கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்

ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.
இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,

இப்படி பல கதைகளை நினைவுபடுத்தும் இந்த கப்பல்,லங்கா முடித கப்பலுக்கு வயசு வந்திட்டுது,


கடைசி காலத்துக்கு எல்லா பழசும் யாழ்ப்பாணத்துக்குத்தான் எண்டது போல லங்கமுடித அதன் கடைசி காலம் வரை ஓடி முடித்திருக்கிறது,””இன்னும் ஓட விடலாம்" என்றால் அதற்கு வயசு போய்விட்டதாம்,எல்லா இடமும் ஓடி கடைசிகாலத்துக்கு திருகோணமலை யாழ்ப்பாணத்துக்கு ஓடி களைச்சு இப்போது கப்பல் நங்கூரமிடும் காசு கப்பல் ஓடுவதற்கான காசை விட ரொம்ப கூடவாம்,சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓடுவது என்றால் கப்பலை திருத்த அதற்கும் ரொம்ப காசு,எல்லாம் யோசித்துவிட்டு கப்பலை இரும்புக்கு விற்றாவது உழைக்க எண்ணியிருக்கிறது துறைமுக அமைச்சு.

ஒருகாலம் இந்த கப்பலுடைய பெயர் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கொழும்பு எல்லாம் எல்லோர் வாயிலும் பெரும்பாலும் உச்சரிக்கபடுகின்ற பெயர்,இதனால் உழைத்தவர்கள் பலர்,பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்கள் சிலர்,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,கஸ்டபட்ட மக்கள் பலரோ பலர்.
கப்பல் ஓட ஓட சரியான இருக்கை இல்லாமல் கப்பலின் அங்கு இங்கும் உட்கார்ந்த படி வாந்தி எடுத்து எடுத்து கடைசியாக போய்சேருவோமொ என்று களைத்து விழுந்து யாழ்ப்பாணத்தை அல்லது திருகோணமலை வந்து சேர்வர் பயணிகள்.கப்பல் வருகைக்காக இரு கரைகளிலும் வரிசையில் பல நாள் காத்திருக்கும் மக்கள்.வந்தவுடன் முண்டியடித்து ஏறுவதும் அதற்கு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் மக்கள்,


பின்னர் உதயன் பத்திரிகையை அடிக்கடி திருகோணமலையில் இருந்து கப்பல் வெளிக்கிட்டுவிட்டதா என்று பார்த்து மீண்டும் வரிசைகாக ஒடுவது,வெளி நாடுகளுக்கு போகும்போது பயணம் அனுப்புவது போல இந்த பயணத்துக்கும் சொந்தக்கள் நண்பர்கள் கூடி வழியனுப்பி வைப்பர், இந்த முறை என்றாலும் வெற்றியோடு சென்று வா என்று பல முகங்கள் பேசும்,போர்க்களத்துக்கல்லவா போகிறார்கள்?? ம்ம்ம்ம்ம்
ஓடும்போது கொண்டு செல்லும் பயணப்பையைவிட தரப்பட்ட பாஸ் எடுக்கப்பட்டதா என்று அடிக்கடி திருப்பி திருப்பி பார்ப்பது அதில் இருக்கும் பதட்டம் பயணித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
பத்தடிக்கு ஒருமுறை பயணப்பை பரிசோதனை,எடுப்பதும் வைப்பதுமாக கப்பல் ஏறினாலும் சங்கடம் தான்.உணவுப்பொருள்கள் கொண்டு வரும் கப்பலில் பயணிகளும் ஏற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
சரக்கு கப்பல் என்றால் இருக்கைகள் இல்லை,இந்த வேலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கப்பல் ஓடியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
எத்தனை மாணவர்கள் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் இழக்கபட்டிருக்கிறது.பல்கலைக்கழக அனுமதிகள் பிந்தியிருக்கிறது,விரிவுரைகளுக்கு பிந்தி சென்ற மாணவர்கள் அங்குள்ல விரிவிரையாளர்களுக்கு காலம் பிந்தி வருவதற்கான விளக்கத்தை சொல்வதற்கு படும்பாடு,

இதை விட லங்கா முடித கப்பல் வந்துவிட்டால் ஊரிலை சங்க கடையில் வரிசை,கடல் தண்ணி பட்டு விட்டதாம் என்று சீனி அரைகுறையாக இனிக்கும்,கோதுமை மாவின் நிறம் மாறியிருக்கும்,என்றாலும் வாங்கியேதான் ஆகவேண்டும்,வாங்காவிட்டால் சாப்பாட்டுக்கு எங்கு போவது? அதுவும் ஒரு காட் இருக்கிறது,அந்த காட்டுக்கு 2 அல்லது 1 கிலோ,அதைவிட யாழ்ப்பாணத்து உற்பத்தி சோப் போட்ட மக்களுக்கு கொழும்பு சோப் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும்,அதுவும் வாங்க வேண்டும்,\இதைவிட கிழிஞ்ச கிழிக்கபட்ட தபால்கள் வரும் காலம்,தபால் கொண்டுவரும் அன்பர் அந்த ஊரவராக தான் இருப்பார்,அவருக்கு அந்த ஊரவர்கள் எல்லாம் நட்பாகத்தான் இருப்பார்,கடிதங்களை அடுக்கியபடி “அது கடல் தண்ணி பட்டுப்போச்சு,போன கிழமை மழைதானே,அது தான் இதெல்லாம் கிழிஞ்சுபோச்சு”என்று கொடுப்பார்,ஒவ்வொருகடிதமாக இணைத்து வாசித்து தூரதேசத்து மகன் அல்லது மகளின் நிலைமையை அறிவர் குடும்பத்திலுள்ளோர் எல்லோரும்.

இப்படி எத்தனையோ கதைகள் சொல்லும் இந்த லங்கா முடித கப்பல்.கஸ்டங்கள் கொடுத்ததும் லங்கா முடித்ததான்,அங்கும் இங்கு கடக்க உதவிசெய்ததும் லங்கா முடித்ததான்,இருந்த கை பிழையோ அல்லது ஓடியது பிழையோ தெரியாது,லங்கா முடித ஓடி ஓய்ந்திருக்கிறது,கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு ஓடி இப்ப இரும்புக்கு தயாராகிரது,.இரும்புக்கு போனாலும் அந்த இரும்புக்காசு யாருக்கோ போனாலும் யாழ் மக்களின் மன இருப்பில் இருந்து நீங்காது இந்த லங்கா முடித்த, நினைவுகளால் என்றாலும் நிஜத்திலும் எல்லாம் கடைசிகாலத்துக்கு யாழ்ப்பணத்துக்கு தான்

No comments: