இங்கு வண்டில் மாடு ஓடுது சோதனையாய்


சோதனைகள் பலரகம்
அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
சோதிப்பதால்தான் எதிர்பார்ப்பும் ஏக்கமும்-இல்லையேல்
எல்லாமே ஒன்றுதான் இப்பாரினிலே
சோதனைகளை தாண்டி- அவை
சாதனைகள் பெற்றுவிட்டால்
ஆனந்தத்துக்கும் எல்லையுண்டோ இந்தப்பாரினிலே

மனிதன் பிறந்து விட்டால் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக தான் பிறக்க வேண்டும் என்பது உலக நியதி என்றும் சொல்லலாம்.இதை மறுப்பதற்கில்லை.
இங்கு இதுவும் ஒரு சோதனையில் நடந்த விடயம் தான்.ஆனால் இதற்கு "சோதனை" என்ற சொல் வடிவம் பொருந்துமோ எனக்கு தெரியவில்லை.இருப்பினும் பொதுவாக மாணவர்கள் இதை தங்களின் சோதனை என்று சொல்வது வழமை.
பொதுவாக ஆசிரியர்கள் தன்மாணவர்களை பரீட்சைகள் வைத்து பரிசோதிப்பதும் அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பதும் இப்போதெல்லாம் நடைமுறையிலுள்ளவிடயங்கள்.நாளாக நாளாக படித்ததெல்லாம் மூளைக்கு ஏற்றிவிட்டு பரீட்சைமண்டபத்திலே வந்து தலையை கலக்கி கொட்டிவிட்டு அதன்பின்பு அவையெல்லாம் தேவையில்லாததொன்று என்பதைப்போல நடமாடும் மாணவர்களும் இல்லாமலில்லை.இவர்களெல்லாம் மனதிலெடுத்ததை மட்டுமே பரீட்சை மண்டபத்தில் கொட்டிச்செல்வர் என்பது ஆமோதிக்கபடவேண்டியவிடயமும் கூட.கொஞ்சம் மாறுதலாக பரீட்சகர் பரிசோதித்துவிட்டால் "இண்டைக்கு கொஞ்சம் இறுக்கமாக போச்சு" என்று மனதினுள்
குறுகுறுத்தபடி வெளியேறுவர் இப்படியான மாணவர்கள்.

இப்படித்தான் ஒரு தமிழ் ஆசிரியர் தனியார் கல்வியகத்தில் அடிக்கடி மாணவர்களுக்கு பரீட்சைகள் வைப்பது வழமை.அடிக்கடி வைத்தாலும் அது கொஞ்சம் போட்டிப்பரீட்சை என்றுதான் சொல்லிவைப்பார்.அதனாலே பரீட்சை மண்டபத்தினுள்ளே கவனிப்பாளர்களும் கூட.முகாமையாளரின் முகாமையிலும் கவனிப்பிலும் பரீட்சை ஆரம்பம்.
ஆரம்பிக்கும் இறுதி நிமிஷம் மட்டும் படித்துவிட்டு எல்லாமே இறைவன் துணையென்று மேலே சுழி போட்டு 'வாத்தியார் என்ன கேள்வியைபோட்டாரோ எப்படி போட்டாரோ" என்று சிந்தித்தபடி ஆரம்பிக்கிறது மாணவர் கூட்டம்.
சோதனையின் இடையில் "சலசல" என்று சத்தம் கேட்பதும் கவனிப்பாளர் எழுந்து "சூ சூ என்ன சத்தம்" என்று சொல்ல பின்னர் அது குறைவதுமாய் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.எது எப்படியாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை எப்படியாவது மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுமாய் பரீட்சை நடந்து கொண்டிக்கிறது.உண்மையிலை இந்த விசயம் எல்லாம் வாத்தியாருக்கு தெரியாது, வாத்தியார் இப்ப இதை வாசித்தாரென்றால் "இப்பிடி எழுத்தித்தான் நீ எல்லாரையும் விட கடைசி மார்க்ஸ் எடுத்தனியோ" எண்டு தலைக்கு மேல கைவைப்பார்."கெட்டிக்காரன்" என்று இப்ப சொன்னாலும் சொல்லுவார் என்ன?. சரி அது இருக்கட்டும்.
அப்ப எல்லாரும் நேரத்தையும் பார்த்தபடி விறு விறு என்று எழுதிக்கொண்டே கடைசிக்கேள்விக்கு போனால் அது வழமைபோலவே கட்டுரை.
அதில எல்லாருக்கும் எழுத கொஞ்சம் இலகுவாக இருந்த தலைப்பு "வண்டில் மாட்டின் சுயசரியதை எழுதுக" என்று.மற்றது எல்லாம் வாத்தியார் படிப்பிச்சது மாதிரி இல்லாமல் அது வாத்தியாரின்ரை பேப்பருக்கு ஒரு தரத்துக்காக கொஞ்சம் கடுமையாக இருந்தமாதிரி உணர்வு எல்லாருக்கும்.அப்ப பொதுவாக வண்டில் மாடுதான் எல்லாரின்ரை பேப்பர்லையும் ஓடுது.கட கட கட கட எண்டு எல்லாரும் எழுதினாலும்(வண்டில் மாடு தானே), ஒரு பொடியன் முழுசி முழுசி அக்கம் பக்கம் பார்க்கிறான் "டேய் டேய்" எண்டு தனக்கு பக்கத்தில் இருந்தவனை தட்டினால் அவன் எங்க பார்த்தால் தானே,ஏதோ கஸ்டப்பட்டு அவனை ஒருவாறு பார்க்கவைத்தான் அவன்.
பார்க்கவைத்த அவன் கேட்டான் மெல்ல மெல்ல

"டேய் நீ என்ன வண்டில் மாட்டின் சுயசரிதையா எழுதிறாய்"
"ம்ம் ம்ம் ஏனடா"
"ஏனடா ஏதும் பிரச்சனையே"
"பின்னை ஏன் நான் உன்னை கூபிடுறன், டேய் நானடா வண்டில் மாட்டில இரண்டு மாட்டிலை ஒரு மாட்டின்ரை சுயசரிதை எழுதிப்போட்டன்டா மற்ற மாட்டை பற்றியும் எழுதவேணுமோடா?"
"நல்ல கேள்வி, நீ எல்லா மாட்டையும் பற்றி எழுதினால் நாங்க எங்கடா போறது, நான் இளையதம்பி அண்ணையின்ர மாட்டை பற்றி எழுதுறன் நீ வேணுமெண்டால் கணபதிப்பிள்ளையண்ணையின்ரை மாட்டைப்பற்றி எழுது என்ன"
என்று பெரிய புத்திமதி பரீட்சை மண்டபத்திலே.
"" "சூ சூ" என்ன சத்தம்"" என்று கவனிப்பாளர் எழும்பி வர புத்திசாலியின் புத்திமதியும் சொல்லிமுடிகிறது."சரியோ பிழையோ ஏதோ எழுதுவம்"என்றபடி வேகமாக எழுதிமுடிக்கின்றனர் புத்திசாலிகள்.
"இனி எப்ப மார்க்ஸ் வரப்போகுதோ" என்ற எதிர்பார்ப்பின்படி எல்லா மாணவர்களும் பேசியபடி வெளியேறுகின்றனர்.
ஏன் தெரியுமோ???? பரீட்சைப்புள்ளி பார்க்கிற ஆர்வம் இல்லை.அது புள்ளியை பார்த்து வாத்தியார் பிறகு எத்தனையோ மாட்டை பற்றி சொல்லி முதுகிலை கொஞ்சம் தட்டுத்தட்டி முதுகிலை வண்டில் மாடு ஓட்டுவார் எல்லோ, அப்ப அண்டைக்கு வகுப்புக்கு வராமல் விடத்தான், வேற என்ன, அவ்வளவு ஆர்வம் படிப்பிலே எங்கட பொடியள்.

1 comment:

Bhumii said...

iyo IYO IYO thangalaippah