தீ வருகிறது "ஓடுங்கள் ஓடுங்கள்"

இன்று அதிகாலையில் நடந்த விடயம் கொஞ்சம் சிரிப்புடன் சிந்திக்க வைத்தது.
என் வேலைத்தளத்தின் அமைக்கும் கட்டடத்தொகுதியில் சிறியதுமல்லாத பெரியதுமல்லாமல் கொஞ்சம் நடுத்தரமான தீப்பிடித்துவிட்டது அவ்வளவுதான்.
அதற்கு எத்தனை வேலைப்பாடுகள், எல்லோரையும் "ஓடுங்கள் ஓடுங்கள்" ,"உள்ளே வராதீர்கள் வெளியே ஓடுங்கள்" என்றவாராக சத்தமிட்டவாறு எல்லோரையும் கலைக்கும் பாதுகாப்பு அணி,
தீப்பிடிக்க ஓடுவதெல்லாம் உண்மைதான். ஓட வேண்டாம் என்ற சிந்தனையில் சொல்லவில்லை நான், நானும் அவர்களோடு ஓடியவனாய் எத்தனையோ கொடூரமான மரணகளும் வலி தோய்ந்த வாழ்க்கைகளும் இருப்பது மட்டுமல்லாமல் குண்டுகளுடன் கலந்த நெருப்பு கலைத்துகொண்டு வரும் சூழலில் வாழும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைவிட இது என்ன எங்கோ வரும் நெரிப்பில் என்ன வரப்போகிறது என்ற சிந்தனை தான்.
இப்படியாக ஒடிய நான் கொஞ்சம் வேகத்தை குறைத்தாலும் என்னோடு கூடி ஓடுவோர் என்னை விடுவதாக இல்லை.பாதுகாப்பு அணி என்னை கலைக்கிறது. அது மட்டுமல்லாமல் வந்த தீயை நோக்கி சிலரது புகைப்பட கருவிகள், அவை தன்னகத்தே சில "டக் டக்" பதிவுசெய்கின்றன,அவை அவர்களுக்கு புது விடயங்களாகத்தான் இருக்கும்,அவற்றுள் சில புகைப்படங்கள் கீழே பாருங்கள் என்ன பெரிய தீ என்றும் அவற்றை பார்ப்போரையும்,
இந்த புகைப்படங்களில் என்னை மட்டும் தேடாதீகள், ஏன்னென்றால் இந்த புகைப்படங்களை எடுத்தவன் நானெல்லோ..........................












வலைப்பதிவில் ஒரு வயது

நான் ஒரு சின்னபொடியன்



கரவைக்குரல் வலைப்பதிவில் ஒருவருடம் தாண்டி இரண்டாவது வருடத்தில் இன்றுடன் கால் பதிக்கிறது.
பார்த்தவைகளும்,என்னுள் பதிந்தவைகளும்,நான் பட்டவைகளும்,
கொஞ்சம்சிரித்தவைகளும்;அவற்றுள் சொல்லக்கூடியவைமட்டும்,அவ்வப்போது
அறிந்தவைகளும்,மனதினுள் குமுறியவைகளும்;அவற்றுள் கக்கக்கூடியவை மட்டும்,
சற்று வித்தியாசமாக சிந்தித்தவைகளுமாக எழுதிவந்திருந்தேன்.

எப்பவோ மனதினுள் குடிகொண்டிருந்த ஆசையால் திடீரென ஒருநாள் "சும்மா"
ஆரம்பித்ததுதான் இந்த வலைபூ.அன்றைய விடியற்காலையில்க்கூட எனக்கு தெரியாது இப்படி ஒரு தளம் எனக்காக உருவாகுமென்று.அலுவலகத்தில் அதிகாரி வரவில்லை அன்று,புதுவருடம் கழிந்ததால் எல்லோரும் விடுமுறை எடுத்த காலம்,நான் மட்டும் அலுவலகம் போனதால் அமைந்த சந்தர்ப்பங்கள் எல்லாமே கூடிவர கரவைக்குரல் என்ற நாமம்கூட அப்போதே மனதினுள் பிறந்து விட உருவாகியது தான் கரவையின் ஒசை.

அன்று பிறந்த ஒசை அது மழலையாகவே பேசி உங்களுடன் உலவிவருகிறது.என்ன தான் பேசினாலும் அது மழலையின் மொழியேயென்று ஏற்றுகொண்டிருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு எழுதிவருகின்றேன்.தாயகத்தின் துயரம் தோய்ந்த செய்திகளும் மக்களின் அவலங்களும் வலிகளுமே காதுக்கு வந்து கொண்டிருக்கிறது.குமுறியவை எல்லாம் கொப்பளிக்க முடியாத காலம்.என்றாலும் மனதிற்கு சந்தோசமும் நிம்மதியான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

இவ்வளவு காலமும் இந்த வலையுலகில் நான் கண்டவர்கள் பல நூறு.ஆக்கபூர்வமான கருத்தைத்தந்து எழுத்துக்கு உரமூட்டியோர் பலர்.வித்தியாசமான பார்வைகளை என் பதிவுகளில் நோக்கி பதிவில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் பற்றி கருத்திட்டோரும் உளர்.நடிகர் அண்ணைரைட் பாலசந்திரன் அவர்கள்,எழுத்தாளரும் கலைஞருமாகிய உடுவை எஸ்.தில்லைநடராஜா அவர்கள்,க.தே.தாசன்,பேனாவே பித்தாக உள்ளவன்(பேனாப்பிசாசு),தமிழ் வாசகன் ஆகியோர் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள்,
என் முதல் வருடத்தில் நான் தவழ்ந்த காலத்தில் தத்தக்க பித்தக்க நடை நடக்க கை கொடுத்தவர்கள் இவர்கள்.இவர்களோடு என்னை தேடிவந்து பின்னூட்டம் இட்ட என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவன்பான நன்றிகள்.
இதை விட நுனி நாக்கில் அமிர்தமாக பேசி கட்டிப்பிடித்து முதுகிலே ஓங்கி அடிக்கலாமா என்று வந்தோரை அமைதியான சிரிப்பாலே புறங்கையால் விலத்திவிட்டோரும் உளர்.இவர்கள் எனக்கு உந்து சக்தி.

இந்த முதல் வருட காலத்தில் என் கவிதைகளில் ஒரு சில கனேடியன் வானொலியில் அண்ணைரைட் புகழ் நடிகர் பாலசந்திரன் ஐயா அவர்களால் வானலைகளுக்கு கொண்டு சென்றது எனக்கு கிடைத்த புகழாக கருதுகின்றேன்.உலகமே பேசும் ஐயா அவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு எழுதத்தெரியும் என்று என்னை எண்ண வைத்து வாழவைப்பதாக உணர்ந்து மிகவும் நன்றியுடையவனாக பணிகின்றேன்.
தொடர்ந்தும் மனதினுள் உற்சாகம்தரும் இறைவனையும் பணிந்து பல்வேறு நாடுகளிலும் இருந்தும் வரும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி கூருகின்றேன்
உங்கள் ஆதரவோடு எப்போதும் சின்னபொடியனாக மழலைமொழியோடு
தொடந்தும் கரவைக்குரல் ஒலிக்கும்.

கரவெட்டி அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்



பங்குனி மாதம் என்றாலே அம்மன் கோவில்களுக்கு விஷேசம் தான்.
உலகத்தின் இயக்கத்தின் சக்தியாக விளங்கும் சக்தி பொருந்திய தெய்வமாக கருதப்படும் இந்த அம்மனுக்கு பங்குனித்திங்களில் வரும் திங்கட்கிழமைகள் சிறப்பான தினமாக கருதப்படுகிறது.
அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்களிலும் அம்மனை சிறப்பாக வழிபட்டு அம்மனுக்காய் விரதம் இருந்து வழிபடுவர் அம்மன் பக்தர்கள்.கல்வி செல்வம் வீரம் என்றவாறாக வரும் வாழ்க்கையின் செல்வங்களின் மூலாதாரமாக வணங்கப்படும் அம்மன், குடிகொள்ளும் கோவில்கள் எல்லாம் விழாக்கோலம் பூடும்.
அம்மனின் சிறப்புக்களையும் புகழையும் ஒலித்தபடியே இருக்கும்.
இந்த காலங்களில் எல்லாம் கரவெட்டி முழுவதும் அம்மனின் புகழ் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயத்திலிருந்து ஒலித்தபடியே இருப்பது இன்று என் நினைவில் வருகிறது.திங்கட்கிழமை என்றாலே இங்கு பக்தர்கள் வந்து வந்து போவதை அவதானிக்க முடியும் என்றால் பங்குனித்திங்களில் எப்படியிருக்குமென்று சொல்லிப்புரியவேண்டியதில்லை.
பச்சைப்பசேல் என்ற மருதநிலம் சூழ்ந்த இந்த ஆலயத்திற்கு இயற்கையான அம்சங்கள் பொருந்திய ஆலயமாக கானப்படுகிறது.பெரியபெரிய மரங்களே ராஜகோபுரங்களாகவும் கொடிகள் சூழ்ந்த பற்றைகள் அரணாகவும் காணப்பட இடாம்பீகமில்லாமல் குடிகொள்ளும் அம்மன் தான் கரவெட்டி அத்துளு அம்மன்.
இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்த பங்குனி மாதங்களில் வரும் பொங்கல்.
குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ஆலயத்தில் இக்காலங்களில் அம்மனுக்கு பொங்கி படைத்தி தங்கள் நேர்த்திகளை வேண்டி வழிபடுவர்.
இதற்கு ஒரு ஐதீகமான கதையும் இருக்கிறது. கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வந்து தங்கிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் கூறப்படுகிறது.இங்கு சுவையான விடயம் என்னவெனில் இந்த ஒரே நாளில் பன்றித்தலைச்சி அம்மனுக்கும் இந்தியாவின் கேரளம் திருவனந்தபுர மாவட்டம் அட்டுக்கல் பகவதி ஆலயத்திலும் பொங்கல் பொங்குவது தான்.
இங்கெல்லாம் மதுரையை எரித்த கண்ணகி குடிகொண்டிருந்ததாக ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
இப்படியான சிறப்புக்கள் பொருந்தி கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயம் காணப்படுகிறது.
இவ்வாறாக பங்குனிமாதம் வரும் இறுதி திங்கட்கிழமை என்றால் அதைவிட கொஞ்சம் கூடிய விஷேசம்.ஊரே அம்மன் கோவிலை நோக்கி படையெடுக்கும் என்றுதான் சொல்லலாம்.
இந்த காலங்களில் நீர்ப்பாளயம் என்று சொல்லப்படும் படையலுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கபடும்.பொதுவாக பொங்கல் என்றால் கொஞ்சம் இனிப்புடன் கூடியதாக காணப்படுவது தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.இங்கு இதனுடன் இன்னுமொரு அம்சமாக வயல் நிலங்களில் விளையும் காய்கறிகளும் சேர்ந்ததாக செய்யப்படும் நீர்ப்பாளயம் முக்கியத்துவம் பெறுகிறது.பெண் தன் கணவர் வேர்வை சிந்தி அவரின் உழைப்பின் பயனாக தோட்டத்தில் கிடைத்த காய்கறிகளை கற்புக்கரசி கண்ணகி குடிகொண்ட அம்மனுக்கு படைத்து வழிபடுவதும்
வேண்டியவரங்களை வேண்டுவதும் இங்கு குறிப்பிடபடவேண்டிய விடயம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக மாணவர்கள் தங்கள் பரீட்சைகாலங்களில் எல்லாம் அம்மனை வழிபட்டு பயனடைவர்.மாணவர்களின் மனப்பயம் நீக்கி அம்மன் மாணவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படியாக சிறப்புக்கள் எல்லாம் பொருந்திய கரவெட்டி அத்துளு அம்மனுக்கு விஷேசமான இந்த காலங்களில் இந்த வார திங்கட்கிழமை பங்குனியின் இறுதித்திங்கள்.
கரவெட்டியோடு கலந்த என் நினைவுகளில் இச்சிறப்புக்கள் பதியப்படுகிறது

எல்லாரும் முட்டாள்களே



நாமே வித்துவான்கள் என்று
மற்றோரை முட்டாளாக்கதான்
இந்த முட்டாள் தினமோ?
வித்துவான் கள் என்று எண்ணுவோரே
தத்துவம் பேசாதீர்கள்
சுத்தி சுழலும் பூமியிலே
பித்தரைபோல அலையும் எல்லோரும் முட்டாள்களே

நாளாக நாளாக அரசியலில் வேறுபட்டு
மாறான வார்த்தைகள் பேசும்
அரசியல்வாதிகளின் ஏமாறும் யாவரும்
எப்போதும் முட்டாள்களே-அதுவும்
எம்மவர்களை காலாகாலமாக
தொடர்ந்தும் ஒரே பல்லவிபாடி
கடத்தும் ஏமாற்றிகள்
அப்பாவிகளாக எம்மவர்கள்
பாவப்பட்ட முட்டாள்கள்

பண்பாடு கொச்சைபடும் சில
சினிமாத்திரை நாயகர்களை
கண்டுவிட்டால் பெருமையாக
எல்லாமே கிடைத்துவிட்ட
அற்ப மகிழ்ச்சியோடு திரியும்
எல்லோரும் முட்டாள்களே.

குடும்பங்களில் கும்மாளம் அடிக்கும்
சின்னத்திரை நாடகங்கள்
எம்சொந்தகார பிரச்சனை போல
தூக்கியெடுத்து கதையளக்கும்
சொந்தங்களே யாவரும்
எப்போதும் முட்டாள்களே

இணையதளங்களில் இடைவிடாமல்
கணமேனும் குறையாமல்
வீணாக்கும் என்னைபோன்றோர்
பென்னம்பெரிய முட்டாள்கள்

தாங்களே நாயகர்கள் என
திமிர்கொண்டு பேசுவோரும்
என்னதாம் செய்வதென்று அறியாமலே
தலைக்கனத்தில் உலாவிவரும்
ரகமான முட்டாள்கள்

மனித நேயம் தெரியாத
சினத்தை பீறிடும்
அன்பென்பது அறவேதெரியாத
அற்புதமான முட்டாள்கள்
பணமே வாழ்க்கையென்று
பணம் வந்து பண்பை அறுத்து
மனமே இல்லாமல்
சிந்தனைகளை வேறாக்கிய
முட்டாள்கள் எந்த வகை
எனக்கு தெரியாத வகை

மொத்ததில் எல்லாமே
முட்டாள்களின் அடிப்படையாய்
சொட்டேனும் குறையாமல்
உலகமே இருக்கும்போது
மற்றோரை முட்டாளாக்குவதில்
அற்ப சந்தோஷம்காணும்
அன்பான அன்பர்களே
மொத்ததில் எல்லோரும் முட்டாள்களே

இங்கு வண்டில் மாடு ஓடுது சோதனையாய்


சோதனைகள் பலரகம்
அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
சோதிப்பதால்தான் எதிர்பார்ப்பும் ஏக்கமும்-இல்லையேல்
எல்லாமே ஒன்றுதான் இப்பாரினிலே
சோதனைகளை தாண்டி- அவை
சாதனைகள் பெற்றுவிட்டால்
ஆனந்தத்துக்கும் எல்லையுண்டோ இந்தப்பாரினிலே

மனிதன் பிறந்து விட்டால் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக தான் பிறக்க வேண்டும் என்பது உலக நியதி என்றும் சொல்லலாம்.இதை மறுப்பதற்கில்லை.
இங்கு இதுவும் ஒரு சோதனையில் நடந்த விடயம் தான்.ஆனால் இதற்கு "சோதனை" என்ற சொல் வடிவம் பொருந்துமோ எனக்கு தெரியவில்லை.இருப்பினும் பொதுவாக மாணவர்கள் இதை தங்களின் சோதனை என்று சொல்வது வழமை.
பொதுவாக ஆசிரியர்கள் தன்மாணவர்களை பரீட்சைகள் வைத்து பரிசோதிப்பதும் அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பதும் இப்போதெல்லாம் நடைமுறையிலுள்ளவிடயங்கள்.நாளாக நாளாக படித்ததெல்லாம் மூளைக்கு ஏற்றிவிட்டு பரீட்சைமண்டபத்திலே வந்து தலையை கலக்கி கொட்டிவிட்டு அதன்பின்பு அவையெல்லாம் தேவையில்லாததொன்று என்பதைப்போல நடமாடும் மாணவர்களும் இல்லாமலில்லை.இவர்களெல்லாம் மனதிலெடுத்ததை மட்டுமே பரீட்சை மண்டபத்தில் கொட்டிச்செல்வர் என்பது ஆமோதிக்கபடவேண்டியவிடயமும் கூட.கொஞ்சம் மாறுதலாக பரீட்சகர் பரிசோதித்துவிட்டால் "இண்டைக்கு கொஞ்சம் இறுக்கமாக போச்சு" என்று மனதினுள்
குறுகுறுத்தபடி வெளியேறுவர் இப்படியான மாணவர்கள்.

இப்படித்தான் ஒரு தமிழ் ஆசிரியர் தனியார் கல்வியகத்தில் அடிக்கடி மாணவர்களுக்கு பரீட்சைகள் வைப்பது வழமை.அடிக்கடி வைத்தாலும் அது கொஞ்சம் போட்டிப்பரீட்சை என்றுதான் சொல்லிவைப்பார்.அதனாலே பரீட்சை மண்டபத்தினுள்ளே கவனிப்பாளர்களும் கூட.முகாமையாளரின் முகாமையிலும் கவனிப்பிலும் பரீட்சை ஆரம்பம்.
ஆரம்பிக்கும் இறுதி நிமிஷம் மட்டும் படித்துவிட்டு எல்லாமே இறைவன் துணையென்று மேலே சுழி போட்டு 'வாத்தியார் என்ன கேள்வியைபோட்டாரோ எப்படி போட்டாரோ" என்று சிந்தித்தபடி ஆரம்பிக்கிறது மாணவர் கூட்டம்.
சோதனையின் இடையில் "சலசல" என்று சத்தம் கேட்பதும் கவனிப்பாளர் எழுந்து "சூ சூ என்ன சத்தம்" என்று சொல்ல பின்னர் அது குறைவதுமாய் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.எது எப்படியாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை எப்படியாவது மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுமாய் பரீட்சை நடந்து கொண்டிக்கிறது.உண்மையிலை இந்த விசயம் எல்லாம் வாத்தியாருக்கு தெரியாது, வாத்தியார் இப்ப இதை வாசித்தாரென்றால் "இப்பிடி எழுத்தித்தான் நீ எல்லாரையும் விட கடைசி மார்க்ஸ் எடுத்தனியோ" எண்டு தலைக்கு மேல கைவைப்பார்."கெட்டிக்காரன்" என்று இப்ப சொன்னாலும் சொல்லுவார் என்ன?. சரி அது இருக்கட்டும்.
அப்ப எல்லாரும் நேரத்தையும் பார்த்தபடி விறு விறு என்று எழுதிக்கொண்டே கடைசிக்கேள்விக்கு போனால் அது வழமைபோலவே கட்டுரை.
அதில எல்லாருக்கும் எழுத கொஞ்சம் இலகுவாக இருந்த தலைப்பு "வண்டில் மாட்டின் சுயசரியதை எழுதுக" என்று.மற்றது எல்லாம் வாத்தியார் படிப்பிச்சது மாதிரி இல்லாமல் அது வாத்தியாரின்ரை பேப்பருக்கு ஒரு தரத்துக்காக கொஞ்சம் கடுமையாக இருந்தமாதிரி உணர்வு எல்லாருக்கும்.அப்ப பொதுவாக வண்டில் மாடுதான் எல்லாரின்ரை பேப்பர்லையும் ஓடுது.கட கட கட கட எண்டு எல்லாரும் எழுதினாலும்(வண்டில் மாடு தானே), ஒரு பொடியன் முழுசி முழுசி அக்கம் பக்கம் பார்க்கிறான் "டேய் டேய்" எண்டு தனக்கு பக்கத்தில் இருந்தவனை தட்டினால் அவன் எங்க பார்த்தால் தானே,ஏதோ கஸ்டப்பட்டு அவனை ஒருவாறு பார்க்கவைத்தான் அவன்.
பார்க்கவைத்த அவன் கேட்டான் மெல்ல மெல்ல

"டேய் நீ என்ன வண்டில் மாட்டின் சுயசரிதையா எழுதிறாய்"
"ம்ம் ம்ம் ஏனடா"
"ஏனடா ஏதும் பிரச்சனையே"
"பின்னை ஏன் நான் உன்னை கூபிடுறன், டேய் நானடா வண்டில் மாட்டில இரண்டு மாட்டிலை ஒரு மாட்டின்ரை சுயசரிதை எழுதிப்போட்டன்டா மற்ற மாட்டை பற்றியும் எழுதவேணுமோடா?"
"நல்ல கேள்வி, நீ எல்லா மாட்டையும் பற்றி எழுதினால் நாங்க எங்கடா போறது, நான் இளையதம்பி அண்ணையின்ர மாட்டை பற்றி எழுதுறன் நீ வேணுமெண்டால் கணபதிப்பிள்ளையண்ணையின்ரை மாட்டைப்பற்றி எழுது என்ன"
என்று பெரிய புத்திமதி பரீட்சை மண்டபத்திலே.
"" "சூ சூ" என்ன சத்தம்"" என்று கவனிப்பாளர் எழும்பி வர புத்திசாலியின் புத்திமதியும் சொல்லிமுடிகிறது."சரியோ பிழையோ ஏதோ எழுதுவம்"என்றபடி வேகமாக எழுதிமுடிக்கின்றனர் புத்திசாலிகள்.
"இனி எப்ப மார்க்ஸ் வரப்போகுதோ" என்ற எதிர்பார்ப்பின்படி எல்லா மாணவர்களும் பேசியபடி வெளியேறுகின்றனர்.
ஏன் தெரியுமோ???? பரீட்சைப்புள்ளி பார்க்கிற ஆர்வம் இல்லை.அது புள்ளியை பார்த்து வாத்தியார் பிறகு எத்தனையோ மாட்டை பற்றி சொல்லி முதுகிலை கொஞ்சம் தட்டுத்தட்டி முதுகிலை வண்டில் மாடு ஓட்டுவார் எல்லோ, அப்ப அண்டைக்கு வகுப்புக்கு வராமல் விடத்தான், வேற என்ன, அவ்வளவு ஆர்வம் படிப்பிலே எங்கட பொடியள்.

"டொம்" எண்டு விழுந்திச்சினம் "டக்" எண்டு எழும்பிச்சினம்



விழுந்தவன் எழும்புவதும்
விழுந்தாலும் மீசையிலே
மண் முட்டவே இல்லை என்று
வீராப்பு பேசுவதுமாய் இந்த உலகம்
காதலில் விழுபவர் வேறு
அன்பினில் விழுபவர் வேறு
பாசத்தில் விழுபவர் வேறு
பாத்ரூமில்(குளியலறையில்)விழுபவர் வேறு
சறுக்கி விழுபவர் வேறு
தடக்குபட்டு விழுபவர் வேறு
இது சும்மா விழுந்த கதை

நல்லதொரு வாத்தியார்
மகாலிங்கசிவம்
கோவில் கண்டாமணி ஒலிக்கும்வேளை
மனதில் பக்தியோடு எழுந்து நின்று
கணமேனும் இறைவைனை நினைக்க சொன்னார்
நல்ல விடயம் என்றாலும்
கண்டிப்பான உத்தரவு தான் வகுப்பில்

வாத்தியாரின் கண்டிப்பான உத்தரவு மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்ற சிறப்பான நோக்கமே.அதாவது ஆலயமணி இறைவனை ஒரு நிமிடம் நினைவு படுத்துவதாக ஆசிரியர் அவர்கள் எமக்கு அறிவுரை பகிர்ந்தார்.
மகாலிங்கசிவம் ஆசிரியர் இப்போது எம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் மாணவர்கள் இப்போதும் அவரின் பெயர் கூறும் அளவுக்கு எங்கும் பரந்து காணப்படுகின்றார்கள் என்பது உண்மை.
ஆசிரியர் தமிழில் வேற்றுமை என்ற பகுதியை கற்பிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய உதாரணங்களுடன் கற்பிப்பார் என்பது இப்போதும் என்னுடைய மனதினுள் வந்து நிழலாடுகிறது.இப்படியாக ஆசிரியரை பற்றிசொல்ல ஒரு தனியான பதிவு வேண்டும் என்றால் மிகையாகாது.

அப்ப வாத்தியார் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் மணி கேட்கும்போது எல்லாரும் எழும்பி கும்பிடவேணும் எண்டு சொல்லிவைச்சார்.அதை சில இளம்பராய மாணவர்களுக்கு "இதெல்லாம் ஏன்" என்ற கெள்வி அவர்கள் மனதில் எழுந்தாலும் வாத்தியாருக்கு எல்லாரும் பயம் தானே.அதால எல்லாரும் எழும்பி நிண்டு கும்பிடுவம்,

அதில இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்,அந்த மணி சரியாக ஐந்து மணிக்கு தான் ஒலிக்கும்.அந்த நேரம் வகுப்பு முடியும் நேரம்.வகுப்பு முடியபோகுது என்ற சந்தோசத்துடன் எல்லாரும் எழும்பிக்கும்பிடுவம்.
சில வேளைகளில் யாரும் ஆசிரியர் கூடிய நேரம் வகுப்பு எடுத்தால் கூடிய நேரம் கும்பிடுவதும் உண்டு.இது பெரிய பக்தி.
ஆனால் இந்த முறையை எல்லோராலும் தவறாமல் கடைப்பிடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிடித்தான் ஒருக்கால் ஆலய மணி ஒலித்த வேளை எல்லாரும் எழும்பிக்கும்பிட்டம். கண்மூடி ஒருகணம் இறைவனை நினைத்து எல்லாரும் இருக்கிறம்.வாத்தியாரும் கண்மூடி உள்ளத்துள் "தச்சந்தோப்பு பிள்ளையாரே" எண்டு நினைச்சு வகுப்பு முடிக்கிற நேரமும் வந்திட்டுது எண்டு வேகமாக படிப்பிக்க தொடங்கினார்.
ஒருகண செக்கனுக்குள் "கட புட கட புட" எண்டு சத்தம். "தொமார்" எண்டு சத்தம்.சத்தத்தை நோக்கி எல்லாரும் திரும்பினால்................
நான்கு பொம்பிளைப்பிள்ளையள் கீழுக்கு கிடக்கினம்.என்னடா பூமி அதிர்ச்சியேதுமோ எண்டு நினைச்சால்! அது ஒண்டுமில்லை, அது அவர்கள் இருந்ததும் அவர்கள் இருந்த வாங்கு விழுந்ததுமாய் அவர்களும் பூமாதேவியை விழுந்து கும்பிட்டதும் ஒன்றாகவே நடந்தது.
அதிர்ச்சியோடை பார்த்த எல்லாரும் "கொல்" என்று விழுந்து விழுந்து பெரிய சிரிப்பு. விழுந்த பிள்ளைகள் எல்லாம் சிரிச்சவை சிரிச்சு முடியமுன் "டக்" எண்டு எழும்பிவிட்டினம் வெட்கம் கூடிய முகத்தோடு.

வாத்தியார் சொன்னார் "யாரும் விழுந்தால் போதுமே,பார்த்து சிரிக்க வெளிக்கிட்டுவிடுவியள் மற்றவர் விழுவதில் அப்படியென்ன சந்தோசம் உங்களுக்கு".என்று கண்டிப்பான குரலோடு சொல்ல சிரிப்பு எல்லாம் "கம்' எண்டு நிண்டுது.
வகுப்பும் முடிந்து விட்டது சிரிப்போடு.ஆனால் அதுக்கு பிறகு எல்லாரும் கும்பிட்டுட்டு இருக்கும்போது கீழுக்கு தடவி பார்த்து வாங்கு இருக்கோ இல்லையோ எண்டு "செக்" பண்ணித்தான் இருப்பினம்.
அது தான் சொல்லுறது "எந்த ஒரு செயற்பாடும் அனுபவித்த பின்புதான் அதன் கவனம் கூடும் என்பது மட்டுமல்லாமல் அதன் கஷ்டமும் விளங்கும் என்று."

யாழ்ப்பாணத்தில் கூடுதாலாக எல்லா இடங்களிலும் ஆலய மணி கேட்கும்போது இறைவனை துதிப்பதும் ஆலய வீதிகளை கடக்கும்போது ஒருகணம் எழுந்து நின்று வழிபடுவதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.
இங்கு விழுந்தவர்வகளின் பெயர் விபரங்கள் விழுந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கரவைக்குரல் கேட்டபோது அவர்களின் கண்டிப்பான வேண்டுதலினால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பொறுங்கோ அண்ணை நேரமில்லை

என்ன நேரமில்லையா?????


இது தான் இப்போது அடிக்கடி எல்லோருடைய வாயிலும் வரும் வசனங்களில் ஒன்று.அதை கொஞ்சம் எல்லோருக்கும் புரியக்கூடியபடி ஆங்கிலத்திலும் சொல்வார்கள்(buzy).
உண்மையில் அவர்கள் நேரமில்லாமல்தான் அலைகிறார்களா? அல்லது
நேரமில்லை நடிக்கிறார்களா என்பதில்லை இங்கு கேள்வி.
இந்த நேரம் ஏன் இல்லாமல் போக வேணும் என்ற கேள்வி தான் இந்த பதிவின் நோக்கம் .
பண்டைய காலங்களில் எந்தவித விஞான வளர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்த மனிதனுக்கும் இந்த இதே பேச்சு இருந்ததா என்ன?
எந்த இடத்துக்கும் நடையாய் சென்று தன் அன்றாட பணிகளையெல்லாம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த மனிதனுக்கு இன்று எந்த பணிகளையும் மிக வேகமாக செய்யக்கூடியவாறு வசதிகளையும் பெற்றபின்பு ஏன் இந்த நிலைமை என்று தான் புரியவில்லை

உதாரணமாக ஒன்றைக்குறிப்பிட்டால் இப்போது எல்லோருடைய கைகளிலும் கைத்தொலைபேசி இன்றியமையாததொன்றாகி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதன் மூலம் வீட்டிலிருந்தவாறே எல்லோருடனும் உரையாடி தங்க தேவைகளை நிறை வேற்றுவதும் அறிந்து கொள்வதுமாக இன்றைய உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. முன்னைய காலங்களில் இவையெல்லாம் இருந்ததா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.அப்படியென்றால் எப்படி இன்றைய காலங்களில் நேரமில்லாமல் போகவேணும் . சிந்தித்துப்பாருங்கள்.

மனிதன் தேவையற்ற சிந்தனைகளை மனதுள் வளர்க்கிறானா?
வேண்டாத ஆசைகளை மனதுக்கு ஊட்டுகின்றானா?
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்கிறானா?
தன்னை மற்றவர்கள் பெரிதுபடுத்தி எண்ணுவார்கள் என்று நினைக்கிறானா?
அளவுக்கு மிஞ்சிய வேலைகளை தோள்மேலே சுமக்கிறானா?
மற்றவர்கள் தன்னை வேலையற்றவர்கள் என்று எண்ணி விடுவாரோ என்ற கூச்சமா?
உண்மையில் நேரம் தான் போதாதா?

ஏன்தானோ புரியவில்லை.ஆனால் இன்று நேரமில்லை என்று எல்லோரும் அலைவது மட்டும் தான் உண்மை. இருபத்திநான்கு மணிநேரம் என்பது இன்றைய மனிதனுக்கு போதியளவு இல்லை என்பது மட்டும் புரிகிறது.ஆனால் இதை கூட்டிவிட்டால் மட்டும் அது போதுமா என்ற கேள்வியும் வரத்தான் செய்கிறது.
அதெல்லாம் சரி எனக்கு இதையெல்லாம் சொல்ல எனக்கும் நேரமில்லை.
நான் பிறகு வாறன்.
உங்களுக்கும் நேரம் இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் நேரம் எடுத்து உங்கள் கருத்தை சொல்லுங்கோ