வருட ஆரம்பத்தில் மட்டுமல்ல எப்போதும்

சிந்தனைகள் சிறக்கட்டும்

புதுவருடம் பிறந்து விட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.மற்றவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதும் பழைய துன்பங்களை மறக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தும் சந்தோசமான வாழ்க்கைக்கு தயாராக வேண்டும் என்று வீறு கொள்வதும் வழமையானவை.
இவையெல்லாம் சோதனைகள் நிறைந்த வாழ்க்கையை சாதனை ஆக்கவேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணம்.
கடந்த வருடமும் ஆரம்பத்தில் அதற்கு முன் கடந்த இரண்டாயிரத்தேழாம் ஆண்டின் சோதனைகளை எடுத்தெறிந்து நிம்மதியான ஆண்டாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.ஆனால் நடந்தது என்ன? கஷ்டங்களின் எல்லைக்கே சென்றுவிட்டது நமது தாய்நாடு.எந்த ஒரு வருடமும் மற்றவர்கள் வாழ்த்தும் படியாக அமைந்தது இல்லை நம் குலத்துக்கு.
தோள்கள் எல்லாம் வலிக்கும்படியாகவும் சோகங்களை சுமந்து எமது தாய்நாடு சென்றுகொண்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல் இயற்கையும் "சுனாமி" என்றும் "நிஷா" என்றும் அவ்வப்போது வந்து வாட்டிவிட்டு செல்கிறது. ஏன் தர்மத்துக்கும் கூட நியாயம் புரியவில்லையா? இதையெல்லாம் பார்க்கும் போது வாழ்த்துவது எதற்காக என்று எண்ணத்தோன்றுகிறது இல்லையா?
என்றாலும் துன்பத்திலும் நம் பாசக்கரத்தால் இரண்டாயிரத்தொன்பதாம் ஆண்டை வழமைபோலவே வரவேற்போம். உன்தம்பி இரண்டாயிரத்தெட்டு எமக்கு தந்த துன்பங்கள் துயரங்களால் பகைமையை எம்மோடு வளர்த்தாலும் பகைமையை மறந்து உனக்கு பாசக்கரம் நீட்டுவோம்.அடித்தாலும் அரவணைக்கும் குலம் எம்குலம் என்று புரியட்டும்.
நாம் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து தீய சிந்தனைகளை தீக்குள் போட்டு அறியாமை என்ற இருளை விட்டகன்று கோபதாபங்கள் மறந்து அமைதியான உள்ளத்தோடு மற்றோரிலும் அன்பு வைத்து எம்குலம் சிறக்க வாழ்ந்திடுவோம்.சிறந்த வெற்றியைத் தரவே இந்த துயரங்கள் எல்லாமென்று எல்லாமென்று சிந்திப்போம்,சோதனைகளை சாதனையாக்குவோம்.
எம் சான்றோர்கள் சொன்ன வழியில் எம் வாழ்க்கையை கொண்டு செல்வோம்
வெற்றி எம்பின்னால் தேடி வரும். மற்றவர்கள் முகங்களில் புன்னகை பூக்கும் படியாக எல்லோர் உள்ளங்களையும் காதலித்து எம்குலமக்கள் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

1 comment:

Anonymous said...

Let's all pray for Peaceful and Brighten future