Showing posts with label பதிந்தவை. Show all posts
Showing posts with label பதிந்தவை. Show all posts

தோசைக்கு ஒரு தினம்!!!!!!!!!!

சாப்பாட்டு விசயம் தான்.
எல்லாத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல தோசைக்கு ஒரு தினம் இருந்தால் எப்படி இருக்கும்??

என்ன ஒரு வித்தியாசமான கற்பனை !!!!!!!!
தோசைச்சட்டி எல்லாம் அடுப்புக்கு போயிருக்கும்….




இன்று  Pan cake தினம்…
கிறிஸ்தவர்களின் தவக்கால விரத காலத்துக்கு  முன்னதான நாளில் அமையும் தினம் தான் இது. 
அது உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) நாளிலிருந்து 47 நாள்கள் முன்னதான நாளில் வருவது. பொதுவாக பெப்பிரவரி 3ம் திகதியிலிருந்து மார்ச் 9ம் திகதிவரைக்குமான காலத்தில் ஏதோவொரு நாள் தினம் Pan Cake Day வரும். ஏனெனில் சந்திரனின் சுழற்சியை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு (( Easter Sunday))வருவதனாலென்று கூறப்படுகிறது.
விதம் விதமான Pan Cakes கள் உண்டு மகிழும் அதே வேளை அதை ஒரு நிகழ்வாக கூட பல அமைப்புகள் ஒழுங்கு செய்கின்றன.
எல்லாத்தினங்களையும் வணிக நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போல இந்த தினத்திலும் வகை வகையான  
Pan Cakes களையும் அதற்கான மா வகைகளையும்  விற்பனையில் காட்சிப்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.


சரி இதே போல ஒரு தினம் தோசைக்கு வந்தால் எப்படி இருக்கும்…

தோசை என்றவுடன் பல நினைவுகள் பலருக்கு வந்து போகும்..

ஊரிலை வல்லிபுரக்கோயிலுக்கு போகும் போதெல்லாம் மேற்கு வாசலில் இருக்கும் தோசைக்கடை. அதில் சாபிடுவதற்கென்றே கோயில் போவர் சிலர்.கோயிலுக்கு போகின்றவர் எல்லாம் அந்த பக்கம் எட்டி பார்த்து சம்பலும் தொசையை சுவைத்தால் தான் ஏதோ ஞாயிற்றுக்கிழமை நிம்மதி போல இருப்பார்கள்.. சம்பலும் முறுகிய தோசையும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அதைவிட நெல்லியடி சந்தி தாண்டி கொடிகாம் வீதி முடக்கில் தோசை விற்ற ஒருவருவரிடம் முந்தியடிக்கும் இளைஞர் கூட்டம்.அதில் தோசைக்கு அவர் கொடுக்கும் ஆட்டுஇறைச்சிக்கறிக்கு அல்லது கோழி இறைச்சிக்கறிக்கு  ஒரு சபாஷ் தான். அதன் மணத்தாலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். அப்படி ஒரு தனி சுவையும் மணமும்.
ஆனால் இப்பொழுது அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நான் பதினெண் வயதிலிருக்கும் காலத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்று ஒருதோசை என்றாலும் சாப்பிட்டு சுவைத்த இனிய நினைவு. நிச்சயம் அவர் அதன் வருமானத்தால் இன்னோரு நிலைக்கு போயிருக்கவேண்டும்.ஏனெனில் அவ்வளவு கூட்டம் அவருக்கு.

எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.பாக்கியக்கா என்று ஊரில எல்லாருக்கும் தெரியும்.ஊரிலே உள்ளவர்கள் எல்லாரும் வாரத்திலே ஒரு நாள் காலை வேளை என்றாலும் அவ சுடும் தோசையை சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
அவ சுடும் தோசையும் தனி சுவை.தோசை இருக்கும் முறுக்கென்ற பிடிப்பு ஒரு ருசி. தோசையோடு தரும் சம்பல் தோசைக்கு இன்னுமொரு மெடுகூட்டும். காலை வேளையில் அடிக்கடி வாங்கி சாப்பிடும் அந்த தோசையில் நாங்கள் 10 கேட்டால் எங்களுக்கு என்று 12 தருவா பாக்கியக்கா.அது சம்பலை உள்ளே வைத்து மடிச்சு கொஞ்சம் முறுகியது போல ஒரு தோசை. நானும் என் தங்கையும் அடிபட்டு சண்டை பிடித்து சாப்பிடுவம். தோசை சாப்பிடுவதில் பெரிய பிடிப்பு என்பதை விட  எங்கள் பாக்கியக்காவின் தோசைக்கு ஒரு மதிப்பினால் தான் அந்த சண்டை.ஆனால் கடைசியில் அப்பாவின் உதவியோடு தங்கையே வென்றுவிடுவாள் என்பது பெரிய இரகசியம்.ஆனால் பாக்கியக்காவின் தோசைக்கு அவ்வளவு ஒரு மதிப்பு இருந்தது என்பது மட்டும் உண்மை. 
 
எல்லாவற்றையும் விட வீட்டில் அம்மா அம்மாமா மற்றும் என் அன்ரி (அம்மாவின் தங்கை) மற்றும் என் பெரியம்மம்மா ,சின்னம்மம்மா  சுடும் தோசைக்கும் நாங்கள் சப்பாணி கட்டி அடுப்பங்கரை பக்கம் அமர்ந்து விடுவோம்.தாளித்த சம்பலுடன் எண்ணெய் தோசை, முட்டை தோசை,சும்மா தோசை, என்று ஒவ்வொன்றாக ருசித்த பின் தான் அவ்விடத்தை விட்டு எழும்புவது.
தோசை சாப்பிட பின் முழுவதுமாக வாயை திறந்து மொள மொள என்று தண்ணீர் குடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் தோசையின் ருசிம் அது சாப்பிட்ட களைப்பும்.

இப்படி தோசை என்பது இனிய நினைவுகளை அடுக்கலாம்.அது உங்களுக்கு பல மாதிரி வந்து ருசித்து ரசித்திரிப்பீர்கள்.
தாயகத்தில் எல்லாவீடுகளிலும் தனியான ருசியாக அமைந்துவிடும் உணவு.ஐரோப்பிய நாடுகளிலும் எல்லாவீடுகளில் நிச்சயம் இருக்கும்.சைவக்கடைகளுக்கு போனால் பல வகைப்படுத்தி தோசையை விற்கின்றார்கள்.

சரி இப்ப நினைச்சு பாருங்க தோசைக்கு ஒரு தினம் வந்தால் எப்படி இருக்கும்1!!!
நகைக்கடைகாரருக்கு அட்சய தினம் போல சாப்பாட்டுக்கடை ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஒரு தோசை தினமாக மாறும் என்பது ஒரு புறம்.
விற்பனைக்கடையெல்லாம் தோசை மாவை சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் வைத்து வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்க வைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் முடிவு எடுத்துவிடுவார்கள்.
மக்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் போக அந்த தினம் ஒரு மிகப்பெரும் கொண்டாட்டம் என்று தாமாகவே தோசை மாவை தேடி வாங்க ஆயத்தமாகிவிடுவார்கள். இது தான் உலகம்.

அதைவிட கற்பனையை இன்னும் நீட்டி வளர்த்தால் தோசை தினம் என்றால் வல்லிபுரக்கோயிலில் தோசைக்கு நீண்ட வரிசை வந்துவிடும் அந்த நாளில். தோசைக்கடைகள், முன்னோடியான பிரபல்யமான உணவகங்கள்  எல்லாம் வல்லிபுரக்கொயிலுக்கு படையெடுக்கும்.
கொட்டிலில் விற்ற பெண்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று அமெரிக்கா சீனாக்காரர் போல திட்டம் தீட்டப்பட்டாகிவிடும்.சிலவேளை கொட்டிலில் விற்றவருக்கான மெளசு கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்றாலும்  தோசை தினம் என்றால் நாம் உண்டு ருசித்து களித்த உணவை இன்னும் சந்தோஷமாக உண்டு மகிழலாம் என்பதும் உண்மைதான்.

மொத்தத்தில் தோசை என்பது எம்மோடு பின்னிபிணைந்துவிட்ட உணவு. அதன் தனி ருசியை கூடிகளித்து உண்டவர்களுகளுக்கு நிச்சயம் அந்த நாள்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வந்தேயாகும். அந்த நாள்கள் உண்மையில் அருமையானவை.

பகிர்ந்தது 
 யோகா தினேஷ்


  

உலகம் கொண்டாடும் காதல்!!!

காதலர் தினம்



உலகம் கொண்டாடும் காதல்….
இலக்கியமெங்கும் நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும் காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில் நிலைக்கும்….

காதலில் கலக்ககுவது எப்படி??????
கலைத்து கலைத்து காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத சுகமாகும்……

நேரகாலம் தெரியாது போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள் மறந்து போகும்….
குளிக்கும் நேரம் மாறும்..
அப்படி குளித்தாலும் அது மணிக்கணக்காகிவிடும்….

பகலில் நடை நித்திரையாக்குவதும் காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….

இரவில் காதல் கதையை காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும் காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும் 
உற்சாகம் மெருகேறும்….......


வீட்டிலிருந்து சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான பாதை அது என்பர்…..

காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின் வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும் என்றும் சுகமே……

காதல் சில கனவாகும் …..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம் பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும் வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்


காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில் காத்திருக்கும் சுகம் காணுவோர்....
 நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும் காதல் தான்………

கொண்டாடும்  காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை சொல்ல அது……
பாசத்தின் வலிமையை சொல்ல அது……
காதலை காதலித்து காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல் நிலைக்கட்டும்…

காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
                                                காதலில் உங்களில் ஒருவன்
                                                               யோகா தினேஷ்





உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்

அப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்

ஞாயிறு தினக்குரலில் எனது அப்பாவுடனான நட்பு,கலைஈடுபாடுகளில் போன்றனவற்றில் சிறுவயது முதல் இணைந்திருந்த அப்பாவின் நண்பர் திரு தில்லை நடராஜா அவர்கள் கடந்த வார ஞாயிறு தினகுரலில் எழுதிய பதிவு இது..மிகவும் அன்போடு தில்லை மாமா என்று நானும் அழைத்துக்கொள்வேன்.அன்போடு அப்பாவை பற்றிய பல விடயங்களையும் திரு தில்லை நடராஜா அவர்கள் பகிர்ந்துகொண்டமைக்கும் அதை பிரசுரித்த ஞாயிறு தினகுரலுக்கும் ஆசிரியர் திரு பாரதி ராஜநாயகம்அவர்களுக்கும் மிக நன்றிகளை பகிர்ந்துகொண்டு அந்த பதிவை
இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

 

ஊருக்குப் பெருமை சேர்த்த உண்மைக் கலைஞன்

எங்கள் கிராமம் உடுப்பிட்டி சிறிதாக இருந்தாலும் சிறந்த கல்விக்கூடங்களாலும் அவை உருவாக்கிய பல்துறைப்புத்திஜீவிகளாலும் ஊருக்குப்பெருமை தேடிக்கொண்டது. புலவர் வரிசையில் உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், இலங்கைக்கு புகழ் சேர்த்த  அணுவிஞ்ஞானி கந்தையா, பேராசிரியர்.அழகையா துரைராசா என ஒவ்வொரு துறையிலும் பலர் நினைவுக்கு வருவர்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் 160 ஆண்டுகள்
நிறைவையொட்டி சில தினங்களுக்கு முன் கொழும்பில் நட்சத்திர
ஹோட்டலில் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளை ஒன்று கூடலை நடாத்திய போது நண்பர்களால் நினைவு கூரப்பட்ட கலைஞன் 'உடுப்பிட்டியூர் யோகன்' என அழைக்கப்படும் அமரர். வி.யோகராஜா. 70கள்-80கள்-90கள் என மூன்று தசாப்தஙங்களாக வில்லிசை மன்னனாக விளங்கியவர் வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவர்-யோகராஜா.
உடுப்பிட்டிக்கிராமத்தின் ஒரு பகுதியாகவுள்ள இலக்கணாவத்தையில் வியாகேசு-மங்கையர்க்கரசி தம்பதிகளின் மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி பிறந்தார். கொழும்பில் நடைபெற்ற ஒன்று கூடல் நடைபெற்ற திகதியும் ஜனவரி 19ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. என்னை விட வயதில் குறைந்தவனாக யோகராஜா இருந்தாலும் அபாரமான திறமைகள் மிக்க அற்புதமான கலைஞன். அவனது தாயாரும் எனது தாயாரும் ஓரே வகுப்பில் கல்வி கற்றதால்- எங்கள் வீட்டாருக்கும் அவன் செல்லப்பிள்ளை. சிறு வயதிலேயே நன்றாகப்பாடுவான்-நடிப்பான்-விளையாடுவான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.,சுட்டித்தனங்கள் செய்வதிலும் மன்னன்.
நினைவுப்பாதையில் திரும்பிப்பார்க்கும்போது- 1957ம் ஆண்டு கல்லூரி பெற்றோர் தினவிழாவில் ஆசிரியர் அருள் எம்பெருமான் சிறுவர்கள் பங்கேற்கும் 'புலி வேட்டை' நாடகத்தை தயாரித்திருந்தார். கதை இது தான்- ஒர் ஊரின் அருகிலுள்ள காட்டில் வாழ்ந்த புலி ஊரிலுள்ள கால்நடைகளைத்தின்றதுடன் மக்களையும் அச்சுறுத்தியது. ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி புலியைப்பிடித்து தருபவருக்கு பரிசு என அறிவித்தார்கள். இருவர் புலிவேட்டைக்கு புறப்பட்ட போது-காட்டிலிருந்து ஒருவன் ஒரு கூடையைச் சுமந்த படி 'புலி புலி' எனக் கத்திய வண்ணம் ஊருக்குள் வந்தான். புலிவேட்டைக்குப்புறப்பட்ட இருவரும் அவனிடமிருந்த கூடையைப் பறித்து அவனைக் காட்டுக்குள் துரத்திவிட்டு கூடையுடன் ஊர்ப்பெரியவர்கள் முன் சென்று தாங்கள் புலியைப்பிடித்துக் கொண்டு வந்துள்ளதாகத்தெரிவிக்க-எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடையைத்திறந்து பார்க்கும் போது உள்ளே இருந்தது-பழப்புளி உருண்டைகள்.
சிறுவர்கள் பலர் நடித்தாலும் சிறப்பாக நடித்த யோகராஜா-'புலி வேட்டைப்பெடியன்' என அழைக்கபடும் படலம் ஆரம்பமாகியது. அன்று என்னை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்ல வந்திருந்த தாயாரின் தந்தையாருக்கு (தாத்தாவுக்கு) அந்த நாடகம் நன்றாகப்பிடித்துக்கொண்டது. 'லகர' 'ளகர' 'ழகர' உச்சரிப்புக்கு வேறுபாடிருக்க வேண்டியதன் அவசியத்தைச்சுட்டிக்காட்டிய நாடகம் ஆசிரியருக்கு வெற்றி நாடகமாக அமைந்தது.
எனது தாத்தா சாதாரணமாக இரவுத்திருவிழாக்களுக்கு போகமாட்டார்-படிப்பு குழம்பி விடுவதால் எனக்கும் அனுமதியில்லை. ஒரு நாள் அதிகாலையில் அம்மாவிடம் வந்து சொன்னார்-'பிள்ளை—ராத்திரி இலக்கணாவத்தையிலை வேலை முடியப்பிந்தியிடுத்து- கோவிலடியாலை வாறன்-சின்ன மேளம் பார்க்க சரியான சனம். சின்ன மேளம் ஆக்களோடை சேர்ந்து புலிவேட்டைப்பெடியனும் பாடினவன்-வலு திறம்-இண்டைக்கும் இராத்திருவிழாவிலை புலிவேட்டைப்பபெடியன் பாடுறானாம். நான் இவனைக்கூட்டிக்கொண்டு போறன்.
பெற்றோரின் அனுமதியுடன் ஐந்தாம் வகுப்பு மாணவனான என்னை தாத்தா இரவுத்திருவிழா பார்க்க கூட்டிச்சென்றார். தவில் நாதஸ்வரக்கச்சேரியை அடுத்து அக்காலத்தில் 'சதுர்க்கச்சேரி' என அழைக்கப்பட்ட சின்ன மேள ஆட்டம் ஆரம்பமாகு முன்-அவர்களுடன் வந்த பக்கவாத்தியக்கலைஞர்கள் பாடுகின்றார்கள்-இரண்டு பாடலகள் முடிய சிலர் 'தாத்தாவின் 'புலிவேட்டைப்பெடியனாக யோகராஜாவை தூக்கிக்கொண்டுவந்து ஒலி வாங்கிக்கு முன் பக்கவாத்தியக்காரர் நடுவே இருத்திவிட யோகராஜா பாடுகிறான்- 'நீல வண்ணக்கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா' அடுத்து 'நான் பெற்ற செல்வம்-நலமான செல்வம்' கைதட்டல்களுக்கிடையே நடனமாட வந்த பெண்களும் பாடலை ரசித்து யோகராஜனை தூக்கி முத்தமிட்டனர்-
சில மாதங்களுக்கு முன் 'சுப்பர் சிங்கர்' செல்லக்குரலைத் தேடும் போட்டிகளில் முதலிடம் பெற்ற ஆஜித் மற்றும் ஸ்ரீ காந்த் சிறுவர்களை பிரபல பாடகர்கள் திரைப்படக்கலைஞர்கள் அரவணைத்துப் பாராட்டி முத்தமிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் மனத்திரையில் யோகராஜாவின் பாடல் காட்சிகள் ஓடி மறைந்தது. காரணம் யோகராஜாவும் சிறு வயதில் ஆஜித் போன்ற தோற்றமும் குறும்புகளும் எதுவித முன்னேற்பாடுமின்றி எந்தப்பாடலையும் பாடும் வல்லமையும் அவனுக்கிருந்தது. ஆசிரியர் அருள் எம்பெருமான் வீட்டு மேசையை மிருதங்கமாக்கி தவம் அல்லது ஐயாத்துரை தாளம் போட ஹிந்திப் பாடல் மெட்டுகளில் தமிழ் பாடல் தயாராகும்- யோகராஜா குரல் கொடுப்பான்-
மதுமதி படத்தின் ஹிந்திப்பாடல்கள்; தமிழ் வடிவத்தில் 'வா என்னாசை ராணி வந்து வாழ்வில் கூடுவாய் மாறாத கீதம் பாடுவாய்' என மாற்றம் பெற்றது.
'ஆஜாரே' ஹிந்திப்பாடல்---'மாறாதே என் மனக்கோவிலே' மாற்றம் பெற்றது-
ஒவ்வொரு வருடமும் பெற்றோர் தினம் எப்போவரும்? எம்பெருமான் மாஸ்டரின் நாடகம் எப்படி இருக்கும்  அதில் யோகராஜாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு
'உலகம் போற போக்கைப்பாரு'- 'றிக்ஷோக்காரன் கனவு' இப்படி ஒவ்வொரு நாடகமும் ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நினைவை விட்டகலாத நாடகங்கள்
நாடகங்கள் பார்க்கப் -பார்க்க சில பாத்திரங்களில் நடிக்க என் மனதில் எழுந்த ஆசை -'ஏன் நாடகங்கள் எழுதித்தயாரிக்கக்கூடாது?'- யோகராஜனின் திறமையையும் ஒத்துழைப்பையும் நம்பி 'சிங்கப்பூர் சிங்காரம' -; 'கண்திறந்தது' நாடகங்களை பிரதியாக்கம் நெறியாள்கை செய்தேன். எதிர்ப்புகளுக்கிடையிலும் ஏகோபித்த பாராட்டு.
ஒரு நாள் பெற்றோர் தினத்துக்கு முந்திய தினம் கல்லூரி அதிபருக்கு யாரோ ஏதோ சொல்ல எனது நாடக மேடையேற்றத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார். மாணவனான கந்தையா நீலகண்டன்  அதிபருடன் வாதித்தான். வாதம் நள்ளிரவு வரை நீடித்து அதிபர் தான் நாடகத்தை பார்த்தபின் இறுதி முடிவு எடுப்பதாக சொன்னார். அந்த நாட்களில் கந்தையா நீலகண்டன் சட்டத்தரணியாக வருவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. யோகராஜாவின் பண்பட்ட நடிப்பு அதிபரின் கைகளை நாஷனல் பொக்கற்றில் நுழைத்து கை லேஞ்சியை எடுத்து கண்களைத்துடைக்க வைத்தது. அதிபரின் கண்களில் நீர் வடிந்ததை அன்று தான் பலர் பார்த்திருக்கிறார்கள்
யோகராஜா கால் பந்தாட்ட அணித்தலைவனாகவும் பாராட்டுப்பெற்றவன்- அணிவீரர்களையும் மைதானத்தையும் சூழலையும் பொறுத்து வெற்றி தோல்விகள் வந்தாலும் எல்லோரின் மனங்களையும் வென்றுவிடக்கூடிய ஆற்றல் நண்பனுக்கிருந்தது. ஆட்ட முடிவில் இடம் பெறும் தேநீர் விருந்தில் யோகராஜாவின் பாடல் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். எத்தனை தரம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல ஆவலைத்தூண்டும் அவனது பாடல்கள்:-
'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே'
'டிங்கிரி டிங்கிரிலே மீனாட்சி தங்கமே தில்லாலே'
'உனக்காக எல்லாம் உனக்காக-இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக'

1963ல் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நாடகப்போட்டியில் பிரதியாக்கம் நெறியாள்கை நான் செய்தாலும் யோகராஜாவின் நடிப்பால் முதலிடத்தைப்பெற்றுக்கொண்டோம்- காலப்போக்கில் நான் உடுவை எஸ்.தில்லைநடராசாவாக அவன் உடுப்பிட்டியூர் யோகனாக மாறினான்.
பாடும் திறனால்-இயல்பாகவே நகைச்சுவையும் கை வரப்பெற்றதால் வில்லிசை செய்ய ஆயத்தமானான். அப்போது யாழ் 'ஈழநாடு;' பத்திரிகை பாமா ராஜகோபால் கலைஞர்களுக்கெல்லாம் கை கொடுப்பவர்.
யோகனின் வில்லிசை யாழ்ப்பாணத்தில் மேடையேற களமமைத்தார்- வவுனியா பொலிஸ் அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஞ்சலட்டை மூலம் அழைப்பு விடுத்தான் யோகன்- அந்த அஞ்சலட்டையை அவன் நினைவாக இன்னும் வைத்திருப்பதற்கு காரணம் தான் செய்வதெல்லாத்தையும் நியாயப்படுத்தி மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் திறமையும் அவனுக்கிருந்தது.
Police Office  என முகவரியிடாமல்  Police Station  என முகவரியிட்டதற்கு காரணம் சொன்னான்- பொலிஸ் அலுவலகம் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பூட்டியிருக்கும். பொலிஸ் நிலையம் எப்போதும் திறந்திருக்கும். வழமையாக கடிதத்தில் 'நலமறிய அவா' என எழுதுவது வழக்கம்- நலமறிய வா என்று வரும் படி அழைத்ததாக எழுதியதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது.  கடிதமாக எழுதி உறையில் இட்டால் படிப்பது நானாக இருக்கும்- திறந்த அஞ்சலட்டை என்றால் பலரும் சிரமமின்றி வாசித்து எனக்கு தகவலைத் தெரிவிப்பர் என்பது வென் எதிர்பார்ப்பு. அது சரியாகவே இருந்தது.பாமா ராஜகோபால் என எழுதாமல் பாமா என எழுதினால் பெண் என எண்ணி தகவல் வேகமாக பரவும் என்பதும் யோகனின் எண்ணம்.





குறுகிய காலத்துக்குள் வில்லிசை வல்லாளர்கள் திருப்பூங்குடி ஆறுமுகம்-கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை வரிசையில் இடம்பெறுமளவுக்கு உடுப்பிட்டியூர் யோகனும் வளர்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

வில்லிசையை ஆரம்பிப்பதற்கு முன் சில பக்திப்பாடல்களை யோகன் பாடுவான். பக்திப்பாடல்கள் கேட்பதற்கென்றே வந்தவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் செவிகளில் எதிரோலிக்கும் பாடல்கள்:-
'நீ அல்லால் தெய்வமில்லை'
'நான் நினைத்தபோது நீ வர வேண்டும்'
'கற்பனை யென்றாலும் கற்சிலையென்றாலும்.


.'
1975ம் ஆண்டு உடுப்பிட்டியில் தேன் கிண்ணம் எனனும் தலைப்பில் கதம்ப நிகழ்சியை ஒழுங்கு செய்த போது வித்தியாசமான விளம்பர உத்திகளை கையாள ஆலோசனை நல்கியதும் யோகன்
தாளலய மெட்டில்-'எடி எடியே எழும்பி இஞ்சை வாடி கொஞ்சம்
ஓமோம் எங்கடை பொடியளின்ர கூத்தும் கும்மாளமும் பார்க்க வாங்கோ'
என தாளத்தோடு பாடி விளம்பரம் செய்து ரசிகர்களைத்; திரட்டியதும் யோகனே!
வழமையாக ஒலிபெருக்கி பூட்டிய காரில் அறிவிப்பு செய்வதை மாற்றி அறிவிப்பவர் காரை விட்டிறங்கி அக்கம் பக்கத்தில் உள்ளவருடன் நகைச்சுவையாகப்பேசி நிகழ்வுக்கு ஆட்களைத்திரட்டியதும் யோகனே!.
அன்று  கே.எஸ் பாலச்சந்திரனின் தனிநடிப்பு 'அண்ணை ரைற்'; ஆக மாறியது.பாலச்சந்திரன் பஸ் கொண்டக்டராக புளுகர் பொன்னையா கணேசபிள்ளை சாரதியாக மாறியதும் உடுப்பிட்டியில் தான்
எனக்கு நிரந்தர உத்தியோகம் குடும்பம் முதலில் அமைந்தாலும் அவை அவனுக்கு தாமதமாகின.
இருப்பினும் இசையாற்றல் மிக்க ஆசிரியையும் அவனும் ஒருவரையொருவர் விரும்பி இல்லறத்தில் இணைந்தது இறைவன் கொடுத்த வரம்- இசையோடு பாடும் பிள்ளைகள் கிடைத்ததும் அவன் செய்த பாக்கியம்- ஊடகத்துறையில் செல்வாக்கு மிக்க ஒருவரை மகளுக்கு மாப்பிளையாகப் பெற்றது அவர்களுக்குக் கிடைத்த வெற்றி.
என்து பெற்றோர் காலமானபோது நான் தொலைவிலிருந்து செல்லத்தாமதமானாலும் பொறுப்புணர்ந்து செயற்பட்டவன்.  எனக்காக பனையளவு செய்த வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவன் உடுப்பிடடியூர் யோகனின் மகன் வானொலி பயிற்சி பெற வழிகாட்டி சிறு தினையளவு செய்ய முடிந்ததும் ஒரு வகைத்திருப்தியே.
1948 ல் மலர்ந்து 1998ல் உதிர்ந்ததை நினைக்கும் போது நெஞ்சம் வருந்த விழிகள் நீரைச்சொரிகிறது.
சிறுவயதில் புகழோடு வாழ்ந்து-இளவயதில் இறைவனடி இணைந்த இளம் கலைஞன்யோகன்!
இன்றிருந்தால் உலகெல்லாம் நடைபெறும் பல நிகழ்வுகளில் வானம்பாடியாக வில்லிசைப்பான் !!

-உடுவை எஸ்.தில்லைநடராசா
நன்றி- ஞாயிறு தினக்குரல்

பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்

இங்கிலாந்தில்  உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.

பிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி  பி.சுசீலா அவர்களும்  கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம். 

இதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை  நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.


 சரி
அந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்தர்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.

அப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும்  மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும்   மேடைக்கு வருகின்றது  பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.
கலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக  இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக   இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும்  சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட  தொடராகப்பாடி அசத்தியதோடு   எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே  மிகக்கடினம் என்றும்  சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான  சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை 
அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி  கலைமாமணி சுசீலா.
உண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மாவின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்
நினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான்  உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.


அது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு  எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.
உண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.
இசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.
சுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.

வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட்டு விரல்


தற்கொலை தனிமனிதன் தனக்கான வாழ்க்கையின்
நம்பிக்கையை முற்றுமுழுதாக இழக்கும் வேளையில் அவன்
தனக்காக தெரிவுசெய்யும் பாதையாகின்றது,
தனது உயிரென்றாலும் அதை அந்த மனிதனாலேயே
பறித்துக்கொள்ள  உரிமை இல்லை என்று சட்டங்கள் பல
நாடுகளிலும்  இயற்றப்பட்டிருப்பினும் கொலை மற்றும்
தற்கொலைகளின்  எண்ணிக்கைகள்
பெருகிக்கொண்டேபோகின்றன.
என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை
மிகக்குறைவுதான்,ஏனென்றால் அந்த அந்த நாடுகளில்
சட்டப்படி வாழ்வுரிமை அல்லது தங்கி வாழ்வதற்கான
உரிமையுடைய ஒவ்வொரு மனிதனுக்குமானதன்னிறைவான
வாழ்க்கைச்சூழல் அமைந்துகாணப்படுகிறது.
அப்படியான எதிர்கால நிச்சயமான தளத்தில் குறிப்பிட்ட
மனிதனுக்கான வாழ்க்கை பூச்சியமானது எவ்வாறு?

அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.வாலிபவயது
தமிழ்ப்பெண்ணின் சாவு,அது இயற்கை மரணம் இல்லை
என்பது மட்டும் உண்மை, அது தற்கொலையா? அல்லது
கொலையா? என்று துப்புத்துலங்க முன் அதனைத்தொடர்ந்து
ஐந்து நாள்களில் அந்த பெண்ணின் தந்தையார் தனது
ஆற்றமுடியாத கவலையின் உச்சத்தில் தற்கொலை
செய்திருக்கிறார்.
அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
ஏன் எதற்காக இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை அலசும்
விடயங்களுக்கு அப்பால் இந்த கொலைகளுக்கான செய்திகள்

புலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியமான
பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்ற பார்வை நோக்கில்
சிந்தனைக்குட்படுத்துகிறது.
தெரிவு செய்யப்பட்ட தற்கொலை என்ற   அவனுடைய
பாதை  அவன் மற்றும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கான ஒரு
தலைக்குனிவே.அந்த சமுதாயமோ,அவன் வாழ்ந்த
சூழலோ அல்லது சார்ந்த  குடும்பமோ அந்த நிலையை
ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை
நோக்குமிடத்து  அது அந்த தனிமனிதன் சார்ந்தது என்றோ
அல்லது அந்த குடும்பம் சார்ந்த பிரச்சனை என்றோ
ஒதுங்கிவிடவோ ஒதுக்கிவிடவோ முடியாது,இந்த வேளையில்
அவரின்மனைவியின் பெயர் எங்கும் உள்வாங்கபடவில்லை
என்றும்செய்திகள் கிடைத்திருக்கிறது.
தாயக நிலங்களில் தவழ்ந்து வளர்ந்து எத்தனையோ கஷ்டங்கள்
வாழ்க்கை சுமைகளை சுமந்து புலத்தை நோக்கி பயணித்த
சமுதாயம் எங்கள் சமுதாயம்.புலத்தில் உழைத்தென்றாலும்
எங்கள் குடும்பத்தை  சமுதாயத்தை உயர்த்திவிடலாம் என்ற
கனவோடு ஒவ்வொரு நிமிடங்களும் மிகக்கடின  வாழ்க்கையை
அனுபவித்து வாழ்பவர்கள் எந்த வேளையிலும் தற்கொலை என்ற
பாதையை எவர் தெரிவு செய்தாலும் அது ஆமோதிக்க முடியாது.
அன்றைய காலங்களில் புலம்பெயர்ந்த காலங்களில் தனிமை
என்ற கொடுமை எங்கள் சமுதாயத்தை ஆட்டுவித்திருந்ததது.


எங்கோ ஒரு மொழி தெரியாத நாட்டின் நகரத்தில் தனிமையாக
வந்து தொழில் தேடி உழைத்து நிலைத்த சமுதாயம்.இன்றைய
காலங்களில் அப்படியான தனிமை என்ற உணர்வுகள் எந்த ஒரு
மனிதனுக்கும் இருக்கமுடியாது என்று உறுதியாகச்சொல்லலாம்.
ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளெங்கும் மிகக்கூடியளவு பரம்பலோடு வாழ்கின்றது எங்கள் சமுதாயம்.
ஒரு காலத்தில் புலத்திற்கு வந்த எங்கள் சமுதாயத்தின்
இளைஞர்கள்  போதைவஸ்துகளுக்கு அடிமையாகி  கொலைகள்
தற்கொலைகள் என்ற கவலைக்கிடமான நிலைகில் எல்லாம்
இருந்திருக்கின்றார்கள்.அப்படியான செய்திகள் இப்போது
கிடைப்பது அரிது.ஆனால் உறவுகளில்
விரிசல்கள்,கோபதாபங்கள்,இங்கு பிறக்கும் குழந்தைகளின்
செயற்பாடுகளால் பெற்றோர்களுக்கு வரும் தாக்கங்கள்,குழந்தை
பெற்றோர் இடைவெளிகள்,குடும்பத்தினுள் சண்டைகள்,
விவாகரத்துகள்,இவற்றினால் வரும் கொலைகள் தற்கொலைகள்,
என்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதை ஆரோக்கியமற்ற
சூழலில் நகர்கின்றது.
ப்படியென்றாலும்  கடின உழைப்புகளோடு
உன்னதமான வாழ்வை அமைக்கக்கூடிய சூழல்களை  கொண்ட
நாடுகளிலிருக்கும் எங்கள் சமுதாயம் வாழ்க்கை என்ற
பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்படி சிந்திப்பது சாலச்சிறந்தது.
புலத்தில் எந்த ஒரு தமிழ் மகனும் தன் வாழ்க்கையை நம்பிக்கை
இழக்கும்படியாக சமுதாயம் நகர்த்தக்கூடாது.அப்படியான
சந்தர்ப்பங்களிலும் எமது உறவுகள் என்ற உணர்வோடு மனித
வாழ்க்கையின் அர்த்தத்தை புரியச்செய்தால் அதுவே சிறப்பு.அது
இங்கு பிறக்கும் சிறார்களுக்கும் உணரச்செய்ய வேண்டிய
விடயமாகின்றது.அடுத்த தலைமுறைகள் தமிழ் சமுதாயம்
என்றே நிலைபெறவேண்டும்,தனக்கான செழிப்பான
வாழ்க்கையை அமைக்க எல்லோரும் உழைத்து பிழைக்க வல்ல
நவீன உலகத்தின் முன்னோடியான அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்திற்கு , கொலை,தற்கொலை
என்ற ஏற்றுக்கொள்ளத்தகாத நம்பிக்கை இழந்தவாழ்க்கைப்பாதை
ஆரோக்கியமானதா?
வாலிப வயதிலேயே வரும் வேண்டத்தகாத இழப்புகள்  தமிழ்
சமுதாயத்தை எதிர்காலத்தில் எந்த நிலைகளுக்கு கொண்டு
செல்கிறது?
குறுகிய நிலையற்ற வாழ்வின் மனதிற்கினிய சந்தோஷங்களை
புரிந்துஉறவுகளோடு பகிர்ந்து,மற்றோரையும் அரவணைத்து
அடுத்த தலைமுறைக்கான சரியான படிப்பினைகளை
எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சமுதாயத்தில்
அனைவருக்கும் புரியவில்லையா?
உறவுகளின் பிணைப்பும் புரிந்துணர்வற்ற நிலைகளும், சுய நல
சிந்தனைப்போக்குகளும் தொடர்ந்தும் நிலைக்குமாயின்
ஒட்டுமொத்த சமுதாயமும் எங்கள் பண்பாடுகளை, கூடிக்களித்த
வாழ்க்கையின் உண்மையான பாசபிணைப்புகளை அறுத்தெறிந்து
நலமான வாழ்வை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்
தள்ளப்படலாம் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது,


நன்றி வானவில்