முட்டுதோ முட்டுதோ

இதிலை யாரிலை பிழையைச்சொல்ல,என்னதான் சொன்னாலும் அதை பொலிஸ்கேஸ் ஆக்கி போட்டாங்கள்,அதுவும் ஆசியாவிலை ஒரு சில நாட்டு பொலீஸ்காரன் என்றால் "காசைகீசை" குடுத்து தப்பிபோடலாம்,இது இவங்களிட்டை ஒண்டும் செய்யமுடியாது,இவங்கள் எங்கை பிழையைபிடிச்சு தண்டப்பணம் வாங்கலாம் என்று ஓடித்திரியுறாங்கள்,
அதுவும் ஒரு வழிக்கு சரி தான்.இல்லாட்டில் எங்கடை சனத்தை கட்டுபடுத்திறது ரொம்ப கஷ்டம் தான்.தண்டப்பணத்தை கூட்டினால் பிழைகள் செய்வதை ஓரளவுக்கு குறைக்கலாம் என்பது தான் அந்த பொலீஸ்காரரின்ரை எண்ணம்,

எல்லாத்துக்கும் கடுமையான சட்டமும் தண்டமும்,வாகன ஓட்டுவதற்கும் அந்த நாட்டிலை கடும் விதிகள்,
வேகத்தை கொஞ்சம் கூட்டினால் போதுமாம்,"டக்" எண்டு போட்டோ(புகைப்படம் எண்டு ஆங்கிலத்தில் சொல்லுவினம்) எடுத்து அதுக்கு எவ்வளவு தண்டப்பணம் என்று வெப்சைட்டிலை(ஆங்கிலத்தில் இணையத்தளம் எண்டு சொல்லுவினம்)போட்டுவிடுவார்கள்.
அப்படி அந்த அந்த இடத்தில் எவ்வளவு வேகமோ அவ்வளவு வேகத்தத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல இன்னொரு எங்கெல்லாம் வாகனத்தை கொஞ்ச நேரம் கூட நிறுத்திவிட்டால் அதற்க்கும் பணம்.
அதுக்கு ஒரு மெஷின்(ஆங்கிலத்தில் இயந்திரம்) இருக்கு,அதிலை போடவேண்டியகாசை போட்டுவிட்டு டிக்கெட்(ஆங்கிலத்தில் பற்றுச்சீட்டு) காருக்கு(ஆங்கிலத்தில் மகிழூந்து) முன்னாலை போட்டுவைக்க வேண்டும்.
அப்படி காசு கறக்க நிக்கிறாங்கள் எண்டு நம்மவர்களின் நினைப்பு
விபத்துக்கள் கூடிக்கொண்டு செல்வதாலும் வாகனப்பாவனை அதிகரிப்பதாலும் இதையும் கட்டுப்படுத்த வேணும் என்பதும் இந்த பொலீஸ்காரரின் சிந்தனை,அதனால் இந்த லைசன்ஸ்(ஆங்கிலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் என்று சொல்வார்கள், பொதுவாக லைசன்ஸ் எல்லோரும் சாரதியனுமதிப்பத்திரத்தைத்தான் குறிப்பிடுவார்கள்,ஆனால் எதற்கும்,எந்த ஒரு ஆரம்பத்துக்கும் லைசன்ஸ் இருக்கிறது என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை) இந்த எடுப்பதையும் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டார்கள்,அதற்கு என்ன செய்கிறார்கள் ஒருவர் குறந்தளவு ஆறு அல்லது ஏழு தடவை இந்த பரீட்சையில் தோற்றச்செய்கிறார்கள்.பிழை கண்டுபிடிப்பது சுலபம் தானே, அந்த வழியில் ஏதாவது பிழையைக்கண்டுபிடித்து தோற்கச்செய்வார்கள்.எம்மவர்களில் நாடுகளில் இப்படியெல்லாம் பரீட்சையில் தோற்கடிக்கச்செய்பவர்களை எப்படி என்னமாதிரி கையாட எப்படி லைசன்ஸ் எடுக்கவேணும் என்பதற்கெல்லாம் வேறு முறை இருக்கு

அப்ப இந்த ஆளும் மற்றவர்கள் எல்லோரும் ஆறேழு தடவையில் எடுத்த லைசன்ஸை பத்தாவது தடவையில் பாஸ் (தேறி)பண்ணி ஒரு வாகனமும் எடுத்துட்டார்,எடுத்த வாகனத்தை எப்படி கவனமாக ஓடவேணும் என்று தனக்குள் திட்டம் போட்டு ஒரு கரையாக ஓடுவது தான் இவரின் வழமை."நடுவாலை ஓடினால் ரண்டு பக்கமும் முந்துறாங்கள் எந்த பக்கம் முட்டுவாங்கள் எண்டு தெரியாது அது பெரிய பயங்கரம்" என்று மனதிலேயே நினைத்தவராக ஓடும் அந்த ஆள்.
இப்பிடித்தான் ஒரு நாள் தன் நண்பர் கூட்டத்தோடு ஒரு இடத்துக்கு பயணித்தார் அந்த அன்பர்.வழமைபோலவே பாதயோரத்தில் நிறுத்தி தனதும் நண்பர்களதும் எல்லாம் காரியங்களையும் முடித்துவிட்டு மீண்டும் வாகனத்தில் ஏறினார் அவர்,
உண்மையில் அவருக்கு வாகனத்தை பின்பக்கமாக ஓட்டி திருப்புவதில் கொஞ்சம் பயம் தான்.ஆனால் அவர் காட்டிகொள்வதில்லை,ஆனால் அது நண்பர்களுக்கு தெரியும்,ஆகவே அதை அப்படியாவது ஒரு நாள் வெளிக்காட்ட வேண்டும் என்று எப்பவோ திட்டம் போட்டார்கள் நண்பர்கள்.அப்ப தன் நண்பரில் ஒருவருக்கு "அடேய் பின்னுக்கு பாரடா" எண்டு சொல்லிவிட்டு வாகனத்தை பின்புறமாக ஓட்டினார்.
"மச்சான் என்ன பயப்பிடுறாய் போல" என்று நண்பர்கள் நக்கலடித்தவர்களாய் பின்னுக்கு பார்த்தபடி இருந்தார்கள்."சி... சி..... என்ன பயம்?ஒரு பயமும் இல்லை நீங்கள் பின்னுக்கு எங்கையாவது முட்டுதோ எண்டு பாருங்கோ" என்று சொன்னவராய் பின்பக்கம் ஓட்டுகிறார் அன்பர்.
வாகனங்கள் கூடியளவு தரித்திருந்த அந்த இடத்தில் சாதுரியமாக ஓட்டுகிறார்,
"ரைட் ரைட் ரைட் ரைட்" என்று வழி நடத்துகிறது நண்பர்கள் குரல்.திடீரென்று 'படார்' என்று சத்தம், "என்னடா இது என்னடா நடந்தது" என்று அவன் ஓடியவனாய் அவன் கீழே இறங்கி ஓடிவர அதிலிருந்த ஒரு நண்பர் "ம்ம் இப்பதாண்டா முட்டினது" என்று சொல்லி சிரித்தான்.
"நீ தானே சொன்னனீ பின்னுக்கு முட்டுதோ என்று பார் எண்டு ம்ம் அது இப்பதான் முட்டினது" என்று சொல்லிச்சிரித்தான்.உணமையில் அவன் கவனக்குறைவால்தான் அந்த சின்ன விபத்து நிகழ்ந்தாலும் "முட்டுதோ" என்று பார்க்க சொன்னதால் தான் முட்டுமட்டும் தான் சொல்லவில்லை என்றும் அதேபோல "தான் முதலே அவனுக்கு பயம் இருக்கோ என்று கேட்க அப்படி ஒன்றுமே இல்லாதவன் போல நடித்து மனப்பயத்தால் தான் அது முட்டிவிட்டது" நண்பர்களிடம் சொல்லி சிரித்தான்.

ஆனால் வழமைபோலவே அது எந்த சின்ன வகையான விபத்தாக இருந்தாலும் தண்டப்பணம் அறவிடவும் விபத்துக்கான காரணம் கேட்கவும் பொலீஸ்காரன் வந்துவிட்டான்,
யாரிலைதான் பிழையைச்சொன்னாலும் அது பொலீஸ்கேஸ் ஆக்கியாச்சு,சின்ன பிழைக்கு பெரிய தண்டம் என்று தலையிலே கையை வத்தார் அந்த அன்பர்

குறிப்பு: இங்கு சில வழமையாக நம்மவர்கள் ஆங்கிலத்தில் அமைந்த சொற்களை அன்றாடம் பாவிப்பதால் அவற்றை அப்படியே நானும் எழுத்திலிட்டுவிட்டு அவற்றின் தமிழ் சொற்களை நகைச்சுவைக்காக ஆங்கிலத்தில் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.அதே போல நடந்த ஒரு சம்பவத்தில் இந்த கதைப்போக்கின் முடிவைத்தந்தவர் நண்பர் நவரூபன் அவர்கள், நன்றி நவரூபன்

நல்ல கைதட்டு போடுங்கள் தாயகத்தின் பதிவர் சந்திப்புக்கு

தாயகத்தின் பதிவர் சந்திப்பு வெகுசிறப்பாக ஒழுங்குபடுத்தபட்டு அதே போல எல்லோரும் சபாஷ் போடும்படியாக நடந்தேறியிருக்கிறது.நேரகாலத்துக்கு ஆரம்பம்,ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவர்களின் வரவு,நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பு,கருத்துரைகள் என்றும் அத்தோடு உலகெங்கும் இருக்கும் பதிவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு மற்றும் அவர்கள் சுவாரஷ்யமான கருத்துக்கள் என்று முற்றிலும் வித்தியாசமாக எல்லோரும் பாரட்டும் படியாக நடந்தேறியிருக்கிறது,தாயகத்தில் பிறந்திருந்தாலும் அதில் பங்கு பற்ற முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதை ஒரு மன மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரதும் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாக வெற்றிகரமாக நடைபெற்றமை மிகச்சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மூத்த எழுத்தாளர்கள் கலாநிதி அந்தனி ஜீவா,கவிஞர் திரு மேமன்கவி மற்றும் சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் பொன்றவர்களின் வருகை நிகழ்வை சிறப்பூட்டியிருக்கிறது.அவர்களின் வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் நீண்டகாலம் வாழவைக்கும் என்ற புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

கலந்துகொண்ட எல்லோரதும் கருத்துரைகளும் அத்தோடு இணையத்தளம் வாயிலாக இணைந்து கொண்ட அனைத்துபதிவர்களின் கருத்துக்களும் நகைச்சுவையாக பகிரப்பட்டது,மிகவும் உல்லாசமாக முதற்கட்டத்திலேயே அரங்கேறியிருகிறது இந்த சந்திப்பு.
எல்லாவற்றிலும் மேலாக நேரடி ஒளிபரப்பு மெச்சுதற்குரியது. இதை தந்த கௌபாய்மது இதை தன்னுடைய பதிவில் ஒலிப்பதிவையும் இட்டிருக்கிறார்.எம்மைப்போன்ற தாயகத்தின் பதிவர்சந்திப்பை எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக தந்தவருக்கு மிக்க நன்றிகள்.ஆனால் நான் வரப்பிரசாதத்தை அனுபவிக்க தவறிவிட்டது கவலையடையவைக்கிறது.

அதைவிட பிறந்த நாள் கொண்டாட்டமும் பதிவர் சந்திப்பும் கூடிவந்து அதை கொண்டாடப்பட்டதும் பதிவர் சந்திப்பை மெருகூட்டியிருக்கிறது.பத்தாவது பிறந்த நாளுக்காக பத்துபேர் தெரிவுசெய்யபட்டு சிறப்பு விருந்தினர்களால் கேக் வெட்டப்பட்டது.சிறப்பம்சமான விடயம்.

இதைவிட அங்கு இடம் பெற்ற சம்பவங்கள் மற்றும் கருத்துரைகள் புகைப்படங்கள் என்பன பல்வேறு வலைப்பூக்களிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது,இதுவரையில் நான் அறிந்த வகையில் யார் யார் தொகுக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றை உங்களுக்கு கீழேதருகிறேன்.மீண்டும் நான் மீளிசைக்கவில்லை,

ஆதிரை(புகைப்படங்கள்)
வந்தி
புல்லட்
ஈழவன்
கிருத்திகன் குமாரசாமி
கௌபாய்மது(ஒலிவடிவில்)
தாய்மடி
வசந்தன்
மயூரேசன்
சந்ருவின் பக்கம்

யெஸ் பாலபாரதி

மொத்தத்தில் இப்படியான பதிவர் சந்திப்பை ஒழுங்கமைத்தவர்களும் அதில் பங்குபற்றியவர்களும் பாரட்டுக்குரியவர்கள்.கைதட்டுக்குரியவர்கள்.அதேபோல தொடர்ந்தும் வெற்றியுடன் நடைபோட்டு கலை கலச்சார நிகழ்வுகளுக்கு இன்னோரனவகையில் இடம் கொடுத்து நீண்டகாலம் பதிவர்கள் அவர்கள் திறமைகள் எழுத்துக்கள் வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு,அவை கூடிவந்துகொண்டிருக்கிறது,என்றென்றும் நிலைத்து வாழும்

வரலாற்றில் இடம்பிடிக்கும் தாயகத்தின் பதிவர் சந்திப்பு



எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தாயகத்தின் பதிவர் சந்திப்பு 23.08.2009அன்று நாளை கொழும்பில் நடைபெறவிருக்கிறது.சென்னையிலும் சிங்கப்பூரிலும் அமீரகத்திலும் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற பதிவர்களின் சந்திப்புக்கள் வெற்றிகரமாக இடம்பெற்று நிறைவேறி சில நாள்களுக்குள் தாயகத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் பதிவர் சந்திப்பு கொழும்பின் தமிழ்சங்கத்தில் இடம்பெற இருக்கிறது.
மகிழ்ச்சியான விடயம்.

பல்வேறு பகுதிகளிலும் பதிவர்கள் சந்தித்திருந்தாலும் "தம் தாய்மண்ணில் பதிவர்கள் ஒன்றுகூடவில்லையே" என்ற அந்த அந்த பதிவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு இது மிகச்சந்தோசமான விடயம்.இந்த நிகழ்வைப்பற்றி அறிவித்தவுடனும் பதிவர்களின் பின்னூட்டங்களையும் கருத்துக்களும் இதை பறைசாற்றும்.

பல்வேறு நோக்கங்களையும் அடிப்படையில் சிந்தித்து அவற்றை எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்போடு முன்னெடுக்கப்படும் இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வரவேற்புக்குரியது.
வெறுமனே இணையத்திலேயே பதிவுகளை இட்டு பதிவர்களுடனும் மற்றும் இணைய வாசகர்களுடனும் தங்கள் எழுத்துக்களை பதிந்துவிடும் வலையுலகப் பதிவர்களின் திறமைகளை வெளியுலகத்துக்கு கொண்டு செல்லப்பட இந்த பதிவர் சந்திப்பு வழிகோலவேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பும் கூட.சாதரண வாசகர்களின் கைகளிலும், தாயகத்தின் எந்த மூலைக்கும் இப்படியான வலைப்பதிவர்களின் பதிவுகள் பார்க்க அல்லது கேட்க செய்யவேண்டும்.அதே போலவே பதிவர்களின் எழுத்துத்துறைக்கு அப்பால் அவர்களின் இன்னோரன்ன திறமைகளுக்கும் இது வழிசமைக்க வேண்டும்,எதிர்காலத்தில் எம் கலைகள் வாழவும் கலாச்சார நிகழ்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பதிவர் சந்திப்புக்கள் அமையவேண்டும்.இவையெல்லாம் இப்பதிவர்சந்திப்பில் வெற்றியளிக்கும் என்ற விடயம் மனமகிழ்ச்சியைத்தருகிறது

முதற்கட்டத்திலேயே பதிவர்களின் ஆலோசனைகளோடு சிறப்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்புடன் இடம்பெறுகிறது இந்த நிகழ்வு.அது பதிவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைவது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்லாமல் வலைப்பதிவாளர்களுக்கு மட்டுமேயல்லாமல் அவர்கள் பதிவர்கள் அல்லாதவிடத்தும் அந்த நிகழ்வு மற்றயவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.இவையெல்லாம் தொடர்ந்தும் இந்த சந்திப்பு பரிணமிக்கவிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது

இதைவிட பதிவர்களின் அனுபவப்பகிர்வுகள், மற்றும் அவர்களின் சகலவிதமான பிரச்சினைகளுக்குமான ஆலோசனகள் என்பனவற்றிற்கு இந்த சந்திப்பு களங்கொடுக்கிறது.ஆகவே இந்த சந்திப்பு முற்றிலும் சகலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவிருக்கிறது.
அதைவிட இந்த சந்திப்போடு கூடிய முக்கிய வரலாற்று விடயங்கள் ஆதிரையால் ஆராயப்பட்டது,அவையெல்லாம் பெருமைக்குரிய விடயங்களாகும், (அதை திரும்ப நான் மீளிசைக்க விரும்பவில்லை, அதை கண்டுபிடித்த அதை ஆதிரையில் அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்),அதேபோல இது பற்றிய சகல விடயங்களையும் மற்றும் நிகழ்ச்சி நிரலையும் நீங்கள் வந்தி,லோஷன்,மற்றும் புல்லட் ஆகியோரின் வலைப்பதிவுகளில் முற்றுமுழுதாக அறிந்து கொள்ளமுடியும்.
கடைசியில் ஒருவிடயம் ,"என்னதான் என்னைப்போல யாரும் சிந்திக்கலாம் அப்படி செய்ய வேண்டும் இப்படிசெய்யவேண்டும் என்று". ஆனால் இவர்களைப்போல ஒரு அடித்தளம் இடுவதென்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும்.இவர்களின் அடித்தளம் நீண்டகாலம் வாழவேண்டும்.அவ்வாறே வாழ்ந்து பதிவர்களின் சிந்தனைகளும் திறமைகளும் வரலாறு படைக்கவேண்டும் என்று வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.

என்றென்றும் நிலைத்துவாழ எல்லோரும் பலம் சேர்ப்போம்

கிட்டிக்கொட்டனும் நெற்றிப்பொட்டும்

அதென்ன கிட்டிக்கொட்டன் என்று சிலர் தமக்குள் கேட்டுகொள்ளலாம்."கிட்டிப்புள்" விளையாட்டைத்தான் சிலர் "கிட்டிக்கொட்டன்" என்று சொல்வார்கள்,சிலவேளைகளில் அவர்களுக்கு "புள்" பெரிதாக தெரிந்தால் "கிட்டிப்புள்" என்றும் "கொட்டன்" பெரிதாக இருந்தால் "கிட்டிக்கொட்டன்" என்றும் சொல்வார்களோ எனக்கு தெரியாது.
"சும்மா பகிடிக்கு சொன்னன் பாருங்கோ,பிறகு இதை பெரிய விசயமாக எடுத்துபோடாதீங்கோ"
தாயகத்தின் சில இடங்களில் "கிட்டிப்புள்"என்றும் சில இடங்களில் "கிட்டிக்கொட்டன்" என்றும் அழைப்பார்கள்.அது அந்தந்த இடங்களில் நிலவிவரும் சொற்களே அன்றி அதற்கு காரணம் என்று சொல்ல ஏதுமிலை என்று தான் நான் நினைக்கிறேன்
வருடத்தின் சிலகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் பிரபல்யமான விளையாட்டுதான் அது.மரங்களுக்கு கீழும் வீதிகளின் ஓழுங்கைகளிலும் ஊர்சிறுவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விளையாடுவதை அவதானிக்கமுடியும்.

கிட்டிப்புள் - ஒரு சின்ன விளக்கம்

தமிழர்களுக்கே கிட்டிப்புள் பற்றி ஒரு விளக்கமா என்று என்னை பார்ப்பது எனக்கு புரிகிறது.ஆனாலும் நகரவாழ்க்கைமுறைகளும் அதேபோல மேற்கத்தைய விளையாட்டுக்களான கிரிக்கெட் மற்றும் உதைபந்து போன்ற விளையாட்டுக்களின் மோகங்களும் பொங்கிவிட்ட நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படாத நிலையில் இதைப்பற்றிய விளக்கம் அவசியமான ஒரு நிலையை உணர்ந்துதான் இதை பற்றிய ஒரு சின்ன விளக்கம்.
ஒரு விளையாட்டு ஒன்றை அறிந்து அதை விளையாடி அதில் தேர்ச்சி பெற்று விளையாட எடுக்கும் காலத்தை விட சாதரணமாக இப்போது எல்லோராலும் விளையாடப்படும் விளையாட்டுக்களோடு விளையாடுவது தான் எல்லோரதும் இயல்பு,அந்த வகையில் இன்றையகாலங்களில் கிட்டிப்புள் அல்லது கிட்டிக்கொட்டன் கொஞ்சம் குறைந்து வருகிறது என்று சொல்லலாம். ஆனாலும் அதன் பெயரும் விளையாட்டும் இன்னும் எம்ம்வர்களிடமிருந்து மங்கிவிடவில்லை என்பதும் உண்மைதான்.அதுமட்டுமல்ல
சிலர் இதிலிருந்து தான் மட்டைப்பந்து என்று தமிழில் சொல்லப்படும் கிரிக்கெட் உருவானது என்று பெருமையடைவதும் சொல்லத்தானே வேணும்.

மண்ணில் ஒரு சிறிய கிடங்கு கிண்டி அதில் இருமுனைகளிலும் நன்றாக சீவப்பட்ட சிறிய புள்ளை வைத்து அதை கொட்டனால் தூக்கியெறிந்து அதை பலரோ சிலரோ மறித்து அதை திரும்பவும் அதை கிடங்கு நோக்கி அந்த புள் விழுந்த இடத்திலிருந்து எறிவர், அப்போது அதை திருப்பி அடிப்பதும் அதற்கு "மறுத்தான்" கேட்பதுமாக அந்த விளையாட்டு தொடரும்.இதில் "மறுத்தான்" என்பது மறுத்தான் என்பது கேட்கப்பட்டு புள் திரும்ப வீசும்போது புள்ளை அடித்தால் அடித்தவர் தன் புள்ளிக்கணக்கை பத்து மடங்கால் பெருக்கி எடுத்து கூட்டிகொள்ளலாம் என்பது கதை வேறு.அதை விட "டபிள்" "றிபிள்" என்று எல்லாம் புள்ளை கொட்டனால் தூக்கி எடுத்து தட்டி புள்ளிக்கணக்கை அந்த மடங்காலே பெருக்கியும் தங்கள் கணக்கை கூட்டி கொள்வர்.அப்படியே அந்த கணக்கு கூடி கூடி அது ஒருகுறிப்பிட்ட கணக்கை தாண்டி விட்டால் அதை "கிளம்பி" என்று சொல்வார்கள் பின்னர் ஆட்டமிழந்தாலும் இன்னொருமுறை ஆட முடியும். அது கதை வேறு, அதை விட மறுத்தான் அடிக்கப்படும்போது பிடி எடுக்கப்பட்டால் அது அந்த குழுவிலுள்ள அனைவரையுமே ஆட்டமிழக்கசெய்யும் என்ற சோகக்கதை வேறு.
இந்த விளையாட்டில் கணக்கு பார்க்கிற விசயமும் ரொம்ப முக்கியம்,கணக்கை கூட்டிச்சொல்லும்போது தடுமாறிவிட்டால் அதை எதிர்தரப்பினர் கூழ் ஆக்கி விடுவார்கள்,அதன் பின் திரும்ப தன் கணக்கை ஆரம்பிக்கவேண்டும்,அது பெரிய தலையிடி


இந்த ""கிட்டிப்புள் "இடங்களுக்கு இடம் சில வேறு முறைகளில் விளையாடப்படுவதுமாக அறியப்படுகிறது. அதாவது "கிளம்பி" எனப்படும் நிலையைத்தாண்டிய பின் புள்ளை கையில் தூக்கி நுனிப்புள்ளில் பிடித்தவாறே அது கொட்டனால் அடிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.அடிக்கப்படுவதற்கு மூவருக்கு சந்தர்ப்பம் வழங்க்கப்பட்டு அது யாரிடமும் பிடி எடுக்கப்படாமல் அடிக்கப்படுமானால் அந்த இடத்திலுருந்து மூச்சு விடாமலே பாடிக்கொண்டோ அல்லது கூவிக்கொண்டோ ஒடி வர வேண்டுமாம்.

ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடி சந்தையிலே
கிட்டிப்புள்ளூம் பம்பரமும்
கிறுக்கியடி பாலாறு பாலாறு பாலாறு

என்று சொல்லியபடியோ அல்லது "கூகூகூஊஊஊஊஊஊ" அந்த புள் சென்ற இடத்திலுருந்து ஓடியபடி வரவேண்டும். எதிர்த்தரப்பினர் எதை செய்யச்சொல்லி கேட்பார்களோ அதை செய்யவேண்டும் என்றவாறாக இது மட்டக்களப்பு கிராமங்களில் இது நிலவிவருவதை அறியமுடிகிறது.

இது பெரும்பாலும் கோடைகாலத்தில் விளையாடப்படுவதை அவதானிக்க முடியும்.
கிட்டிபுள் விளையாடும் முறை தெரிந்தவர்களுக்கு அது ஏன் என்று தெரிந்திருக்கலாம்.ஏன் கோடை காலத்தில் பொதுவாக விளையாடப்படுகிறதுவெனில் கிண்டப்படும் கிடங்கு அப்போது தான் உறுதியாக இருக்கும். மழைகாலத்தில் அது பலமாக இருக்காது, ஆதலால் கிண்டியபடி தூக்கி எறியப்படும் புள் வேகமாகவோ அல்லது கூடிய தூரமோ செல்லாது என்பதனால் தான்.

நெற்றிப்பொட்டில் கிட்டிப்புள்
அடிக்கடி விளையாடும் விளையாட்டுக்களில் கிட்டிப்புள் இவனுக்கு பிடித்தது. அவனும் என்ன செய்ய பாடசாலை அடிக்கடி மூடப்படும் காலம் அது.சாதரணமாக சிறுவர்கள் விளையாடும் பந்துகளின் வரவே குறைந்திருந்த காலம்.கூடிய பணம் கொடுத்து விளையாடும் உபகரணங்கள் வாங்க வேண்டிய காலம்.அந்த காலத்தில் கூடியளவு நிலைத்திருந்த் கிட்டிக்கொட்டன்தான் இவனுக்கும் இவனுடைய ஊராவீட்டு சிறுவர்களுக்கும் விளையாட்டு.

காலை எழுந்தவுடன் படிப்பு என்று சொன்னதெல்லாம் மாறி காலை தொடங்கி மாலை வரை விளையாட்டு என்றவாறாக கழிந்த காலங்கள்,சிறுவர்கள் தானே அப்போதைய காலத்தின் கடினத்தனமையால் தாக்கப்பட்டும் தாக்கபடாமல் இருந்த காலங்கள், விளையாட்டுடனேயே கழிந்தது.

என்றாலும் இவன் அப்பாவுக்கு இவன் படிக்க வேண்டும் என்ற ஆவல் தான்.அவ்வப்போது படிப்பித்தபடியே இருப்பார்.ஆனாலும் எல்லோரும் விளையாடும்போது "அவனுக்கு எப்படி படிப்பித்தாலும் ஏறாது,அவனுக்கு விளையாட்டிலை தான் கவனம் போகும்" என்றும் அறிந்தவராய் விளையாட அனுமதிப்பார். என்றாலும் கிட்டிக்கொட்டன் விளையாட அனுமதியில்லை.வேறொன்றுமில்லை கண்ணுக்குள் அந்த புள் பாய்ந்துவிடும் என்பதால் தான்.ஆனாலும் அவருக்கு தெரியாமலே விளையாடும் இவன் கிட்டிப்புள் விளையாடுவதில் தேர்ச்சியும் பெற்றான்,மற்றவர்களின் மறுத்தான் அடிப்பதில் பிடி எடுப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அதனால் அவனுக்கும் கிட்டிப்புள்ளில் நல்ல விருப்பம்.

இப்படித்தான் ஒரு நாள் பக்கத்துவீட்டு சதீஷ் உடன் விளையாட்டு இவனுக்கு.வழமையாகவே கூடிய நேரங்களில் அவனுடன் தான் விளையாட்டு.வலு உற்சாகமாக விளையாடும் விளையாட்டுக்கு ரசிகர்களும் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.பக்கத்துவீட்டார் எல்லாம் சேர்ந்து ரசிக்க "மறுத்தான்"களும் கூடிக்கொண்டே போகின்றது. அந்த வேளையில் எல்லோரும் தலையில் கை வைக்குமளவுக்கு ஒரு சம்பவம்.
எங்கு பட்டதோ! எதில் பட்டதோ! என்று எல்லோரும் "என்னடா என்னடா எங்கடா பட்டது" ஓடி வந்தார்கள். இவனோ முகததை மூடி பொத்தியவனாய் சில செக்கன்கள் நிலத்திலே கவிண்டபடி இருந்தான்.
"அது தான் தேப்பன்(தகப்பன்) சொல்லுறதை செய்ய வேணும் எண்டு சொல்லுறது, அந்த மனுசன் இந்த கிட்டிக்கொட்டன் வேண்டாம் என்று தானே அடிக்கடி சொல்லுறவர், இவங்களும் அவருக்கு தெரியாமல்................... இப்ப அவருக்கு எல்லாம் தெரிய வரப்போகுது" என்று சொல்லி நெற்றிப்பொட்டடியில் காயம் இருந்ததை அவதானிக்கிறார்கள்."கட்டுக்கடி மத்தியான நேரம் எவ்வளவு இரத்தம் போகுது என்ன " என்று எல்லோரும் சொல்ல
அவனின் அன்ரி அவனை கிணத்தடிக்கு கூட்டிக்கொண்டுபோய் முகத்தை கழுவிவிட்டு கோப்பி கொஞ்சம் தடவினார்,இரத்த போகுமளவைக்குறைக்கலாம் என்ற எண்ணத்துடன்.அன்ரியின் அவன் மீதுள்ள பாசம் அவன் முதலே அறிந்திருந்தாலும் அன்று தான் மேலதிகமாக உணர்கிறான்.அவனின் தந்தை வந்தால் காயம் வந்ததுமல்லாமல் அவனுக்கு அடி விழப்போகிறது என்பது தான், வழமையாக அவனுக்கு "அப்ப அப்ப சின்ன சின்ன அடிவிழும்போது மறிப்பதுபோல இண்டைக்கும் மறித்துவிடுவோம்" என்று பெரிய திட்டம்.திட்டமும் நிறைவேற "டேய் இனி இந்த கிட்டிக்கொட்டன் தூக்கிறதை நான் காணக்கூடாது", என்று அறுதியும் உறுதியுமான புத்திமதியும் சொல்லப்பட்டது,
என்றாலும் கிட்டிகொட்டனில் இருந்த விளையாட்டு ஆர்வம் விடுமா என்ன?காயம் மாறிவிடவும் கிட்டிகொட்டனால் வந்த நெற்றிப்பொட்டு என்றும் நினைவிலிருக்க
தொடர்ந்தும் இவன் விளையாடிக்கொண்டேயிருந்தான்.

கணக்காலே காதல் கணக்கே வாழ்க்கையாக



காதலிக்க வரம் வேண்டி
மாரடித்து வலம் வந்த
காளியம்மன் அருட்பலனால்
கனிந்த ஒரு சின்ன காதல்,

பக்கத்து வீட்டு பெண்ணவளே
சிக்குவாள் காதலிலென
பொடியனுக்கு தெரியவில்லை -அது
பொண்ணுக்கும் புரியவில்லை

ஊரெல்லாம் அறிந்த பையன்
"கரவு கிரவு" இல்லாதவன்
மரக்காலை தொழிலோடு
பொருள் சேர்க்கும் இளையவன்

பக்குவமாய் வளர்ந்த இவள்
கணக்கிலை சந்தேகமென்றால்
அக்கணமே விரைந்து இந்த
பொடியனிடம் கேட்டிடுவாள்

பொடியனும் என்ன செய்ய
புரியாது என்று சொல்ல வெட்கம்
ஏதோ சொல்லித்தேற்றி
புரியவைப்பான் விரைவாக

எல்லாம் சொல்லித்தரும் -அவனுக்கு மட்டும்
கல்லானதா இந்த கணிதமென
சின்ன சந்தேகம் இருந்தாலும் -இவளுக்கு
செல்ல பேச்சால் கேட்க வெட்கம்

கணக்கும் விளங்கிச்சாம்
கணக்கும் விட்டாச்சாம்
வெட்கமே கூடி வர
காதலும் கூடியது


வீட்டில் காதலுக்கு அடிதான் விழும்
நாட்டுக்கே உதவாதென்று திட்டுதான் விழும்- அதனால்
சிட்டுக்களாய் பறக்கும் வயதில்
ஓடிப்பொயின காதல் குஞ்சுகளாய்

ஊரெல்லாம் ஒரே கதை
"மரக்காலை மணியத்தின் மூத்த மூர்த்தி
முன்வீட்டு பவளத்தின் சின்ன பிள்ளையுடன்
முத்தான காதலென்று"

என்ன செய்ய ஏது செய்ய
அன்பான காதல் எல்லோ
சொந்தத்தில் என்ன பகையென்று
பந்தங்கள் இணைத்துவைக்க தீர்மானம்

என்ன தம்பி காதலாமெல்லோ?
கேள்விப்பட்டமென்று மற்றோர் கேட்க
"இல்லையுங்கோ கணக்கு படிப்பிச்சனுங்கோ
அப்ப குட்டினனுங்கோ காதல் வந்திட்டுது"
காதல் இளவரச மூர்த்தியின் வரிகள் அன்று
காதல் வந்த காலத்தில்
காதலித்த அன்பையே கட்டினான்
காதலுக்காகவே வாழ்ந்தான்
காதலுக்காய் சாகுறான்

இப்ப.............
என்ன தம்பி காதலுகாய் உயிர்விடுறாய்
பென்னம்பெரிய காதலா என்று மற்றோர் கேட்க

உயிர்விட்டேன் அப்போது
சாகுறேன் இப்போது

"இல்லையுங்கோ கணக்கு தானே படிப்பிச்சனுங்கோ
கணக்கு விடுறாள் பாருங்கோ,
நான் உழைச்ச காசுக்கும் கணக்கும் கேட்கிறாள்
கணக்கு கேட்கும் காதலியானதால் உயிர்விடாமல் எதை நான் விட"
குடும்ப மூர்த்தியின் அண்மைய வரிகள்
குடும்பத்துக்காய் சாகுறேன்
குடும்பத்துக்காய் வாழ்கிறேன்



கணக்கு சொல்லிகொடுத்த காதலி
கணக்கே கேட்கிறாள்
கணக்காலே காதலாகி கசிந்தின்று
கணக்கே வாழ்க்கையாக

யாரிடம் என் கதை சொல்ல

" அன்றைய காலை எனக்கு விடிந்தது இதற்காகத்தானா " என்ற கவலையோடு உட்கார்ந்தான் எல்லாம் வெறுத்தவனாய்.எத்தனையோ கஷ்டங்கள் நெஞ்சில் சுமந்தவனாய் ஒருவாறு தன்குடும்பத்தையும் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் ஒருவாறு ஒப்பேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு புலம்பெயர்ந்தவன் இவன். சற்று ஒதுக்குப்புறமான இயற்கையின் அழகு கொஞ்சும் அற்புதமான கிராமத்தில் நற்பண்போடு வளர்ந்தவன் தான் இவன். கல்லூரிப் படிப்பில் கொஞ்சம் கம்மி என்றாலும் மற்றவர்களை மதிக்கும் பெரியவர்களை கனம்பண்ணும் பண்புகளோடு தன் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்ந்த இவன் முத்துக்குமார்.


படிப்பு என்பதும் அதேபோல எந்த செல்வங்களும் இறைவன் எப்படியும் வழங்கலாம் என்பதற்கு இவன் நல்ல ஒரு உதாரணம்.கல்லூரிப்படிப்பில் தேறாதவனாய் இருந்தாலும் கொஞ்சம் தொழிநுட்பத்துறையில் கொஞ்சம் நுட்பமானவன்தான்.அதனாலே அவனில் அவன் பொறியியலாளர்கள் நல்ல அக்கறையாக இருந்தார்கள். அப்படி அவன் திறமை மெச்சுதற்குரியது. இப்படியாக அவன் திறமையால் தெரிவு செய்யப்பட்டவனாய் புலம்பெயர்ந்து வேலைக்கு மத்தியகிழக்கு நாடு ஒன்றிற்கு வந்தான் முத்துக்குமார்.வந்தவனுக்கு எங்கும் தொழில் சுரண்டல்களும் மேலாதிக்கங்களும் எம்மவர்களாலேயே பெருகிக்காணபடுவது கண்டு சற்று சலிப்படைந்தாலும் தன் திறமைக்கு வழிகிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தான் தன் பணிகளை.வேலைத்தளத்தில் குழாய் பொருத்தும் பணி இவனுக்கு.அதில் பல நுட்பங்களையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தி முன்னேற்றம் காணலாம் என்றவாறே அவன் தொழில்பயணம்.


வீட்டிலே உள்ளவர்களில் மிக்க பாசம் உள்ள முத்து அடிக்கடி தொலைபேசியினூடு பேசுவான்,அக்கா தங்கை என்று எல்லாம் பாசத்துடன் பேசி அம்மாவில் கவனம் எடுத்தவனாய் அடிக்கடி பேசுவான்.ஒருதடவை அம்மா என்னடா கவனமாக இருடா,நல்லாக சாப்பிடு என்று எல்லாம் சொல்லும்போது அவன் சிரிப்பான்,"ஏனடா சிரிக்கிறாய்" என்று அம்மா கேட்டாலும் அவன் சொல்லவா முடியும் இங்குகிடைக்கும் சம்பளம் அவனுக்கு குறைவு என்று,"இல்லை அம்மா இங்கு வெயில் ஒன்று தான் அம்மா பிரச்சினை மற்றும் படி சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை எல்லா உதவிகளும் இருக்கு அம்மா" என்று தன் அம்மாவை சாந்தப்படுத்துவான்.இப்படியே ஒரு கொஞ்சக்காலம் ஓட்டியவானாய் அவன்,


இவன் நிறுவனத்தில்(கொம்பனி)ஒரு செயற்றிட்ட பொறியியல்முகாமையாளர்.இவர் அந்த மத்தியகிழக்கு நாட்டுக்கு சொந்தமான மொழியாகிய அரபு மொழி பேசுபவர்.கொஞ்சம் தான் நினைப்பதை இருந்தபடி சாதிப்பார்.உண்மையை சொன்னால் உத்தியோகத்தவர்கள் மீது சத்தம் போடுவதினூடாக வேலையை முடித்துவிடலாம் என்று இவர் மனதில் கர்வம்.அதைவிட சத்தம் போடுவதற்காக சம்பளம் வாங்குகிறார் என்று நிறுவனத்திலுள்ளவர்களின் நகைப்புக்குள்ளாபவர் என்று கூட சொல்லலாம்,
இருந்தாலும் அவர் செயற்பாடுகள் எப்போதும் நிறுவனத்துக்கு சாதகமாக இவர் நிறுவனத்தின் சொந்தக்காரருக்கு ரொம்ப பிடித்தவர்.இதன் மூலம் இவர் தான் நினைப்பதை செய்துவிடுவார்.இதெல்லாம் யாருக்கும் சாதகமாகவோ அல்லது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைவதில்லை என்றாலும் வந்துவிட்டோம் என்ன செய்வது என்றவாறே எல்லோரும் வேலை செய்வது தான் உண்மை






உலகம் ுற்றுவதும்
அதில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும் என்று சும்மா சொல்லவில்லை. ஆனால் அது உலகத்துக்கே வரும் என்றும் யாரும் அறிந்திருக்கவில்லை.
நாடுகள் எல்லாவற்றிலும் பொருளாதார வீழ்ச்சி
,ஆரம்பத்தில் தகவல் தொழினுட்பத்தை தாக்கி அது எல்லா துறைகளையும் தாக்கிக்கொண்டுவந்தது.இது எல்லோர் வேலைவாய்ப்புக்களிலும் எல்லோர் தலைகளிலும் மண் கிள்ளித்தூவும் என்று யார் அறிவார்.ஆனால் அதை சில நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாகக்கூட பயன்படுத்தத்தொடங்கிவிட்டது.யார் யார் தமக்கு ஆதரவாக வேலைசெய்யவில்லையோ ,தமக்கு கீழே யார் யார் எல்லாம் சாதகமாக பணி செய்ய இல்லையோ அவரகளையெல்லாம் அவர்கள் சிரேஷ்ட உத்தியோகத்தவர்களால் பணி நிறுத்தம் செய்ய தொடங்கிவிட்ட காலம் கூட.
என்றாலும் முத்துவுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை.""ஏதோ பொருளாதார வீழ்ச்சியாம்""என்று மட்டும் தான் அவனுக்கு தெரியும்.பணம் வீங்குறது என்றும் அதை பணக்காரர் எல்லாம் பதுக்கினம் என்று எல்லாம் கேள்விப்பட்டான். ஆனால் அதை பற்றி அவன் அலசிக்கொள்ளவில்லை. ஏன் என்றால் நான் நல்லாத்தானே வேலை செய்கின்றேன் பிறகென்ன எனகு கவலை என்று தன் மனதுக்குள்ளே சிந்திப்பவனாய் தொடர்ந்தும் வேலை செய்கிறான்.
ஒரு நாள் தன் அம்மாவுடன் பேசுகிறான்."என்னடா தம்பி............ எங்கடை அப்பாவின் வழியிலை எங்களுக்கு ஒரு மாமா இருந்தாரெடா...... அந்த ஆளின்ரை மூத்த மோன் டுபாயிலையெல்லே வேலை செய்தவன்,.............அவனை வேலை செய்தது போதும் எண்டு சொல்லி வீட்டுக்கு அனுப்பிபோட்டாங்களாமெடா?.....என்ன கதையெடா இது????????? " என்று கேட்க அவனுக்கு அதை எப்படி சொல்வது என்று விளங்காதவனாய் முழித்தான்.
"எனக்கே விளங்க இல்லை இதுக்கு என்ன காரணம் என்று ஏதோ பொருளாதாரம்,பணம்,பொக்கிஷம் என்று கனக்க சொல்லுறாங்கள் இதை நான் எப்படி அம்மாக்கு விளங்கபடுத்திறது" என்று தான் அந்த முழிப்பு. என்றாலும் ஒருவாறாய் "அம்மா.......... அது அவர் கட்டுறதுக்கு இருந்த கட்டிடம் கட்டாமல் நிப்பாட்டி போட்டாங்கள் அது தானாக்கும்" என்று சொல்லி "அவருக்கென்ன படிச்சவர்தானே எங்கை என்றாலும் வேலை எடுத்துப்போடுவார்" என்று சொல்லுவது மட்டுமல்லாமல் அடிக்கடி அவர் வேலை எடுத்திட்டாரா என்று குசலம் விசாரிப்பான்.
இப்படியே காலம் ஒடுகிறது, முத்துவின் திறமைகளும் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது.சந்தோசமும் கூட கூட அவன் தொடர்ந்தும் வேலை செய்கிறான்



ஆனால் அன்றைய காலை அவனை இப்படித்தாக்கும் என்று அவன் எண்ணவுமில்லை.வழமைபோலவே சரியான நேரத்துக்கு வேலையை தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கும் எல்லாம் வேலைகளையும் அடுக்கெடுத்துக்கொடுத்தும் வேலையையும் ஆரம்பிக்கிறான்.அன்று அந்த பெரியவர் கட்டடபகுதிக்கு விஜயம் என்று பரவலாக பேசப்படுகிறது.எல்லோரும் அவதானமாகவும் அதே போல அந்த பெரியவர் வந்து பிழை ஏதும் கண்டு பிடிப்பவர் ஆதலால் அதை எல்லாவற்றையும் தவிர்த்தவாறே பணி செய்கின்றனர்.முத்துவும் எல்லோர்போலவும் தானுமாக பணி செய்கிறான்.
பெரியவரும் வருகிறார்,ஏணிக்கு மேலே ஏறி நின்றவன் முத்து.பெரியவரை கண்ட பின் மெல்லவாக கீழே இறங்கி வது "குட் மோனிங் சார்" என்று தன் காலை வணக்கம் கூறியவனாய் தன் பணியைப்பார்க்க பெரியவர் அவனை மேலும் கீழுமாக பார்த்தார்.

கொஞ்சம் தள்ளி சென்றவர் திரும்ப வந்து "ஹலோ இங்க வா,என்னை வந்து நீ சந்திக்க வேணும்" என்று சொல்லி விட்டு அவர் போய்விட்டார். இவனுக்கு "அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு" "ஏன் என்னை வர சொல்லியிருப்பார்" என்றவாறே சிந்தித்தவனாய் அவர் அலுவலகம் போன பின் அவரிடம் போனான்.
அங்கு அவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவன் கனவிலும் கருதவில்லை.
""சார் என்னை வர சொன்னீர்கள்"" என்றவாறே அவன் பேச ஆரம்பித்ததும் அவனை தொடர்ந்தும் பேச அனுமதிக்காதவராய் "நீ என்ன உன்மனதில் நினைக்கிறாய்" என்று ஆங்கிலத்தில் கேட்க அவனுக்கும் ஒன்றும் அறியாதவனாய் முழிக்கிறான்."என்ன சார்" என்று அவனும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்க "நிறுத்து உனக்கு உன் சம்பளத்தில் இரண்டு மணித்தியாலங்கள் வெட்டப்படும், வேலை செய்யும் போது வேலை செய்து கொண்டிரு, குட் மோனிங்க் சொல்ல சொல்லி நான் கேட்டனா?" என்று அவர் பேசிக்கொண்டே போக அவனுக்கு அதை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை." சார் அதற்கு ஏன் சார் " என்று சொல்லி முடிக்க முதல் "என்ன நீ பேசுறாய் சிரேஷ் உத்தியோகத்தர்களின் உத்தரவு உனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ன? நீ பணி நிறுத்தப்படுகிறாய் என்று சொல்லி வெளியே போ என்று அவனை துரத்தினார். அவனும் ஒன்றுமே பேசாதவனாய் எங்க இண்டைக்கு நான் முழிச்சு வந்தனோ என்று சிந்தித்தவனாய் வெளியே போனான்.
"குட் மோனிங்க் சொன்னது இப்படி தப்பாக போச்சே......... அப்ப நான் அந்தக்காலம் படிச்சது பெரியோரைக்கண்டால் மரியாதையுடன் கதைப்பதும் பணிவுடன் பேச சொன்னதும் தப்பா?" அப்ப அந்த ஆச்சி டீச்சர் சொல்லிதந்தது தப்பா"" என்ன என்று தலையை போட்டு குழப்பியவனானான்.இப்படியே குழம்பிய படி இருக்க நிறுவனமும் எல்லாம் சரி செய்து முத்துவை விமான நிலையம் வரை அழைத்துச்சென்றது அவனை வீட்டுக்கு அனுப்ப.
விமான நிலையம் உட்சென்றவனாய் அன்றைய காலை எதற்காக விடிந்தது என்று வாழ்க்கையே வெறுத்தவனாய் என் கதையை யாரிடம் சொல்ல என்று மனதிற்குள்ளே அழுதவனாய் விமானத்தில் ஏறத்தயாரானான்.

சொந்தங்கள் பலரகம்


சொந்தம்

சொந்தங்கள் கூடி வாழ்ந்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சிதான், உறவுமுறை சொந்தமாக இருந்தாலென்ன அல்லது வேறெந்த முறையில் வந்த உறவாக இருந்தாலும் அது சுகதுக்கங்களை பரிமாறிகொள்வதினூடாக வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் உறவுமுறை சொந்தங்கள் என்றால் சிலர் நம்பி கூடியளவு உறவாடுவதும் அவர்களை நம்பி வாழ்வதும் சாதரணமானதே,சிலருக்கு உறவுமுறை சொந்தங்களைவிட உறவல்லாதோரின் நட்புகளும் சொந்தமாக மாறிவிடுவதுமுண்டு,எது எப்படியாகவிருப்பினும் சொந்தங்கள் கூட்டி பந்தங்கள் பெருக்கி வாழ்தல் மகிழ்ச்சியைக்கூட்டும் என்பதில் ஐயமில்லை.

இவன் இருபத்தியிரண்டு வயதில் ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் தகமையடைந்தவன். முகாமைத்துவ உதவியாளர் தேர்வில் சித்தியடைந்ததால் இந்த வாய்ப்பு.அதுவும் அவன் விண்ணப்பித்து கிடைத்ததுவுமல்ல.அவனுடைய அம்மா தானாகவே விண்ணப்பித்ததால் தன் உயர்கல்வியைத்தொடர்ந்து கொண்டிருந்தபோதும் அந்த தேர்வில் பங்குபற்றியிருந்தவன்.
"கோழி மேய்ச்சாலும் கோர்ணமேந்தில மேய்க்கவேணும்" என்று விடாபிடியாக நிற்கும் சமுதாயமகையால் கிடைத்த வேலையை விடக்கூடாது என்று எல்லோர் தரப்பிலும் இறுக்கமான வேண்டுகோள் இவனுக்கு.""யாராவது அரசாங்க வேலையை விடுவாங்களோ" உனக்கென்ன ஒரு விசயமும் விளங்காதோ"" என்று எல்லோரும் அப்படியும் இப்படியும் சொல்ல ஒருவாறாக முடிவெடுத்து நேர்முகத்தேர்வுக்கும் சென்று ஒரு முகாமைத்துவ உதவியளனாக தெரிவு செய்யப்பட்டான் இவன்.தெரிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் கல்வியை தொடந்தவனாய் அலுவலகப்பணிகளை பொறுப்பேற்றான்.இருந்தாலும் உயர்கல்வி முடிந்த பின் இந்த வேலையை கைவிடுவதான எண்ணத்துடனும் பெரியோர்களின் ஆமோதித்தலுடன் தான் பொறுப்பேற்றான்.

இவனின் முதல் அலுவலகம் கொஞ்சம் பிரபல்யமான திணைக்களமும் அதேபோல, எல்லோருக்கும் முக்கியமான திணைக்களமும் கூட,இதனால் எப்போதும் அது ஜனத்திரள் கூட்டித்தான் இருக்கும்,அப்படியான எப்போதும் ஓய்வில்லாத திணைக்களத்தில் வேலை ஆரம்பம். இருந்தாலும் இவன் உயர்கல்வியின் விரிவுரைகளுக்கும் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியது, இப்படியாக கல்வியும் ஓடுகிறது,வேலையும் ஓடுகிறது.

பிரபல்யமான திணைக்களம், முக்கியமான திணைக்களம் என்றால் அங்கு எல்லோரினதும் கவனிப்புக்களுக்கும் குறைவில்லை.எல்லோரினதும் பார்வைகளும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.இங்கு பார்வை என்ற சொல்லுக்குள் ரொம்ப அர்த்தம் இருக்கிறது. மக்களிடம் சுரண்டல்களும் ஏமாற்று வித்தைகளும் கூடியதாக கணிக்கப்பட்டு அந்த சம்பவங்களை தவிர்க்கவென சிறப்புக்குழுவே அங்கு இயங்கியிருந்தது.அப்படியான திணைக்களத்தில் உட்கார்ந்தான்.

இவர் பெரியவர்

இவர் ஒரு பெரியவர்.இவர் அந்தக்காலமே கொழும்புக்கு வந்து தொழில் பார்த்து இளைப்பாறும்போது ஒரு உதவி அத்தியட்சகர் என்று தான் அவனுக்கு தெரியும்,ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணி புரிந்தவர்.அவரில் அவன் மட்டுமல்ல பொதுவாக எல்லோரும் ஒரு நல்ல மதிப்பு.கொஞ்சம் வயதிலும் கூடியவர்,கொழும்பிலே நீண்ட காலம் இருப்பவராதலால் உதவி ஒத்தாசை ஏதும் செய்வார் என்று ஊரில இருந்து வரும் ஆக்கள் எல்லாம் அவருடன் மிக அவதானமாகத்தான் பழகுவார்கள்.இல்லாவிட்டால் நீண்டகால கொழும்பு இருப்பால் ஏதும் பண்ணிவிடுவாரோ என்று மிக அவதானம்,இதெல்லாம் இவனுக்கு பின்னர் தான் விளங்கியது.

ஊரில் தெரியாத சொந்தங்கள்
ஒரு நாள் ஒரு தொலைபேசியழைப்பு இவனுக்கு.அது வேறு யாருமில்லை.அந்த அத்தியட்சகர் தான். யார் யார் என்று தன்னையெல்லாம் அடையாளம் காட்டியவராய் "தம்பி ஒருக்கா எங்க வீட்டு பக்கம் வரலாமே, எனக்கு தெரியாது நீங்க எல்லாம் இங்க கொழும்பிலை எண்டு" என்று அன்பான அழைப்பை கொடுத்தார் இவனுக்கு.
பெரியவர் ஒருவரின் அழைப்பு அதுவும் என் தொலைபேசி இலக்கம் தேடி எடுத்து அழைப்பெடுத்திருக்கிறாரே என்று சிந்தித்தவனாய் வரும் நாளும் சொல்லி அந்த நாளும் அவரின் வீட்டுக்கு போனான் இவன்.

அன்பு உபசாரம்

"வாங்கோ தம்பி வாங்கோ" இவ்வளவு ஒரு பெரியவனாய் வளர்ந்திட்டீங்க என்ன" என்று அன்பு வார்த்தைகள் பலகூறி பெரிய வரவேற்ப்பு.பெரியவருக்கு மரியாதையுடன் ஊர்க்கதைகள் எல்லாம் பேசிய இடையில் "தம்பி நீங்க அந்த திணைக்களத்திலை தானே வேர்க்(வேலை) பண்ணுறீங்க" நல்லதாக போச்சு" நானும் எனக்கு அப்பிளிக்கேசன் போட்டிருக்கிறன்" என்று சொல்ல ஏன் நீங்க என்னிடமே கொடுத்திருந்தால் நான் வேகமாக எடுத்து கொடுத்திருப்பனே என்று இவனும் அன்பாக சொன்னான். "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்களுக்கு தெரியாம போச்சு, பிறகுதான் எங்க ரமேஷ் சொன்னான் நீங்க அங்கை வேர்க் பண்ணுறீங்க" என்று, "அவன் தான் உங்க நம்பர்(இலக்கம்) தந்தான்" என்றார் அந்த சொந்தக்கார பெரியவர். "அப்படியா சரி பிரச்சினை இல்லை, உங்களுக்கு இல்லாததா" என்று அன்புடன் வார்த்தைகள் பரிமாறி அதற்குரிய எல்லா தரவுகளையும் எடுத்துகொண்டு தந்த தேநீரையும் குடித்துவிட்டு கிளம்பினான் இவன்.

அடுத்த நாளே அவன் அலுவலகம் சென்று அந்த விண்ணப்பித்த படிவத்தை தனியே எடுத்து அதை வேகமாக பெற்றுகொடுக்க தன்னாலான பணிகள் எல்லாம் முடித்து விட்டு அது வரும் வரை காத்திருந்தான்,வேகமாக பெற்றுக்கொடுப்பது என்பது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பு இருக்கும் என்பது மட்டுமல்ல யார் யாருக்கு எல்லாம் எடுத்துக்கொடுக்கிறார் என்று எல்லாம் சிறப்புக்குழு அவதானித்துக்கொண்டே இருக்கும், இருந்தாலும் இந்த பெரியவர் சொந்தக்காரர் என்பதால் எந்தவித சிக்கலும் வராது என்பது இவன் எண்ணம்.

மீண்டும் ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு, இது அலுவலகத்தில் இருக்கும் போது வந்தது,அலுவலகத்தினுள் பொதுவாக கைத்தொலைபேசி பாவிக்க கூடாது.இது ஆணையாளரின் உத்தரவு,ஆகவே அந்த அழைப்பு வந்த நேரம் உதவி ஆணையாளரின் அழைப்பு இவனுக்கு தன் அறைக்கு வரும்படி.அப்போது அவன் தொலைபேசி அழைப்பை துண்டித்தவனாய் உள் சென்றான், அவருடன் சில வேலைகள் இருந்ததால் கைத்தொலைபேசியை நிறுத்திவிட்டு தொடர்ந்தும் அவரின் வேலைகளை முடித்துவிட்டு தொலைபேசியை மீண்டும் அழுத்தினான்.
அந்த வேளையில் மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு. இந்த தடவை அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற நோக்குடன் அழுத்தினான்.

இவன் மனுசன் இல்லை

"அடெய் நீயும் ஒரு மனுசனா என்னடா நினைக்கிறாய்? எப்படா நீ எல்லாம் கொழும்புக்கு வந்தனீங்கள் ஏனடா நான் போன் பண்ண கட் பண்ணினாய் அஹ் அஹ் " என்றவாறாக தொடர்ந்து ஏச்சு நீண்டு கொண்டே போனது. "இல்லை அங்கிள் அது நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............ உங்கடை நம்பர் எண்டு தெரியாது" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் என்னைப்பற்றி உனக்கு தெரியாதுடா வேலையே இல்லாமல் பண்ணுவன், நீங்க எல்லாம் எப்படா கொழும்பு பார்த்தனீங்க அந்தக்காலமே கொழும்புக்கு வந்தனாங்கள் நாங்கள்" என்று தொடர்ந்தார் பெரியவர்.இவர் தப்பாக உணர்ந்துவிட்டார் என்று சிந்தித்தவனானாலும் இவரின் கடுமையான வரிகள் இவனை சுட்டது."அங்கிள் எனக்கு இப்ப அறுபது வயதாக இருந்தால் நீங்க சொல்வது சரி" என்று சொல்லிவிட்டு துண்டித்தான் அழைப்பை.

கொழும்பு பெரிசு

உன்மையில் சிலருக்கு கொழும்பிலே இருக்கின்றோம் நடக்கின்றோம்,சிரிக்கின்றோம்,படிக்கின்றோம்,படிப்பிக்கிறோம்,சாப்பிடுகின்றோம் என்று பெரும் கர்வம் கூடிய சில தாழ்வான சிந்தனைகள்,என்ன செய்வது அறியாமையின் உச்சகட்டங்கள்,
இருந்தாலும் தேவையில்லாத ஏச்சை கேட்கத்தேவையில்லை என்றவாறே அழைப்பை துண்டித்த இவனுக்கு அதிர்ச்சி வைத்தியங்கள் காத்திருந்தது,திடீரென்று உதவி ஆணையாளரிடம் இருந்து அழைப்புவந்தது,
அவர்கள் எல்லாம் சகோதர மொழிகள் பேசுபவர்கள், நேரடியாக சென்றான் இவன்," என்ன உங்களை பற்றி தவறான விடயங்கள் வந்திருப்பதாக அவர் சொன்னபோது இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,என்ன என்று இவன் கேட்க "நீங்க யாரிடமோ காசு லஞ்சமாக வாங்கினீர்களா அவருக்கு அந்த சேவையை செய்து கொடுக்க" என்று கேட்டார் சின்ன சிரிப்போடு,ஏனென்றால் அவரின் நம்பிக்கைக்குரியவனாக இவன் வேலை செய்து வந்ததால், "இருந்தாலும் "உங்களை பற்றி இப்படி ஒருவிடயம் வந்திருக்கிறதே" என்று கேட்க யார் அப்படியான தகவல் தந்ததாக இவன் கேட்டான்.அப்போது அந்த அன்பு மொழிபேசிய வீட்டுக்கு கூப்பிட்டு தேநீர் தந்த அன்பரின் நாமம் தான் சொல்லப்பட்டது, அப்போது இதுதான் நடந்தது என்றவாறே சொல்லி முடிப்பதற்குள் அந்த அன்பர் மீண்டும் தொலைபேசி அழைபெடுக்கிறார் இவனின் அதிகாரிக்கு.இவனுக்கு முன்னிலயில் அந்த அதிகாரி கொடுத்தார் ஏச்சு, "நீங்க ஒரு பெரிய அத்தியட்சகர் என்று சொல்கின்றீகள் பிறகு ஏன் காசு கொடுத்தீர்கள் என்று சொல்கின்றீர்கள் உங்களுக்கே வெட்கம் இல்லையா?"
என்று ஏச இவனின் சொந்தக்கார பெரியவர் அழைப்பைத்துண்டிக்க "நீங்க போய் இருங்க" என்று சொல்லி விட்டார் இவனின் அதிகாரி.

ஆணையாளர் முன்னிலயில்




"என்னப்பா இது சொந்தக்காரர் என்று உறவுகொண்டாடி இறுதியில் இப்படி செய்கிறாரே" என்று மனதில் சிந்தித்தவனாய் தன் இருக்கையில் உட்கார்ந்தான்,
மீண்டும் ஒரு அழைப்பு அவனுக்கு, இப்போது ஆணையாளரிடமிருந்து,
"என்ன வேலை இந்த மனுசன் செய்யுது இவரைத்தான் நம்ம சொந்தங்கள் எல்லாம் நல்லவரென்று சொல்கிறார்களோ" என்று சிந்தித்தவனாய் சென்றபோது முதலில் யாருக்கு அவர் அழைப்பெடுத்தாரோ அந்த அதிகாரியும் ஆணையாளரும் இதைப்பற்றி கதைத்தவர்களாய் இருந்தார்கள்.இவனுக்கு நேரடியாக இருந்த இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் இவனின் மீதுள்ள நம்பிக்கையால் எந்தவித விசாரணையும் இன்றி தப்பித்துக்கொண்டான் இவன்.
என்றாலும் "இவர் ஏன் இப்படிச்செய்தார்" என்பதற்க்கு மட்டும் விளக்கம் கேட்டார் ஆணையாளர் இவனிடம், இவனும் "அவரின் அழைப்பு வரும் போது துண்டித்தே அவருக்கு கோவம் போல" என்று விபரமாக விளக்கியவனாய் விடைபெற்றான் ஆணையாரிடமிருந்து.

சொந்தம் என்று பார்த்து அவரின் தொலைபேசியழைப்புக்கு மதிப்புகொடுத்து,வீடு சென்று சொந்தம் மதித்து,அவரின் விண்ணப்பம் தனியே பிரித்தெடுத்து,வேகமாக்கிய பின்
கிடைத்த நல்ல பரிசு, இந்த சொந்தமும் தேவைதானா? பலரகமான சொந்தங்களில் அவதானமாக இருக்க வேண்டிய சொந்தம் இது என்று இப்போதும் நினைப்பான் இவன்.