வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை

கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,ஓவியங்கள், நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும் பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.

அந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,
இதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.


பொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.
உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.

அது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,
அது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்

இவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)

இந்த வீதி நாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அதன் சிறப்புக்களையும் அதன் மூலம் மக்களுக்கு கருத்தை இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.

படம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது,

7 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அவசியமான இடுகை..பகிர்வுக்கு நன்றி

Unknown said...

:))) மூத்த விநாயகர் கோவிலைப் போட்டதுக்காக கொஞ்சம் பெரிசான ஸ்மைலி

Anonymous said...

நாங்கள் யாழில் இருந்து கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்தப் பொழுது அங்கே சத்திவேல் ஐயாவின் வீதி நாடகங்கள் பலவற்றை வியந்துள்ளேன். சிலவற்றில் பங்குப்பற்றியும் உள்ளேன்.

வீதிநாடகங்கள் திரைப்படமாக வெளிவந்ததும் உண்டு. எங்களின் வீதி நாடகம் ஒன்றும் அவ்வாறு எடுக்கப்பட்டது.

பகிர்வுக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வீதி நாடகங்களைப் பற்றி ஒரு அழகான அறிமுகம்.

இது போன்ற கலையில் முன்னேற, வெற்றியடைய மிகுந்த உழைப்பு தேவைப்படுகிறது என்பதால் தான் அதிகமானோர் வருவதில்லை என்று நினைக்கிறேன்.

அருமையான நடை திணேஷ். தொடருங்கள்!

ஆதித்தன் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழர்!

இப்போதெல்லாம் நம் தமிழர்கள் வீதிநாடகங்களில் நடிப்பவர்களை பெரிதாக மதிப்பதில்லை. எம் குலப்பெண்டிருக்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடர்களே ஆயுள்முழுக்க அருள்பாலித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் எங்கே வீதிநாடகங்களுக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள்?

வசந்தன்(Vasanthan) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

வன்னியிலே இந்த வீதி நாடகங்கள் புதுப்பரிமாணம் பெற்றிருந்தன. விடுதலைப் புலிகளின் முக்கிய பரப்புரை ஊடகமாக இந்நாடங்களே ஒருகாலத்தில் அமைந்திருந்தன. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையோடு வீதி நாடங்களில் புதுயுகம் தொடங்கியது.

ஒலிபெருக்கிகளோ, வேறெந்த இலத்திரனியல் கருவிகளோ இன்றித்தான் இந்த வீதிநாடகங்கள் நடத்தப்படுவதுண்டு.

இந்த வீதிநாடகக் கலைஞர்கள் வன்னியின் அனைத்து மூலைகளுக்கும் மிதிவண்டியிலேயே பயணித்து தமது கலையை அரங்கேற்றுவார்கள்.

தனிப்பட்ட அளவில் எனக்கு புதுவை அன்பனின் வீதிநாடங்களில் அதீத விருப்புண்டு.

வன்னியின் வீதிநாடக வரலாறு மிகக் கவனமாகத் தொகுப்பட வேண்டியது. ஏனென்றால் ஈழப்போராட்டத்தைக் கொண்டிழுத்த அச்சாணிகளுள் அதுவுமொன்று.

மு.லிங்கம் said...

அற்புதமான படைப்பு, மீண்டும் பல வருடங்களிற்கு பின்னால் எங்களை நகர்த்தியுள்ளீர்கள்.
உங்களது வசனநடை அந்த காட்சிகளை எங்கள் கண்முன்னால் மீண்டும் நிலை நிறுத்தியுள்ளன...
பாராட்டுக்கள் தம்பி, இணைப்பிற்கு நன்றி.