கலகலக்கிய கப்பல் பயணம்

இதை கேட்டவுடன் கலகலப்பாக , சந்தோசமாக அமைந்த பயணம் பற்றி சொல்லப்போறன் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம், எல்லா வயிறும் கலங்கி, நெஞ்சு பதறி, உயிரையே கலக்கி வந்த பிரயாணக்கதைதான் அது.
அன்று நான் நினைகின்றேன் ஒன்பது மணி இருக்கும் என்று . சூரியன் வானொலியில் ஒரு அறிவிப்பு. யாழ் மக்கள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தான் அது. ஏனென்றால் 2006 ஆவணி மாதம் திடீரென்று ஏ9 பாதை பூட்டு போட்டவுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து வெளியிலே செல்ல முடியாமல் முடங்கி போயிருந்தனர் மக்கள். தொழில்களில் விடுமுறை பெற்றும் பல்கலைகழகங்களில் விடுமுறை பெற்றும் மற்றும் உறவினர்களை பார்க்கவும் வந்திருந்த அந்த மக்கள் எதிர்பாத்த அறிவிப்பை சூரியன் எப். ம். வாமலோசனின் குரலால் வானலைகளில் தருகின்றது.

"இன்று காங்கேசன்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று பயணமாக உள்ளது. யாழிலிருந்து வரவிருக்கும் பயணிகள் உங்கள் பயணங்களுக்கான ஆயத்தங்களுடன் சிங்கள மகாவித்தியாலயம் வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்"

இது யோதியின் காதுக்கும் எட்டியது.
யோதி அப்ப நெல்லியடியில நிண்டவன். போன வேகத்தில கிளவிதோட்டத்துக்கு சைக்கிளை திருப்பிக்கொண்டு ஓடிக்கொண்டு போறான். வழியில அவன்ட நண்பர்கள் "என்னவாம் கப்பல் ஓடுதாம்........ என்ன போறதுக்கு ஆயத்தமோ?" , "இதெங்க ஓடுறது.... இப்பிடித்தான் எத்தனை நாள் சொல்லி போட்டாங்கள்..... " என்று எத்தனையோ எத்தனையோ உரையாடல்கள், இதெல்லாம் சைக்கிளை உதைத்து உதைத்து ஓடி ஓடி கதைத்த வரிகள். இதில யோதியின் நண்பர்களில் செல்லம் சீலன் நெல்லியடி தபால் அலுவலகத்திக்கு முன்னால கண்டவை. இவையோட கொழும்பில இருந்து போயிருந்த ரஜீவனும் வந்து கொண்டு இருந்தவர். அவருக்கு கப்பல் ஓடுற விஷயம் அப்ப யோதி சொல்லுறபோதுதான் தெரியும். "அட அட அப்பிடியாமே........., இஞ்சை விடுங்கடா..." என்று சந்தைக்கு வெளிக்கிட்ட ரஜீவன் யோதியுடன் இணைந்து கிளவிதொட்டம் போக ஆயத்தம்.
" "இனி வெளிக்கிட்டு...., யாழ்ப்பாணம் போய்...., அங்க பெருவாரியாக சனம் நிக்கும்..., அதுக்குள்ளே நீங்க போறது சந்தேகம் தான்..., எண்டாலும் போயிட்டு வாங்கோ " " இது செல்லத்தின் நக்கலான வரிகள். சரி என்று கூறிவிட்டு ரஜீவனோடு யோதி வீடு போனது தான் ஏதோ கைக்கு எட்டிய உடுப்புக்களையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு யோதியின் நண்பர்கள் எல்லாம் ஒரு வாகனம் ஒழுங்குபடுத்திக்கொண்டு கிளவிதோட்டத்தில தாசனையும் ஏத்திக்கொண்டு புலோலி ,மந்திகை, பருத்தித்துறை கடைசியாக நெல்லியடியில் நிசுவையும் ஏத்திக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வாகனம் ஓடுது. அப்ப சரியாக 11 மணி , பிந்திப்போச்சு எண்டு எலோருடைய வாயும் ஆளுக்கு ஆள் புறுபுறுத்துக்கொண்டிருக்க வாகனமும் வேகமாக ஓடுது.

மூத்தவிநாயகர் கோவிலுக்கு கிட்ட முதல் ஆரம்பம்;
வாகனப்பயணம் தானே எல்லாரும் பாட்டு பாட ஆயத்தம் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம். முதலாவது சோதனை ஆரம்பம். சோதனை எண்டால் பயணிகள் கொண்டு போற பயணப்பொதி பரிசோதனை. சோதனைக்கு வாகனம் மறிக்க அதை டிரைவர் கவனிக்க இல்லை. கடைசி நேரத்தில தான் கவனிச்சுபோட்டு மறிக்க ஆமிக்காரனுக்கு கோவம் வந்திட்டுது, "வாகனத்தை தொடர்ந்து பயணிக்க விடமாட்டன்" எண்டு ஆமிக்காரன் சொல்ல, யோதியும் நிசுவும் சும்மா கொஞ்சம் சிங்களம் தெரியும் எண்டதால வாயை குடுத்து கதைக்கினம். "இல்லை சேர் நாங்க கொழும்புக்கு போறதுக்கு போறம், கப்பல் இண்டைக்கு ஓடுதாம் அதால கொஞ்சம் வேளைக்கு போகவேணும் " எண்டு தங்களுக்கு தெரிஞ்ச சிங்களத்தால ஒருமாதிரி சொல்லி முடிச்சினம். அது மட்டும் இல்லாமல் " டிரைவர் விட்டது பிழை தான்" எண்டும் கொஞ்சம் சொல்லி சமாளிக்க, ஆமிக்கு கொஞ்சம் புளுகம். ஒருமாதிரி எங்களை விட சம்மதிச்சாலும் கப்பல் உண்மையாக தான் ஒடுதோ எண்டு அவனுக்கும் சந்தேகம், இருந்தாலும் இந்த யோதி, நிசுவின் சிங்களத்தில் ஒரு நம்பிகையில "சரி எல்லாரும் போய்விட்டு வாங்கோ, ஆனால் டிரைவர் இந்த பாதையால திரும்பி வரேக்குள்ள நான் பார்க்கிறன் " எண்டு சொல்லி அனுப்பி வைச்சான். "அப்பாடி ஒருமாதிரி விட்டுபோட்டான் , ஆனால் அவனுக்கே கப்பல் ஓடுறது சந்தேகம் மாதிரி இருக்கு இக்கணம் வாகனமும் பிடிச்சுக்கொண்டு போறம், என்ன நடக்குதோ தெரிய இல்லை" எண்டு தேவமலர் அன்டி பின்னுக்கு இருந்து சொல்ல "அது சூரியன் சொன்னது தானே அவங்க சும்மா சொல்ல மாட்டான்கள்" இது அங்கிருந்த இளவட்டங்களின் நிச்சயப்படுத்தும் கருத்து இது , இத்தனைக்கும் வாகனம் ஓடிக்கொண்டே இருக்கு. தொடர்ந்து வல்லை வெளி, வல்லை பாலம் , கோப்பாய் எண்டு பல சோதனைகளை தாண்டி வாகனம் பறக்குது எண்டு தான் சொல்ல வேணும். ஏனெண்டால் பிந்திப்போச்ச்சு. பிந்திக்கொண்டு போனாலும் வாகனத்துக்குள்ள நக்கலுக்கும் குறைவில்லை. யோதி, நிசு கதைச்ச சிங்களத்துக்கு தான் அங்க நக்கல் கூட, "என்னத்த இவங்கள் கதைசான்களோ தெரியாது சிம்பிளாக அவங்களும் விடுறாங்கள்" என்று ஒருவர் நக்கல் பண்ண , மற்றவர் "இவங்கள் கதைகிறான்களோ இல்லையோ கொஞ்சம் கூடச் சிரிகிறானகள்" என்று எல்லாம் ஒரே நக்கல் அடிச்சு ஒரே சிரிப்பொலிகள், "தம்பிமாரே சிரிப்பை நிப்பாட்டுங்கோ இப்ப என்ன கஷ்டப்பட போறீங்களோ தெரியாது " இப்படி தேவமலர் அன்ட்டியும் ராஜேஷ் அன்டியும். இப்படியே கதைச்ச்சு கதைச்சு கொண்டிருக்க சிங்கள மக வித்தியாலயம் வந்த உணர்வு. ஏனெண்டால் சனத்தை கண்டாச்சு. சரி வந்திட்டுது எண்டு எல்லாரும் சொல்ல டிரைவர் "கொஞ்சம் பொறுங்க இன்னம் எவ்வளவு சுத்தி போக வேணும்....... இந்த பக்க தடை போட்டு மறிச்சு இருப்பானகள் " எண்டு சொன்னார், "சரி எண்டு டிரைவரும் சுத்திவளைச்சு ஓடி வரிசை தொடங்கும் இடத்தில விட எல்லாருக்கும் அரோகரா சொல்லிப்போட்டு வீட்ட போகலாம் எண்டு தான்
எண்ணம். ஏன்னென்றால் அவ்வளவு சனம் .வல்லிபுரகோவில் தீத்தக்கரை பரவாயில்ல, சனம் கொஞ்சம் பரவி இருக்கும், எம்பெருமானை எங்கிருந்தும் பார்க்கலாம். இது டிக்கெட் கொடுக்கும் இடம் ஒரு இடம் சனத்தின்ட வரிசையோ எங்கெங்கு ஒழுங்கை எல்லாம் போகுதோ அங்கெலாம் வளைந்து வளைந்து போகிறது. என்ன செய்யலாம் எண்டு எல்லோருக்கும் ஏக்கம், அப்ப யோதியின் இன்னொரு நண்பன் ஏழாலை மதி அங்கு வந்திருதவன். அவன் யோதி நிசு எல்லாம் ஒன்டாக படிக்கிறதால அது சம்பந்தமான ஒரு கடிதம் ஒண்டு எல்லாருடைய பெயரும் போட்டு பணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கி கொழும்பில தயா மூலமாக தொலைநகல் எடுத்து வைச்சிருந்தவை, இதை முதலே திட்டம் போட்டு மதி யோதி எடுத்து வைத்ததை தூக்கிக்கொண்டு யோதியும் மதியும் முன்னுக்கு போகினம். முன்னுக்கு போறது கஷ்டம் எண்டாலும் போறதுக்கு 2 பேரும் திடசங்கற்பம். போகப்போக ஆமிக்காரன் "பின்னுக்கு போங்க பின்னுக்கு போங்க " எண்டு கொடடன் கொண்டு வர்றதும், "இல்லை மாத்தையா இல்லை மாத்தையா" எண்டு மன்றாடி முன்னுக்கு போறதுமாக இருக்கும்போது யோதியின் நல்ல காலம் ஆமி பிரிகேடியர் அந்த இடம் வந்தது, வந்ததும் அத்தாட்சிபடுத்திய கடிதம் கொண்டு வந்த சனமெல்லாம் தங்களை உறுதிப்படுத்தி பிரயாணத்தை விரைவு படுத்த ஒரே அல்லோலகல்லோலம். அதுக்குள் யோதியும் ஒருவன் அவனோட மதியும். யோதிக்கு ஒரு கட்டத்தில 'பேசாமல் போகலாமோ'
என்று அலுப்புத்தட்டினாலும் விட்டு விலத்த முடியாத நிலை.ஏனென்றால் பின்னுக்கு மதியின்ட அப்பா பின்னுக்கு இருந்து தள்ளி தள்ளி விட்டு ஒரே உத்வேகம். இப்படியே இருக்க ஒரு மாதிரி யோதியின் கடிதம் பிரிகேடியர் கையில். என்ன இது எண்டு கேட்க யோதி சிங்களத்தால விளக்கம்."சி சி இது சரி வராது 36 பெரும் போறது எண்டால்............. "எண்டு மறுத்து விட்டது பிரிகேடியரின் வாய். திரும்பவும் யோதி மதி தொடர்ந்தும் மன்றாட்டம் "உண்மையாக இந்த கடிதம் அரசாங்க அதிபருக்கும் அனுப்பினது" எண்டு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டத்தை யோதி பிரிகேடியருக்கு காட்ட "அப்பிடி எண்டால் அவரோட தான் கதைக்க வேணும்...... " பிரிகேடியர் நழுவி விட்டார், அப்ப சரி எண்டு சொல்லி போட்டு அரசாங்க அதிபர் திரு.கணேஷ் கிட்ட போக முயற்சி. அதுக்கு ஆமித்தடை விட்டால் தானே. "இல்லை இல்லை பிரிகேடியர் தான் கதைக்கச் சொன்னவர் " எண்டு தடை போடும் ஆமிக்காரர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லிச்சொல்லி ஒரு மாதிரி கிட்ட போனால் அந்தாளும் "36 பேரு ஒன்றாக போனால் மற்றவை எல்லாரும் என்ன செய்யுறது " எண்டு மறுப்பே பதில். எண்டாலும் யோதி மன்றாட கொஞ்ச நேரம் இந்த இடத்தில நில்லுங்க பார்ப்பம் எண்டு சொல்லிபோட்டு அந்த ஆள் கொஞ்ச நேரம் போக காண இல்ல.'அது சரி அந்த ஆளும் என்ன செய்யுறது......இவ்வளவு சனம் நிண்டால் ஒரேயடியாக 36 பேருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க முடியாது தானே "எண்டு யோதி மனதில் நினைத்துவிட்டு,, அந்த இடத்தில யோதிக்கு ஒரு திட்டம் வந்து அதை நிறைவேற்றகூடியது மாதிரி எல்லா வேலையையும் முடிச்சு போட்டு வெளியில போறான்.அந்த திட்டத்தின் வழியில் எல்லாரையும் வரச்சொன்னான் யோதி. அதுக்கு மதியும் ரஜீவனும்தான் சம்மதம். நிசுவும் முயற்சி எடுத்து அது பலனளிக்கவில்லை. சரி யோதியோடு மதி,ரஜீவன் மூன்று பேரும் உள்ளுக்குள் போய்விட்டினம். மற்றவர்கள் "முதல் போற கப்பல் தானே எப்பிடி போகுது எண்டு பார்த்துப்போட்டு பிறகு ஏறுவம் " என்றும் "என்ன நடக்குதோ தெரியாது.... பயம் தானே"என்றும் சொல்லி பயணம் தேவை இல்லை எண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டினம்
ஆனால் உள்ளுக்குள் போக போட்ட திட்டம் மட்டும் என்ன எண்டு மட்டும் கேட்டு போடதீங்கோ. ஏனென்றால் இப்பவும் அப்பிடி யார் யாரோ வாறதகக்கேள்வி. இப்படியே உள்ளுக்குள் போனாலும் இண்டைக்கு ஏத்துவாங்களோ.... இல்லையோ.... எண்டு அப்பவும் நம்பிக்கை இல்லை.அப்பவும் செல்லம் தபால் அலுவலகத்துக்கு முன்னாலை நக்கல் அடித்த வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான் ரஜீவன். கொஞ்ச நேரம் போக திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை, அடையாள அட்டை பரிசோதனை, அடையாளப் பதிவு எல்லாம் முடிச்சு எல்லாரையும் பஸ்ஸில ஏத்தியாச்சு. அப்ப சரியாக 4 மணி. ஒரு மணித்தியாலம் பஸ்ஸுக்குள்ள நிக்க வைச்சு பிறகு அதுவும் ஓட ஆரம்பிக்கிறது. அது பருத்தித்துறை போகுதோ காங்கேசன் துறை போகுதோ எண்டு எல்லாரும் யோசிக்க அது கே.கே.ஸ் வீதியில போக எல்லாருக்கும் எங்க போகுது எண்டு நிச்சயமாகி விட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த பஸ்ஸில போற எல்லாருக்கும் ஆமிப்பாதுகாப்பும் கொடுத்துத்தான் அனுப்பி வைச்சது. ஒரே ஓட்டமாக ஓடி அது ஒரு பாடசாலையில மறிக்கப்பட்டது. என்ன பாடசாலை எண்டு யோதிக்கோ அல்லது அவனோட போன ரஜீவனுக்கோ தெரியாது.
அங்கயிருந்த ஆக்கள் அது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி எண்டு கதைச்சதை மெல்லவாக கேட்டு தெரிஞ்சு கொண்டான் யோதி. 6 30 மணிக்கு அங்கு இறக்கிவிட்டு 'எப்ப எத்தினை மணிக்கு பிரயாணம்' எண்டு யாரையும் கேட்டால் யாருக்கும் தெரியாது. "இரவிரவாக இங்க தான் படுக்கையாம் " "கப்பல் ஏதோ இறக்கி கொண்டு இருக்குதாம் அதுக்கு பிறகுதானாம் பயணம் " எப்ப போறது எண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்ல மாட்டாங்களாம்........., திடீரென்று எத்துவாங்கலாம்..... " என்றெல்லாம் அங்கும் இங்குமாக கதைகப்படுவது யோதியின் காதுக்கும் கேட்கிறது. "என்னவோ ஏதோ கொண்டு வந்தவங்கள் எப்பிடியோ கூட்டிக்கொண்டு போவாங்கள் தானே " எண்டு யோதி மனசுக்குள் எண்ணிக்கொண்டே இருக்கிறான். இரவு ஏதோ கொஞ்ச சாப்பாடு ஆமிக்காரன் கொடுக்க அதையும் கொஞ்சமாக சாப்பிட்டுபோட்டு எல்லோரும் அங்கும் இங்குமாக கூடி கூடி கதைச்சு கொஞ்ச நேரம் படுக்க இரவு 2 மணி இருக்கும் எல்லாரையும் நித்திரையால எழுப்பி ஆயத்தப்படுத்த சொல்லியாச்சு. திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை,அடையாள அட்டை பரிசோதனை, பதிவுகள், அதுமட்டும் இல்லாமல் ஒரு உறுதி மொழி கையெழுத்தும் வாங்கப்படுகிறது அதாவது "பயணத்தின்போது வரும் எந்தவிதமான இழப்புக்களுக்கும் சம்மந்தப்பட்டவர்களே பொறுப்பாளிகள், உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை சம்மந்தபட்ட பிரயாணியே ஏற்க வேண்டும் "என்று. இதை வாசித்தவுடன் யோதிக்கு கலக்கம் இதில கையெழுத்து வைக்காமல் விட்டால் கொழும்பும் இல்லை திருகோணமலையும் இல்லை எண்டு யோதி நினைச்சு ஒருவாறாக பதறிப்பதறி கையெழுத்தை வைச்சிட்டு பஸ்ஸில் ஏறுவதுக்கு பிறகு ஒரு வரிசை. அதுக்கு பின்னால ரஜீவன் , மதி. சனம் எல்லாம் முண்டி அடிச்சு பஸ்ஸில் ஏறுதுகள். அதோட யோதி குழுவும் ஏறியது. பஸ் திரும்ப ஓடுது. துறைமுகத்தை நோக்கி பஸ் ஓடிக்கொண்டே இருக்கு;

துறைமுகத்துக்கு ஓடும்போது சனம் எல்லாம் விடுப்பு பார்க்குதுகள். "அது தான் அந்த பழைய தொழிற்சாலை இதெல்லாம் இருந்திருந்தால் எங்கட நாடு எப்பிடியெல்லாம் முன்னேறி இருக்கும் " எண்டு வயதானவர்கள் தங்களுக்குள் கதை. "என்ன செய்றது இது தான் தமிழனின் தலை எழுத்து " "இல்லாட்டில் இவ்வளவு கஷ்டப்படுங்களோ" எண்டு பயண கஷ்டத்தை நினைவுபடுத்திக்கொண்டும் சனங்கள். இப்படியே கதைக்க கப்பலுக்கு கிட்ட பஸ் வந்திட்டுது. ஒருத்தர் பிடிச்சு பிடிச்சு ஆக்களை கப்பலுக்குள் ஏத்துகின்றார்.
கப்பலுக்குள் ஏறும்போது எல்லாருக்கும் செவ்விளநிக்கலரில ஏதோ
கொடுத்தாங்கள், அது ஆபத்தில நீந்திறதுக்காக எண்டு என்று யோதி கேட்டு தெரிஞ்சு கொண்டான் . பொடியள் எல்லாம் அங்க போறதும் இங்க போறதும் ஓடித்திரியுறாங்கள். இத்தனைக்கும் அது பலசரக்கு கப்பல். "வழமையாக திருகோணமலையிலயிருந்து சாமான் கொண்டு வந்து...., எல்லாம் இறக்கிபோட்டு..., யாழ்ப்பாணத்தில இருந்து ஏதும் பாரத்துக்கு போட்டுக்கொண்டு போறவங்கள் இந்தமுறை சனத்தை போட்டுக்கொண்டு போறாங்களோ?......... " என்று தாத்தா குழு ஒண்டு கதைச்சுக்கொண்டு இருக்கு. இதெல்லாத்தையும் யோதியும் காது குடுத்து கேட்டுக்கொண்டு எங்க இருக்கலாம் எண்டு யோசிக்கின்றான். இருக்க எல்லாம் சொகுசுக் கதிரை ஒண்டும் இல்ல. முன்னுக்கு இருந்தால் எல்லாம் பார்க்கலாம் எண்டு நினைச்ச யோதி குழு கொண்டு போன பயணப்போதியை தலையணை போலவும் சின்ன புட்டி மாதிரி ஒன்று இருந்துது, அதையும் பிடிச்சுக்கொண்டு இருந்தாச்சு. சரியாக கப்பல் 6 30 மணிக்கு வெளிக்கிடுது மாதிரி உணர்வு. என்னெண்டால் கப்பல் அசையுது.
கொஞ்ச நேரம் போக கப்பலுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது. எல்லாரும் நங்கூரம் எடுக்கிற சத்தம் தான் எண்டு சொல்லுறது யோதிக்கும் கேட்கிறது. அப்படியே கப்பலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் திசை திருப்பும் போது கப்பல் வெளிக்கிடுகிறது எண்டு எல்லாரும் தம் தம் கடவுளை வேண்டுகின்றனர். கப்பலும் ஓட ஆரம்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நோக்கி கப்பலிலிருந்து சக்திமிக்க ஒளியை அனுப்பியபடி சிறிதுசிறிதாக வேகத்தைக்கூட்டி கப்பல் ஓடுகிறது. சனம் எல்லாம் புதினம் பார்க்குதுகள். சிறிது தூரம் உள்ளே போனவுடன் யோதி யாழ்ப்பாண கரையோர அழகாய் கண்டு வியந்தபடி மதி,ரஜீவனுடன் பம்பல் அடிச்சுக்கொண்டு கப்பலின் கரையிலே நிக்கிறான். கடலில் ஓடும் மீன்களும் மேலே வந்து போவதும் கப்பல் கடலை கிழித்துக்கொண்டு போகும்போது அதன் நுரைச்செறிவிலே மீன்கள் துள்ளி விளையாடுவதுமாக இருப்பதும் யோதி ரசித்த காட்சிகள். இப்படியாக கப்பலும் நடுக்கடலுக்கு போய் விட்டது. கப்பலின் ஆட்டம் சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை போல. சத்தி எடுப்பதுக்கு முதலின் வயதான பெண்கள் ஆரம்பம். ஒருவரை ஒருவர் பார்த்த படியாக சிலர் சத்தி எடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. அதற்குள் சில ஆண்கள் வீரப்பேச்சு. இப்படியே கொஞ்ச நேரம் போக கப்பலின் ஆட்டம் ஒரு பக்கம். திறந்தவெளியில் மக்கள் இருப்பது அந்த வேகமான காற்று ஒரு பக்கம் அந்த காற்றோடு கடல் தண்ணீர் உள்ளுக்குள் அடிப்பது ஒரு பக்கம். கரையிலே நின்ற எல்லோரும் தலை முழுக்க முழுக்கு.யோதியும் தப்ப இல்லை. தண்ணி அடிச்சு காற்றும் கூடக்கூட அடிக்க எல்லோருக்கும் சத்தி பரவத்தொடங்கியது. கப்பலோட்டிகள் சத்தியை தவிர்க்க மருந்து கொடுப்பதும் சத்திக்கான போலித்தின் பைகள் கொடுப்பதுமாக ஒரே வேகமாக செயற்பட்டு
கொண்டிருந்தார்கள். யோதியும் அதுக்குள் விதிவிலக்கானவன் ஆகவில்லை.மற்றவர்களை பார்த்து ஒருபக்கம்,கப்பலின் ஆட்டத்தில் ஒருபக்கம் என்று சத்தி எடுத்து ஏலாதவனாகினான் யோதி. பல்லும் பல்லும் மேலும் கீழுமாக டக்டக் என்று அடிச்சது வேகமாக. கை கால் எல்லாம் பதறுகிறது. எழுந்து நிக்க முடியாமல் பதறும் யோதி மற்றவர்களும் கஷ்டப்படுவது பார்த்து " என்ன செய்வது " என்று மெதுவாக தண்ணீர் வீசி அடிக்காத இடம் தேடி மெல்ல மெல்ல நடந்து போகின்றான். அப்போது ரஜீவன் ,மதி எல்லோரும் கஷ்டப்படுவதை அவதானிக்கிறான். இத்தனை கஷ்டத்துக்கும் காரணம் இது பயணிகள் கப்பலாக இருந்திருந்தால் இப்படியாக இருக்காது என்று சனம் கதைப்பது காதில் விழுகிறது யோதிக்கு. மெல்ல மெல்ல நடந்து போன யோதி பயணிகளின் பயணப்பொதி அடுக்கியிருந்த இடத்தில் ஓரிரண்டு பொதியை எடுத்து கொஞ்சம் விலத்தி வைத்துவிட்டு அதனிடையில் சென்று தண்ணீர் படாமல் ஒதுங்கி படுத்திருந்து தூங்கிவிட்டான். சரியாக 2 மணி இருக்கும் தூக்கம் கலைந்த யோதி மதியை,ராஜீவை தேடுகின்றான் . அவர்களை காண இல்லை, "எங்கிருந்து கஷ்டப்படுகின்றார்களோ? "என்று அங்குமிங்கும் பார்த்தால் காண இல்லை. எழுந்து பார்த்தான் எங்கும் கடற்கரை தெரிகிறதா என்று. அதுவும் தெரியவில்லை. என்ன கஷ்டத்துக்கு வந்தமோ என்று மனதில் எண்ணியவனாய் மீண்டும் தூங்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. அப்படியே களைத்தவனாய் இருக்கின்றான். இவ்வளவு நேரமும் சாப்பிடாதுவிட்டாலும் பசி அவனுக்கோ யாருக்கும் வரவில்லை. ஏனென்றால் யாருக்கும் மனம் இல்லை. சரியாக 4 மணி இருக்கும் செல்போனுக்கு கவரேஜ் வந்திட்டுது எண்டு சிலர் கதைப்பது யோதிக்கு கேட்கிறது. சரியாக ஒரு மாத காலம் செல்போனை ஒரு விளையாட்டுபொருளாக பாவித்து வந்த எல்லோரும் அதை இயக்க ஆரம்ம்பிக்கின்றார்கள். எல்லோரும் எடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு தாங்கள் திருகோணமலையை நெருங்கிவிட்டதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். யோதியும் ரஜீவனும் ஊருக்கு வந்ததை சொல்லி சந்தோசமடைகின்றார்கள். " இன்னும் ஒன்றரை மணித்தியாலம் பிடிக்குமாம் அப்பிடித்தான் கடற்படை சொன்னதாம்" சனம் எல்லாம் கதைக்குதுகள். இப்படியே கதைச்சு கொண்டு இருக்க "எல்லாரும் செல்போனை நிப்பாட்டுங்கோ" என்று தகவல் வருகிறது. கடற்படை "எல்லாரும் கீழுக்கு படுங்கோ" எடும் சொல்லுறாங்கள். எல்லாருக்கும் பயம் பரவத்தொடங்குது. கடற்படை முன்னுக்கு கொஞ்ச ஆயுதம் கொண்டு வந்து பூட்டுறாங்கள். ஒருத்தர் முன்னுக்கு நிண்டு ஏதோ எல்லாம் தொலைவு பார்க்கும் கண்ணாடி பிடிச்சுப்பார்க்கிறார். துப்பாக்கியால் குறி பர்ர்க்கிறார் .
" இதென்ன கஷ்டம் கடவுளே எல்லாரையும் படுக்கவைச்சு சண்டை பிடிக்கப்போறான்களோ" எண்டு சனம் எல்லாம் முழுசிக்கொண்டே இருக்குதுகள். "அம்மாவுக்கும் சொல்லிப்போட்டன் வந்து சேந்திட்டம் எண்டு அவங்கள் துவக்கு பிடிக்கிறத பார்த்தால் இப்போதைக்கு போய் சேர மாட்டம் போல " என்று யோதி மனதில் பயந்து கொண்டான். ரஜீவனுடனும் பகிர்ந்துகொண்டான். ரஜீவனும் " ஒ ஒ இவங்களுக்கு ஏதும் தகவல் வந்து தான் எங்களையும் படுக்க வைச்சு எதோ செய்யுறாங்கள், ஆனால் எங்களை பயப்படவேண்டாம் எண்டு மட்டும் அடிக்கொருமுறை சொல்லுறாங்கள் பார்ப்பம்" எண்டு மெல்லவாக கதைக்கின்றான். இப்படியே போக திருகோணமலை கடற்கரையையும் கப்பல் மெல்ல மெல்ல சென்றடைகிறது. கரையில் எக்கச்சக்கமான செய்தியாளர்கள். கப்பலை படம் பிடிக்கிறாங்கள்.
மெல்லவாக எல்லோரும் இறக்கப்படுகின்றார்கள். எல்லோரும் ஏதோ எல்லாம் பெற்றவர்கள் போல இறங்கி எங்கெங்கு போகவேண்டுமோ அங்கங்கு போய்ச்சேர அந்தந்த பஸில் ஏறிக்கொள்ளுகின்றார்கள். தங்கள் உறவுகளுக்கு தாங்கள் வந்து சேர்ந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவாறே யோதியின் கொழும்பு பயணம் தொடர்கிறது.

4 comments:

தாசன் said...

\\"தம்பிமாரே சிரிப்பை நிப்பாட்டுங்கோ இப்ப என்ன கஷ்டப்பட போறீங்களோ தெரியாது " இப்படி தேவமலர் அன்ட்டியும் ராஜேஷ் அன்டியும். இப்படியே கதைச்ச்சு கதைச்சு கொண்டிருக்க சிங்கள மக வித்தியாலயம் வந்த உணர்வு. ஏனெண்டால் சனத்தை கண்டாச்சு.\\

இந்த பதிவு உங்களின் எழுத்து துறைக்கு மைல் கல்லாக அமைய போகின்றது. வாழ்த்துக்கள். எம்மை அறியாமலே சில இடங்களில் சிரிக்க வைக்கும் உங்கள் நகைச்சுவை தன்மைக்கு ஒரு ஓ...போடலாம்.

இருந்தாலும் சின்ன வருத்தம் இன்னும் கதையை சொல்லி இருக்காலம் போல தோன்றுகின்றது. இருந்தாலும் பரவாயில்லை. யாரும் தொட சொல்லாத விடயத்தை தொட்டு உள்ளீர்கள். உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

கரவைக்குரல் said...

உங்களை போன்றவர்கள் எனது சுவைஞர்களாக இருப்பது எனக்கு மிகப்பெருமையாக உணர்கின்றேன்.

தொடர்ந்தும் அங்குமிங்கும் பட்ட விடயங்களை அவ்வப்போது தொட்டுச்செல்வேன்.
நன்றி

Anonymous said...

யோதி என்பவரின் உதவி மூலம் பலர் நன்மை அடைதுள்ளனர்,
யோதி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆக

Anonymous said...

யோதி என்பவரின் உதவி மூலம் பலர் நன்மை அடைதுள்ளனர்,
யோதி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆக