வில்லிசை-எங்கள் கதை



மிக நீண்ட நாள்களுக்கு பின் வில்லிசைக்காக சில நாள்கள்.
நீண்ட நாள்கள் என்பது 5 வருடங்கள் தான்.கொழும்பிலே இருந்த காலங்களில் கொழும்பு மருத்துவபீட மாணவர்களாகிய  என் நண்பர்கள் சிலருடைய வேண்டுகோளில் அவர்கள் பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வாணிவிழாவில் வில்லிசைத்த பின் லண்டனில் சில பெரியவர்களின் வேண்டுகோளால் வில்லிசை கதையை மீண்டும் எழுதி அவர்கள் மேடையேற பயிற்றுவித்து அந்த கலையோடு மீண்டும் பயணிக்க முடிந்தது.பல கலைகளையும் எனக்கு பயிற்றுவித்த தந்தையின் கலைகளில் வில்லிசை மிக முக்கியமானது.அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனியானது.
என் தந்தையால் எழுதப்பட்ட பல வில்லிசைகள் என்னிடம் இப்போதும் கொழும்பிலும் ஊரிலும் இருக்கிறது.அவற்றை பதிவு செய்யவேண்டிய ஆர்வமும் அதனோடு இணைந்து அவை பேணப்படவேண்டும் என்ற தேவையும் எனக்கு இருக்கிறது.என்றாலும் சில எழுதிய கடதாசிகளும் கிழியும் நிலைகளில் இருப்பதை அண்மையில் கொழும்பிற்கு சென்று வந்தபோது பார்த்துவிட்டே வரமுடிந்தது. கொழும்பிலிருந்து வரும் உடனடிப்பயணம்,கொண்டுவரக்கூடிய நிறை எல்லாம் கொண்டு வருவதற்கு அந்த வேளையில் இருந்த தடங்கல்கள்.இருப்பினும் என் அப்பாவினுடைய பல நண்பர்களின் வேண்டுகோள்களுக்கமைய அவற்றை பதிவுசெய்யவேண்டும் என்ற ஆர்வம் தொடர்ச்சியாக இருக்கிறது.காலங்கள் எல்லாவற்றிக்கும் கைகொடுக்கட்டும்.



இங்கு கடந்த வருடம் லண்டனில் வில்லிசை நிகழ்ச்சியை மேடையேற ஆர்வம் கொண்ட பெரியவர்கள் சிலர் என்னிடம் கேட்டபோது என்னாலும் வேலைபழுக்களுக்கு மத்தியில் மறுக்கமுடியாமல் எழுதப்பட்ட வில்லிசை ஒன்றை பதிவு செய்யலாம் என்ற எண்ணம்.அவர்களின் மேடைக்கும் அவர்களின் கலை ஈடுபாட்டுக்கும் அமைவாக இந்த வில்லிசையை மற்றும் வில்லிசைக்கான கதையை எழுத முடிந்தது.எங்கள் கதை என்ற தலைப்பில் அவர்கள் இந்த நாட்டில் தங்களின் நிலைமைகள் இப்படியே இருகிறது என்று குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாக கதையின் கருவை அமைத்து எழுதியிருகிறேன்.சிறப்போடு மேடையேறி வில்லிசைத்துமிருந்தார்கள் அந்த பெரியவர்கள்.
இந்த வில்லிசை கதையை கனடாவிலிருந்து சுவிஸிலிருந்து சில கலை உள்ளங்கள் தங்கள் மேடைகளிலும் அதை மெடையேற்ற  விண்ணப்பித்து கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கும் அனுப்பி வைக்கும் இந்த வேளையில் வில்லிசை இசைக்க யாருக்கும் பயனுடையதாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த வில்லிசைக்கான எழுத்துரிமையோடு இங்கே பதிவு செய்கின்றேன்.
வில்லிசைக்கான பாடல்களுக்கான இசையுதவிக்காக மற்றும் அது மேடையேற இங்கே பின்னூட்டத்தில்(Post Comment)
குறிப்பிட்டுகொள்ளுங்கள்.அது மகிழ்ச்சியைக்கொடுக்கும்.
நகைச்சுவைகள் கூட காலத்துக்கு அந்த அந்த இடங்களுக்கு பொருத்தமாய் இணைத்துக்கொள்ளலாம்.

எங்கள் கதை

பாடல்
தொந்தனத்தொம் என்று சொல்லியே-வில்லினிற்பாட
வந்தருள்வாய் கணபதியே
தொந்தி வைத்த கணபதியே – நீயும்
முந்தி வந்து அருள் தருவாய்
மூத்தவர்கள் நாமும் இங்கே- இங்கே
வில்லில் இசை பாட வந்தோம்
நல்லதொரு கதை புனைந்தோம்—அதை
வில்லிசைத்து பாட வந்தோம்

கதை
அருமையான மாலைபொழுதிலே, எல்லோருக்கும் பொதுவான இறைவனை பணிந்து இங்கு கூடியிருக்கும் அனைவருக்கு அன்பான வணக்கங்கள்/
உதவி- இங்கை வந்திருக்கிற எல்லாரும் எங்கடை ஆக்கள் தான்.
உதவி 2-ம்ம்.எங்கடை பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பக்கத்து வீட்டுக்காரர் எல்லாரும் வந்திருகினம்
உதவி 3- ஏதாவது தங்களைப்பற்றி சொல்லிபோடுமோ என்று கேட்க வந்திருப்பினமோ

கதை
சரி, வந்தது எங்கள் உறவுகள் என்றாலும் வணக்கம் சொல்வது மூத்தோர் மரபு.அதை எல்லோருக்கும் சொல்லி ஆரப்பிப்பது மிக நல்ல விடயம் தானே..அதுவும் மூத்தவர்கள் நாங்கள் அதை நடைமுறையில் காட்டுவது சிறப்பு...
இன்றைய நாள் நிகழ்ச்சியில் ஒரு அருமையான கதையொன்றை வில்லிசையிலே சொல்வதற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
ஆனால் அதற்கு முதலில் வந்திருக்கும் எல்லோரையும் நாங்கள் அறிந்திருந்தாலும் எங்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் வில்லிசையை ஆரம்பிக்க போகின்றோம்.
உதவி1—அது சரி சிறீலங்காவிலை பிரிட்டிஷ் எம்பசியில் சொல்லி, கட்டுநாயக்கா எயார்போட்டிலை சொல்லி, ஹீத்த்ரோ எயார்போட்டிலை சொல்லி வீட்டில பேரப்பொடியளுக்கு விளங்கபடுத்தி இப்ப மேடையிலையும் சொல்ல போறீங்களோ.......
கதை
வில்லிசையின் மரபின் படி எங்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் தானே

பாடல்
சபைதனிலே வந்திருக்கும் பெரியோரே குழந்தைகளே- எங்கள் பிள்ளைகளே அன்பர்களே
சொந்தங்களே பந்தங்களே
ஏட்டிலே எழுத்தறியோம் எழுதும்வகை நாமறியோம்
[பாட்டிலே பொருளறியோம் பாடும் வகை நாமறியோம்
கற்க  உண்டு ஏராளம்
தேடிக்கற்போம் படித்து சுவைப்போம்

ஆகவே நாங்கள் விடும் சின்ன சின்ன பிழைகள் எல்லாவற்றையும் நீங்கள் மன்னித்துகொள்வீர்கள் என்று அன்பாக கேட்டுகொண்டு கதைக்கு வருகின்றோம்

உதவி1 என்ன கதை?
உதவி 2_ எங்களுக்கு ஒண்டுமே விளங்காத மாதிரி இந்தக்கால சினிமா கதையோ அல்லது கதை ஒண்டுமே இல்லாமல் வெறும் காட்சி கவர்ச்சி மட்டுமோ
கதை
எங்கள் கதை தான் இன்று நாங்கள் சொல்ல வந்திருக்கும் கதை

பாடல்
(பாண்டி)
பண்டமெல்லாம் கிடைக்குமிடம்
லண்டன் மாநகரம்-அது  லண்டன் மாநகரம்
கண்டம் தாண்டி பணமும் அனுப்ப
பென்னம்பெரிய லட்சம்---ஓகோ-அது பென்னம்பெரிய லட்சம்
முதன்முதலாக ஊர்க்கிழங்கு
மரகறிகள் எல்லாம்---ம்ம்ம் மரக்கறிகள் எல்லாம்
முந்திக்கொண்டு வந்த இடம் தான்
லண்டன் மாநகரம்----ஓமோம் லண்டன் மா நகரம்

கதை
தாயகத்திலை இருப்பது போல் எல்லாமே இங்கு இருக்கு.அதோட பணமும் லண்டனிலிருந்து அனுப்பினால் அதுக்கு ஒரு கணக்கே இல்லை.என்று லண்டன் என்பது ஒரு நாடு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்
உதவி
அது சரி வந்தாபிறகு தானே விளங்குது லண்டன்
கதை
தாயகத்தில் அழகு பெறும் ஒரு கிராமத்தில் அழகான சின்ன குடும்பம். கணவனை இழந்த பரமேஸ்வரி தனது ஒரேயொரு மகனில் கொள்ளைப்பாசம்.சிறுபராயம் முதற்கொண்டு துடிதுடிப்பாக வளர்ந்த பரமேஸ்வரி கணவனை இழந்தும் தனது மகனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர்.தாயகத்தின் யுத்த கொடிய சூழ் நிலையில் இருந்து தனது மகனை காப்பாற்றவேண்டும் என்றும் அதுவும் லண்டனுக்கு போய்விட்டால் மகனும் ஏதாவது உழைச்சு பிழைச்சு தப்பி விடுவான் என்றும் நினைத்து ஒருமாதிரி மகனை லண்டனுக்கு அனுப்பிவிடுகின்றாள் தாய்.
உதவி
பக்கத்துவீடு,மச்சான் மருமகன் என்று எல்லாரும் லண்டனுக்கு போய் உழைச்சு அனுப்ப தன்ரை பிள்ளையும் போய் ஏதாவது தப்பி பிழைக்கட்டும் எண்டு தான் எல்லாரும் அனுப்பினது......
கதை
மகனும் வந்து அந்தக்கடன் இந்தக்கடன் என்று அடைக்கவே ஆறு ஏழு வருசம்.சரி கடன் எல்லாம் முடிந்த பிறகு கல்யாணம் கட்டத்தானே வேணுமெடா தம்பி எண்டு கல்யாண வேலைஒழுங்குகள்.
அதுக்கு மகன் தன்னுடைய அம்மாக்கு ஒரு நாலு பக்கத்திலை கடிதம்.
உதவி
என்ன பொம்பிளை வேண்டாமெண்டோ.அல்லது இங்கையாரையும் பார்த்துப்போட்டன் எண்டோ?????
ஓ இவங்களை நம்பவும் ஏலாது...இளவயசிலை எல்லாரும் வந்தவங்கள்...
கதை
இல்லை இல்லை...சொல்கிறேன் கேளுங்கோ
ஊரிலை இருந்து தான் பொம்பிளைவேணும்.ஆனால் அந்த பொம்பிளை எப்படி அழகாயிருக்கவேனும், எப்படி நடக்கவேணும்,எப்படி உடுக்கவேணும்,என்று தான் அந்த கடிதம்.
உதவி
ஓ ஓ அதுக்கு நாலு பக்கம் வரும்......

ம்ம்ம் தனக்கு மருமகளாக வரவிருப்பவள் எப்படியெல்லாம் வரவேணுமென்று கனவு கண்டாளோ...தனது மகனுக்கான துணைவி எப்படி அமையவேண்டும் என்று கனவு கண்டாளோ அப்படியே அவள் தெரிவு செய்கிறாள்
பாடல்
(அழகே)
மான் போல அழகு அவள்- அன்ன நடை நடந்திடுவாள்.
 முத்தான முத்தல்லவோ -கன்னகுழி சிரிப்புமல்லோ
ஊரிலுள்ள பந்தமெல்லாம் அவளளகை வியந்துடுவர்
பாரிலழகோவியமாய் சித்திர பாவையவள்

தந்தையைபோல் வளர்ந்துவிட்ட -ராஜ நடை மகன் எனக்கு
சிந்தையிலே நினைத்ததுபோல்-சொந்தமானாள் மருமகளாய்
கதை
சரி அதையும் ஒரு மாதிரி நல்ல திருப்தியோட முடிச்சு மருமகளையும் அனுப்பியாச்சு. நல்ல வாழ்க்கை.குடும்பம் குழந்தைகள் என்று மகனுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைச்சுகொடுத்த பெருமை

என்னுடைய மகனும் மருமகளும் லண்டனில் நல்லதொரு வாழ்க்கை, எந்த கோவில் குளம் ஏறும்போது தன் மகனையும் மருமகளையும் நினைத்தே வழிபடுவாள்.பேரக்குழந்தைகளும் கிடைக்க அதை விட அவளுக்கு வேறு என்ன சந்தோசம்? மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
என்றாலும் தன்னை மகனும் மருமகளும் லண்டனுக்கு கூப்பிட்டால் என்ன என்பது பரமெஸ்வரியின் உள்ளத்தில் இருக்கும் ஒரு எண்ணம்.
ஊரிலுள்ளவர்களெல்லாம் லண்டன்,பிரான்ஸ், நோர்வே என்று போய்வர நானும் போய் வரலாமே என்று மகனிடம் ஒரு நாள் வாய்விட்டு கேட்டுவிட்டா பரமேஸ்வரி அக்கா.
பாடல்
(ஆனந்த பைரவி)
ஊரிலே வாழுகின்ற என்னோட்ட மனுசரெல்லாம்
லண்டனுக்கு சுற்றுலாவாம் கேளடா என் மகனே
எனக்கென்று ஒரு மகனாய் லண்டனில் நீ இருந்தாலும்
கூப்பிடும் ஐடியா தான் உனக்கும் இல்லையோடா

ஒரேயொரு பெரிய வீடு நான்மட்டும் தனியேவாழ்ந்து
என் மகனை கண்டு தழுவ  ஆசையும் இருக்குதெடா...
சொத்து பலம் இருந்தாலும் என் பிள்ளையுடன் கூடி வாழ்ந்த
நிலைபெற்ற மகிழ்ச்சியது எந்த தாய்க்கு உரித்தல்லவோ

கதை
தாயின் நிலையான பாசத்தை உணர்ந்த மகனும் தன் அம்மாவை கூபிடுவம் என்று அதற்குரிய ஒழுங்குகள்

உதவி
மருமகள் விட்டவவோ!!!!! என்னத்து இங்க? இங்க வந்து சாமாளிப்பவோ!! என்றெல்லாம் கேட்டிருப்பாவே??
கதை
ம்ம்ம் என்றாலும் மகன் கூப்பிட எல்லா ஒழுங்கும்  முடித்து பரமேஸ்வரியக்கா லண்டன் வருகின்றார்.
பாடல் ( வேல்)
கொழும்பில் வந்து லொட்ஜில் வாழ்ந்து
லண்டன் விசா எடுக்க இரண்டு மாசம்-
,, ,,              ,, ,,           ,,,,,,,,,
கண்ணாடியால் கட்டுப்பட்ட கட்டு நாயக்கா ஏயர்போடில்
முதன்முதலாக நுழைந்து வாறா –அக்கா
முதன்முதலாக நுழைந்து வாறா
ஓடுது ஓடுது பிளைட்டும் ஓடுது
பிரேக்கே போடாமல் பிளைட்டும் ஓடுது
லண்டன் போக எடுத்த அழகிய சாறியும்
லண்டன் குளிருக்கு 4 கிலோ ஜக்கட்டும்
கையோடு கையாக எடுத்து வாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
பேரபிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்து சாப்பாட்டோடும்
மருமகளுக்கு பிரெஞ்கோணர் உடுப்பெல்லாம்
கையோடு கையாக எடுத்துவாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
கதை
ம்ம்ம் நல்ல பாச உணவோடு 10 மணித்தியாலம் காலும் நீட்ட முடியாமல் கையும் நீட்ட முடியாமல் பயணம் முடிச்சுக்கொண்டு பரமேஸ்வரி அக்கா லண்டனுக்கு வந்திட்டா.லண்டன் வந்தால் எட எங்கட பரமேஸ்வரியக்காவுக்குஅப்படி ஒரு வரவேற்பு. ஹீத்ரோ எயார் போட்டிலை மகன் மருமகள் பேரப்பிளைகள் முத்தம் கொடுத்து வரவேற்றது முதல் வீட்டிலை சொந்தம் பந்தம் எல்லாம் கூடி நிண்டு
உதவி
கூடுதலாக வேலை இல்லாதவர்கள் தான் நின்றிருப்பார்கள்( அதைப்பற்றி பேசுதல்)
பாடல்
சொந்தமும் பந்தமும் உற்றாரும் சுற்றமும்
சந்தோஷமாய் கூடின-ஆஹா சந்தொஷமாய் கூடின
ஊரா வீட்டு கதைகளெல்லாம் கேட்டு மகிழ்வடைந்தனர்
பெற்றோர் சுற்றோர் கிலோக்கணக்கில்
கொடுத்து விட்ட பார்சல்கள்- ஓகே கொடுத்து விட்ட பார்சல்கள்
எடுத்துக்கொண்டே கிளம்பின அதுக்குபிறகு நேரம் இல்லை.

ம்யார் தான் என்ன தான் வந்திருந்தாலும் தன்னுடைய மகனை நீண்ட நாள்களுக்க் பிறகும் தானே பார்த்து வைச்சு அனுப்பி வைத்த மருமகளும் தன்னுடைய பேரக்குழந்தைகளையும் பார்த்து பூரித்த மகிழ்ச்சியிருக்கே அதையாராலும் அளவிட முடியாது.அளவிடமுடியாத சந்தோஷத்தில் அவளின் பூரிப்பான முகம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதியபுதிய அனுபவங்களோடு நாள்கள் நகருகின்றது.பேரப்பிளைகளின் அழகிய மழலைத்தமிழும் எபப்டி தன் மகனை நல்ல ஆங்கிலம் பேசும்படியாக படித்தறிந்தவனாக வளர்க்கவேண்மென்று ஆசைபட்டானோ அதே போல் பேரப்பிளைகள் படிக்கின்றார்கள் என்ற மகிழ்சிவேறு.ஏனெனில் அப்படி இங்கிலிஷில் பேசும் குழந்தைகள்.
உதவி
பதினாறு வயசிலும் மழலைத்தமிழ் தானே பேசுதுகள்.சரி அதை என்றாலும் பேசுதுகளே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியதுதான்.

பாடல்
தித்திக்க பேசும் மழலைகள் போல்
பத்து வயசிலும்  பேசுமெம் பரம்பரைகள்
சொத்தான தமிழ் மொழி பேசாதோ என்று
கத்தி கத்தி படிப்பிக்கும் பரமேஸ் அக்கா

கதை
அப்பம்மா Bad.. அம்மா எனக்கு ஹோம் வேக் னிறைய இருக்கு...இண்டைக்கு தமிழ் வேண்டாம். பிளீஸ் அம்மா..
மாமி வீட்டிலை பிள்ளைகளுக்கு அரியண்டம் கொடுக்க வேண்டாம்.
இது எங்கடை நாடு போல இல்லை.அது சரி தான் என்றாலும் பரமேஸ் அக்காவுக்கு ஒரே கவலை.
பாடல்
என் அன்பான முத்துகள் பேரகுழந்தைகள்
எமை விட்டு சற்றே தள்ளிபோவதுபோல்
நமக்கென்று உரித்தான பரம்பரைகள்
நற்பாதை காட்ட வழிசெய்வோம்.

கதை
இவ்வாறாக பரமேஸ்வரியக்கா சிந்தித்தாலும் அது எடுபடுவதாக இல்லை.
மருமகளும் அம்மா இங்க தேவையில்லாத வேலைகள் எல்லாம் பார்க்கிறா என்று மகனிடம் வேலை விடு வரும்போதெல்லாம் சொல்லிகொண்டேயிருப்பது.
பரமேஸ் அக்காவுக்கு காதிலே கேட்டுவிடும்...ஒரே கவலை. தனக்கு உரித்தான பேரப்பிள்ளைகளே தங்களுடைய அப்பம்மா என்று மரியாதை இருந்தாலும் ஊரிலே அருகோடு இருந்து அவர்களை அழகோடு வளர்த்துப்பார்க்கும் சந்தோசம் கிடைக்கவில்லையே என்பது மிகப்பெரிய கவலையாக இருந்தது,ஏதோ தனக்கு உரித்தானவர்கள் எட்ட எட்ட போகின்றார்களோ என்ற ஒரு எண்ணம்.
கிட்டவாக வந்துவிட்டாலும் தனியாகவே வாழ்கின்றேன் என்ற உணர்வு தான். பெரிய ஒரு வீட்டில் பகலில் யாரும் இல்லை.இரவில் சாப்பாடும் நித்திரையும்.

பாடல் ( இரண்டு மனம்)
லண்டனில் ஒரு பொக்ஸ் ரூம்
பொக்ஸ் ரூமும் ஒரு கூடு
கூடி வாழும் வாழ்க்கை-ஒரு
நாளும் தரா லண்டன்.......

இரவும் பகலும் இரண்டானால்
உழைப்பும் படுக்கையும் இரண்டாகும்
வேலை முடிந்து வந்துவிட்டால் -மகன்
பெட்டில் நித்திரை செத்த பிணம்
உறவும் பந்தமும் காசு வழி
காசின் வருகை உழைப்பின் வழி
உழைத்து முறிவது லண்டன் வழி
வேலையை தக்கவைக்க செத்த வலி

கதை
இப்படியாக தனக்கோ தனிமை என்ற உணர்வு வாட்டுகின்றதே என்று பரமேஸ்வரியக்காவுக்கு மிகப்பெரிய மனக்கவலை.வீட்டிலை இருந்தால் மருமகளும் இது என்ன இந்த மனுசி வீட்ட்லையே இருக்குது...வேற வேலைகளையும் பார்க்கலாமே என்று முகத்தை சுழிக்கிறாளோ என்று பரமேஸ் அக்காவுக்கு ஒரே சிந்தனை.
என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா.

என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா பரமேஸ் அக்கா.
தன்னைப்போலவே பக்கத்துவீட்டிலும் இருக்கும் கனகேஸ்வரி அக்கா இருக்கும் சந்தோஷமான வாழ்க்கையை பார்க்கிறா.
ஒரு நாள் கனகேஸ்வரியக்காவும் பரமேஸ்வரியக்காவும் நண்பர்களாகி
தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொள்கிறார்கள்.
தனக்கும் இந்த நாட்டிற்கு வந்த காலத்தில் ஏதோ பல சுகங்களை இழந்துவிட்டேனோ என்று யோசிச்சனான் தான்.ஆனால் அப்படி இல்லை பரமேஷ்வரி அக்கா. என்று கனகேஸ்வரி அக்கா சொன்னதும் பரமேஷ்வரி அக்காவுக்கு அளவற்ற சந்தோஷம்.
உதவி:: கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி இருந்திருக்குமே….
உதவி2: இந்த நாட்டிலை வயது முதிர்ந்தவர்கள் என்று ஒரு வர்க்கத்தை ஏற்படுத்தவே தேவை இல்லை கேளுங்கோ
.. ஏனெண்டால் எல்லோரும் இளையவர்கள்தான் (ஆங்கிலத்திலும் சொல்லலாம்)
உதவி 3: அது சரி

கதை
அதில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பது பரமேஸ் அக்காவுக்கு போக போக தெரியுது.தன்னை போலவே பல ஒரே வயதுடையவர்கள் இருக்கும் சந்தோஷமான வாழ்க்கை தெரிகிறது.எவ்வளவு வசதிகள்,வாய்ப்புகள், கூடிக்களிக்கும் சந்தோஷமான இடங்கள் என்று எல்லாமே எமக்கு கிடைக்கும் வாழ்க்கையின் உன்னதமான கொடைகள்.
உதவி: அப்ப ஒரு ஒளிவட்டம் தெரிகிறது பரமேஷ் அக்காவுக்கு…..தெரிய வேணும்… அது உண்மை தானே…….
( என்ன என்ன வெளி நாடுகளில் வயதானோருக்கு வசதிகள் இருக்கு என்பதை எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லுதல்)



பாட்டு
தேம்ஸ் நதியோரம் சந்தோஷம் கொண்டாடுவோம்-அங்கு
தெவிட்டாத வாழ்வு  தெம்போடு வாழ்ந்துடுவோம்
ஆனந்தம் ஆனந்தம் எம்வாழ்வின் ஆனந்தம்
பாடுவோம் ஆடுவோம் இன்பமாய் என்றென்றும்
கூட ஒருடமிருக்கு… எங்கும் வாழ தனி சுகமெல்லாம்
(தேம்ஸ் நதியோரம்)

உற்றாரும் சுற்றாரும் அக்கம் பக்கம் எல்லோரும்
பற்றேதுமில்லால் சற்றேனும் நோக்காவிடில்
பல்கோடி இன்பமிருக்கு,=எமக்கு  தனியான சுகமிருக்கு
(தேம்ஸ் நதியோரம்)

லண்டனென்ன பாரீசென்ன ஒஸ்லோவென்ன சூரிச்சென்ன
சுற்றிவரும் உல்லாச வாழ்க்கை தன்னை வாழ்ந்து காட்டி
முற்றான இன்பம் இருக்கு.. இங்கு ஒன்றாக மகிழ்ந்துடுவோம்
(தேம்ஸ் நதியோரம்)


எங்கும் சுகமிருக்கு, எந்த ஒரு சூழலையும் தனக்கெற்றபடி மாற்றி வாழும் வாழ்வு பரமேஷ் அக்காவுக்கு நன்கு புரியும்.அது வாழ்க்கையை இனிதாக்கி வாழ்க்கையை லண்டனில் கொண்டு செல்கிறா பரமேஸ்வரிஅக்கா.
இந்தக்கதை தான் எங்கள் கதை.எல்லோருக்கும் பொது வான கதை. இந்த எங்கள் கதை இதோடு நின்றுவிடாது… இன்னும் தொடரும் பாருங்கோ.
என்றாலும் எங்கள் கதை இத்தோடு நிறைவுக்குகொண்டு வருகிறோம்…

பாட்டு
பொதுவாக லண்டன் என்றால் சொர்க்கம்-அது
எங்கள் போல வந்துவிட்டால் இன்பம்
உள்ளதை சொன்னோம் வெற்றியை கண்டோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த சந்தோஷம் கொண்டாடுவோம்…..

இவ்வளவு நேரமும் எங்கள் வில்லிசையை கேட்ட அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றுக்கொள்கின்றேன்.

பாட்டு
வாழியவே வாழியவே வந்திருந்த அனைவருக்கும் வாழியவே
வாழியவே வாழியவே எங்கள் கதை கேட்டவர்க்கு வாழியவே
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்……


தை பிறந்தால்..........குரல் சிக்கியும் விடாப்பிடியாக சொல்லி முடித்தது.....

மிக நீண்ட நாள்களுக்கு பின் கவியரங்கத்தில் ஒரு வாய்ப்பு.என் கவிதை  எழுதுவதற்காக நேரத்தை கட்டாயமாக ஒதுக்கவேண்டியதாயிற்று.
ஏனோ லண்டன் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் ஒரு சில நாள்களே சிந்தனைகள் எழுதுவதற்காக விரிகின்றன.என்றாலும் தீபம் தொலைக்காட்சியில் எனது பணியோடு கவியரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு கவியரங்க தலைவர் சாம் பிரதீபன் அவர்கள்(சாம் அண்ணா) விடுத்த வேண்டுகோளுக்கமைய நானும் இணைந்து பிதற்றிக்கொண்டேன் .அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை எனக்கு.என்னவோ கவியரங்கத்தில் இடையிலே குரல் நாண் இறுகிக்கொண்டது.என்றாலும் விடாபிடியாக வாசித்து முடித்த வரிகள் அடங்கிய கோர்வை இவை....அழுத்திபேசிய இடங்களை எழுத்திகளிலும் அழுத்தியிருக்கின்றேன்.....வாசித்து பாருங்களேன்....

அட இவ்வளவும் வாசிக்க வேணுமா என்று எண்ணும் அன்பர்களுக்காக ஓளிப்பதிவினை கீழே இணைத்திருக்கிறேன்

அனைவருக்கும் தைத்திரு நாள் தைப்பொங்கல் மற்றும் முக்கியமாக மாட்டுபொங்கல் வாழ்த்துக்களும் 


இது எனது பாடசாலைக்கால நண்பியின் வீட்டில் அவரின் கணவர் குழந்தை மற்றும் தாயாரோடு இணைந்து பொங்கிய புகைப்படம். பேஸ்புக்கில் தான் எடுத்துக்கொண்டேன்.நானும் எனது ஊர் கரவெட்டியில் இருந்திருந்தால் இப்படித்தான் தையிலே பொங்கல் பொங்கியிருப்பேன்...

இனி சொற்கோர்வையை படியுங்கள்(கவிதை அல்ல)
 



கவிதை படைக்க நான் கவிஞன் அல்ல
கத்துக்குட்டி நான்
பேஸ்புக்கில் கூட நான் கவிதை எழுதவில்லை
பச்சிளம் பாலகன்.........
பேஸ்புக்கில் அல்ல கவிதையில் மட்டும்—ஆனால்
பக்குவமானவன் வயதில் சொன்னது....
பதினெட்டு வயது தாண்டினால் வாக்குரிமை இருக்கிறதாம்.....
பதினெட்டிலேயே பக்குவப்பார்வை
முளைத்துவிட்டது
எனக்கும் உங்களுக்கும்
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய் கூட்டி
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக்கலந்து
இனித்த நறு நெய் சேர்த்து இளஞ்சுட்டில் இறக்கி
எடுத்த சுவைக்கட்டியிலும் இனித்திடும் எம்தமிழாம்
செந்தமிழால் வணங்குகின்றேன்.-இது என் வரிகள் அல்ல
செம்மொழியின் வாழ்த்துக்கு என்னோடு இணைந்தது சிறுவயது முதல்
கவியவைதலைவர் கவிபுனை கவிஞர்கள்
அன்பான நேயர்கள் அனைவரையும்
பொங்கலால் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்துக்கள்
கவியவைத்தலைவரின் வேண்டுகோளால்
இந்த கவிஞர்கள் அரங்கத்தில் உங்களோடு நான்

தை பிறந்தால்.......

அதிகாலைவேளையில் கதிரவன் வரவைகண்டு
பக்தியோடு கும்பம்வைத்து குத்துவிளக்கும் ஏற்றி
புதுக்கல்லு மூன்றெடுத்து புது நெருப்பேற்றி
புதுப்பானையோடு புன்னகை முகத்தில் வர
புது அரிசி பொலிவாக இட்டு
வெண்ணிறப்பால் பொங்கி வர
பட்டாசு வெடிகள் ஒலி வானைப்பிளக்க
உற்றவர்களோடு பூரித்து
முற்றத்தில் கொண்டாடும் மகிழ்ச்சி அது
நிலையற்ற வாழ்வில் கொண்டாடிய
நிலைகொண்ட மகிழ்ச்சிகள் அவை

இங்கு
குளிரில் நடு நடுங்கி குளிச்சு முழுகி வெளிக்கிட்டு
வாடாத பிளாஸ்டிபூ... பொட்டுவைக்காத முகத்தோடு
விடியாத சூரியனை வெண்பனி ஒளியிலே கும்பிட்டு
வலிந்து கொண்டாடும் தைபொங்கல்
ஹப்பி பொங்கலென பொங்குகிறது........


விடியாத சூரியனை விடியவைக்கவா முடியும் இங்கு.....
வாடும் பூவாங்க தமிழ் கடைக்கு அடிக்க எப்படி ஓடுவது....
இல்லை இல்லை கணவனை எப்படி ஓடச் சொல்வது....
மணித்தியாலங்கள் வீணாகியல்லவா போய்விடும்........

நெற்கதிர்களை காணாத சீமையிலே......
களைகளே விஞ்சி தலை நீட்டி ஆட்டுகின்றன போலும்.......
ஏற்றுமதியான நெல் மணிகளும் படுத்துவிட்டனவோ.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தை பிறந்தால் வழி எங்கு பிறக்கிறது............
வலிபிறக்குமோ இல்லை இல்லை கிலி பிறக்குமோ.....
வழமைபோல தை பிறந்தால் வழிபிறக்கும் என
வகுத்து விட்ட நெறிபோல சொல்லியே பிறக்கும் தை......
பகுத்தறிந்து எப்போது பிறக்கும் தை
வழி  பிறக்குமோ இல்லை இல்லை வலி பிறக்குமோ
இல்லை கிலிதான் பிறக்குமோ.....

எதிர்காலம் பொங்கலுக்கு பொங்கிப்படைக்குமா........
வதியுரிமை கிடைத்ததால் பொங்கலுக்கும் இனி ஆப்பு....
ஆங்கிலப்புத்தாண்டில் ஆட்சேர்ந்து இடமெடுத்து
ஆரவாரிக்கும் எம்மினம்
ஆருயிர் காதலென காதல் தினம் கூட மறக்கவில்லை
சூரியனுக்கு நன்றிகூறி நன்றியறிதலை மேன்மையாக
பாரில் நினைவுகூரும் தமிழ் பொங்கல் பண்பாட்டை
சத்தியமாக சொல்லுங்கள்........
எத்தனை பேர் கூடிகளித்து கொண்டாடுகிறோம்
சத்தியம் செய்து சொல்லுங்கள்.......
சத்தியமாக சொல்கிறேன்........
தமிழ் பண்பாடுகளுக்கு பாடை கட்டுகிறோம்....
தமிழ் மொழியோ ஆங்கிலமோ
இரண்டும் கலந்த கலவையோ
தங்கிலிஷ் பேசுவதே நாகரீக நடையென்று
அங்கீகாரமில்லாததுக்கு அங்கீகாரம் தேட நினைக்கின்றோமே.....
தை பிறந்தால் வழி பிறக்ககுமா????
வலியெல்லோ பிறக்கிறது... -நாக்கில் பிரளும் தமிழிங்கிலிஷ் வலி
இன்னோர் ஆண்டிலும் தமிழ் கொலைவெறியால்
அழியப்போகின்றது என்று.....
தமிழை நினைத்து கிலி பிறக்கிறது

ஈசானமூலைப்பக்கம்
பால் பொங்கி வழிதுவிட்டால்
நல்வாழ்க்கை கிடைக்குமென்றால்
திசையேதுமறியாமல் திக்கெட்டும் ஓடுகின்றோம்...........
இதுவா அந்த பொங்கும் நல் வாழ்க்கை???
கசப்புகளால் நிறைந்துகொண்ட ஒரு நாடாய்
நாமே உருவாக்கிவிட்டோம்
தாய் நிலத்திலும் தேசம் தாண்டிய புலத்திலும்
தாமாக ஒன்றிணைந்து
பொங்கு தமிழ் எங்கே பொங்கிய உணர்வு எங்கே.......
தேசியம் என்று மட்டும் வாய்க்கு வாய் உச்சரித்து
இரண்டோ நாலோ என்று பிரிந்து நின்று
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வாய்க்கு வந்தபடி பேசியலைகின்றோமே
கூசாமல் பாடைகட்டி
கூடி நின்றி அழப்போகின்றோமா.......
இன்னோர் ஆண்டிலும் இடித்தழித்து
தை பிறந்தால் எங்கு வழி பிறக்கும்
கிலி எல்லோ பிறக்கிறது......
இன்னோர் ஆண்டிலும் உணர்வுகளும்
வலிபிறந்து அழிக்கபடபோகின்றதா என்று.......

நல்ல வேளை இந்தவருடம்.....
இரண்டு நாள் பொங்கல் இல்லை
வழிபாடு தலங்கள் கூட வியாபார ஸ்தலமா?
ஆங்கிலப்புத்தாண்டிலும் அர்ச்சனை செய்ய ஸ்பெஷல் ரிக்கெட்
வழமைக்கு மாறான கொண்டாட்டங்கள்.....
வழமைபடுத்த முயற்சிப்புகள்..........
தை பிறந்தால்
புத்தாண்டு என்ற பகுத்தறிவு சிந்தனைகளும்
சித்திரையே அது வென வாதிடும் பழமைவாதிகளும் .......
சத்தியமாய் சொல்லுங்கள்......
தைபிறந்தால் என்ன வழி வந்து பிறந்துவிடுமா.......
இந்த வலிகளை தாங்கியே பிறக்கிறது......
ஆளறியாமுகத்தின் பெயர் தேடி
பேஸ்புக்கில் தூரத்தில் உறவை தேடும் நாங்கள்
பக்கத்து உறவோடு அத்தனை அன்பில்லையே........
ஒரு லைக்கும் ஒரு கொமண்டும் .....
எத்துணை அன்புக்கு ஈடாகும். சொல்லுங்கள்
எத்துணை அன்புக்கு ஈடாகும்.....சொல்லுங்கள்
ம்ம்
பதினெட்டிலேயே பக்குவப்பார்வை
முளைத்துவிட்டது
எனக்கும் தான் உங்களுக்கும் தான்....

 கடந்து வந்த நிலத்தின் முட்கள்
படங்கள் போல் கண்முன்னே காட்சிகளாக
தடங்களாக்கி வாழும் புலத்தில் நாம் – இனி
நடந்து செல்லும் பாதைகள்
செழுந் தமிழுக்கு உயிரூட்டாதா......
தமிழாலே பேசினால் போதும்
தமிழ் உயிர்பெற்றுவிடும்....
அன்புக்கு வழிகாட்டாதா......
அருவருக்கும் அறித்தெறிப்புகள்
நீங்கினால் மட்டும் போதும்...
உணர்வுக்கு உரமீட்டாதா........
பணம் நோக்காகாமல்
பலமே ஒன்று சேர்ந்தால் போதும்.....

ஈழத்திற்கென கலைப்படைப்புகளாய்
ஈனத்தமிழனுக்கும் உருவாகுமென்றால்
கனமான சிந்தனைகளோடு
கலைப்படைப்புகள் உருவாகுமா.....
இல்லையேல் தை பிறந்திவிட்டால்
தென்னிந்திய ஏற்றுமதி சரக்குகள்
இந்த வருடமும் வரும்....
உண்மைக்கலைகள் ஒரு புறம்
அழுகின்றன........அலைகின்றன....
யதார்த்த சிந்தனைகள் அன்னியப்பட்டு போகின்றன.....

நப்பாசைகளுக்காய் பிதற்றிக்கொண்ட
சிந்தனைகளால் மாற்றிவிட்டு
நம்பிக்கை பெற்றுவிட்ட வெற்றிகளையும்
சரித்திரத்தில் தவறாக எழுதிவிடாதீர்கள்.....

ஒவ்வொரு தையும் பிறக்க
ஒவ்வொரு கிலிகளாய் இவை ஒட்டிக்கொள்ளும்...
அவையே உண்மை வலிகளாக
வரலாற்றில் ஏறியிருக்க ஆயத்தமாகின்றன
ஏறியே இருந்துவிட்டன.......
இனியாவது சத்தியமாக சொல்லுங்கள்
தை பிறந்தால் பிறக்கும் வழி
நாம் போகும் வழி
அவைதான் நிரந்தர வழிகளா??

வலிகள் நிறைந்த பாதைகளை
தாண்டி வந்துவிட்டோம்.......
தை பிறந்தால் வழி பிறக்கட்டும்.....
சரி
தை பிறந்தால் இன்னொரு வருடம்
ஒரு வயது போகிறது........
கவியவைத்தலைவருக்கு கனதியான கவலை இருக்கும்
நாற்பது அண்மிக்குமென நினைக்கிறன்....
உங்களுக்கும்தான்...
எனக்கும் போகின்றது என்று அம்மாக்கும் புரிந்துவிடும்....
தை பிறந்தால் எல்லோருக்கும் வழி பிறக்கட்டுமே......


சரி இது தான் ஒளிப்பதிவு....
 

பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்

இங்கிலாந்தில்  உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.

பிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி  பி.சுசீலா அவர்களும்  கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம். 

இதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை  நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.


 சரி
அந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்தர்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.

அப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும்  மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும்   மேடைக்கு வருகின்றது  பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.
கலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக  இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக   இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும்  சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட  தொடராகப்பாடி அசத்தியதோடு   எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே  மிகக்கடினம் என்றும்  சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான  சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை 
அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி  கலைமாமணி சுசீலா.
உண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மாவின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்
நினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான்  உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.


அது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு  எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.
உண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.
இசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.
சுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.

கரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம்

யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் அமைந்துக்ள்ள கரவெட்டி என்ற அழகிய கிராமத்தின் லண்டன் வாழ் மக்கள் இணைந்து வழங்கிய பிமாண்டமான நிகழ்ச்சிதான் கரவையின் கதம்பம்.


புலம்பெயர்ந்தும் தாயக மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் சார்ந்த நலன் நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அமைப்புகளின்  வரிசையில் கரவெட்டி பிரதேச மக்களும்  இணைந்து லண்டனில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் என்ற ஒழுங்கமைக்கபட்ட கட்டமைப்பினூடாக பல சமூக நலன் நடவடிக்கைகளில் தங்களின் பங்களிப்பையும் செலுத்திவருகின்றார்கள்.அந்த வகையில் பிரமாண்டமான முறையில் கரவையின் கதம்பம் என்ற சிறப்பான பெயரோடு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யபட்டது.ஏலவே கடந்த இரு வருடங்களும் சிறப்பான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் இந்த வருடமே கரவையின் கதம்பம் என்ற நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.இதில் பாராட்டபடவேடிய பல விடயங்கள் இருக்கின்றன.

நிகழ்வின் ஒழுங்கமைப்பில் கரவெட்டி என்ற ஊரின் பெயரை இணைத்து கரவையின் கதம்பம் என்று பெயர் சூட்டியிருந்தமை சிறப்பம்சம்.ஊரைத் தாண்டி வேறு தளம் புலம். பொதுவாகவே இசை என்றும் இன்னிசை மாலை என்று ஏதாவது ஒரு பெயரை சூடிக்கொள்ளாமல் கரவையை இணைத்து கதம்பம் நிகழ்ச்சியாக்கி கரவெட்டியின் பெயரை ஒரு நிகழ்வினூடாக நிலை நிறுத்தியிருந்தமை பாராட்டுக்குரியது. கடந்த வருடங்களில் வேறு பெயர்களோடு அமைந்த நிகழ்வு இந்த வருடம் கரவையின் கதம்பம் என்ற பெயரில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவும் கதம்பம் என்ற சொற்பிரயோகத்திற்கு சற்றும் மாறாது  பார்வையாளர்களை ரசனைக்கு ஏற்றவாறே  நிகழ்ச்சிகள் நெறிப்படுத்தப்பட்டன.ஏனெனில் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் எல்லோரையும்  பிரமிக்கவைக்கும்  படியாக நிகழ்ச்சிகள் அமைந்தன.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறீமதி கலைவாணி இந்திரகுமார் அவர்களின் மங்கல விளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது.அவர் நிகழ்வின் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வான வாத்திய இசை சங்கம நிகழ்வை ஒருக்கிணைத்து நெறிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது..


இந்த நிகழ்ச்சியின் சுட்டிக்காட்டவேண்டிய விடயங்களில் முற்றிலும் இளைஞர்களும் சிறுவர்களும் நிகழ்ச்சிகள் செய்த கலைஞர்கள் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாட்டில் கலை கலாச்சார ஈடுபாட்டில் இருக்கும்  எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள்.இந்த நாடுகளிலேயே கலைகளைப் பயின்று அதில் தேர்ச்சியும் பெற்று அனைவரும் ஒருங்கிணைந்து தந்த நிகழ்ச்சிகளால் ஆரம்பத்தில் அரங்கமே மெய் சிலிர்ந்தது.கர் நாடக சங்கீதம்,வயலின், வீணை,புல்லாங்குழல்,தாளவாத்திய கருவிகள், மேற்கத்தைய வாத்திய கருவிகள் என்று விரிந்த இசை அரங்கிற்குள்  அரங்கிற்குள், பரத நாட்டியம்,மேற்கத்தைய நடனம் , வடக்கிந்திய நடனம் என்று நடன அரங்காகவும் சிறப்புபெற்றது.






ஆரம்பம் முதலே வாத்திய இசை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் அத்தனையும் அனைவரையும் ரசிக்க வைத்து அரங்கில்  இருந்தவர்களை அசையவிடாது மகிழ்வூட்டின.இசை நடன நிகழ்ச்சிகள் யாவும் உண்மையிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளைஞர்களால் தான் அரங்கேறியிருக்கின்றதா என்று மெய்சிலிர்க்கவைத்தன.
இந்த இடத்தில் தான் அனைவரின் சிந்தனைகளையும் பல வழிகளிலும்  தூண்டி விட்டது.இத்தனை கலைஞர்கள் இங்கிருக்க அவர்களுக்கான களங்கள் உருவாக்குவதை விடுத்து பல ஒழுங்கமைப்பாளர்களும் பெரும் பணத்தை செலவு செய்து இவர்களைப்போன்ற கலைஞர்களையே வெளி நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்கின்றார்களே என்பது தான் அந்த சிந்தனை .இப்படியான வளமான கலைஞர்களை உருவாக்க கூடிய புலத்தில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலே அதற்கு பெறுமதி என்றால் இந்த வளமான கலைஞர்களின் எதிர்காலம்,கலைகளின் வாழ்வு எப்படி நிலை நிறுத்தப்படப்போகின்றது என்பதை மனதோடு மனதாக முணுமுணுத்த பார்வையாளர்கள்  கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அந்த சவால்களை முறியடித்திருக்கிறது என்று பெருமையோடு பேசியமையும் அவதானிக்கமுடிந்தது.
நிகழ்வின் இடையில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்
திரு கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் உரை கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றி பற்றி
குறிப்பிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்லாமல் கரவெட்டி என்ற கிராமத்தில் போதிய வசதிகளோடு கூடிய மருத்துவமனை அதற்கான இதர சேவைகளில் கரவெட்டி ஒன்றியம் எவ்வாறு 
ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை பற்றியும் குறிப்பிடிருந்தார்.
இப்படியாக சேர்க்கப்படும் சிறுதுளி பணத்தில் மக்களுக்கான நலன் சார்ந்த விடயங்கள், பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் என்று செவ்வனே   முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும்  பல நிகழ்ச்சிகள்.
நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் பார்வையாளர்கள் சலிப்படையக்கூடியதான சில விடயங்கள் இடம்பெற்றமையையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.
ஆரம்பம் முதலே நிகழ்ச்சிகளில் உத்வேகம் இருந்து இடையில் மேடை நிகழ்சிகளின் தொய்வு பார்வையாளர்களை சற்றே  திரும்பச்செய்துவிட்டது. ஒரே கலைஞர்களின்  மேடையிலிருந்து விடைபெற்று மீண்டும் மீண்டும் மேடையை அலங்கரித்தமை நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்த உத்வேகத்தை சற்றே  குறைத்தது.. சில வாத்தியக்கலைஞர்கள்,நடன நிகழ்சிகளின் கலைஞர்கள் என்று அவர்களின் மேடைக்கான மீள் வருகை ஆரம்பத்தில் அவர்களின் வருகையின் போது இருந்த  பார்வையாளர் எதிர்பார்ப்பை சற்றே குறைவடையசெய்தது. அதுமட்டுமல்லாமல் சில இசைப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கலைஞர்களால் இசைக்கபட்டன.பல்லிசை பல கலைஞர்களால் நிகழ்ச்சி நெறிப்படுத்தப்படும்போது அவர்களின் இசை நிகழ்ச்சி அதில் இசைக்கப்படும் பாடல்களின் மீள்வருகை மற்றும் நிகழ்ச்சி  ஒத்திகை என்பவற்றை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் கவனத்திலெடுத்தல் வருகின்ற காலங்களில் பார்வையாளர்களின் சல சலப்பையும் முணு முணுப்பையும் குறைக்கலாம் என்பது எண்ணம்.அதுவும் நேர ஒழுங்கமைப்பு நிகழ்ச்சிக்கு மிக முக்கியமானதொன்று.நேர ஒழுங்கமைபோடு நிகழ்ச்சியை ஒரே வாத்திய என்ற நிகழ்ச்சியாக இருக்காமல் மாறுபட்ட கலைஞர்களால் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் போது அந்த நிகழ்ச்சியின்  வெற்றி மிகவும்  தனியானது.

எது எப்படியாவிருப்பினும் லண்டன் வாழ் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கலைஞர்களாக பார்க்ககூடிய சிறப்பை கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அமைத்துகொடுத்தது அதுவும் வெளி நாட்டு இறக்குமதிகளாக வரும் கலைஞர்களை மட்டும் வைத்தே ரிக்கட் நிகழ்சிகளை செய்யலாம் என்று சிந்திக்கும் விழா ஒப்ழுங்கமைப்பாளர்கள் மத்தியில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினருக்கு இந்த கரவையின் கதம்பம் நிகழ்ச்சிக்காக ஒரு சபாஷ் போட்டு லண்டன் மற்றும் ஈழத்து கலையுலகம் சார்பில் ஒரு நன்றியையும் தெரிவிக்கப்பட வேண்டும்.எமது கலைஞர்களை ஊக்குவித்து அந்த கலைஞர்களுக்கான கலைப்படைப்புகளை மேடையேற்றிய  ஒரு புறம், மறுபுறம் கரவை என்ற கிராமத்தின் பெயரையும்  பலரும் உச்சரிக்க செய்து கரவெட்டி மக்களுக்கான சமூக நலன் சேவைகளில் கைகொடுக்கும் கரவெட்டி அபிருத்தி ஒன்றியம் இன்னும் பல சேவைகளை செய்ய கரவைக்குரலின் வாழ்த்துக்கள்.