வெண்பனிதேசத்தில் சிறப்பாக நிகழ்ந்த “தமிழர் விழா 2010”

நீண்டகாலத்திற்குப்பிறகு கரவைக்குரல் தன் பதிவுகளோடு சந்திக்க தயாராகிறது என்ற மகிழ்வுடன் கடந்த சில நாள்களாக சில தொழினுட்ப தடங்கல்களினால் பதிவுகளில் சில தாமதங்கள் காணப்பட்டதையும் இன்றும் அந்த தடங்கலுக்கு மத்தியில் உங்களை சந்திக்க தயாராகிறது என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது.இந்த விடயம் முதலிலேயே சொல்லப்பட்டதில் காரணமும் இருக்கிறது. கூடிய காலம் காணவில்லையே என்று பலதரப்பாலும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டேயிருந்தமைதான். அதைவிட இன்னுமொருசாரார் நகைச்சுவையாகக்கூட ”யூகே போனவுடன் பிசி ஆகிவிட்டீர்களோ,” என்று பகிர்ந்துகொண்டமையும் இங்கு சொல்லத்தான் வேணும். கரவைக்குரலின் வரவு காணாது அன்புகூட்டி வரவேற்போடு கேட்டுக்கொண்டிருந்த அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் கரவைக்குரல் நன்றி பாராட்டுகிறது.

சரி
அண்மையில் வெண்பனிதேசத்தின் இங்கிலாந்து மண்ணில் குரொய்டன்(CROYDEN) என்று தமிழ் மக்கள் நிறைந்து வாழும் ஒரு இடத்தில் தமிழர் விழா கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதைப்பற்றிய ஒரு சின்ன பார்வை, அங்கு வந்திருந்தவர்களின் கருத்துக்களின் தொகுப்பாகவும் ஆக்கபூர்வமான அமைந்துவிட்ட நிகழ்வின் சில சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம்.

குறொய்டன்(CROYEDEN Tamil) வாழ் தமிழ் மக்களின் சிந்தனையில் எம் அடையாளங்களான கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிக்காக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவும் அல்லலுறும் எம் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஏதாவது பல உதவிகள் செய்யவேண்டும் என்ற நல்ல சிந்தனையிலும் உருவாகின்ற அமைப்பான குறொய்டன் தமிழர் சமூக அமைப்பு (CROYDEN TAMIL COMMUNITY ORGANIZATION) தமிழர் விழாவோடு ஆரம்பிக்கிறது. முற்கூட்டியே இப்படியான ஒரு அமைப்பு தங்களுக்குள்ளேயே இயங்கி வந்ததாக குறிப்பிட்ட நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் ”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கு அமைவாக குளிர்ச்சியுடன்,மகிழ்ச்சி பொங்கும் இந்த தை மாதத்தில்,பொங்கல் விழாக்காலத்தில் இந்த தமிழர் விழா ஆரம்பத்தோடு இதன் செயற்பாடுகளை முடுக்கிவிட ஆரப்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.காலத்தின் தேவைகருதியும் எம் பண்பாட்டுக்கோலங்கள் எங்கும் அழிவுறாது இருக்க வேண்டும் என்ற உந்துதலே இதற்கு முக்கிய காரணம் என்று மேலும் குறிப்பிட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மாலை வேளையில் இருநூற்றுக்கும் அதிகமான அவ்விடத்தில் வாழும் எம்மவர்களின் சபைதனில் நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வுகளை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நிகழ்வு ஆரம்பித்து இடையில் கலந்து நிகழ்வுகளை ரசிக்கக்கூடியதாக சந்தர்ப்பம் கிடைத்தது.
பல்லியம் என்று சொல்லப்படும் பல் வாத்திய இசை சிறுவர்களினால் இசைக்கப்பட்டது. ”மருதமலை மாமணியே முருகையா ’ என்ற பாடலை வயலின் இசைக்கருவிகளால் இசைத்துக்கொண்டிருந்தார்கள்.சிறுவர்களால் மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்டது.இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் யாதெனில் இங்கு பிறந்த வளர்ந்த எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் பிடிப்போடு எதிர்காலத்தில் சிறந்த ஒரு கலைஞனாக வரக்கூடிய செல்வங்களாக அதை இசைத்தமையாகும்.சிறுவர்கள் என்பதால் வரும் சில ராகங்களின் ஸ்வரங்களின் ஸ்தானத்தை சரியாக அடையமுடியவில்லை எனினும் சபை மிகவும் ரசிக்கும்படியாக தங்கள் இசைக்கச்சேரியை சிறப்பாக செய்து முடித்தனர்.பல்லிய நிகழ்வுகள், பரத நாட்டியங்கள், மற்றும் வேகநடனங்கள் என்று நிகழ்வு பதினொரு மணி தாண்டும் வரை நடந்துகொண்டேயிருந்தது,
குறிப்பாக குமரிகளின் கும்மி நடனம்,ஆடவர்களின் நடன நிகழ்வு இறுதியில் தில்லானா என்று சொல்லப்படும் கலை நிகழ்வுகளின் இறுதியில் வரும் ஒரு அங்கம், இவையெல்லாம் நிகழ்வைச்சிறப்பாக்கியது. இவற்றையெல்லாம் நெறியாள்கை செய்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றாலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக சிலவற்றை எதிர்கால நிகழ்வுகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக இறுதியில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சிந்திக்கிறேன்.
அதைவிட நிகழ்வின் இடையில் தாயகத்தின் அல்லலுற்ற மக்களுக்களின் உணர்வுகளைப்பிரதிபலிக்கும் இசைக்குறுந்தட்டு வெளியிடப்பட்டது. கவிஞர்கள் வேணுகோபால்,ஈழக்கதிரவன்,
ராஜமனோகரன்,சிவா, மற்றும் சரவணன் ஆகியோரின் கவிவரிகளால் ”எழுந்து வா தமிழா” என்பதை கருப்பொருளாக தாங்கி வந்த பாடல்கள் இசை இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டது.வரவேற்கக்கூடியது.
எல்லாவற்றிக்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” என்று ஒரு அம்சமாக தாயகத்தின் அல்லலுறும் மக்களுக்கு அமைப்பு எந்த வகையில் தன் உதவிகளை செய்யப்போகிறது என்ற அடிப்படையில் ஒரு விவரணத்தையும் நிகழ்வின் இடையில் மேற்கொள்ளப்பட்டது. எந்த வகையில் உதவிகள் செய்யப்படலாம் என்ற அடிப்படையிலும் அல்லுறும் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு சிறக்கும் படியாக செய்யக்கூடிய நற்பணிகள் பற்றியும் அதில் உணர்த்தப்பட்டது. நிகழ்வை அறிவிப்பாளர் ஜெகன் மற்றும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் ( என்று தான் நான் நினைகிறேன்) தாயாபரன் அவர்களும் விவரித்தார்கள். முக்கியமான காலகட்டத்தில் இப்படியான இந்த விவரணம் அமைந்திருந்தமை எல்லோர் உணர்வுகளையும் தட்டியது.
தொடர்ந்தும் நிகழ்வில் இந்த நிகழ்வின் சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில் படைப்பாளி தீனா மற்றும் கவிஞர் ராஜமனோகரன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவங்கள் நிச்சயமாக உற்சாகங்களை கொடுக்கும் என்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அப்படியான நிகழ்வுகளின் வரவுகளை அதிகரிக்கும் என்றால் ஐயமில்லை.அவற்றின் மூலம் எங்கள் கலாச்சார நிகழ்வுகள் நின்று நிலைக்கும் என்றால் மறுப்பதற்குமில்லை.

நிகழ்வைப்பற்றி அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன்
அவர்கள் குறிப்பிடுகையில் “ இந்த அமைப்பை நாம் உருவாகியதன் நோக்கம் புலம்பெயர்ந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் எம் தமிழர்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியானதும் தெளிவானதுமான ஒரு சமூக அமைப்பாக மாறுவதுடன் அதன் மூலம் எங்கள் தாயக உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் பலத்தையும் வழங்கி அவர்களையும் ஓர் உறுதியான நிலைக்கு கொண்டுவருவதற்கேயாகும்’ என்றார்.
அதோடு மட்டுமல்லாமல் “ மிகக்குறுகியதான காலப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் தாயக மக்கள் மத்தியிலும் செயல்பட்டு வருகிறோம்.இதற்குத்தரும் எல்லையில்லாப்
பேராதரவு மேலும் வலுவடையச்செய்வதோடு பெரு நம்பிக்கையையும் ஊட்டும்” என்று பெருமை கொண்டார் அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன் அவர்கள்.

நிகழ்வு பதினொரு மணியையும் தாண்டி நடந்து கொண்டேயிருந்தது. பல்வேறு சின்னஞ்சிறார்களும் நடுத்தர வயத்து சிறார்களும் நிகழ்வை வெகு உற்சாகமாக நடாத்திக்கொண்டேயிருந்தனர்.குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சில தவிர்க்கக்கூடிய விடயங்களை இங்கு சொல்லத்தான் வேண்டும். மேடை நிகழ்வுகளில் இயல்,இசை,நாடகம் என்ற வரிசையில் முத்தமிழ் நிகழ்வுகளாக அமைதல் நிகழ்விற்கு சிறைப்பைத்தரும் என்ற அடிப்படையில் பாடல்களும் நடனங்களும் அமைந்திருந்தன.என்றாலும் எந்த வேளையிலும் சபை நிகழ்வினால் சலிப்படையாமல் நிகழ்வை விறு விறுப்பாக்கும்படியாக நிகழ்வை கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு விழா ஒழுங்கமைப்பாளர்களையே சாரும்.பல்லிய நிகழ்வுகளால் ஒருபோதும் சபை சோர்ந்துவிடாது, ஆனால் தொடர்ந்தும் பல்லிய நிகழ்வாகவே அமையுமாக இருந்தால் நிச்சயமாக ஒருவிதமான சலிப்பை சபைக்குத்தரும் என்றால் அது உண்மைதான்.அதேபோல நிகழ்வில் இசைக்கப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு பாடல் பல்வேறு தடவைகள் கேட்ககூடியதாக இருந்தமை இன்னொரு விதமான சலிப்பைத்தந்தது. தொடர்ந்து நடன நிகழ்வுகள் மட்டும்தான் தமிழர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளா என்ற கேள்விகூட சபையிலே கேட்கக்கூடியதாக இருந்தது.பரத நாட்டியங்களை அடிப்படையாக வைத்தே நாட்டிய நாடகங்கள் இருக்கின்றன. பல்வேறு நடனக்கலைஞர்களைக்கொண்டதாக அமைந்திருந்த நிகழ்வில் அவற்றைப்படைத்திருக்கலாம்,நடனக்கலைகளை முறைப்படி கற்கும் சிறுவர்கள் பலர் நிகழ்ச்சிகளைப்படைத்தமையை உணர முடிந்தது. என்றாலும் திரும்பத்திரும்ப ஒரே கலைஞர்களே மேடைக்கு வந்து கொண்டிருந்தமையும் ஒரேவகையான பாடல்களுக்கே நடனம் ஆடிக்கொண்டிருந்தமையும் சலிப்பைத்தந்தது,அதைவிடுத்து தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளாக சகல கலைஞர்களையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்ட நிகழ்வுகளைப்
படைத்திருக்கலாமே என்பது தான் எல்லோருடைய எண்ணமுமாக இருந்தது.
மேலும் எம்மவர்களின் தமிழர் விழாவில் திரும்பத்திரும்ப வேக நடனம் மேடைக்கு அவசியமா? என்ற கேள்வியும் இருக்கிறது.சினிமாக்களின் இடையில் சில குத்துப்பாடல்களுக்கு ஆடுவதைப்போல ஒருபாடலுக்கு மட்டுமல்ல பல தடவைகள் எம் நடுத்தர வயது கலைஞர்கள் பாடல்வரிகளின் அர்த்தங்களுக்கே நளினம் கொடுத்து ஆடுவதெல்லாம் தேவைதானா? அதுவும் பொங்கலோடு வரும் தமிழர்விழாவில் எம்கலை வளர்ச்சிக்காக நடாத்தும் நிகழ்வில் இவற்றின் அவசியம் என்ன? இதில் சொல்லப்படும் எம் பண்பாட்டு விழுமியம் என்ன? இப்படியான பல கேள்விகள் எல்லாம் அங்கு மனதில் கேட்டவை, வாய் நுனியின் உச்சரிப்பில் வந்து சென்றவை. அதுமட்டுமல்லாமல் நிகழ்வைத்தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஜெகன் அவர்கள் பல காலங்கள் எம் கலாச்சார நிகழ்வுகளோடு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்திருக்கிறேன்.நிச்சயமாக நிகழ்விற்காக கலந்துகொண்ட ஒத்திகையில் கூட நிகழ்வுகளின் நெறிப்படுத்தல், நிரல் ஒழுங்கமைத்தல் மற்றும் கூடிய நேரம் மேடையை கைப்பற்றும் நிகழ்வுகள் மற்றும் ஒரே நிகழ்வுகளினால் சபையில் வரும் சலிப்புத்தன்மை போன்றவற்றை உணராமல் விட்டுவிட்டாரா? எல்லாவற்றிற்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” மற்றும் ”எழுந்து வா தமிழா” என்று பல்வேறு சேதிகளை சொல்லும் இந்த தமிழர் விழாவில் இப்படியான நிகழ்வுகளை தவிர்க்க காரணங்கள் பல இருக்கின்றன என்று எல்லாம் சிறிய சிறிய (இதெல்லாம் சிறிய விடயமா என்று சிரித்திருப்பீர்கள் இல்லையா) தவிர்க்கக்கூடிய விடயங்கள் குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்.
மேலும் நடனங்கள் பாடல்கள் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால் நடனங்களில் பலவகைகள் இருக்கின்றன, நாடகங்களில் பலவகை இருக்கின்றன இவையெல்லாம் சபையோரை மனங்கோணவைக்காத நிகழ்வுகள்,வில்லிசைகள் பட்டி மன்றங்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்வுகள் நடனங்களில் காவடி,கும்மி,கோலாட்டம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.வளர்ந்துவரும் சிறார்களின் திறமைகளை இனங்கண்டு வெளிப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பை பொறுப்பெடுத்து அவற்றை சரியாக இனங்கண்டு கலைஞர்களை மேடைக்கு கொண்டு வந்தமையும் வழி நடாத்தியமையும் இந்த அமைப்புக்கு சிறப்பான பாராட்டை கொடுக்க வேண்டும்.
அதேபோல எம் தமிழர்களின் விழாவில் இப்படியாகத்தான் நிகழ்வை ஒழுங்கமைக்கவேண்டும் என்றும் இந்த நிகழ்வின் நோக்கத்தை இலக்காக கொண்ட நிகழ்ச்சிகளின் படைப்புக்கள் அமைய வேண்டும் என்றும் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் எண்ணவேண்டும்.. உண்மையில் அந்த அடிக்கடி வந்த வேகநடனங்களைக்கூடத் தவிர்த்து நிகழ்வில் சபையின் ரசனைகளுக்காக ஒரு நிகழ்வோடு நிறுத்தியிருக்கலாம்.அதோடு எம்பண்பாட்டு கலை நிகழ்வுகளை அந்த கலைஞர்களால் படைத்திருக்கலாம்.
இப்படியான சில தவிர்க்கவேண்டியவற்றைத்தவிர முற்றிலும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.படைத்த கலைஞர்கள், நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் என்று எல்லோரின் சிறப்பான முயற்சி எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
சிறுவர்களின் இந்த கலை ஈடுபாடுகள் மற்றும் மேடை நிகழ்வுகளில் சிறப்பாக வெளிக்கொணருதல் என்பன எம்மினத்தின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்தில் ஆணித்தரமாக என்றென்றும் கால் பதித்தேயிருக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமென்றால் எந்தவிதமான மறுபேச்சிற்கும் இடமேயில்லை.அந்த கருத்தை மனதிலெடுத்து அதற்காக நிகழ்வுகள் கூட்டி விழாவெடுக்கும் எம்மவர்கள் தமிழர்களின் உணர்வுகள் மற்றும் கலைவிரும்விகளின் நன்றிக்குரியவர்கள்.
என்றும் எங்கும் எங்கலைகள் ஓங்கட்டும் என்றும் பிந்தியாதாகவந்தாலும் மகிழ்ச்சிபொங்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்

இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களைக்கூட கீழேயிருக்கும் ”உங்கள் கருத்துக்கள்” என்ற பகுதியை அழுத்துவதினூடாக பகிர்ந்து கொள்ளலாம்.

தம்பி கெட்டிக்காரன்

எண்ணை வேணுமெண்டால்
எள்ளுப்பொரியாய் நிப்பான் இவன்- பனங்
கள் வேணுமெண்டால்
பிலாவோடை நிப்பான் இவன்
தம்பி கெட்டிக்காரன்

பட்டாசு இல்லாத காலத்திலை
வெட்டியாக திரிஞ்சாலும்
சைக்கிள் கம்பியிலை நூலைக்கட்டி
தீக்குச்சி மருந்திலை வெடி விட்டவன் ஊர்சுத்தி
தம்பி கெட்டிகாரன்

பட்டம் விடுறதுக்கு
வீட்டுகூரையிலை ஏறி
வைரகோயில் வேப்பமரத்திலை
அடிக்கடி தொங்க விட்ட அற்புதமானவன்
தம்பி கெட்டிக்காரன்

புளிச்சல் விளையாட
ரென்னிஸ் பந்தை உச்சிப்போட்டு
மற்றவைக்கு புளிக்க புளிக்க முதுகிலை
இலக்குபார்த்து எறிஞ்சுபோடுவான்
ம்ம் .... தம்பிகெட்டிக்காரன்

சந்தியிலை நிக்கிறதேயில்லையிவன்
கொஞ்சம் விலத்தித்தான் நிப்பான்
ஆசை மாமா வந்தரெண்டால்
பூவரசந்தடி கதை பேசுமெண்டும்
கையாலை காதிலை கதை சொல்வாரெண்டும்

தம்பி உண்ணானை கெட்டிக்காரன்


சைக்கிள் ஓட்டத்திலை
சாகசம் பல காட்டுவான்
முடக்காடு எண்டாலும்
முக்குத்தக்குப்படாமல்
கையிரண்டும் விட்டு விட்டு ஓட்டியவன்
அட......தம்பி நல்ல கெட்டிக்காரன்

அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்
தவறாமல் நிப்பான் நல்லபொடியன்
அத்தனை ஆசை நீர்ப்பாளயம்
அலாதிப்பிரியம் இவனுக்கு
சுத்திவளைச்சு அடிபட்டு வாங்கிபோடுவான்
அவனல்லோ கெட்டிக்காரன்,

ஆலமரத்தட்டியிலை அரசியல் அலசுவதில்
அசகாயசூரன் இவன்
சந்திரிக்காவை ரணிலின் காதலியென்று சொல்லி
கந்தசாமியண்ணையை நம்ப வைத்தவன்
தம்பி கெட்டிக்காரன்

இவன் கெட்டித்தனங்கள் எத்தனை சொல்ல
அவன் தில்லுமுல்லுகள் அத்தனையும் அற்புதம்
எவன் கதைக்கும் பலசரக்கதையெண்டாலும்
கவனத்தில் நகையுடன் விடைதரும் பொடியன் இவன்

சொல்லுவிசயம் எல்லாம் அப்படியே செய்யும் இவன்
அம்மா சொன்னதை அப்படியே செய்து
மல்லுக்கட்டி உலக வரலாற்றில் உன்னத இடம் இவனுக்கு

சுவைசுவையாக பண்டங்கள்
வகைவகையாக சுட்டுக்கொடுக்க
பலவகையில் ஒர் வகையாம்
தொதல் கிண்ட இவன் அம்மா ஆயத்தம்

சூட்டோடுகிண்டியபடி அதைவிட்டே விலத்தாமல்
பண்டத்தின் மேற்பாகம் சரியாக அழுத்திடவே
”அட தம்பி வாழையிலை வெட்டிக்கொண்டுவா” எண்டு அம்மா சொல்ல
அம்மா சொல் தட்டாத பிள்ளையிவன்
வாழைப்பொத்திவிட்டு
பூத்துதயாரான வாழைமரம்
வாழையிலையை மடக்கி பெரு
இலை கொண்டே குசினி நோக்கி ஓடுகிறான்


”அடேய் தொதலுக்கு ஒரு துண்டு
மற்றதெல்லாம் யாருக்கு”
”வாழையிலைத்துண்டுக்கு கேட்க
வாழையிலையே முறிச்சுப்போட்டியே”
”அடேய் நல்ல காலம் தென்னோலை கேட்டிருந்தால்
நீ தென்னைக்கு மேல் ஏறியிருப்பாய்”
உன்னாணை நீ கெட்டிக்காரன் தான் என்று புகழ்மாலை

எல்லாம் தெரிஞ்ச இவன் பெரியதொரு கெட்டிக்காரன்
நல்லா சொல்லியிருக்கும் இவன் கெட்டிதனங்கள் பாருங்கோ
கல்லெறிஞ்சு மாங்காய் இல்லை தேங்காயுடன் பலாப்பழமும்
சொல்லி விழுத்திடுவான் எந்த நள்ளிரவிலும்

இப்ப சொல்லுங்கோ பார்ப்பம் தம்பியின் கெட்டித்தனத்தை
அவனெல்லோ கெட்டிக்காரன்
தம்பி கெட்டிக்காரன்

எண்ணை- எண்ணெய் , நிப்பான் - நிற்பான், பிலா- பனங்கள் குடிப்பதற்கு பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட ஒரு குவளை போன்றது, புளிச்சல்- பந்தை மற்றவர்களுக்கு படும்படியாய எறிந்து விளையாடும் விளையாட்டை ஈழத்தின் சில பகுதிகளில் இவ்வாறு அழைப்பர், முடக்காடு - ஒரு சின்ன ஊரின் பெயர், முடக்குகள் அடிக்கடிவரும், நீர்ப்பாளயம் - எல்லாவகை மரக்கறிகளையும் பொங்கலுடன் சேர்த்து படைக்கப்படும் படையல்

அன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா




அன்றையபொழுது விடிந்தது எதற்காக..........
இந்த இடிச்செய்தியை கொண்டுவந்து சேர்க்கவா
காலைக்கதிரவன் புன்னகைத்து வந்தவேளை
புன்னகைத்த முத்துகளை கொண்டுசெல்ல வந்தாயா.....
உன்னை வெறுத்ததே அன்றுதான்.

வெற்றிப்பாதையில் கல்வியே முதல் கண்
சற்றுமே விலகாத நற்பண்பு
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடும் பெருஞ்சிறப்பு
அத்தனையும் பறித்தெடுக்க வந்தாயே
உன்னை அன்றேதான் முதல் வெறுத்தேன்.

இன்னுயிர்களை களைந்து
அன்றே அக்கிரமத்தை விதைத்த கயவன் நீ
உன்செயலால் வானத்தையே அழவைத்தாய்
உதயத்தில் வந்த சூரியன் தன்கதிர்களை மறைத்து
உன்செயல் கண்டு உன்னை வெறுத்தது
வடமராட்சியெங்கும் கண்ணீர்கரைத்தெடுத்த உன்னை
அன்றுதான் நான் வெறுத்தேன்

நாளை எம்மை பார்க்கவந்த செல்வங்களெனப் பெற்றோர் மகிழ்ந்திருக்க
நாளை எம்மோடு வாழவந்த செல்வங்களென உற்றோர் களித்திருக்க
நாளைய உலகின் சொத்துக்களென எல்லோருமே நம்பியிருக்க
மூளையே இல்லாதவன் போல்
எல்லோரையும் நட்ட நடுவில் தவிக்கவிட்டு காவுகொண்டாயே
அன்றுதான் உன்னை முழுவதும் வெறுத்தேன்.

அன்பான பேச்சுக்கள் பண்பான செயற்பாடுகள்
எதிலும் வெற்றிகொள்ளும் சிந்தனைகள்
எவர்ருடனும் நட்புக்கென்று உயிரைவிடும் நல்லுள்ளங்கள்
ரவிசங்கரொடு சிவோத்தமன்,கந்தர்வன் பிரதீபன் என
நால் முத்தான செல்வங்கள்
பாதிவழியில் பறித்தெடுத்தாயே கொஞ்சமும் சிந்தனையற்று.......

அரியபல கல்விதனை செவ்வனே படித்துவிட-கடற்
கரையருகே சென்று ஆய்வினை செய்துகொள்ள
சிரிப்புத்தவழும் இளையவர்க்கு
யாரறிவார் உன் சீற்றம்!!!!!!!!!!!

மற்றோரை வாழவைக்கும் பெரும்சொத்து கடலம்மா
எல்லோரும் உனைத்தொழும் தெய்வம் நீ கடலம்மா
கற்கவந்த செல்வங்களை கவிழ்த்துக்கொண்டாய் ஏனம்மா
அற்ப ஆசை உனக்கு, என்றும் சோகம் எமக்கு,

நண்பர்கள் எல்லாம் விக்கி விக்கி ஓவென்று அழுதுகொள்ள
பெற்றெடுத்த தெய்வங்கள் ஐயோவென்று கதறியழ
உன் பொங்கிவந்த பேரலையால்
சுழிகொண்டு இழுத்துவிட சுத்தமாக உனக்கு மனமேயில்லை,
நிச்சயமாக உனக்கு அந்த அழுகையொலி
சத்தமாகவே கேட்டிருக்கும்,
அத்தனையும் உனக்கு பொருட்டில்லாமல் போனது எதற்காக?
இத்தனை நல்லுள்ளங்களில்
அற்ப ஆசை உனக்கு,என்றும் சோகம் எமக்கு

நட்பின் கலகலப்பில் மகிழ்ந்திருந்தவேளையில்
பள்ளிப்பருவத்தில் வெற்றிகண்ட நேரத்தில்
வசந்தத்தின் காலத்தில் வந்த பேரிடி
ஹாட்லியின் வரலாற்றில் வந்துவிட்ட பெரும் துயரம்


பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் எம் மனதில் அடியோடு என்றும் நிலைத்திருக்கும் இழப்புத்தான் இது.அப்போது நான் சாதரணதரப்பரீட்சை முன்னோடிப்பரீட்சைக்காக இறுதிப்பாடத்தில் இருந்த வேளையில் என் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாணவர்கள் ஓவென்று அழுத வேளை இது,“என்ன நடந்ததோ” என்று யாருக்குமே அறியாமல் இருக்கிறோம்,ஒரு கடதாசியில் சில பெயர்கள்.
“ரவிசங்கர்,சிவோத்தமன்,கந்தர்வன்,பிரதீபன், நால்வரையும் காணவில்லையாம்,கடல் அவர்களை இழுத்துக்கொண்டு போய்விட்டதாம்”,இது தான் செய்தி,
பரீட்சை விடைத்தாள்களை அப்படியே கொடுத்துவிட்டு கடலை நோக்கி நாமெல்லோரும் போனோம்,மூவரை நாங்கள் அசைவற்றே காணமுடிந்தது,


அமரர்.ரவிசங்கர்



அமரர் சிவோத்தமன்


அமரர்.கந்தர்வன்

பிரதீபன் இறுதியில் கடலுள் விழுந்தவன்,இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை,

அமரர்.பிரதீபன்
இப்படிக்கேட்டவுடன் கலங்கிய கண்களுடன் எல்லோரும் அழுதபடி வீட்டுக்கு செல்லும்படி அதிலிருந்த கடல் அருகில் வாழ் மக்கள் வேண்ட வீடு நோக்கி பயணிக்கிறோம்,வழமையாக நகைச்சுவைகள் சலகலப்புக்கள் எல்லாம் விட்டு அந்த அண்ணர்கள் நால்வரினதும் அன்புக்கதைகள்,அவர்களின் இன்னோரன்ன திறமைகள் என்று அவற்றையே பேசியபடி சோகமே உருவாகத்தான் வீடு செல்ல முடிந்தது,இவர்களில் சிவோத்தமன் என் ஆரம்பப்பாடசாலையான மாணிக்கவாசகர் வித்தியாலத்தில் கல்விகற்றதால் கொஞ்சம் கூடிய பழகமானவர் என்பதால் அந்த நட்புக்கவலையும் கூடவே வாட்டியது. மாணவர்கள் எல்லோரும் சோக மயம்,ஹாட்லிக்கல்லூரி சோகமயமாகியது.பல்வேறு நிகழ்வுகளால் சிறப்புறும் ஹாட்லி நிகழ்வுகளை கொண்டாடமுடியாததாய் சோக உருவாக தொடர்ந்தும் இருந்தது.
மாணவத்தலைவர்களாக இருந்தவர்கள் இந்த நால்வர்.எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர்கள்,ரவிசங்கர் நாடகங்கள் ஆங்கில பேச்சுக்கள்,பாடல்கள் என்று அடிக்கடி மேடைகளில் தோன்றுபவர்.சிவோத்தமன்,கந்தர்வன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தலைமையேற்று முன்னின்று நடத்துபவர்கள்,மாணவத்தலைவர்கள்,அதேபோல பிரதீபன் விளையாட்டுக்களில் முன்னணி வீரர்,அத்தோடு நால்வரும் தங்கள் கல்வித்துறைகளில் மிகவும் கெட்டிக்காரர்கள்,ஆசிரியகளுடன் மிகவும் பண்பாகவே பழகி நற்பண்புபெற்ற இப்படியானவர்க்ளை கல்லூரி வளர்த்தெடுத்து இடை நடுவில் பறித்தெடுத்ததது கல்லூரியின்(மாணவர்களின்) சோகத்தை ஒரு படிகூட்டிவிட்டது.என்ன செய்வது மாணவப்பராயத்திலேயே இழந்து விட்ட இழப்புக்களால் அதை தாங்கமுடியாவிட்டாலும் அதை தாங்கவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்,
அதைவிட இன்னுமொரு நண்பன் குணா,இவன் பேராதனைபல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்ட காலத்தில் நிகழந்த பெரும் இழப்பு,யமனாக வந்த புகையிரதம் இவனைப்பதம் பார்த்துச்சென்றது, நட்பின் அன்பின் என்றும் மகிழ்ச்சியின் உருவமாய் இருந்தவன் இவன்.காலன் இவனையும் கொண்டு சென்றுவிட்டான்,இப்படியே இழந்துவிட்ட இழப்புக்கள் இன்றும் எம் மனதை வாட்டுகிறது.


அமரர்.குணரட்ணம்

என்றாலும் இவர்களின் பெயர்கள் அன்று அவர்கள் ஹாட்லியில் இருந்த காலத்தில் எப்படி பெருமையாக இருந்ததோ அதேபோல என்றும் அது நிலைத்து நிற்கும்படியாக ஹாட்லியின் பழைய அக்கால தெரிந்தமாணவர்கள் பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருகிறார்கள், அவர்கள் கடலுடன் கலந்துவிட்ட அ நாளில் பாடசாலையில் ஒரு நினைவுதினக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அன்று சில நல்லபெரும் விடயங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
அதற்கு ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்” என்றவாறாக பெயர்சூட்டி அதை திறம்படவே திட்டமும் வகுத்து செயற்படுத்த இருக்கிறார்கள்.
அன்றைய தினம் ஒழுங்கு செய்த சில விடயங்கள் இவை

1.நண்பர்களின் பெற்றோருடன் தொடர்பு,அவர்களை அந்த நாளில் அழைப்பு.
2.மெதடிஸ்,வட இந்து அதிபர்களுக்கு அழைப்பு,அவர்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு.
3.ஐந்து மாணவர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு கல்வி உதவி நிதி நண்பர்களின் பெற்றோரின் கைகளால் வழங்குதல்.
4.அன்றைய தின நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்தல்,பாடசாலையை முழுமையாக ஒளிப்பதிவு செய்தல்.அது நண்பர்களுக்கு..

இவை ஒரு சில மட்டுமே,இதைவிட அந்த குழுவால் எடுக்கபடும் சின்னும் சில பெரும் திட்டங்களை அவ்வபோது வெளியிடுவார்கள்.அவை உத்தியோகபூர்வமாக நினைவுதின ஒழுங்கமைப்பாளர்கள் குழுவால் 17-11-2009 அன்று அந்த நினைவுதினகூட்டத்தில் அறிவிக்கபடும்,

இப்படியாக இவர்களின் பெயரால் வரும் ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்”என்றும் இவர்களின் பெயர்களை ஹாட்லியில் இவர்களின் பெயரை ஒலிக்கவைத்துக்கொண்டேயிருக்கும்,இவர்கள் என்றும் எம் மனதினுள் நிலைத்துவிட்ட அண்ணர்கள்.மேலான நட்புக்கள்.

புகைப்படங்கள்: ஹாட்லியின் மைந்தர்கள நினைவு நிதியம் வதன நூல் அணி
தகவல் :ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதிய ஏற்பாட்டுக்குழு
மற்றும் வதன நூல் அணி

நன்றி

அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்

நீண்ட நாள்களுக்குப்பிறகு அண்மையில் ஒரு நண்பர்கள் வட்டத்தை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது,பாடசாலையில் துள்ளித்திரிந்த காலத்தில் பழகிய நண்பர்கள் அவர்கள்.பாடசாலைக்காலம் என்றால் சொல்லவா வேணும்,சின்ன சின்ன சண்டைகள்,அந்த கால ஆசிரியர்களினுடனான அனுபவங்கள்,அடிகள் சொல்லித்தந்த பாடங்கள்,விட்ட பகிடிகள் என்று நேரம் போனதே தெரியாமல் கலகலப்பாக மகிழ்ந்த மாலை நேரம் அது.

உடனடியாக கிடைத்த அழைப்பு அது, நண்பன் ஜோர்ஜ் அருணின் திருமணப்பதிவுக்கு செல்லகிடைத்த அருமையான சந்தர்ப்பத்தால் 15 வருடங்களுக்கு மேலாக காணாத நண்பர்களையெல்லாம் காணக்கிடைத்தது.
இந்த திருமணப்பதிவு என்ற விடயம் மூலம் நண்பன் ஜோர்ஜ் அருணைத் தெரிந்தவர்கள் அவருக்கு திருமணம் முடிந்தாயிற்று என்றும் தெரிந்து கொள்ளமுடியும் என்ன அப்படித்தானே? ஏனென்றால் அவனுக்கு யாரும் வேற யாரும் "சம்மந்தம் கிம்மந்தம்" பேசினாலும் எண்டு முற்கூட்டியே ஒரு முன்னாயத்தம் தான். நல்ல அக்கறை எண்டு நினைப்பீங்க, நாங்க எல்லா விசயத்திலையும் கவனம் பாருங்கோ.
நண்பர்கள் வட்டத்தில் அவன் நட்பு கிடைத்தது பாடசாலைக்காலத்தின் இடைக்காலத்தின் பிற்பகுதி என்று சொல்லலாம். அவரை நான் பாடசாலைக்குள் பழகிய காலத்தைவிட மைதானத்தில்தான் கூடிய நேரம் பழகியது என்று கூட சொல்லலாம்.ரியூசனில்(ஆங்கிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் எண்டு பெரிய பெயர் பாருங்கோ,அதாலை எங்கடை ஆக்கள் யாருமே பாவிக்கிறது இல்லை)வந்திருந்த கூடியளவு நண்பர்கள் பழகியிருந்ததார்கள்.எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க இல்லை,மைதானத்தில் பழகியதுடன் அவன் இப்படியே உயர்கல்வியென்று பாடசாலையைவிட்டு வந்துவிட அவனுடனான தொடர்பு குறைந்தே விட்டது,ஆனால அவனுடன் விளாயாடிப்பழகியதால் நட்பு குறுகியகாலத்தில் முற்றித்தான் இருந்தது. அதனால் இங்கிலாந்து வந்தவுடன் வந்த அன்பான நட்பின் அழைப்பு திடீரென்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று "வடிவாக வெளிக்கிடவும் ஏலாமல் போச்சு பாருங்கோ”
அவரின்ரை அழகுக்கு அவருக்கு வெளிக்கிடவும் வேண்டிக்கிடக்கு எண்டு நினைக்கிறிங்க என்ன?

நவரங்கன் பாருங்கோ நல்லாக் கார்(ஆங்கிலத்தில் மகிழூந்து எண்டு சொல்லுவினம்) ஓடுவன்,ம்ம் அவன் வீ்டு தேடி வந்து ஏத்திக்கொண்டு போனதால சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ, நான் வீட்டு விலாசம் சொல்ல ஒரு அரை மணித்தியாலத்திலை " டக் " எண்டு அவன் வந்து நிண்டான் பாருங்கோ,இதைவிட அவன்ரை கெட்டித்தனத்துக்கு வேற என்ன வேணும்.இதற்கு முதலே நவரங்கனை சந்தித்ததாலை அவனுடன் கூட வந்த இனனுமொரு நண்பன் பிரதீ்ப்,சின்ன வயசிலையிருந்து கொஞ்சம் மீசை முளைக்கிற காலம் எண்டு சொல்லுவாங்களே,அந்த காலத்திலிருந்து பதினொரு வருடங்களுக்குப்பிறகு சந்திச்சதாலை அவனைக்கண்டவுடன் ”வாங்கோ போங்கோ” எண்டு தான் கதைக்க சொல்லிச்சுது,அவனும் "எப்படி இருக்கிறீங்க ”எண்டுதான் கேட்டான்.சரி சுகத்தை சொல்லி “டக்” எண்டு வெளிக்கிட்டது எண்டு முதலே சொன்ன மாதிரி வெளிக்கிட்டு கூடவே வந்த கௌதமனுடனும் அளவளாவிக்கொண்டு நண்பனின் திருமணப்பதிவு கொண்டாடத்துக்கு
போகத்தொடங்கியாச்சு,
பள்ளிக்கூடத்திலை ”நவத்தார்" என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு ஆசிரியர் நவரட்ணம் அவர்களின் கதையுடன் தான் கதைகள் ஆரம்பமானது, த்தாருக்கு எங்கடை நவரங்கன் விட்ட பகிடிகளும் அதற்கு அவர் விட்ட பகிட்களும் எண்டு கௌதமன் சொல்ல அதுக்கு நவரங்கன் அவர் கதைப்பது போல கதைச்சு நடிச்சுக்காட்டினான், நவத்தார் சமய பாடத்திலை கேட்ட கேள்விகளும் திரு நீறும்சந்தனமும் வைக்ததற்கு தந்து விட்ட அடிகளும் அந்த அடியின் போது எல்லாம் செப்படி வித்தை” என்று சொல்லி அடிப்பதும் எண்டு கதை ஒரு பக்கமாக சென்று கொண்டே இருந்தது, நவரங்கனின் காரும் ஓடுது.

அதற்கிடையிலை இன்னுமொரு வாத்தியார் இருந்தவர் கந்தசாமி வாத்தியார்,இரண்டு கந்தசாமி ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழ் படிப்பிக்கிற கந்தசாமி வாத்தியார் அடிச்சுவிட்ட அடிகளைப்பற்றித்தான் முக்கிய கதை. அந்த மனுசன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை எண்டால் அடிக்கும் ஒரு அடி,அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பள்ளிகூடம் வந்திடுவம்,போதாக்குறைக்கு நவரங்கன் அந்தக்காலம் வகுப்பு மாணவத்தலைவன் எண்டதாலை கட்டாயம் வந்திடுவன் எண்டு கொஞ்சம் நக்கலாக கதை போய்க்கொண்டே இருந்தது,
வகுப்பிலை பாருங்கோ அந்தக்காலம் ஆசிரியர்கள் இல்லாத சந்தர்பங்களில் யாரும் யாருடனும் கதைக்ககூடாது,கதைச்சால் மொனிட்டர்(அதைத்தான் முதலில் வகுப்பு மாணவத்தலைவர் என்று ஆங்கிலத்தில்) எழுப்பிவிட்டுவிடுவார்.அல்லது கரும்பலகையிலை எங்கடை பேர் இருக்கும்,பெயர் கரும்பலகையிலை இருக்கிற நேரத்திலை வாத்தி யாரும் வந்தால் அதோகதிதான்.அதுவும் இந்த கந்தசாமி ஆசிரியர் வந்தால் ஏன் வீணாக்கதைச்சன் எண்டு இருக்கும்,இப்போது கந்தசாமி ஆசிரியர் மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தின் தர்மகத்தா சபைத்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்,கோயில் பிரார்த்தனை நேரங்களில் யாரும் கதைச்சால் என்ன நிலைமை என்று கேட்க மறந்துவிட்டேன்.

அப்படியே ரியூசனில் விட்ட சேட்டைகள்,அடிகள்,ஓட்டங்கள்,விளையாட்டுக்கள் என்று கதைத்தபடியே இருக்க கொண்டாட்ட நேரமும் வர மண்டபத்துக்குள் போய் சந்திப்பில் ஒரு கைகுலுக்கல் எல்லோரும்.
பொதுவா ஒரு வகுப்பு எண்டால் ஒரே பெயருடை பலர் இருக்கலாம் தானே,அப்ப சில வேளைகளில் அவர்களை கூப்பிடுவதற்கு பட்டங்கள் வைத்தோ அல்லது அவர்களின் முதலெழுத்தை சொல்லியோ கூப்பிடுறது தானே,சுதாகரன் எண்டு சொல்லுற ரி.எஸ். தான் வாசலிலை நிக்கிறார்.சாப்பாடு தானே ,பின்னை வேளைக்கே வந்திட்டான் எங்களைப்போல.காலமையிலை இருந்து சாப்பிட இல்லை எண்டு கவலைப்பட்டான்.சரி அப்படியே இங்கிலாந்துக்கு வந்ததைப்பற்றி கதைச்சு ஒரு மூலையாக எல்லாரையும் பார்க்கவேணும் எல்லே,அப்படி ஒரு லொக்கேஷன்(அமைவிடம் எண்டும் ஒரு ஆங்கிலம்) எடுத்துிருந்தாச்சு.


கடிகள் குதறல்கள் ஆரம்பம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குறவாக இருந்தகடிகள் யோகேந்திரா,சுதர்ஷன் மற்றும் திருக்குமரன் வருகையோடு கொஞ்சம் களைகட்டியது.யோகேந்திரா சுதர்ஷன் அவங்கள் வரணி தான் சொந்த இடம், பக்கத்து வீடுமோ தெரியாது.இரண்டு பேரும் மாறி மாறி கடிச்சுக்குதறிக்கொண்டே இருந்தாங்கள்,அவங்கள் படிக்கேக்குள்ளேயும் சி வகுப்பிலைதான் படிச்சவங்கள்,அந்தக்காலம் சும்மா சும்மா அறுக்கிற மாதிரியே அண்டைக்கும் அறுத்துக்கொண்டே இருந்தாங்கள்,ஹாட்லியிலை கன்ரீனிலை(சிற்றுண்டி சாலை எண்டு ஆங்கிலம்- இவ்வளவும் சொல்ல கஷ்டம் தானே அதாலை டக் எண்டு தமிழிலிலை சொல்லுறது கன்ரீன் எண்டு) வினாசி அண்ணையின்ரை தேத்தண்ணிக்கதையும் அந்த ஒரு ரூபாக்கு தாற அந்த போண்டாவைபற்றியும் நினைவு படுத்தினாங்கள். அதுக்கு ஒரு தகடு வெட்டித்தருவினம் வினாசி அண்ணையிட்டை குடுத்தால் தான் தேத்தண்ணி கிடைக்கும்.
அதுக்காக வீட்டிலையிருந்தே வெட்டிக்கொண்டு வந்த குமணன்,குபேரன் எண்ட இரட்டை உறவுகள்,அதை போதாக்குறைக்கு கனகாலம் பாவிச்சமாதிரி அந்த தகட்டை பழுதாக்கிகொண்டு வாறதாம்.அந்த தகட்டையே குடுக்காமல் தேத்தண்ணி குடிச்சவங்களும் இருக்கிறாங்களாம்.
அப்படி அந்தக்கதை போக


ஜோர்ஜ்க்கு வாழ்த்து அட்டை கொடுக்க சுதர்ஷன் எழுத வெளிக்கிடுறான்,என்ன எழுதிறது எண்டு சிக்கல்,அப்ப சுதர்சனுக்கு எல்லாரும் சொல்லுகினம்,”””தங்கச்சங்கிலி அறுந்தாலும் எம் அன்புச்சங்கிலி அறாது”முத்திரை வீட்டில் நித்திரை, முத்திரை சித்திரையில் வரும்,” எண்டு எழுதச்சொல்லி அட்வைஸ்(புத்திமதி),சுதர்சனும் எழுத தொடங்கிவிட்டான்,அப்ப யோகேந்திராக்கு மனமில்லை,அதை ஆங்கிலத்திலை எழுதவேணும் எண்டு சொல்ல அப்ப அதை ஆங்கிலத்திலை சொல்லு பார்ப்பம் எண்டு சுதர்சன் யோகேந்திராவுக்கு சவால் விடுறான், ”எங்கை சொல்லு பார்ப்பம்” யோகேந்திராவைக்கேட்க நம்ம நவரங்கன் மொழிபெயர்க்கிறார் பாருங்கள்,"GOLD CHAIN BREAK OUR LOVE CHAIN NO BREAK"."STAMP HOME SLEEPPING" எண்டு நவரங்கன் தொடர்ந்துகொண்டே போக ”இங்கிலிஷ் தெரியும் எண்டா சொல்லு அதை எழுதுவம்” எண்டு யோகேந்திராவை விட்ட பாடில்லை சுதர்சன்.இப்படித்தான் கடித்துக்கொண்டே இருப்பாங்கள் அந்தக்காலதிலையும்,
அது அப்படியெ போக
அந்த கால அங்கிரி விளையாட்டுக்களையும் சொல்லிச்சிரிச்சாங்கள்,ரிஎஸ் உடன் எஸ்.எஸ் கோவம்,எஸ்.எஸ் உடன் சுந்தரேஸ்(சக்களாவத்தை) கோவம்,சுந்தரேஷ் உடன் ரிஎஸ் கோவம்,என்ன ஒரு முக்கோண நட்புகோவம்,அதிலை என்ன பகிடி எண்டால் அவங்களுக்குள்ளை யாரிலையும் யாரும் தொட மாட்டாங்க,யாரிலையும் தொட்டு மற்றவையிலை முட்டினால் ஒரு ஊது ஊதுவாங்க அதிலை நெருப்பு பத்தினாலும் நூர்ந்துபோய்விடும் எண்டு அதையும் சொல்லிசிரித்தபடியே கலக்குது கொண்டாட்டம்.

வீடியோகாரன் எடுக்க வந்து ஒரு பக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டு எங்களையும் அது எடுக்க வருமெண்டு யோகேந்திராவிட்ட பெருங்கடி,ஆனால் வீடியோக்காரன் அவனை வீடியோ பிடிக்கேக்குள்ளை அந்த முகத்தையும் ஷேட்டையும் போட்டு படுத்தின பாடு.

இப்படியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு அருமையான துள்ளித்திரிந்த காலத்து பள்ளினினைவுகளுடன் கலகலப்பாக இருந்து ஒரு சில மணிகளில் பிரிந்துவிட்டோம்.கலப்புக்களும் வயிறு நிறைய சாப்பாடும் முடித்துக்கொண்டு அந்த இனிய நினைவுகளோடு நவங்கனின் காரேறி வீட்டுக்கு வந்தாச்சு.அன்றைய பள்ளியின் நினைவுகளை திரும்பவும் மீட்கவும் அன்பு பாடசாலை நண்பனை வாழ்த்தவும் முடிந்தது மிகவும் மகிழ்ச்சி.பள்ளிப்பயின்றதொரு காலத்தின் தொடரில் இதுவும் அமையபோகிறது.
என்றும் நலமுடன் வாழ எம் அன்பான வாழ்த்துக்கள் நண்பா.ஜோர்ஜ் அருணைத்தெரிந்தவர்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.தெரியாதவர்கள் பள்ளிப்பயின்ற காலத்தின் அருமை நினைவுகள் பற்றி கருத்துப்பகிர்ந்துகொள்ளுங்கோவன்,

சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்


கந்த சஷ்டி ஆரம்பித்துவிட்டால் எப்ப சூரன் போர் வரப்போகிறது என்பது தான் சிறுவர்களுக்கு எண்ணமாக இருக்கும்,ஏன் இளையோர்களுக்கு அந்த சூரனை தோள்தூக்கி ஆடுவதற்கு சந்தோஷமான இருப்பார்கள்,சகல கோவில்களிலும் சூரன் இல்லாவிட்டாலும் அயல் கிராமத்து இளைஞர்கள் என்று எல்லோரும் நட்புடன் உஷாராகிவிடுவார்கள்,” `முன்வீதியில் யார்தூக்குவது’,`பின்வீதியில் எப்படி சூரனை ஆட்டுவது’ ”, என்று பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு கந்தஷஷ்டி ஆரம்பமே சூரன் போருக்கான தொடக்கம் என்பது போல இருக்கும் அவர்களின் செயற்பாடுகள்.உண்மையிலும் தேவர்களிற்கு சூரனால் வதைக்கப்பட்ட கொடுமைகளால் சூரனை வதம் செய்வதற்காக ஆறு நாள்கள் கந்தசஷ்டியாகவும் இறுதி நாளில் சூரனை சங்காரம் செய்து அவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த நாளையே இந்த சூரன் போராக பாவனைசெய்யும் நிகழ்வாக வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகிறது,

அப்படியாக சூரன் போர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.இளையவர்களும் சிறுவர்களும் ஏன் பெரியவர்களும் ஆயத்தமாகிவிடுவினம்.
தாரகாசுரன்,சிங்கமுகாசுரன் மற்றும் சூரபன்மன் என்பவர்கள் முருகப்பெருமானுடன் போர் புரியப்போகிறார்கள்,அதற்கு அந்த சூரர்கள் எப்படி எப்படி முன்னேறி முன்னேறிப்பாய்ந்து முருகனிடம் செல்வார்கள் என்றும் முருகனோடு போர் புரிந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி தேவர்களை வதைத்தார்கள் என்பதைக்காட்ட வந்திருக்கும் மக்களை சூரர்கள் வதைப்பது போன்று உருவகப்படுத்தும் படியாக இளையவர்கள் தயார்ப்படுத்துவார்கள்.அதற்கு பழைய பழைய காலங்களில் சூரன் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்,அதைவிட எங்கடை பொடியளும் சில நுணுக்கங்களை கையாள்வார்கள்.

சூரன் ஆட்டம் ஆரம்பத்தில் பறையொலி எழுப்பபடும்,அது முருகனை போருக்கு வா வா என்று அழைப்பதற்காக எழுப்பப்படும் ஒலி என்று தாத்தாமார் சின்னப்பொடியளுக்கு சொல்லுவினம்,உண்மையில் அந்தப்பறையொலியில் அந்தக்கால அரசர்கள் போருக்கு எழுப்பும் ஒலிகளை நாங்கள் சில திரைப்படங்களில் கேட்பதைப்போலவே அவர்களும் போருக்காக ஒருவகையான தாளவமைப்பில் பறையடிப்பார்கள்.அதைகேட்டுவிட்டு எங்கள் தாத்தா அது சூரன்போர் ஆரம்பமாகபோகிறது என்று சொல்வார்,அதாவது அந்த பறையொலி முருகனை சூரன் போருக்காக அழைப்பதுபோல் இருக்கும்.அதைகேட்டபடியே கோவிலுக்கும் சென்றுவிட்டால் யானைமுகத்தோடு தாரகாசுரன் முன்வீதியில் காவல் இருப்பார்.உள்வீதியில் வெகு நிம்மதியாக முருகன் பூஜைகள் நடக்கும்,மிக ஆறுதலாக தவில் நாதஷ்வர வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான உள்வீதி வலம் வந்து வெளிவீதிவருவார்,அது மட்டும் தாரகாசுரன் முருகப்பெருமான போருக்காக அழைக்கும்படியாக பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்கும்,

முருகனும் வந்துவிட்டார்.

இளையவர்கள் நல்ல ஒரு வேட்டியை சண்டிக்கட்டும் கட்டி ஆயத்தமாகி விடுவார்கள்.சூரனின் தலையாட்டுவதற்கு ஒருவர் சூரனுக்கு பின்னால் ஏறியிருப்பார்,அவருக்கோ சூரனின் தலையை இரண்டுபக்கமும் ஆட்டுவதுதான் வேலை,ஆனால் சூரனின் ஆட்டத்துக்கு அமைவாக அந்த தலையை ஆட்ட வேண்டும் என்பதும் ஒரு விடயம்.

சரி தாரகாசுரன் ஆட்டம்,தாரகாசுரன் யானைமுகத்தோடு மக்களை வதம் செய்ய ஆரம்பிப்பார்,அந்தப்பக்கம் செல்வதும் இந்தப்பக்கம் செல்வதும் என்று ஒரு ஆட்டம்,இருப்பதும் எழும்புவதும் பதிப்பதும் தூக்குவதும் என்று பல ஆட்டம்.என்று ஆட இறுதியில் முருகன் சங்காரம் செய்வதாக தாரகாசுரனின் தலை வெட்டப்படும்,


தொடர்ந்து சிங்கமுகாசுரன் ஆட்டம்.இங்கும் மக்களை நோக்கிச்சென்று வதம் செய்யும் ஆட்டங்கள்,ஒரு கரையாக ஓடிச்சென்று மக்கள் நடுவில் சூரனை தூக்கியாட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதினூடாக மக்களை வதைத்ததாக உணர்த்தப்படும்.ஒருகட்டத்தில் சூரனை தூக்கி தூக்கு எறிவார்கள் இளையவர்கள், தம்பிமார் கவனம் கவனம் என்று பெரியவர்கள் பின்னுக்கே நிப்பினம்,அப்படி ஒருகட்டத்தில் சிங்கமுகாசுரனின் தலையும் வெட்டப்படும்,ஆனால் சிங்கமுகாசுரன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் வரம் பெற்றிருந்தவனாகையால் மீண்டும் சிங்கமுகாசுரன் தலைகொழுவி மக்களைவதைப்பான்,திரும்பவும் ஆட்டம் சிங்கமுகாசுரனாட்டம்.இப்படியாக மூன்று முறை உயிர்த்து சிங்கமுகாசுரனை தலை வெட்டப்படும்,

தொடர்ந்து சூரபன்மன் ஆட்டம்,
சூரன் தான் எல்லோருக்கும் அண்ணன்,அவன் தான் சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரனை போருக்கு அனுப்பிவைத்தவன்,அவர்களின் இறப்பிற்குபிறகு போர்க்களத்திற்கு விரைந்தவன் சூரபன்மன்,பல்வேறுவரங்களையும் பெற்றவன்,அவனை அழிக்கமுடியாது என்பது எல்லாம் ஐதீகபுராணங்கள் சொல்லும்விடயங்கள்


சரி சூரபன்மன் ஆட்டம்,பொதுவாக வடக்குவீதியில்தான் எல்லாக்கோவில்களிலும் ஆரம்பிக்கும்.சூரபன்மனுக்கென்றே சில ஆட்டமுறைகளை வைத்திருப்பார்கள் இளையவர்கள்,ஏனென்றால் மற்ற அசுரர்களிலிருந்து அதாவது அவன் தம்பிமார்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக.அதுமட்டுமல்லாமல் சிங்கமுகாசுரன் பல்வேறுதடவைகள் உயிர்த்துவந்து முருகப்பெருமானோடு போர்புரிந்ததைப்போன்று சூரபன்மனும் பல்வேறு வடிவங்களெடுத்து போர்புரிந்தவன்,அவையெல்லாம் அந்த சூரன்போரில் உருவகப்படுத்திக்காட்டுவார்கள்.கடலாக வந்ததை நீல சேலையால் மூடிவந்தும் வானமாக வந்ததையும் நீலை சேலையால் மூடிவந்தும் பறவையாக மாறிவந்ததை பறவையின் தலையை சூரனின் தலைக்குப்பதிலாக மற்றிவந்தும் முருகப்பெருமானுடன் போர் புரிதலைக்காட்டுவார்கள்.அதற்குள் ஆட்டங்கள் பலவகையாக இருக்கும்.


முழந்தாளில் நடந்துவருவதும் அதை முருகப்பெருமான் கண்டபின் அவருக்கும் பின்னால் சென்று சுழன்று வருவதும் தூரத்துக்கே ஓடிச்சென்று மக்களை வதைத்து வதைத்து கடைசியில் முருகனுக்கு கிட்டவந்ததும் அவரை நோக்கித்தூக்கி தூக்கி போர் புரிவதாக சூரன் ஆட்டுவார்கள்.மிகவும் அழகாக இருக்கும்,இந்த ஆட்டங்களுக்கு அமைவாக பறையொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்,அந்த தாளக்கட்டுமானத்துக்கு அமைவாக இளையவர்கள் ஆட்டுவார்கள்.






இப்படியாக சூரன் பல்வேறுவடிவக்கள் எடுத்து போர்புரிந்தபடியிருக்க இறுதில் ஒரு மாமரமாக மாறியபடி இருக்கும் ஒரு ஆட்டம்,அந்த வேளையில் பார்க்க வேணும் ”முன்னுக்கு மாமரக்கிளை கொண்டு ஆட்டுபவரை”.பறையின் தாளத்துக்கு மாமரக்கிளையையும் சேர்த்து,அதுதான் சூரன் போரின் இறுதியாட்டம்,ஆகவே மாமரக்கிளையோடு சூரனையும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அங்குமிங்குமாக ஆட்டுவார்கள்,மிகவும் ரசிக்கக்கூடியாதாக இருக்கும்,இறுதியில் மாமரக்கிளை அரைவாசியாக்கப்படும்,பின்னர் சேவல் கொடியும் மயில் வாகனமும் முருகப்பெருமானிற்குக்கிட்ட வைப்பார்கள்,அது சேவலும் மயிலுமாக சூரபன்மன் மாறினான் என்றவாறான புராணக்கதையை நினைவுபடுத்தும்,அதன் பின் மக்கள் எல்லோரும் சூரனை சங்காரம் செய்துவிட்டதாக உணர்வு,இறுதியில் சங்காரம் செய்த மாவிலையை தங்களோடு எடுத்துக்கொள்வார்கள்.
இப்படியாக கந்தசஷ்டியின் காலங்கள் சூரனை சங்காரம் செய்தலோடு நிறைவுபெறும்,அந்த ஆறு நாள்களும் சூரனை வதம் செய்யப்புறப்பட்ட நாள்கள்.வதம் செய்து தேவர்களுக்கு சுகம் தந்த நாள்கள்.

நானும் இந்த சூரன் போர் எதையுமே விட்டதில்லை,எங்களூரில் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இந்த சூரன் போர் சிறப்பாக நடைபெறும்,சின்னானாக இருந்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் என்ரை தாத்தாவையும் விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு போய்விடுவன்.ஆனால் தூரத்திலைதான் நிண்டு பார்க்கிறது பாருங்கோ,ஏனெண்டால் சூரனுக்கு பயம். நான்கு பெரும் வீதியிலை சூரனாட்டம் ரொம்ப சிறப்பாக நடக்கும்,



கொழும்பிலும் பல்வேறு ஆலயங்களிலும் இந்த சூரன் போர் ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை,இங்கிருக்கும் புகைப்படங்கள் கொழும்பு நகர் பம்பலப்பிட்டியா கதிரேஷன் ஆலயத்தில் இந்த வருடம் இடம்பெற்ற சூரன்போர் ஆட்டத்தின் ஒரு சில காட்சிகள்,சிறப்பாக இடம்பெற்றதாக அறியக்கிடைகிறது,மக்கள் எல்லோரும் கந்தசஷ்டிகாலங்களில் விரதம் அனுஷ்டித்து சூரங்காரமும் கண்டு அருள்பெற்றிருக்கிறார்கள்,நன்று

இந்த புகைப்படங்களை கரவைக்குரலுக்கு அனுப்பிவைத்த யோஹா ஆனந்தி அவர்களுக்கும் நன்றி

யாழ்தேவியில் நான்


யாழ்தேவியில் நடந்து முடிந்து கொண்டிருக்கும் வாரத்தின் நட்சத்திரப் பதிவராக கரவையின் ஓசையை அறிவித்திருக்கிறார்கள் அதன் நிர்வாகக்குழு. மிகமகிழ்ச்சியைத்தருகிறது.
இப்படியான விடயம் பதிவர்களின் எழுதும் ஆர்வத்தைக்கூட்டும் என்றால் மிகையாகாது.வேலைப்பளு என்றவாறாக நேரத்தில் இடைவெளிகள் தேடி அதில் நிம்மதி தேடும் இங்கிலாந்து மண்ணிற்கு வந்த பின் இந்த சிறப்பளிக்கப்படிருக்கிறது.அதாவது பதிவுகள் இன்னும் வரவேண்டும் என்று கரவைக்குரலுக்கு சிறப்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.வேலைகள்,படிப்பு எண்டும் நேரமில்லாமல் போச்சு எண்டும் எல்லோரும் சமாளிப்பதுபோலவே சமாளிக்கும் அந்தஇந்தக் கதையைவிட்டுவிட்டு தொடர்ந்தும் பதிவுகள் வரவேண்டும் என்று பலத்த எச்சரிக்கை கரவைக்குரலுக்கு யாழ்தேவியால் விடப்பட்டிருக்கிறது.
என்ன அப்படித்தானே.

சிரிப்பெல்லோ வருகிறது,ஹிஹிஹிஹிஹிஹிஹி..........

"விடைபெற்ற அமீரகம் வரவேற்ற இங்கிலாந்து" என்ற பதிவில் நான் முதன்முதல் இங்கிலாந்தில் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள பட்ட கஷ்டத்துக்கு ஊக்கம் தரும் பரிசு பாருங்கோ இது.உண்மையிலை அந்தப்பதிவை பார்த்துவிட்டு எல்லாரும் வந்து கேட்ட கேள்வி " எங்கை இந்த பென்னாம்பெரிய காசை தண்டமாக கட்டினீங்க"எண்டுதான். யாரும் வந்து யாரடா அந்த பெரிய மனுஷனுக்கு பக்கத்திலை இருந்தது எண்டு கேட்கவே இல்லை,சில பேர் தொலைபேசி அழைப்பெடுத்தாலும் இதுதான் கேள்வி. அப்படி ஆரம்பமே சுவாரஸ்ய அன்பவங்கள்,அவற்றை பதிவிட்டவுடன் யாழ்தேவியும் என்னை நட்ச்த்திரிற பதிவராக அறிவித்திருக்கிறார்கள். வலைப்பதிவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் கொடுத்த இந்த மதிப்பு மிக்க கௌரவமாக நான் பார்க்கிறேன்.என்றும் நன்றியுடையவனாவேன்.

இன்னொருவிடயம்.

யாழ்தேவியில் தரம்கொடுக்கப்பட்ட பதிவர் என்ற அடிப்படையில் என்னால் அதற்குள் என் பதிவுக்களை இணைப்பது மற்றும் வேறு சில வரையறைகள் என்பவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.ஏனென்றால் சிலவேளைகளில் மீளவும் என்னை பதிவு செய்யும்படி சிலவேளைகளில் கோரப்படுகிறது.அதனால் என்னைப்போல வேறுசில பதிவர்களுக்கும் அந்த கஷ்டம் உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அதை யாழ்தேவியிடம் அறிய ஆவலாக இருக்கிறேன்.

மிக நன்றி யாழ்தேவி.

விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து

பல்வேறு அனுபவங்களைத்தந்த அமீரகத்துக்கு அண்மையில் விடைகொடுத்து தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சில காலம் உலாவுவதற்கு அனுமதிகிடைத்திருக்கிறது,
இங்கு இங்கிலாந்து வரவேற்றிருப்பது ஒரு வகையில் இருக்க அமீரகத்தில் கிடைத்த அனுபவங்களோ மிக அதிகம்,இங்கிலாந்தில் எப்படியான அனுபவங்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதேபோல அவற்றுள் பல விடயங்கள் ”அப்படி இருக்கும் இப்படி நடக்கும்” எம்முடன் கூடியிருப்போரால் எடுத்துச்சொல்லப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க அமீரகத்துக்கான வருகையில் கிடைத்த அனுபவங்கள்,அங்கு வாழ்ந்த காலங்களில் தந்த அனுபவங்கள்,பார்த்த விடயங்கள்,ரசித்த அம்சங்கள், மெய்சிலிர்த்த அம்சங்கள்,கேட்கவேண்டும் என்று நினைத்த பல கேள்விகள்,கேட்ட சில கேள்விகள்,அதைவிட வயிறுகுலுங்க சிரித்த விடயங்கள் என்று பல விடயங்கள் விடைபெற்ற அமீரகத்திலடங்கியிருக்கின்றன.


அவற்றில் சொல்ல முடிந்தவற்றை நினைவிலிருப்பவற்றை தொடர்ப்பயணமாக பாலவனத்தில் பயணம் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன், நேற்றுவரை மிக்க சூட்டுடன் வாழ்ந்து இன்று திடீரென்று குளிராக்கினால் எப்படி ஒரு பொருள் இறுகிப்போகுமோ அப்படியாக இறுகிவிட்டேன் என்றாலும் உங்கள் ஆதரவுடன் அந்த பயணம் தொடரும்,
அது பாலைவனத்தில் ஒரு பயணம்,

இங்கிலாந்து வந்தவுடன் பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் சில சுவாரஷ்யமான அனுபவங்கள்,நாட்டுக்கு வந்து கைவிரலால் எண்ணக்கூடிய நாள்கள் மட்டுமே,அதாவது நான்கு நாள்கள்,



அதில் நானும் என் மனதும் ரசித்துச்சிரித்தவை பல,அவற்றுள் சில இவை

பொதுவாக வளைகுடா நாடுகள் வெப்ப நிலை அதிகமான நாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும்,சூட்டிலிருந்து வந்த நான் இப்ப கடும் குளிராக்கிடக்கு எண்டு சொல்லுது என் மனசு,கடும் வெப்பநிலையிலிருந்து சடுதியாக மாறிய மாற்றம் என்பதனாலோ என்னவோ,ஆனால் இது தான் குளிர் காலத்தின் ஆரம்பம் என்று எல்லாரும் சொல்லுகினம்,
ஐயோ கடவுளே இதைவிட இன்னும் குறையப்போகுதோ எண்டு யாரையும் விடாமல் கேட்டுப்போட்டன்,

மற்றது முதற்கட்டமாக 20 ஸ்ரேலிங்க் பவுண் தண்டம் கட்டிப்போட்டன் பாருங்கோ, நான் விட்டது பிழையோ அவர் விட்ட பிழையோ யார் விட்ட பிழையோ எனக்குத்தெரியாது,ஆனால் கட்டிப்போட்டன்,முந்த நாள் தான் வந்தன் எண்டு சொல்ல கேட்டானே அவன்,”இல்லை தா“ எண்டு கேட்டான் நான் குடுத்திட்டன்.”ஏன் குடுத்தது எப்படி குடுத்தது” என்பது எண்ட விசயம் அது என்னோடையே இருக்கட்டும்,ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் எந்த ஒரு விசயத்தையும் ”பிளான்”(Plan) பண்ணி செய்யிறது மட்டுமில்லாமல் எல்லாத்தும் ஓம் எண்டு சொல்லி தலை மட்டும் ஆட்டக்கூடாது எண்டது தான் இப்ப நான் எடுத்த முடிவு பாருங்கோ

அதைவிட இன்னுமொரு சுவாரஷ்யவிடயம்
பொதுவாக இங்கு ரயில் வண்டியில் தான் எல்லோரும் பயணம்,
அப்பிடி ஒருநாள் நானும் ஒரு பயணி,எனக்கு பக்கத்திலை ஒரு பயணி,
”அட இவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே” எண்டு என்னுடைய மனசு சொல்லுது, நானும் அவரை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறன்,அப்ப அவரும் பார்க்கிறார்,ஆனால் ”கதைக்கட்டோ” எண்டு மனசு சொன்னாலும் அந்த மனமே தடுக்குது ”சீ சீ வேண்டாம்” எண்டு,
ஆனால் அந்த மனுசனோ நான் பார்க்க ரயில் வண்டியின்ரை முகட்டை பார்க்கிறார்,
”என்னடா இந்த மனுசன் இப்படி செய்யுது” எண்டு ”இவர் யார்”எண்டு நினைச்சு பார்க்கிறன்,
”எனக்கு படிப்பிச்ச வாத்தியார் யாருமோ” எண்டும் என்ரை மனசு கேட்கிறது,
கடைசியிலை தான் அவர் யார் எண்ட முடிவுக்கு வந்தன் பாருங்கோ,
அந்த மனுசனை நான் ஒரு நாள் மேடையிலை பார்த்திருக்கிறன்,ரி வி வழிய அவரைப்பற்றியும் அவர் கருத்துச்சொல்லுற விசயங்கள் கேட்டிருக்கிறன்,ஆனால் அவருக்கு பக்கத்திலை நான் இருப்பன் எண்டு கனவிலையும் காணவில்லை,அப்பிடி அந்த மனுசன் பெரிய மனுசன்,எங்கடை நாட்டிலை எண்டால் அவர் எனக்கு கிட்ட இருக்கவே மாட்டார்,அந்த மனுசன் இண்டைக்கு எனக்கு பக்கத்திலை இருக்குது எண்டு நினைச்சுத்தான் அந்த எண்ணம்,
அவர் யாருமில்லை ””சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தின் விருதுபெற்ற ஒரு திரைப்படமும் அதேபெயரை அந்தக்கால திலகத்துக்கும் அதுதான் பெயர்”,எனக்குப்பக்கத்திலை இருந்தவருக்கும் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்”” அதுதான் பாருங்கோ,
உங்களுக்கு விளங்கியிருக்காமல் விடுமா என்ன?
அவரிடம் பலகேள்விகள் கேட்கலாம் என்று நினைத்திருந்தாலும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம்,
ஆனால் அவர் என்னை ஏன் கடைக்கண்ணால் பார்த்தார் எண்டு தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை,????

இப்படியாக வந்துவிட்ட நான்கு நாள்களில் வந்துவிட்டவற்றுள் சில இவை,வந்தாச்சு எல்லோ
எல்லாமே அனுபவித்து ரசிக்க வேண்டும்,

ஏலவே குறிப்பிட்டதைப்போல பாலைவனத்தில் பயணம் காலங்கள் எல்லாம் கூடிவர தொடர்ந்து வரும்,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம்.