யவேண்டும் என்ற எண்ணம்.
ஒருகட்டத்தில் அவர் மாணவர்கள் யாவருக்கும் பின்னுக்கு சென்று அப்படியே வெளியில் சென்று விட்டது போல் பாவனைசெய்து சயாவிற்க்கு முன்னே வராமல் அவன் தலை அங்கும் இங்கும் ஆடுகிறதா என்று பார்த்தால் இல்லை. அவன் தலை ஆடவே இல்லை. அவன் ஆசிரியர் பின்னாலே நிற்கின்றார் என்று விளங்கியிருந்தான். .கரும்பலைகையில் சிறிதான விம்பம் அதைனைக்கொண்டு அவன் அறிந்து கொண்டான்.
ஆனால் ஆசிரியருக்கு எப்படியாவது இவனை அடையாளம் கண்டுவிடவேண்டும் என்று மனதிலெடுத்து இன்னுமொரு உத்தியைக் கையாண்டார்.ஆசிரியர் அது எப்படியும் வெற்றியைத்தரும் என்பதில் உறுதியெடுத்து

அவனுக்கு பின்னாலே சென்று அவனுக்கு குரல் கொடுக்கிறார்."டேய் டேய் எட்டாவது கேள்விக்கு என்ன விடையெடா" டேய் சொல்லு டா " என்று.ஆனால் சயா இது யாரென்றே அறியவில்லை.ஏனென்றால் அவன் அப்ப தான் பரீட்சை எழுதவே ஆரம்பித்தது.அவனுக்கு கோவம் பொங்கிகொண்டு வந்தது பின்னுக்கு இருந்த நீதன் மேல்.இவ்வலவு நேரமும் ஆசிரியருடன் விளையாடிக்கொண்டிருந்தது போதாது என்று இப்ப நான் எழுதும் நேரம் பார்த்து எட்டாவது கேள்விக்கு என்ன விடையென்றால் நான் என்ன செய்ய என்று நினைத்த படியே அவன் இருக்க திரும்பவும் அவன் கேட்டது போல் உணர்வு எட்டாவது கேள்விக்கு என்ன விடையென்று.
திரும்பவும் ஆசிரியர் மெல்லவாக கேட்க "கொஞ்சம் பேசாமல் இருடா பே............. மொக்கா லூசுத்தனமாக கேட்கிறாய் அப்படி இப்படி" கொஞ்சம் கூடுதலாக திட்டித்தீர்த்தான்.
தெரியும் தானே நண்பர்களை ஏசும்போது எப்படியெல்லாம் ஏசுவார்களோ அப்படியெல்லாம் ஏசிமுடிய எல்லா மாணவர்களும் பெரிதாக சிரித்தார்கள்.
ஆசிரியருக்கு என்ன செய்ய ஏது செய்ய இப்படி ஏசிப்போட்டானே என்று அங்கும் இங்கும் பார்க்க "அட இவர் தான் என்றால் கொஞ்சம் கூட ஏசியிருக்கலாமே" என்று ஆசிரியருக்கு முன்னால் வெட்கப்பட்டவனாய் நடிக்க மீண்டும் எல்லோரும் மீண்டும் தொடர்ந்தார்கள்.என்றாலும் இடைக்கிடை விம்மி விம்மி சிரிப்புடன் பரீட்சை முடித்தாலும் வீடு செல்லும் வரை அது தான் கதை எல்லோருக்கும்.

இப்ப சொல்லுங்கோ வழமையாக ஆசிரியரிடம் ஏச்சு வாங்கும் மாணவர்களை கண்டிருக்கிறோம் அப்படியிருக்க இப்படி ஏச்சு வாங்கிய ஆசிரியரின் பெயரை சொல்ல கூடாதுதானே என்ன? ஆனால் இதை வாசித்ததை வைத்து நீங்கள் யாரென்று கண்டுபிடித்தால் நான் என்ன செய்ய?

கருத்துச்செறிவான பதிவுகள் என்றும் நிலைத்திருக்கும்----->அமீரக வலைப்பதிவர் மகாநாடு

இதுவரை வலைப்பதிவில் ஈடுபட்டிருந்த எனக்கு சற்று வித்தியாசமாக வலைப்பதிவர்களை ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கைகூடியிருந்தது(19/07/09).முக்கியமாக பின்னூட்டம் மூலமாகவே சந்திக்கும் வலைப்பதிவர்களும் அதே போல அவர்களின் வாசகனாக இருந்த எனக்கு அவர்களையெல்லாம் சந்திக்க கிடைத்ததையிட்டு மனம்மகிழ்ந்த நாள் தான் அது.அது மட்டுமல்லாமல் நேரடியாக முதன்முதலில் ஒரு வலைப்பதிவாளனாக வலைப்பூவொன்றிற்க்குசொந்தக்காரனாக அறிமுகம் கொடுத்ததும் அன்றுதான்.

திடீரென்று கிடைத்த சென்ஷியின் தகவலால் கிடைத்த பெரும் சந்தர்ப்பம் தான் அந்த அமீரக வலைப்பதிவர் மகாநாடு.
மாலை நேரம் சரவணபவன் மண்டபத்தின் முன்னால் உள்ள கரமா தமிழ்ப்பூங்காவில் குசும்பனின் தமிழ்தாய்வாழ்த்துடன் ஆரம்பமானது வலைப்பதிவர்மகாநாடு.இத்தனை வலைபதிவர்கள் அமீரகத்தில் இருக்கிறார்களா என்று வியக்கும் அளவுக்கு பதிவர் கூட்டம்.வட்டமேசையாக ஆரம்பமான இந்த மகாநாடு சுல்தான் ஐயாவும் படகு என்ற பதிவுதரும் பதிவரும் வர அது மாவட்டம் ஆனது.

வலைபதிவிடும் சகல பதிவர்களும் தங்களை தங்கள் வலைப்பூக்களுடன் அறிமுகப்படுத்தினர்.அவ்வேளையில் இவர்கள்தான் இப்படியெல்லாம் வலைப்பூவில் போட்டுத்தாக்குபவர்களா என்று ஒரு கணம் வியக்கவும் அவர்களை பார்த்து சிரிக்கவும் வைத்தது.அவை பற்றி தனித்தனியாக அவர்களை பற்றி அவர்கள் பதிவு பற்றி இன்னொருதடவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இப்படியாக அறிமுகங்களைத்தொடர்ந்து அண்ணாச்சி ஒலிவாங்கியை கையிலெடுத்தார்.கையிலெடுத்து "பதிவு என்பது எவ்வாறு அமைய வேண்டும்" என்ற கேள்வியை எல்லோர் மீதும் தொடுத்தார்."இது நல்ல கதையாபோச்சு" என்று எல்லோரும் முழிக்க "பதிவு எழுத தொண்ணூறு சதவீதம் படிக்க வேண்டும்" என்றார் அன்பர் ஒருவர்.அன்பரின் பெயர் எனக்கு நினைவில்லை மன்னிக்க வேண்டும்."கடவுளே இனி படிக்க தொடங்க வேணும் என்ற கதையாக போய்விட்டது" என்று எல்லோரும் மனதுக்குள் கிசுகிசுக்க ஐயனார் வாங்கினார் ஒலிவாங்கியை.

"பதிவு என்பதில் முக்கியமாக செறிவு இருக்க வேண்டும்" என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்."அதென்ன செறிவு" என்று மகாநாட்டில் ஒரே சலசலப்பு, அதாவது பதிவில் ஏதாவது ஒரு கருத்து, ஒரு தேடல் முக்கியமாக செறிந்து காணப்படவேண்டும் என்பது தான் அவரின் ஆதங்கம்.அதேபோல கருத்துச்செறிவான பதிவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கருத்துரைக்கப்பட்டது
தொடர்ந்து அண்ணாச்சி அடுத்த கேள்வியைத்தொடுத்தார்." அது சரி நீங்கள் எல்லோரும் ஏன் வலைப்பதிவில் ஈடுபடுகின்றீர்கள்" என்று மற்றொரு கேள்வி..
அதற்கு நண்பர்களின் தூண்டுதல்கள்,எழுத்துலகத்தில் இருந்த ஆர்வம் என்று எல்லாம் பொய்கள் வர குசும்பன் மட்டும் உண்மையை உளறித்தள்ளினார்."வேலையே இல்லையப்பா.தொடங்கிவிட்டேன் தொடருகின்றேன் என்று சொல்ல எல்லோரும் "தங்களைப்போலவே சொந்த இரத்தமெடா" என்பது போல தலையாட்டினர்.


தொடர்ந்து இன்னுமொரு வலைபதிவர், இவர் தன்னை பட்டிமன்ற பேச்சாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் ஒலிவாங்கியை கையிலெடுத்து வளர்ந்துவரும்"பதிவர்களுக்கு நீண்டகால பதிவர்களாகிய நீங்கள் உங்கள் எந்த பதிவை வாசிக்க சொல்வீர்கள்"என்று மிகவும் இலேசாகக்கேட்டார்.

"கடவுள் தான் காக்க வேண்டும்" எல்லோரும் தலையில் கைவைத்து "எல்லாமே நல்ல பதிவுதான்" என்று புன்முறுவல் பூத்தனர்.
தொடர்ந்து வாசகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் வரவேற்ப்புக்கும் அமைவாகத்தான் பதிவுகள் அமையவேண்டும் என்றும் அவை வாசகர்களை சிறந்த வாசகர்களாக்கும் நோக்குடன் அமையவேண்டும் என்றவாறும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.""\

இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.இந்த மகாநாட்டுக்கு வலைப்பதிவுகளின் வாசகனாக இருக்கும் ஒருவர் கலந்து சிறப்பித்தமைதான்."தமிழின் மீது இருந்த பற்றினாலும் வலைப்பதிவுகளில் இருக்கும் சுவாரஷியத்தாலும் இப்படியான ஒரு மகாநாடு நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கின்றேன்" என்று தன்னை அடையாளம் காட்டி வந்திருந்தார் ஒரு வாசகர்.ஆர். ராஜேந்திரன் என்ற நாமம் கொண்ட இவர் ஹொங்க் ஹொங்க் ரஷ்யா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் எல்லாவற்றிற்கும் தனது பணிநிமிர்த்தம் பயணம் செய்யும் இவர் அமீரக வலைப்பதிவர் மகாநாட்டில் கலந்து கொண்டமையை பெருமையுடன் எடுத்துக்கூறி விடைபெற்றார்.

இறுதியில் பரிமாறப்பட்ட வடை கச்சான் மற்றும் நன்னீர் ஆகியவற்றைக்கொண்டுவந்த அன்பர்கள் நண்பர்கள் உட்பட யாவருக்கும் நன்றியுரை கூறப்பட்டு மீண்டும் மீண்டும் மகாநாடு தொடர்ந்து நடைபெறும் என்று உறுதிமொழியெடுக்கப்பட்டு ஐயனாரின் தமிழ்தாய் வாழ்த்துடன் மகாநாடு இனிதே நிறைவுபெற்றது.

வாழ்க உதயன்


அதிகாலை விடியுமுன்
கதியாக எம்வாசல் வந்து
கதவைத்தட்டி செய்தி சொல்லும்
உதயனே வாழ்க

தனித்துவமாய் செய்திகள் அதில்
துணிச்சலுடன் உண்மைகள்
நெருக்கடிகள் பலவரினும்
ஒரு நாளும் தவறாமல்
விரைவுடனே வந்து எம்
வீடுதட்டி செய்தி சொல்லும்
உதயனே வாழ்க

மூலையென்ன முடுக்கென்ன
முந்திச்செல்லும் ஊடகம் நீ
எந்த மூலை செய்தியெனினும்
உன்பார்வை அங்கிருக்கும்.
மின்னல் போல் விரைந்து நீ
சொன்ன சொல் தப்பாமல் எம்
வாசல் வந்து செய்திக்கதைகள் சொல்லும்
உதயனே வாழ்வாயாக

விருத்துக்கு உன்பெயர்
அறிவித்த கணத்திலே
ஆர்ப்பரித்த ஊடக உலகின்
கரகோசங்களின் மிகையொலி
உன்பெருமை பறைசாற்றும்.

ஈழத்தின் படைப்பாகளிகளை
வளர்த்தெடுத்த உத்தமன் நீ
(பல்)வித்தைகளின் வரவிலக்கணம்
வித்தியாதர சிறப்புனக்கு - உதயா
சித்திக்கும் என்றும் வெற்றியுனக்கு


மக்கள் மனமறிந்து - அங்கு
உணர்வுகளை சரிவரவுணர்ந்து
உலக ஊடங்கங்களில் தனித்துவமாய்
உலவும் உதயனே வாழ்க பெருமையுடன்

அண்மையில் அதியுயர் கௌரவ விருது ஒன்று உதயன் நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருப்பதையிட்டு கரவைக்குரல் மகிழ்ச்சியடைகிறது.இலங்கை பத்திரிகை ஆசிரிய சங்கமும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் ஏற்பாடு செய்த இந்த விழாவில் இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருக்கிறது. "" சேமபால"' விருது ஆகிய அதிஉயர் விருது அளிக்கப்படிருப்பதையிட்டு கரவைக்குரல் மகிழ்ச்சியடவதோடு ஆசிரியர் வித்தியாதரன் அவர்களையும் உதயனையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

கிளவிதோட்டத்தானுக்கு தீர்த்தகேணிப்பணிகள் ஆரம்பம்

கரவெட்டி கிளவிதோட்டம் விக்ன விநாயகருக்கு தீர்த்தகேணிப்பணி ஆரம்பம் என்ற செய்தியை உங்களுக்கு தருவதில் கரவைக்குரல்; பெருமகிழ்ச்சியடைகிறது.ஆலயத்தின் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இக்கேணிப்பணி அமைவதோடு அவ்வூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவும் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆலய நிர்வாக தர்மகத்தா சபையின் வழிகாட்டலுடன் பெருமெடுப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்வறப்பணி குறுகிய காலத்தில் ஆலயத்துக்கு அமைத்துக்கொடுப்பது என்ற சவாலுடன் முன்னெடுக்கப்படுகிறது.
இளையோர்களின் இரவுபகல் பாராத கடும் உழைப்போடும் அவர்களின் அறச்சிந்தனையோடும் முன்னெடுக்கும் பணிக்கு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடத்திருக்கிறது.




ஆலயத்தின் வடக்கு வீதியில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வாசிகசாலைக்கு அருகில் இந்த கேணி அமையவிருக்கிறது. வழமையாக விநாயகபெருமான் தீர்த்தமாடும் கிண்றுக்கு அருகிலேயே அந்த கேணி அமைய விநாயகனின் கடாட்சம் கூடியிருப்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.

வேண்டும் அருள் அருளும் வி நாயகனுக்கு கரவெட்டியின் மக்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும்,எங்கிருந்தாலும் அவர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தங்கள் பங்களிப்பை மேற்கொள்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.அதைவிட இந்த தகவல் எல்லோர் காதுகளுக்கும் எட்ட வேண்டும் என்ற நோக்கோடும் உதவும் கரங்களுக்கு ஊக்கமாகவும் பதிவிடபடுகிறது. அறப்பணியில் பங்கெடுக்க விரும்பும் அன்பான உள்ளங்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஒவ்வொருவரினதும் சிறுதுளிகள் பெருதுளிகள் ஆகும் என்பது மட்டுமல்ல ஒவ்வொருவரினதும் ஊக்கமும் முயற்சியும் சிறந்த அறப்பணியைத்தரும் என்றுணர்ந்து தானம் செய்வீர் விநாயகன் அருள்பெற்றிடுவீர்.

தகவல்: ஆலய நிர்வாக தர்மகத்தா சபை
புகைப்படம்: செந்தூரன்

கொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்


"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,