Showing posts with label பட்டவை. Show all posts
Showing posts with label பட்டவை. Show all posts

உலகம் கொண்டாடும் காதல்!!!

காதலர் தினம்



உலகம் கொண்டாடும் காதல்….
இலக்கியமெங்கும் நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும் காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில் நிலைக்கும்….

காதலில் கலக்ககுவது எப்படி??????
கலைத்து கலைத்து காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத சுகமாகும்……

நேரகாலம் தெரியாது போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள் மறந்து போகும்….
குளிக்கும் நேரம் மாறும்..
அப்படி குளித்தாலும் அது மணிக்கணக்காகிவிடும்….

பகலில் நடை நித்திரையாக்குவதும் காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….

இரவில் காதல் கதையை காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும் காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும் 
உற்சாகம் மெருகேறும்….......


வீட்டிலிருந்து சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான பாதை அது என்பர்…..

காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின் வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும் என்றும் சுகமே……

காதல் சில கனவாகும் …..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம் பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும் வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்


காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில் காத்திருக்கும் சுகம் காணுவோர்....
 நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும் காதல் தான்………

கொண்டாடும்  காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை சொல்ல அது……
பாசத்தின் வலிமையை சொல்ல அது……
காதலை காதலித்து காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல் நிலைக்கட்டும்…

காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
                                                காதலில் உங்களில் ஒருவன்
                                                               யோகா தினேஷ்





The Mystro இன் வாலிபம்

இசையின் இளைய சாரீரம்


 The Mystro இன் வாலிபம் இசை இறுவெட்டு (CD) வெளியாகியிருக்கிறது.
GJ ARTS கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  இறுவெட்டு சிடி வெளியீட்டு நிகழ்வு Hays Beck Theatre கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Dayan shan, Cismoda, மற்றும் Banu ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்தளிக்க அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு.
ஆரம்பத்தில் நக்‌ஷத்திரா நாட்டியாலய நடனம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் பங்குபற்றிய நடனப்பெண்கள் மேடையை சரியாகப்பயன்படுத்தி தங்கள் நிகழ்வை வழங்கியிருந்தனர்,அதனைத்தொடர்ந்து ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வோர் சிறப்புடனும் வேவ்வேறு வகையுடனும் நிகழ்வை காண வந்த ரசிகர்களை வேறு பக்கம் திருப்பாது மேடை நோக்கியே வைத்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இடையில் வந்த கரகோஷங்கள் அதற்கு சான்று.
தாண்டவம் நடனப்பெண்கள் தங்கள் நடனத்தோடு கொடுத்த செய்தி பாராட்டவேண்டியதொன்று.வாகனம் செலுத்தும்போது வரும் கவனக்கலைப்பான்களால் வரும் பேராபத்தையும் அதை தவிர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் கொடுத்த செய்தி.

இளம் நடனக்குழுவினராகிய தாண்டவம்  அதற்கு பெரு முயற்சியெடுத்து வழங்கியிருந்தமை அரங்க நிகழ்ச்சியை பார்க்கும் போது புரிந்தது.

Crawly pakkam,அடையாளம்,phoenix போன்ற பல்வேறு நடனக்குழுக்கள்
அரங்க நிகழ்ச்சியை ஓயவிடாது தந்த நடனங்கள் அரங்கையே ஆடவைத்தது. தனி நடனம் கொடுத்த Krisshna (Trin3gy) பாடல்களுக்கு தன்னையே வளைத்துப்போட்டு ஆட்டியது எங்களுக்கு கிடைத்த மைக்கல் ஜாக்‌ஷன் போல இருந்தது.அதேபோல பல இளம் (Rap) சொல்லிசை பாடகர்கள் மற்றும் மெல்லிசை  பாடகர்கள் மேடையை சோரவிடவில்லை. அத்தனை நடுவிலும் நிகழ்ச்சியை தொத்தளித்த  விட்ட நகைச்சுவைகளும் கலைச்சு கலைச்சு கடித்தவைகளும் அவ்வப்போது சிரிக்கவைத்துக்கொண்டேயிருந்தது.




புல்லாங்குழல் இசைத்த குருஜி (Kuruji) ஆற்றல் அவரை இன்னோர் காலத்தில் சிறப்புக்கலைஞனான புலம்பெயர் நாட்டில் காணாலாம் என்ற படி அவரின் புல்லாங்குழல் இசைத்த தன்மை. அவரோடு இணைந்து பாடியவர்களும் வயலில் இசைத்தவர்களும்,கீபோர்ட் இசைத்த கலைஞர்கள், கெளதம் (Gowtham) அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
எல்லாவற்றையும் தாண்டி The Mystro இன் இறுவெட்டை வெளியீடு செய்தபோது வந்த உணர்வு, உறவு கண்ணீர் மறக்கமுடியாதவையாக ஒட்டிக்கொண்டன. The Mystro இன் அம்மா அப்பா எல்லோரும் உணர்ச்சிமேலீட்டால் பேசிய ஆனந்த கண்ணீருடனான வார்த்தைகள் கலைஞனை பெற்ற பெற்றோரின் மகிழ்ச்சியை உணர்த்தியது.
அதில் The Mystro இன் தழுதழுத்த குரல், ஆனந்த கண்ணீர் வார்த்தைகள் எல்லாம் கலைஞனின் சவால் மிகுந்த பயணத்தையும் அதில் கண்ட உற்சாக இன்பத்தையும் பதிவு செய்தது.


மேடை அமைப்பும் மேடை ஒளி ஒலி அமைப்பும் நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றிய கெளசிகன் சிவலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்து அதில் தனது முக்கிய பங்கை கொடுத்திருந்தார்.
மொத்தத்தில் The Mystro இன் இசை வெளியீடு நிகழ்வானது மேடையையும் 
அரங்கையும் சோரவிடாது அமைந்திருந்தமையை பாராட்டியே ஆகவேண்டும். 
இருப்பினும் நிகழ்ச்சிக்கு இளைய வட்டமே அதிகம் வந்திருந்தமை கவலை தரக்கூடிய விடயமே. பங்குபற்றிய கலைஞர்களின் உறவுகளைத்தவிர முதலாந்தலைமுறையினரின் வருகை மிகக்குறைவாக இருக்கின்றமை இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பாதையாக முடியாது என்பது எம் எண்ணம்.இது இளைய தலைமுறையினருக்கும் முதலாந்தலைமுறையினருக்குமான இடைவெளி சமூகத்தில் அதிரிக்கும் போக்கை காட்டுகிறது.இது நல்லதல்ல.
இதை இளந்தலைமுறையினரும் உணர்ந்து நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அதேவேளை முதலாந்தலைமுறையினரும் வெறுமனே தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முண்டியடிக்காமல் இப்படியான நிகழ்வுகளிலும் பங்குபற்ற தயாராகவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
அத்தோடு நிகழ்வின் இறுதியில் தாயக மக்களை நோக்கிய  சிந்தனையில் கலைக்குழு வழங்கிய நடனம் பாராட்டத்தக்கது.என்றாலும் அந்த நிகழ்ச்சினின் நிறைவில் சொல்லப்பட்ட செய்தியை திரையில் எழுதிக்காட்டிய போது வந்த எழுத்துபிழைகளை நிச்சயம் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து.இதிலும் முதலாந்தலைமுறையினர் , அல்லது அறிந்தவர்கள் இளந்தலைமுறையினரை வழிப்படுத்தினால் அப்படியான சிறு தவறுகள் கூட இடம்பெறமாட்டாது என்பதை பதிவு செய்யலாம்.

இருப்பினும் தாயகம் நோக்கிய சிந்தனையிலும் நிகழ்ச்சியில் ஏதோவொரு நிகழ்வை இணைக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு நிச்சயம் பாராட்டியே வேண்டும்.

 
மொத்ததில் The Mystro இன் வாலிபம் நிகழ்வும் இறுவெட்டும் புலம்பெயர் கலைஞனின் ஓர் அடையாளமாக பதிவாகியிருக்கிறது. The Mystro என்ற கலைஞனின் புதிய முதல் படைப்பை அனைவரும் வாங்கி அந்த கலைஞனை தொடர்ச்சினான கலைப்படைப்புகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் உலக மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.அது கலைஞனையும் வாழவைக்கும், அவன் படைப்புகளும் வாழ்ந்துகொள்ளும்.இனியும் அவன் படைப்புகள் வரும்.

The Mystro இன் வாலிபத்திற்கு எம் அன்பான வாழ்த்துக்கள்..



வாழும்போதே வாழ்த்துவோம்

                                                                                              நிகழ்வு நோக்கு- யோகா தினேஷ்


உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்

பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்

இங்கிலாந்தில்  உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.

பிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி  பி.சுசீலா அவர்களும்  கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம். 

இதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை  நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.


 சரி
அந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்தர்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.

அப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும்  மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும்   மேடைக்கு வருகின்றது  பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.
கலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக  இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக   இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும்  சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட  தொடராகப்பாடி அசத்தியதோடு   எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே  மிகக்கடினம் என்றும்  சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான  சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை 
அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி  கலைமாமணி சுசீலா.
உண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மாவின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்
நினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான்  உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.


அது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு  எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.
உண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.
இசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.
சுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.

வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட்டு விரல்


தற்கொலை தனிமனிதன் தனக்கான வாழ்க்கையின்
நம்பிக்கையை முற்றுமுழுதாக இழக்கும் வேளையில் அவன்
தனக்காக தெரிவுசெய்யும் பாதையாகின்றது,
தனது உயிரென்றாலும் அதை அந்த மனிதனாலேயே
பறித்துக்கொள்ள  உரிமை இல்லை என்று சட்டங்கள் பல
நாடுகளிலும்  இயற்றப்பட்டிருப்பினும் கொலை மற்றும்
தற்கொலைகளின்  எண்ணிக்கைகள்
பெருகிக்கொண்டேபோகின்றன.
என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை
மிகக்குறைவுதான்,ஏனென்றால் அந்த அந்த நாடுகளில்
சட்டப்படி வாழ்வுரிமை அல்லது தங்கி வாழ்வதற்கான
உரிமையுடைய ஒவ்வொரு மனிதனுக்குமானதன்னிறைவான
வாழ்க்கைச்சூழல் அமைந்துகாணப்படுகிறது.
அப்படியான எதிர்கால நிச்சயமான தளத்தில் குறிப்பிட்ட
மனிதனுக்கான வாழ்க்கை பூச்சியமானது எவ்வாறு?

அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.வாலிபவயது
தமிழ்ப்பெண்ணின் சாவு,அது இயற்கை மரணம் இல்லை
என்பது மட்டும் உண்மை, அது தற்கொலையா? அல்லது
கொலையா? என்று துப்புத்துலங்க முன் அதனைத்தொடர்ந்து
ஐந்து நாள்களில் அந்த பெண்ணின் தந்தையார் தனது
ஆற்றமுடியாத கவலையின் உச்சத்தில் தற்கொலை
செய்திருக்கிறார்.
அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
ஏன் எதற்காக இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை அலசும்
விடயங்களுக்கு அப்பால் இந்த கொலைகளுக்கான செய்திகள்

புலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியமான
பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்ற பார்வை நோக்கில்
சிந்தனைக்குட்படுத்துகிறது.
தெரிவு செய்யப்பட்ட தற்கொலை என்ற   அவனுடைய
பாதை  அவன் மற்றும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கான ஒரு
தலைக்குனிவே.அந்த சமுதாயமோ,அவன் வாழ்ந்த
சூழலோ அல்லது சார்ந்த  குடும்பமோ அந்த நிலையை
ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை
நோக்குமிடத்து  அது அந்த தனிமனிதன் சார்ந்தது என்றோ
அல்லது அந்த குடும்பம் சார்ந்த பிரச்சனை என்றோ
ஒதுங்கிவிடவோ ஒதுக்கிவிடவோ முடியாது,இந்த வேளையில்
அவரின்மனைவியின் பெயர் எங்கும் உள்வாங்கபடவில்லை
என்றும்செய்திகள் கிடைத்திருக்கிறது.
தாயக நிலங்களில் தவழ்ந்து வளர்ந்து எத்தனையோ கஷ்டங்கள்
வாழ்க்கை சுமைகளை சுமந்து புலத்தை நோக்கி பயணித்த
சமுதாயம் எங்கள் சமுதாயம்.புலத்தில் உழைத்தென்றாலும்
எங்கள் குடும்பத்தை  சமுதாயத்தை உயர்த்திவிடலாம் என்ற
கனவோடு ஒவ்வொரு நிமிடங்களும் மிகக்கடின  வாழ்க்கையை
அனுபவித்து வாழ்பவர்கள் எந்த வேளையிலும் தற்கொலை என்ற
பாதையை எவர் தெரிவு செய்தாலும் அது ஆமோதிக்க முடியாது.
அன்றைய காலங்களில் புலம்பெயர்ந்த காலங்களில் தனிமை
என்ற கொடுமை எங்கள் சமுதாயத்தை ஆட்டுவித்திருந்ததது.


எங்கோ ஒரு மொழி தெரியாத நாட்டின் நகரத்தில் தனிமையாக
வந்து தொழில் தேடி உழைத்து நிலைத்த சமுதாயம்.இன்றைய
காலங்களில் அப்படியான தனிமை என்ற உணர்வுகள் எந்த ஒரு
மனிதனுக்கும் இருக்கமுடியாது என்று உறுதியாகச்சொல்லலாம்.
ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளெங்கும் மிகக்கூடியளவு பரம்பலோடு வாழ்கின்றது எங்கள் சமுதாயம்.
ஒரு காலத்தில் புலத்திற்கு வந்த எங்கள் சமுதாயத்தின்
இளைஞர்கள்  போதைவஸ்துகளுக்கு அடிமையாகி  கொலைகள்
தற்கொலைகள் என்ற கவலைக்கிடமான நிலைகில் எல்லாம்
இருந்திருக்கின்றார்கள்.அப்படியான செய்திகள் இப்போது
கிடைப்பது அரிது.ஆனால் உறவுகளில்
விரிசல்கள்,கோபதாபங்கள்,இங்கு பிறக்கும் குழந்தைகளின்
செயற்பாடுகளால் பெற்றோர்களுக்கு வரும் தாக்கங்கள்,குழந்தை
பெற்றோர் இடைவெளிகள்,குடும்பத்தினுள் சண்டைகள்,
விவாகரத்துகள்,இவற்றினால் வரும் கொலைகள் தற்கொலைகள்,
என்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதை ஆரோக்கியமற்ற
சூழலில் நகர்கின்றது.
ப்படியென்றாலும்  கடின உழைப்புகளோடு
உன்னதமான வாழ்வை அமைக்கக்கூடிய சூழல்களை  கொண்ட
நாடுகளிலிருக்கும் எங்கள் சமுதாயம் வாழ்க்கை என்ற
பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்படி சிந்திப்பது சாலச்சிறந்தது.
புலத்தில் எந்த ஒரு தமிழ் மகனும் தன் வாழ்க்கையை நம்பிக்கை
இழக்கும்படியாக சமுதாயம் நகர்த்தக்கூடாது.அப்படியான
சந்தர்ப்பங்களிலும் எமது உறவுகள் என்ற உணர்வோடு மனித
வாழ்க்கையின் அர்த்தத்தை புரியச்செய்தால் அதுவே சிறப்பு.அது
இங்கு பிறக்கும் சிறார்களுக்கும் உணரச்செய்ய வேண்டிய
விடயமாகின்றது.அடுத்த தலைமுறைகள் தமிழ் சமுதாயம்
என்றே நிலைபெறவேண்டும்,தனக்கான செழிப்பான
வாழ்க்கையை அமைக்க எல்லோரும் உழைத்து பிழைக்க வல்ல
நவீன உலகத்தின் முன்னோடியான அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்திற்கு , கொலை,தற்கொலை
என்ற ஏற்றுக்கொள்ளத்தகாத நம்பிக்கை இழந்தவாழ்க்கைப்பாதை
ஆரோக்கியமானதா?
வாலிப வயதிலேயே வரும் வேண்டத்தகாத இழப்புகள்  தமிழ்
சமுதாயத்தை எதிர்காலத்தில் எந்த நிலைகளுக்கு கொண்டு
செல்கிறது?
குறுகிய நிலையற்ற வாழ்வின் மனதிற்கினிய சந்தோஷங்களை
புரிந்துஉறவுகளோடு பகிர்ந்து,மற்றோரையும் அரவணைத்து
அடுத்த தலைமுறைக்கான சரியான படிப்பினைகளை
எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சமுதாயத்தில்
அனைவருக்கும் புரியவில்லையா?
உறவுகளின் பிணைப்பும் புரிந்துணர்வற்ற நிலைகளும், சுய நல
சிந்தனைப்போக்குகளும் தொடர்ந்தும் நிலைக்குமாயின்
ஒட்டுமொத்த சமுதாயமும் எங்கள் பண்பாடுகளை, கூடிக்களித்த
வாழ்க்கையின் உண்மையான பாசபிணைப்புகளை அறுத்தெறிந்து
நலமான வாழ்வை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்
தள்ளப்படலாம் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது,


நன்றி வானவில்